Saturday, July 25, 2026
Huis Blog Bladsy 40

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல் இடம் பெற்றுள்ளது – ரவிகரன் எம்.பி

0

உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான விபரங்களை வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

உலக வங்கியின் நிதி உதவியில் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிகின்றோம்.

இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மாதுளைச் செய்கையும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழைச் செய்கையும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பப்பாசி மற்றும் நிலக்கடலைச் செய்கையும், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பேஷன்ஃப்ரூட் செய்கையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

அந்தவகையில் வெளிநாட்டு ஏற்றுமதி நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிவதுடன், இத்திட்டத்திற்கு ஒரு பயனாளிக்கு ஒருமில்லியன் வரையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

அத்தோடு ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பாரிய நிதிச்செலவில் இத்திட்டத்திற்கு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய நிதிச் செலவில் இத்திட்டத்திற்கென உபகரணங்களும் பெறுப்பட்டுள்ளன.

அத்தகைய சூழலில் இவ்வாறு உலகவங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக பலரும் என்னிடம் முறையீடு செய்துள்ளனர்.

குறிப்பாக இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்ட கரைதுறைப்பற்றின் கொக்குத்தொடுவாய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பழம்பாசிப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.

இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மாதுளைச் செய்கையிலும் பாரிய குழறுபடிகள் இருப்பதாகவே என்னிடம் பலரும் முறையிட்டனர்.

மக்களுக்கு உரிய வகையில் உள்ளீடுகள் வழங்கப்படவில்லை எனவும், இத்திட்டத்தின் பிரகாரம் அப்பகுதியில் இரு கட்டடங்கள் அமைக்கப்படவேண்டிய நிலையில் ஒருகட்டடம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதுடன், இரு கட்டடங்களும் அமைக்கப் பட்டுள்ளதாக உரிய தரப்பினரின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

குறித்த மாதுளைச் செய்கைத் திட்டம் செயற்பாடற்று தோல்வியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதேவேளை பழம்பாசிப் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பப்பாசி செய்கையிலும் முறைகேடுகள் இருப்பதாகவே அறிய முடிகின்றது. குறிப்பாக செய்கைக்காக வழங்கப்படுகின்ற விதைப் பைக்கட்டுக்களில் விதை தொடர்பான தெளிவான விபரங்கள் வழங்கப்படவில்லை.

அத்தோடு பப்பாசித் திட்டத்திற்கென பாரிய நிதிச்செலவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாடற்று சீரற்றநிலையில் காணப்படுவதுடன், பாரிய நிதிச் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் களஞ்சிய அறைகளில் மூடிவைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் பேஷன்ஃப்ரூட் செய்கைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அறிகின்றோம் அந்தத் திட்டம் தொடர்பிலான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.

மேலும் இந்த திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டரீதியான விபரங்களையும் அறிய விரும்புகின்றேன்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் எத்தனை பயனாளிகள் உள்வாங்கப்பட்டனர்?

  1. இத்திட்டத்திற்கு மொத்தம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?
  2. இத்திட்டத்தினால் பயனாளிகள் நன்மை அடைந்தார்களா?
  3. இத்திட்டத்தின் மூலம் செய்கை பண்ணப்பட்ட உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றதா?
  4. எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது?

என்கின்ற விபரங்களை அறிய விரும்புகின்றேன்.

ஏன் எனில் இந்த திட்டத்திற்கென உலக வங்கியினால் பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு ஒன்று வழங்கப்பட்ட நிலையில், இத் திட்டத்தில் பாரிய ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவே என்னிடம் பலரும் முறையிட்டுள்ளனர்.

இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற சில இடங்களை நேரில் சென்று பார்த்தவரையில் எம்மாலும் அவ்வாறே அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறு இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் ஊழல்கள் இடம் பெற்றிருப்பின், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் இது தொடர்பான முறையான விசாரணைகளை மேற்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே இத்திட்டம் தொடர்பான சகல விபரங்களையும் தரவுகளையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன். விவசாயத் திணைக்களத்திடம் இத்திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும், தரவுகளையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந் நிலையில் உதவி மாகாண விவசாயப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,

விவசாயத்திணைக்களம் இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை மாத்திரமே வழங்கியது. இதுதவிர இந்தத் திட்டத்திற்கும் விவசாயத் திணைக்களத்திற்கும் வேறெந்தத் தொடர்புகளும் கிடையாது.

எனினும் இத்திட்டத்திற்கு எத்தனை பேர் உள்வாங்கப்பட்டனர் என்பது தொடர்பான விபரங்களையும், தற்போது எத்தனைபேர் இந்த செய்கைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான விபரங்களையும் எம்மால் தரமுடியுமெனத் தெரிவித்தார்.

யாழில் தாயார் வற்புறுத்தியதால் தனக்கு தானே தீ வைத்த கொண்ட மாணவி..!

0

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

தாயார் அந்த மாணவியை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.

இதன் போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றிய வேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி எனது ஆ்ண் உறுப்பை நோக்கி உதைந்தார்; கிராமசேவகர் பரபரப்பு வாக்குமூலம்..!

