Friday, April 17, 2026
Huis Blog Bladsy 34

விசா இல்லை, வேலை இல்லை; ஜேர்மனியில் யாழ் இளைஞரின் துயர முடிவு..!

0

யாழ் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர்.

விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது.

குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9) அதிகாலை முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வன பரிபாலன திணைக்களத்தின் பக்க சார்பான நடவடிக்கை; தமிழ் எம்பிக்கள் கடும் விமர்சனம்..!

0

மக்களின் பூர்வீக குளங்களை விடுவிக்க முடியாது என கூறும் வன வளத் திணைக்களம் வவுனியா வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும் காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது வன வளத் திணைக்களம் எல்லைப்படுத்தப்பட்ட செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி, நீலியாமோட்டைக்குளம், வேப்பங்குளம் போன்றவற்றை விவசாயத் தேவை கருதி விடுவிக்குமாறு கடந்த கூட்டத்தில் கோரப்பட்ட நிலையில் அவை வன ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் விடுவிக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், எந்தவித அனுமதியும் இல்லாமல் வவுனியா வடக்கில் பெரும் காடுகள் அழிக்கப்பட்டு ஒரு தரப்பால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வனவளத் திணைக்களம் மகாவலி போன்றன அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியில் உருவாக்கப்படவுள்ள கிபிள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை.

அந்த திட்டத்தால் பாதிக்கப்படப் போவது அந்த பகுதியின் பூர்விக மக்கள், ஆனால் பயனடைபவர்கள் வேறு யாரோ. எனவே இனவாதத்தை நாங்கள் விரும்பவில்லை என கூறியுள்ளார். அதற்கான சூழலை நீங்களே ஏற்ப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு ஆதரவாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், து.ரவிகரன், றிசாட் பதியூதீன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இது தொடர்பாக நீண்ட விவாதம் இடம்பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க வவுனியா வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் கோரியதுடன், கிபுள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

புலம்பெயர்ந்தோர் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருள் நுழைவதாக தகவல்..!

0

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப் பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை இங்கிலாந்தில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொக்கெய்ன், ஹெரோயின் கடத்த ஒப்புக் கொள்ளும் சில புலம்பெயர்ந்தோருக்கு VIP முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருளை கடத்தும் குற்றவாளிகள் புலம்பெயர்ந்தோர் படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைகிறார்கள்.

இங்கிலாந்தில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டவுடன், உள்துறை அலுவலக ஹோட்டல்களில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு கைமாற்றப்படும் என்று ஆட்கடத்தற்காரர் ஒருவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “The Telegraph” இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.

இங்கிலாந்தின் எல்லைகளை கடப்பதற்காக ஆட் கடத்தற்காரர்களும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; 33 பேர் படுகாயம்..!

0

ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி அவசரகால பணிக்குழுவை அமைத்துள்ளார்.

இடிந்து விழுந்த சாலைகள் முதல் சேதமடைந்த கட்டிடங்கள் வரை, ஜப்பானில் இருந்து அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் சானே தகைச்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அவசரகால பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“மக்களின் உயிர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம், அவர்களைக் காப்பாற்ற நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று அவர் கூறினார். இப்பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜப்பானின் ஹோன்ஷு தீவின் கரையோரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11:15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ஜப்பானின் பெரும்பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் கடலில் அலைகள் எழும்பின, மேலும் ஜப்பான் மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பிற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் 50 கி.மீ ஆழத்தில் இருந்தது.

ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம், ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள உரகாவா நகரம் மற்றும் அமோரி மாகாணத்தில் உள்ள முட்சு ஒகவாரா துறைமுகத்தை 40 சென்டிமீட்டர் சுனாமி தாக்கியதாக தெரிவித்துள்ளது.

அணையா விளக்கு சேதமாக்கப்பட்டமை சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது..!

0

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டியது கட்டாயம். அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்

யாழில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது.

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் என அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

யாழில் வாளுடன் நடமாடிய இளைஞனுக்கு விளக்கமறியல்..!

0

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை முதலி கோவலடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனின் உடைமையில் இருந்து வாளினையும் மீட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்திய போது , இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

தேஹிவளை உயிரியல் பூங்காவில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்பு மாயம்..!

0

தேஹிவளை தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த மஞ்சள் அனகொண்டா (Yellow Anaconda) பாம்பு குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, தேஹிவளா உயிரியல் பூங்கா அதிகாரிகள், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி பாம்பு மாயமான விவகாரம் தொடர்பாக தேஹிவளா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த மஞ்சள் அனகொண்டாபாம்புக் குட்டி, மேலும் மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளும் 2024 செப்டம்பர் 12ஆம் தேதி தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர், அந்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தேஹிவளா உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைக்கப்பட்டன. என தேஹிவளா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தல் (quarantine) நிலையில் வைக்கப் பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.

மேலும், மஞ்சள் அனகொண்டா என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் நிறையான பாம்பு இனங்களில் ஒன்றாகும் என்றும், தற்போது காணாமல் போன இந்த குட்டி பாம்பு இதற்கு முன்பு தேஹிவளை உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 638ஆக உயர்வு..!

0

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடும் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை இன்றைய (09) நிலவரப்படி 638 ஆக உயர்ந்துள்ளது என DMC உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்தது 191 பேர் காணாமல் உள்ளனர் என்றும் பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக DMC தெரிவித்துள்ளது.

இன்று முதல் வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையும் சாத்தியம்..!

0

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை

0

இங்கிலாந்தில் இரு நாட்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை நிலவுவதால், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இன்று மஞ்சள் எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், செவ்வாய்க் கிழமை மாலை வரை வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய முன்னறிவிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லங்காஷயர், நார்தம்ப்ரியா மற்றும் கவுண்டி டர்ஹாமின் சில பகுதிகள் மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளை உள்ளடக்கிய இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்தின் சில கடலோரப் பகுதிகளில் மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரற்ற வானிலைக்கு வடக்கு அட்லாண்டிக்கிலிருந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியே காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலத்த காற்று வீசும் எனவும், குறிப்பாக மரங்கள் மற்றும் கிளைகள் விழுந்து ரயில்வே வீதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அலுவலக துணை தலைமை வானிலை ஆய்வாளர் டான் ஹோலி தெரிவித்துள்ளார்.

நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், புதுப்பித்த தகவல்களை அவ்வப்போது வழங்கவுள்ளதாகவும் டான் ஹோலி மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!