Wednesday, February 25, 2026
Huis Blog Bladsy 37

மட்டக்களப்பில் தொல்லியல் பதாகை அகற்றல்; கைதான மூவருக்கும் பிணை..!

0

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பதாகைகளை அகற்றியமை தொடர்பில், பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது அவர்கள் சார்பில் சட்டத்தரணி விஜயகுமார் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

வழக்கை விசாரணை செய்த நீதவான் அண்ணத்துரை தர்ஷினி, மூவரையும் தலா 25000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

0

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் இந்தாண்டும் அமைதியாக நடைபெற்றன.

அவரது 71ஆவது பிறந்தநாள் தினமான (26) நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறை பகுதியில் அவர் பிறந்ததாகக் கருதப்படும் வீட்டின் முன் பகுதியில் இடம் பெற்றிருந்தது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு கேக் வெட்டினார்.

நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கேக், இனிப்புகள், பானங்கள் வழங்கப்பட்டன.

இந்தாண்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இது நிகழ்வின் மற்றொரு சிறப்பான அம்சமாகும்.

வடமாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிகழ்வு தொடர்பாக மக்களிடையே பல்வேறு அணுகுமுறைகள் காணப்படுகின்றன. சிலர் இதை வரலாற்று மற்றும் அரசியல் சம்பவமாகக் கருதி நினைவு நாள் எனக் காண்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த ஆண்டும் சில அரசியல் பிரதிகள் நிகழ்வில் பங்கேற்றனர். குறிப்பாக, எம்.கே. சிவாஜிலிங்கம் தொடர்ந்து இவ்வகையான நினைவு நிகழ்வுகளோடு தொடர்புடையவர் என்பதால், அவர் பங்கேற்பு செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

அவர் நிகழ்வில் உரையாற்றாமல், அமைதியான முறையில் கேக் வெட்டும் நிகழ்வில் மட்டுமே ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வு முறையாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு வரலாறு, அரசியல் மற்றும் சமூக அணுகுமுறைகள் கலந்து காணப்படும் தனிப்பட்ட வகை நினைவு நிகழ்வாகவே இன்றும் இருந்து வருகிறது.

மூதூரில் ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய பல்கலை மாணவன்..!

0

மூதூர் நகரில் பயங்கர போதைப் பொருளுடன் ஒரு பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) மாலை நெய்தல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது.

மூதூர் காவல்துறை அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

சந்தேக நபர் தனது வீட்டில் இருந்து 10.2 கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு வங்கி புத்தகத்துடன் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கை

மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் போதை ஒழிப்பு பிரிவு போலீஸார் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையால், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

சந்தேக நபர் தற்போது மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான ஏற்பாடுகள் போலீஸார் செய்து வருகின்றனர்.

போதைப்பொருள் சம்பவங்களின் பாதிப்பு

இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கை விடையாக உள்ளது. குறிப்பாக, கல்வி வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் மாணவர்கள் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவது எதிர்கால வாழ்விலும் தொழில்துறை வாய்ப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பல்கலை மாணவன் கைது சம்பவம் பொதுமக்களுக்கு போதைப் பொருள்களின் ஆபத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதே சமயம், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு, சிகிச்சை மற்றும் மனநல உதவிகளை வழங்குவது அவசியம் என்பதை உணர்த்துகிறது.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி அவசியம் – ரிஷாட் பதியுதீன்

0

அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முக்கியமான ஒரு பிரச்சினையை முன்வைத்தார்.

வெளிமாவட்டங்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,

“நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் போக்குவரத்து வசதி சீராக இல்லாத காரணத்தால் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் போக்குவரத்து வசதி மிக மோசமானது.

கல்வி துறையின் முன்னேற்றத்தைப் பேசுவதற்கு முன்னர், கல்வித் துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது மிக அவசியம். இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

கல்வி மறுசீரமைப்புக்கு முழுமையான ஆதரவு – ப. சத்தியலிங்கம்

0

அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

“சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள், ஆசிரியர் பயிற்சி மேம்பாடு, தொழில்நுட்ப அமைப்புக் கூறுகள் அனைத்தும் மிக முக்கியமானவை.

கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டின் எதிர்கால முதலீடாகும்.

எனவே இதனை அரசியல் பார்வையைத் தாண்டி அனைவரும் ஒருமித்து ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

கல்வி மறுசீரமைப்பில் தமிழர் வரலாறை கட்டாய பாடமாக்க வேண்டும் – சாணக்கியன்

0

கல்வி துறையில் நடைபெற்று வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தமிழர்களின் வரலாற்றை கட்டாயப் பாடமாக கற்பிப்பது அவசியம் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய மாற்றமடையும் உலகில் ஒவ்வொரு சமூகமும் தமது அடையாளத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தமிழர் சமூகத்தின் வரலாறு பாடத்தில் தகுந்தளவில் இடம்பெறாததால், எதிர்கால தலைமுறைகள் தமது பண்பாட்டு அடையாளத்தை சரியாக அறிய முடியாத நிலை உருவாகிறது.