0

கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்த நேரத்தில் கிளிநொச்சிப் பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தத மக்கள் தங்கியிருந்த முகாம் ஒன்றிற்கு சமைத்த உணவு கொண்டு சென்ற யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, அந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்து நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த கிராமசேவகர்,

சமைத்த உணவுகள் அரச சுற்றுநிரூபத்தின் படி சுகாதாரப் பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே பரிமாற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கபடுத்தி உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தியதும் அதன் பின்னர் அதனைக் கேட்காது எம்.பி கிராமசேவகரை தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம சேவகர் கூறியிருந்தமையும் அனைவருக்கும் தெரிந்ததே.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் பொலிஸாருக்குக் கொடுத்த முறைப்பாட்டில், எம்.பி. தம்மை – தமது ஆணுறுப்பை – இலக்கு வைத்து காலால் எட்டி உதைத்தார் எனினும், தான் தந்திரோபாயமாக வளைந்தமையால் அந்த உதை தமது அடிவயிற்றில் விழுந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னரும் இளங்குமரன் எம்.பியை பொலிசார் கைது செய்யவில்லை என அறிந்து கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான சுமந்திரனின் கவனத்திற்கு பல கிராமசேவகர்கள் அறியப்படுத்தியதுடன் கண்கண்ட சாட்சிகளாக 46 பேரின் கையொப்பத்துடன் மேற்படி கிராம சேவையாளரை நாடாளுமன்ற உறுப்பினர் காலால் உதைத்து தாக்கிய விடயத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.

அதன் அடிப்படையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை முன்வைத்து விடயத்தை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த சுமந்திரன்,

“சம்பந்தப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது நகர்வுகளும் நடவடிக்கைகளும் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒருவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் 10 மாத காலம் கோரியிருப்பது பெரும் அபத்தம். இதில் பெரும் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன” – என்று மன்றுக்குச் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய மோசமான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க பொலிஸார் நீதிமன்றில் 10 மாத கால அவகாசம் கோரி பெற்றிருப்பது மிக வேடிக்கையான விடயம்.

சுமந்திரன் சுட்டிக் காட்டிய விடயங்களை அடுத்து, ஜனவரி 16ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்து மன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி கிளிநொச்சி பொலிஸின் குற்றவியல் விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டார் எனத் தெரிய வருகிறது.

அதன் பின்னரே எம்.பி நீதிமன்றில் ஆயரானதாகத் தெரிய வருகின்றது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் இளங்குமரன் எம்.பிக்கு மிகவும் ஆதரவாக நடந்துள்ளார்கள் என கிராமசேவகர்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

0

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாளை மூடப்படும் பாடசாலைகள்; வெளியான விசேட அறிவிப்பு..!

0

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19.12.2025) மற்றும் எதிர்வரும் திங்கட் கிழமை (22.12.2025) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இடம் பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழில் 6 வயது குழந்தையை தவிக்கவிட்டு தாய் காதலனுடன் ஓட்டம்..!

0

யாழில் இளம் குடுமப் பெண் ஒருவர் காதலனுடன் தலைமறைவான நிலையில் தாயை பிரிந்து 6வயது மகள் வாடுவதாக கணவன் புலம்பி வருவதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சங்கானை பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணே மாயமாகியுள்ளார். குறித்த பெண் கடந்த நாற்பது நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாயை காணாது குழந்தை ஏக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுவதுடன், காணாமல் போன மனைவியை கணவர் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இளங்குமரன் எம்.பிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

கிளிநொச்சி காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. குறித்த உத்தரவு நேற்று (17) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராமசேவகரான தன்னை இளங்குமரன் தாக்கியதாக குறித்த கிராமசேவகர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேய நீதிமன்றம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை தொடர்பு கொண்டு வினவியவேளை,

“கிளிநொச்சி காவல்துறையினர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக எனக்கு தெரிய வந்த நிலையில் சட்டத்தரணி ஊடக அந்த வழக்கிற்கான முன் நகர்த்தல் பத்திரத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

அந்த வகையில் அந்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, கிளிநொச்சி காவல்துறையினர் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் எனக்கு பணிப்புரை விடுத்தது.

காவல்துறையினர் என்னை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது என்ற தவறான செய்தி பரவுகின்றது, அது முற்றுமுழுதான பொய்” என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆசிரியர்களின் முறையற்ற இடமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஆசிரியர் சங்கம்..!

0

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் கூறியுள்ளதை அடுத்து, நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப் பெறுவதாக மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது.

வடக்கின் கல்வியில் தொடரும் முறையற்ற செயற்பாடுகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்பதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது.

கங்கன்குள குவாரி விடயம்; உடன் தலையிடுமாறு ஆளுநருக்கு கடிதம் -சத்தியலிங்கம் பா.உ

0

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் கிரவல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொது மக்களை பொலிசார் கைது செய்தமை தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் அங்குவாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி கிரவல் அகழ்வு நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது, அவரும் இச் செயற்பாட்டை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு அகழ்வை நிறுத்துமாறு கோரப்பட்டது.

ஆனால் பிரதேச செயலாளர் தன்னிச்சையாக அனுமதிக்கான ஒப்புதலை கனியவள திணைக்களத்திற்கு வழங்கியதால் அவர்கள் அகழ்விற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

பிரதேசசபை தமது வீதியை கிரவல் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று கூறி இன்று (15) கிராம மக்கள் 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் எனக்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலாளருடன் பேசிய போது அவரும் மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தினார்.

உடனடியாக எதிர்ப்புப் போராட்டம் நடத்த கிராமவாசிகள் அணி திரள்கிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தாங்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினையை தீர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டில் மீண்டும் கைதான பிரதேச சபை உறுப்பினர்..!

0

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நேற்று(15) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரரணைகளில் தாக்குதலின் பின்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்ததையடுத்து சர்வஜன அதிகாரம் கட்சியின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

error: Content is protected !!