ஈழத் தமிழர் இந்நிலத்தில் வாழ்ந்த வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒன்றாகும். பண்டுகாபயனின் வரலாறு தொடங்கி பண்டைய சங்க இலக்கியங்கள், சீனப் பயணிகளின் குறிப்புகள் வரை சகலதிலும் தமிழர்கள் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தம் அரசுகளை நிறுவி வணிகம், கல்வி, கலாசாரம் ஆகியவற்றை நிலை நிறுத்தியிருந்தனர் எனக் கூறப்படுகின்றது. ஏன் பண்டுகாபயனே ஒரு இந்து மன்னன் என்பதற்கு பல ஆதாரங்கள் மகாவம்சத்திலேயே உள்ளது.
மொழி என்பது ஒரு உயிரின் மூச்சு என்றால், ஈழத் தமிழர் அந்த மூச்சினைப் பாதுகாத்தவர். ஈழத்தில் மாறும் அரசியல் சூழல்கள் இருந்த போதிலும் தமிழ் கல்வி, கோவில் மரபுகள், திருவிழாக்கள், சைவத் தத்துவம் அனைத்தும் அந்த அடையாளத்தைத் தொடர்ந்து பேணி வளர்த்தன.
16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆட்சிகள் இலங்கைத் தீவினுள் நுழைந்த போது, அவர்கள் கொண்டு வந்த நிர்வாக மாற்றங்கள் தீவின் இனவியல்–அரசியல் உறவுகளை மாற்ற ஆரம்பித்தன.
போர்த்துகீசர், டச்சர், பிரிட்டிஷ் ஆட்சி – ஒவ்வொருவரும் தீவில் வேறு விதமான மாற்றங்களை உண்டாக்கின. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வி வாய்ப்புகள் தமிழ் சமூகத்துக்கு திறக்கப்பட்டாலும், அதே நேரத்தில் தீவின் மக்கள் இடையே அரசியல் பிரிவுகளும் வலுப்பட்டன. இவை எல்லாம் பின்னாளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான அரசியல் நிலைமைகளை உருவாக்கின.
1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தீவின் அரசியல் திசை மாற்றம் மிகத் தெளிவாகக் காணப்பட்டன. “ஒரு நாடு – ஒரு மொழி” என்ற இனவாத கோசத்துடன் வந்த சட்ட மாற்றங்கள், புறக்கணிப்புக்கள் தமிழ் மொழி மக்களிடம் ஆழமான கவலையையும் பாதுகாப்பு மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தின.
கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்பட்ட சமமின்மை, பாகுபாடு, புறக்கணிப்பு என்பன தமிழரின் அன்றாட வாழ்வியலைப் பாதித்தது.
இந்த காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அமைதியான ஜனநாயக வழியில் உரிமைகளை கேட்டனர். அவர்களின் கோரிக்கை எதுவும் தனி மேலாதிக்கத்திற்காக அல்ல; மொழி, கல்வி, நிலம், கலாசாரம் ஆகிய உரிமைகளில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. எனினும் வழங்கப்படவில்லை. புறக்கணிப்புக்கள் தொடர்ந்தன.
சரித்திரத்தின் ஒரு கட்டத்தில், அரசியல் பேச்சுவார்த்தைகள் முடக்க நிலையை அடைய தீவில் ஆயுத மோதல்கள் தீவிரமான பாதையில் சென்றன. இந்த காலம் இரு பக்க மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியது.
வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் தமது வீட்டை, நிலத்தை, வாழ்வாதாரத்தை, உறவுகளை இழந்தனர். மக்கள் இடம்பெயர்ந்தனர். தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை சிதைந்து போவதைக் கண்டனர்.
இந்த அனுபவம் ஈழத் தமிழர் மனதில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றது, ஆனால் அவர்களின் இடறாத மன உறுதியை வலுப்படுத்தியது.
போர் 2009-ல் போர் பாரிய மனித அவலத்துடன் நிறைவு பெற்ற பின்னர், ஈழத் தமிழர் வரலாறு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது. அவர்கள் சந்தித்தது ஒரு இரத்த இழப்பின் வடு அல்ல மாறாக அது மறுபிறப்பின் தொடக்கம். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேறி தமது வாழ்வியலை கட்டமைக்கத் தொடங்கினர்.
இன்று வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைக் கட்டியெழுப்புகின்றனர். கல்வி, தொழில்நுட்பம், கலை, விவசாயம், கடல்சார் தொழில்கள் போன்றவற்றில் முன்னேறுகின்றனர். அவர்கள் சுமந்து கொண்டிருப்பது கடந்த கால வலியை மட்டுமல்ல; எதிர்காலத்தின் கனவுகளையும் தான்.
இன்று உலகம் கிராமமாக மாற்றமடைந்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இன்றைய ஜனநாயகப் போராட்டம் வன்முறைக்கானது அல்ல மாறாக உரிமை, சமத்துவக் குரலுக்காக, எமது உரிமை, அடையாளம், கலாசாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக மட்டுமே.
எனவே, எம் தாயகத்தையும், எம் மொழியையும் எம் அடையாளத்தையும் பாதுகாத்து கெளரவமான எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க இன்றைய நாளில் உறுதியேற்போம்.
கடும் மழைக்கு மத்தியில் வவுனியா – ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
அத்தோடு, தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள், உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வழமை போல் தொடர்ந்து செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் தொடரும் கடும் மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவுகள் உள்ளிட்ட மோசமான வானிலை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தொடர்ந்தும் இடம்பெறும் பேரிடர் சூழ்நிலையில் 21 பேர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் வானிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டி டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பாடங்கள் டிசம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 10 ஆம் திகதி பாடசாலையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘தித்வா’ (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீற்றர் கனமழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட இந்த பெயர் (Ditwah) , உலக வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் வெப்பமண்டல புயலுக்கான குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளால் தயாரிக்கப்பட்ட முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் கன மழையால் வெள்ள அனர்தம் ஏற்படுள்ளதுடன் நில சரிவுகளிலுல் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவுகளின் காரணமாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அபாயப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்றிலிருந்து (27) மறு அறிவிப்பு வரும் வரை பாடசாலைகள் மூடப்படும்.
கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு நேற்று (26) இரவு 9.33 இற்கு இத் தவலை வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.