Monday, February 23, 2026
Huis Blog Bladsy 36

இரு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட க.பொ. த உயர்தர பரீட்சை..!

0

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் (நவம்பர் 27) மற்றும் நாளைய தினம் (நவம்பர் 28) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என இந்திக்க லியனகே குறிப்பிட்டுள்ளார்.

பேட்ரியாட்ஸ் நெட்வொர்க்கின் இலங்கை ஒருங்கிணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமனம்..!

0

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், பேட்ரியாட்ஸ் நெட்வொர்க்கின் இலங்கை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்ரியாட்ஸ் நெட்வொர்க் என்பது உலகம் முழுவதிலுமிருந்து அரசியல் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

கீதநாத் காசிலிங்கத்தின் நியமனம், அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளில் இலங்கையின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை நாட்டுப் பற்று என்ற முன் கோட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வலதுசாரி சிந்தனைகளை கொண்டிருப்பதுடன் உலகம் முழுவதும் இத்தகைய தரப்பினர் தாய்நாட்டு உணர்வைத் தூண்டி சமூக பிரிவுபடுத்தலில் ஈடுபடுவதாக சில விமர்சனங்கள் உள்ளன.

மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோரின் வேலையின்மைக்கு விரைவில் தீர்வு..!

0

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 இல் 3.8 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கல்வித் தகுதிகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழே உள்ள 103,308 பேரும் க.பொ.த சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 91,405 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவர்.

மேலும் க.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற 128,984 பேரும் , இளங்கலைப் பட்டம் மற்றும் உயர் கல்வித் தகுதிகள் பெற்ற 42,254 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இவர்களில், 12,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலை வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி வேலை வழங்கப்படும்.

இதற்கிடையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவித்தவுடன் ஆட்சேர்ப்பு தொடங்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலை குறையும்; இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு..!

0

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான “தடைபட்ட தேவை” தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் அதிகரித்தமையால் வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தேவை குறைந்து வருவதாகவும், இது தொடர்ந்தும் குறைவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், இந்தத் தேவைக் குறைவு, மோட்டார் வாகனங்களின் விலை மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இலங்கை இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதியின் கீழான ஐந்தாவது தவணைக் கடன் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி அங்கீகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.

அதன்பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்தும் டிசம்பர் மாதம் நிதி உதவி கிடைக்க இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவையும் உயரும் என்பதால், உரிய இலக்கை அடைய முடியும் என்றும் அவர் மேலும் விளக்கினார்.

நெடுந்தீவு பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு..!

0

நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

வானிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப் படையினரால் (26 ) இன்று இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

யாழில் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் கைதான 07 பேர் புனர்வாழ்வுக்கு..!

0

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது.

இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர மீது ஏற்பட்டுள்ள கோபமே லண்டனில் எதிர்ப்பு..!

0

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செய்து கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை அல்லது அதற்கான முன்னெடுப்பு ஆமை வேகத்தில் செல்வதற்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பே லண்டன் போராட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சந்தர்ப்பத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினார் என்று எமக்கு தெரியாது.

அரசாங்கம் வடக்கு – கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலும் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகள் இல்லாமை போன்றவை லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலனாய்வாளர்களின் அதிரடி நடவடிக்கை; பலகோடி ரூபா சொத்து பறிமுதல்..!

0

தென் பகுதியின் பிரபல பாதாள குழுத் தலைவர் ‘தெய்பாலே’ என்பவரின் 25 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைகள் பிரிவு அறிவித்துள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைகள் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று (26.11.2025) தென் பகுதிக்கு விஜயம் செய்து அவரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பட்டபெந்தி மத்துமகே செயான் சத்சர என்றழைப்படும் ‘தெய்பாலே’என்ற தென் பகுதியில் பிரபல பாதாள குழுத் தலைவர் என்பதோடு பாரிய போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்.

இவர் வெளிநாட்டில் ஒளிந்திருந்து கொண்டு இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு பாரியளவில் போதை பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் பிரதான சூத்திரதாரியாவார்.

அண்மையில் தென் பகுதியில் பிடிப்பட்ட கிலோ கணக்கிலான போதை பெருட்கள் அவர் அனுப்பியதாகவே பொலிஸார் சந்தேகின்றனர்.

திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான நவீன் வீடு மற்றும் காணி,05 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சிகளின் நுகேகொட கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை – ரவி கருணாநாயக்க

0

கொழும்பில் நடைபெற்ற லலித் அதுலத் முதலி அவர்களின் 89வது நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நவம்பர் 21 அன்று நுகெகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பொதுக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

“யூ.என்.பி மீண்டும் எழுச்சி காண முயற்சிக்கும் நேரத்தில், ஒருசிலர் தேவையற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

இத்தகைய விஷயங்களை மறந்து, ஒற்றுமையான வலுவான எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டும்” எனவும் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.

தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்; சபையில் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி..!

0

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப் பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப் பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு தமிழ் இனத்தின் இறைவனான வே.பிரபாகரனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு”

தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.

மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது. போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக் கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர்.

எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்க காலமாகவும் போற்றுகின்றனர்.

அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

error: Content is protected !!