இதனால் எதிர்காலத்தில் சமுதாயங்களிடையே சமமான அந்தஸ்தும் புரிதலும் உருவாக வேண்டுமானால், தமிழர்களின் வரலாற்றை கட்டாயப் பாடமாக கற்பிப்பது மிக அவசியம்.” என்றார்.

அதாவது, கல்வி என்பது வெறும் பாடநூல்களின் சேர்க்கை அல்ல, அது ஒரு சமூகத்தை உருவாக்கும் அடிப்படை அமைப்பு. எனவே கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்படும் எந்த மறுசீரமைப்பிலும் தமிழர் வரலாறும் பண்பாடும் சரியான வகையில் இடம் பெற வேண்டும் என்று சாணக்கியன் வலியுறுத்தினார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; யாழில் மாவீரர் வாரத்தில் கெடுபிடிகள் அதிகரிப்பு..!

0

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழில் இடம் பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்ற சொன்ன வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.

மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞன் பலி..!

0

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின் மூலமே கல்வித் தரத்தை நாம் தக்க வைத்துள்ளோம் – பிரதமர்

0

இந்த ஆண்டின் பாதீட்டில் கல்விக்காக இதுவரை உயர்ந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல, கொள்கைகள் வலுவான நிறுவன அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நவம்பர் 25ஆம் தேதி பாராளுமன்றத்தில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கல்வியைப் பற்றி பேசும் போது, நாட்டில் தரமான கல்வி அமைப்பை உருவாக்குவதற்கு நம் முடிவுகள் உறுதியான கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். கொள்கைகளை பயனுள்ள வகையில் செயல்படுத்த வலுவான நிறுவக அமைப்பு அவசியம், மேலும் இரண்டிற்கும் போதுமான நிதியுதவி தேவை.

இந்த மூன்று அம்சங்களும் நீண்டகாலமாகப் பூர்த்தியாகாததால்தான் இன்றைய கல்வித் துறையில் காணப்படும் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன. இந்த சவால்களிடையே கூட ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பின் மூலம் கல்வித் தரத்தை நாம் தக்க வைத்திருக்க முடிந்துள்ளது.

2025 இல் மிக முக்கியமான சாதனையாக கல்வித் துறையின் முடிவெடுக்கும் செயல்முறைகளை வலுப்படுத்துவதாகும். இதில் நிறுவனங்களை அடையாளம் காணுதல், பிரச்சினைகளைக் களைவது, நிறுவன கட்டமைப்புகளை சரிசெய்தல், கொள்கைச் சட்டரீதிகளுடன் ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி கொள்கை முன்னுரிமைகளுக்கிணங்க செலவிடப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றைக் கொண்டு 2026ல் தொடங்கவுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னோட்டமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல; தரமான கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திட்டமிடலும் அவசியம். அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகள் வழங்கப்பட வேண்டும்; பொறுப்புகள் முறையாக ஒதுக்கப்பட வேண்டும்.

வரலாற்றில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளைக் கணிப்பதில், பாடத் திட்டங்களில் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. இது பெரும்பாலும் திட்டமிடல் குறைபாடு, நிறுவக பலவீனம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை ஆகியவற்றினால் கொள்கைகள் செயல்படாமல் போனதற்காகும்.

2025 இல், இந்த குறைகளைச் சமாளித்து ஒத்திசைவான நிறுவக அமைப்பை உருவாக்குவதற்கான பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

கல்வி அமைச்சு தனது முடிவுகளை சமத்துவம் மூலம் சமஅளவு வாய்ப்புகளை வழங்குதல், தரத்தை உயர்த்துதல், நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் தரவு மற்றும் அறிவியல் பகுப்பாய்வை பயன்படுத்தி ஆதாரபூர்வமான கொள்கைகளை வடிவமைத்தல் ஆகிய நான்கு துறைகளில் மையப்படுத்தியது. இந்த நான்கு தூண்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயார் செய்து, நிறுவக அமைப்புகளை கட்டியமைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கல்விக்காக ரூ. 7.04 பில்லியன், அதாவது GDPயின் 2.04% ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே நாம் GDPயின் 6% ஐ அடைவோம் என்று எப்போதும் கூறவில்லை.

இந்த இலக்கை அடைவது கொள்கை வளர்ச்சியும் வலுவான நிறுவகங்களும் தேவை என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். நிதியை ஒதுக்குவது மட்டும் போதுமானதல்ல; அது கொள்கைகளுடன் ஒத்திசைவாகவும், நிறுவனங்களை வலுப்படுத்தியும், கொள்கைகளை செயல்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி அமைச்சுக்கு ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் நடைபெற்று வரும் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான செலவீனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நமது பட்ஜெட் 2025 ஏப்ரல் இறுதியில் நிறைவேற்றப்பட்டது,.

