இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை உறுப்பினர்களை இன்று (12.01) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிற்பாடு சபைகளில் ஆட்சியமைத்தலின் போது ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டது.
மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
யாழிலிருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதற்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார்.
வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்துத் தெரிவித்த ஆளுநர்,
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது.
இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார்.
இதனை எவ்வளவு விரைவாகச் சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆரம்பிப்போம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
கூழாமுறிப்பு கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பானது, கூழாமுறிப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் உள்ளகவீதிகளின் சீரமைப்பு, பழுதடைந்த வீதி விளக்குகளை சீர்செய்தல், கூழாமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்துநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்துஐயன் கட்டு ஏழாம் கண்டம் கமக்கார அமைப்பினைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்து ஐயன்கட்டு ஏழாம் கண்டத்திற்குரிய நீர்ப்பாசன வாய்க்காலை அமைத்தல், விவசாய வீதிகளை சீரமைத்தல், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன் போது முன்வைக்கப்பட்டன.
குறித்த குறைகேள் சந்திப்பினைத் தொடர்ந்து குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்து நீர் குடியிருப்புக்குள் உட்புகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அத்தோடு கூழாமுறிப்பு குளத்தின் கீழான கீழ்வெளி வயல் நிலங்களுக்குச் செல்லும் விவசாய வீதிசீரின்மை மற்றும் கீழ்வெளி விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பார்வையிட்டிருந்தார்.
இவ்வாறாக மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், நிலமைகளை நேரிலும் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு எழுத்து மூலமாக கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன், கூழாமுறிப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், வசந்தபும் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.
வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வசந்தபுரம் கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரால் அப்பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னர் தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக வசந்தபுரம் கிராமமங்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் வசந்தபுரம் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கிராமத்திலிருந்து நீண்டதூரத்தில் குடிநீருக்கான நீர்த்தாங்கியொன்று வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிராம மக்கள், குடிநீரைப் பெறுவதற்கு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், ஒரு நீத்தாங்கி குடிநீர் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்தனர்.
எனவே குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடர்பாட்டினைத் தீர்த்து வைக்குமாறு இதன் போது நாடளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் கிராமமாக வசந்தபுரம் கிராமம் காணப்படுவதால், குறித்த கிராமத்தை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வேறு குடியமர்த்தப்படுகின்ற போது தமது வாழ்வாதாரத்தினைக் கருத்திற் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 0.5ஏக்கர் காணியினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வசந்தபுரம் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், வசந்தபுரம் கிராமமக்களின் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.
குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலை அடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நேற்று முன் தினம் (10) வீட்டினை முற்றுகையிட்டு , வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (11) யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்,
இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் நிதி விடயங்கள் குறித்து எவரையும் நம்ப வேண்டாம் என அவர் மக்களுக்கு எச்சரித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகள், மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளைக் கையாள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு (CPU) முழுமையாகத் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விசாரணைகளை வலுப்படுத்தவும் பொது மக்களை எச்சரிக்கவும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஹரிணி அமரசூரிய அவரின் இரு பதவிகளிலும் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அரசுக்குள் இது குறித்து எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அரசின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என்றும், அதற்காக ஹரிணி அமரசூரியவின் தலைமை அவசியமானதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2025 இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ளவெளி 01ஆம் குறுக்குவீதி,04ஆம் குறுக்குக்கு வீதி, 05ஆம் குறுக்குவீதி (சுரேந்திரன் கடைவீதி) என்பன மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.
ஆகவே இவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த வீதிகளைச் சீரமைத்துத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் மக்களால் இதன் போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.