Saturday, August 8, 2026
Huis Blog Bladsy 40

மன்னார் மாவட்ட செயலகத்தில் Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் நடமாடும் சேவை..!

0

இன்றைய தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் “Clean Sri Lanka” திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இத் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நடமாடும் சேவை திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.

பறங்கியாறு நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட குளங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்..!

0

வவுனியா மாவட்டத்தின் பறங்கியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேறுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்பிலான விசேட கூட்டமொன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (29.12) ஈச்சங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மழை நேரங்களில் பறங்கியாறு நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீர் அதன் கீழ் வரும் குளங்கள் மற்றும் வயல் நிலங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் விவசாயிகள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினருக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து குறித்த பிரச்சினைக்கான தீர்வை காணும் வகையில் மேற்படி கலந்துரையாடல் உரிய தரப்பினரின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அதன்படி வெளியேறும் மேலதிக நீரை வயல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவியுடன் கால்வாய் ஒன்றினை அமைத்து வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறினை ஆராய்வதாகவும் திட்டமொன்றினை தயாரித்து அதனை செயற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் ஆற்றுநீர் திறந்துவிடப்படும் போதும் வெள்ள நீர் வெளியேறும் போதும் விவசாயிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையில் மேம்பாலம் ஒன்றினை எதிர்வரும் வருட நிதியில் அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கும் போது மக்களிடம் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகள் வழங்கப்பட்ட போதும் 15 வருடங்கள் கடந்தும் அவற்றிற்கான காணி ஆவனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

குறித்த விடயத்தினையும் உடனடியாக செய்து தருவாக அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நீர்த்தேக்கத்திற்கு கீழான சுமார் 5கிலோ மீற்றர் நீளமான விவசாய வீதிகளையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உதவியுடன் உடனடியாக புனரமைத்து தருவதாகவும் அரச அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இவற்றிற்கு மேலதிகமாக குறித்த பகுதிகளின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், பிரதேசசபை தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன் அவற்றிற்கான தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பு; மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு..!

0

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை மனித உரிமைகள் மீறலாகும் என குற்றஞ்சாட்டி, திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளைச் செய்து வரும் தங்களது சேவையை கணக்கில் எடுக்காமல், நிரந்தர நியமனம் வழங்காமல் இருப்பது அநியாயம் என்றும், இது தொழில் பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகளுக்கு முரணானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வித் துறையில் தொடர்ந்தும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தங்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பெரும் அநீதியாகும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் உரிய தீர்வு வழங்கப்படாது விட்டால், எதிர்காலத்தில் சட்டபூர்வமான மற்றும் ஜனநாயகப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் முறைப்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலைமையைக் கருத்திற் கொண்டு பொது அவசரகால நிலைமை நீடிப்பு..!

0

நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற் கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடித்தல் – அதிபர் சங்கம் எச்சரிக்கை

0

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியாது.

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன, அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது.

குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளது, அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளது.

ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியநகர் கிராமத்தில் வெள்ளப் பாதிப்பின் பின்னரான நிலை குறித்து சத்தியலிங்கம் எம்.பி ஆய்வு..!

0

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கந்தசாமிநகர் கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள நித்தியநகர் கிராமத்திற்கு இன்று (26.12) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கள விஜயம் செய்திருந்தார்.

அண்மைய வெள்ளப் பாதிப்பின் பின்னர் பாதிக்கப்பட்ட தமது கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நிவாரண திட்டங்களும் வழங்கப்படவில்லையென்றும் தம்மை அரச அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று குறித்த கிராமத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்திருந்தார்.

விடயம் தொடர்பில் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொலைபேசியூடாக விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், மேலதிக அரசாங்க அதிபரின் பணிப்பின்கீழ் மாவட்ட செயலகத்தின் விசாரணைக் குழுவினர் நித்தியநகர் கிராமத்திற்கு வருகை தந்து முறைப்பாடு தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியதுடன் வெள்ள பாதிப்புக்குள்ளான வீடுகளையும் பார்வையிட்டனர்.

அத்துடன் குறித்த கிராமத்தில் மிகமோசமாக பாதிப்படைந்துள்ள வீதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டிருந்தார். அவற்றினை புனரமைப்பது தொடர்பில் பிரதேச சபையினூடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தேவைப்பாடுகள் நிறைந்த நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயத்தையும் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த கிராமத்தில் புனரமைக்கப்பட்டு வரும் குளத்தினையும் ஆய்வு செய்திருந்தார்.

இதன் போது செட்டிகுளம் பிரதேசசபையின் உபதவிசாளர் தே.சிவானந்தராசா (ஜெகன்), பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரிவு இணைப்பாளர் ச.பத்மசீலன் (ஜெகன்) ஆகியோரும் இணைந்திருந்தனர்.

ஊடகப்பிரிவு

துப்பாக்கி விவகாரம்; முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியால் கைது..!

0

முன்னாள் அமைச்சர் உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் இடம்பெற்ற விசாரணையில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பின்னர் 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரின் விசாரணையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதத்தின் தொடர் எண்ணைச் சரிபார்த்த போது, ​​சம்பந்தப்பட்ட துப்பாக்கி தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்நிலையில் விசாரணையின் போது, ​​அந்த சிரேஷ்ர அரசியல்வாதி அது எவ்வாறு காணாமல் போனது என்பதை வெளியிடத் தவறிவிட்டதாகவும், அதன்படி அவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார் என்றம் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமந்திரனின் அதிரடி; தமிழரசுக் கட்சியின் முன்னாள் தவிசாளர் கட்சியிலிருந்து நீக்கம்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முள்ளியவளை 8ம் வட்டார உறுப்பினருமான சின்னராசா லோகேஸ்வரன் கட்சியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடன் செயற்படும் வண்ணம் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உத்தரவை மீறி தேசிய மக்கள் சக்தியின் கரைத்துரைப் பற்று பிரதேச சபையின் பாதீட்டுக்கு வாக்களித்தமையால் கட்சியின் செயலாளரால் நீக்கப்பட்டுள்ளார்.

ஆழிப் பேரலையால் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லைத் தீவில் அஞ்சலி..!

0

கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் போது ஆழிப் பேரலையினால் உயிரிழந்த 68 மாணவர்களுக்கு 26.12.2025இன்று கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ம.சுரேஸ்தரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் உயிர்நீத்த மாணவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கள்ளப்பாடு பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும், உறவினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் முதல் தொடர்வேலை நிறுத்தம்; பல்கலை ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை..!

0

அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக் கழகங்களை முடக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களின் பீடாதிபதிகள் மற்றும் துறைகளின் பிரதானிகளை நீக்கும் அதிகாரம் பல்கலைக்கழக செனட் சபைக்கு சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது குறித்த சட்டத்தில் திருத்தம் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமரின் வாக்குறுதியை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் எனவே குறித்த விடயத்தில் உடனடி தீர்வொன்றை வலியுறுத்துவதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறின்றேல் அடுத்த வாரம் முதல் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களையும் முடக்கும் வகையில் தொடர் வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சாருதத்த இளங்கசிங்க குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!