மேலும் மே மாதத்திலிருந்து செலவீனங்கள் தொடங்கப்பட்டன. அதன்படி, நமது நிதி முன்னேற்றம் 18% ஆக இருந்தது, மேலும் டிசம்பருக்குள் அது 69% ஐ எட்டியது. கல்வித் துறையில் இதுபோன்ற திறன் முன்பு காணப்படவில்லை.

இந்த முன்னேற்றம், அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்ததும், நெருக்கமான கண்காணிப்பு மேற்கொண்டதும், பொறுப்புத் தன்மையை வலுப் படுத்தியதாலும் சாத்தியமானது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மேலும் அதிக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

மேலும், இன்னும் சவால்கள் மீதமுள்ளது. பல பலவீனங்களைத் தீர்க்கும் பணியுடன், தொடர்ந்து மேம்படுத்தும் செயல்முறையுடனும் இந்த துறை முன்னேறுகிறது. திறன் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களோ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை அவசியம். தடைகளை குறைக்கும் பணியில் நாமும் ஈடுபட வேண்டும். இதற்காக பொறுப்பேற்பதும், கொள்கைகளை உருவாக்குவதும், திட்டங்களைத் தயாரிப்பதும், படிப்படியாக முன்னேறுவதும் அவசியம்.

திருமலை புத்தர் சிலை விவகாரம்; NPPயின் எதிர்ப்பினையும் மீறி தீர்மனம் நிறைவேற்றம்..!

0

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இன விகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது.

இவ் அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இன விகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதாகத் தெரிவிக்கின்ற போதும் அது சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டதாகவும் ஒத்தோடுவதாகவுமே உள்ளது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தவிசாளரினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

மேலதிகமாக இவ் விடயம் தொடர்பில் அவசரத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் இ.கஜிபனினால் தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றும் சபையில் முன்வைக்கப்பட்து.

சபையின் இத் தீர்மானத்திற்கு தாம் ஒரு போதும் ஆதரவு அளிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக தவிசாளருடன் வாதிட்டனர்.

பின்னர் இத் தீர்மானத்தில் அரசாங்கம் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை முன்னெடுக்கின்றது என்ற கருத்தினை நீக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரதேச சபைக்கு புத்தர் சிலை பற்றிய தீர்மானத்தினை முன் வைக்க முடியாது. இச்சபை அபிவிருத்திக்கான அலகு. ஆகவே வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அபிவிருத்தி விடயங்களை மட்டுமே பார்க்க வேண்டிய சபை எதற்காக இங்கே புத்தர் சிலை பற்றி முன் வைக்கின்றீர்கள் எனவும் கடுமையாக தேசிய மக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விகாரை விடயத்தில் நடந்து கொண்ட விடயத்தினை எதிர்த்தனர்.

வரலாற்று ரீதியில் மாறிமாறி வரும் அரசாங்கங்களின் இனவாத நீட்சியே நடக்கின்றது என சகல தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் வாதிட்டனர். இந் நிலையில் சபையில் அமளிதுமளி நீடித்தது.

சபையினை அமைதிப்படுத்திய தவிசாளர், பொலிசார் மீளவும் பேரினவாத நோக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலையை அகற்றிவிட்டு மீண்டும் பக்குவமாக அரசு நிறுவியது. இராணுவம் பாதுகாப்பளித்தது.

பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் மீயுயர் சபையில் தம்மால் மீள சிலை அகற்றப்படவில்லை எனவும் பாதுகாப்பிற்காகவே சிலை நகர்த்தப்பட்டதாகவும் மீள நிறுவப்படும் என அறிவித்தார்.

இவைகள் அரசாங்கத்தின் நடத்தைகள் கிடையாதா? கொள்கை கிடையாதா? தமிழ் மக்களை ஒடுக்கிவிட்டு சகித்துவாழக்கோருவதில் என்ன நியாயம் எனக்கேள்வி எழுப்பியதுடன் தேசிய மக்கள் சக்தி எதிர்த்தால் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்றார்.

இவ்விடயத்தில் அரசாங்கத்தினை குற்றஞ்சாட்டி முன்வைக்கப்படும் பிரேரணையினை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி தேசிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் இருந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தியவாறு வெளிநடப்புச் செய்தனர்.

சபை ஆசனங்களில் இருந்து எழுந்து சென்று தமது எதிர்ப்பினை காட்டினர். இந் நிலையில் இப் பிரேரணையில் எவருக்காவது ஆட்சேபனைகள் உள்ளவா எனத் தவிசாளர் கேள்வி எழுப்பினார்.

பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் நடைபெற்றது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஆக்கிரமிப்பு என பிரேரணையின் மீது கருத்துரைத்தனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரேரணையினை வலுப்படுத்தம் கவனயீர்ப்பு கருத்துக்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

error: Content is protected !!