மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கால் நடைகளை பராமரிக்கவும், தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.
அங்கு தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதைத் தடுக்க, ‘இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, ‘டிக்டொக், எக்ஸ், மெட்டா’ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழிநுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடக தளங்கள் மூலம் பரவி வருவது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் ஆதரவுடன், முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதைப் பொது மக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நிலையில் , பொதுமக்கள் இவ்வாறான மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாடு முழுவதுக்கும் சவாலான இந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இத்தகைய செயல்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு வலியுறுத்துகிறது.
யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக் கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணை வேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் இன்று, 09 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களையும், அளிக்கைகளையும் மதிப்பீடு செய்து தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.
பீடாதிபதி தெரிவு குறித்து உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவரால் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்ட பீடாதிபதி ஒருவர் மதிப்பீட்டில் கலந்து கொள்ளவில்லை.
உள்வாரி உறுப்பினர்களாக இருந்த போதிலும், துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்ததனால் நான்கு பீடாதிபதிகளும் இம்மதிப்பீட்டில் பங்கு கொள்ளவில்லை. இதனால் வெளிவாரி உறுப்பினர்களின் செல்வாக்கே மதிப்பீட்டில் அதிகமாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி – ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன் மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணை வேந்தராக நியமனம் செய்வார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம் பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுமார் எட்டு வருட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி அல்ல என்று கேரள நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்தது.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்று முதல் ஆறு பேர் வரை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி, கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளிகள் என்று நீதிபதி கண்டறிந்தார்.
அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, தவறான அடைத்து வைத்தல், அடக்கத்தை சீற்றப்படுத்தும் வகையில் தாக்குதல், கடத்தல், ஆடைகளை களைய முயற்சித்தல் மற்றும் கூட்டுப் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு எர்ணாகுளம் மாவட்ட மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ் இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கு, 2017 பெப்ரவரி 17 அன்று கொச்சியில் ஒரு முன்னணி மலையாள நடிகையை அவரது காருக்குள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதில் குற்றவியல் சதி, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் பொதுவான நோக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் அடங்கும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL2026) ஏலத்தில் மொத்தம் 350 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் ஏல நிகழ்வில் பங்கேற்க 1,390 வீரர்கள் முதலில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
தேர்வு செயல்முறைக்குப் பின்னர், இறுதிப் பட்டியலில் 240 இந்திய வீரர்களும் 110 வெளிநாட்டு வீரர்களும் அடங்கிய 350 வீரர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 224 புதிய இந்திய வீரர்களும் 14 புதிய வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
இறுதி செய்யப்பட்டுள்ள பட்டியலில் இலங்கை வீரர்கள் டிராவீன் மேத்யூ, பினுரா பெர்னாண்டோ, குசல் பெரேரா மற்றும் துனித் வெல்லலேகே உள்ளிட்ட பல புதிய வெளிநாட்டு முகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏலத்தின் போது பத்து அணிகளும் 77 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2026 சீசனுக்கு முன்னதாக அணிகள் மீண்டும் கட்டியெழுப்ப அல்லது வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதால், கடுமையான ஏலப் போட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30) ஏல நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
யாழ் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர்.
விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது.
குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9) அதிகாலை முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பூர்வீக குளங்களை விடுவிக்க முடியாது என கூறும் வன வளத் திணைக்களம் வவுனியா வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும் காடுகளை அழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது வன வளத் திணைக்களம் எல்லைப்படுத்தப்பட்ட செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முசல்குத்தி, நீலியாமோட்டைக்குளம், வேப்பங்குளம் போன்றவற்றை விவசாயத் தேவை கருதி விடுவிக்குமாறு கடந்த கூட்டத்தில் கோரப்பட்ட நிலையில் அவை வன ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் விடுவிக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், எந்தவித அனுமதியும் இல்லாமல் வவுனியா வடக்கில் பெரும் காடுகள் அழிக்கப்பட்டு ஒரு தரப்பால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
வனவளத் திணைக்களம் மகாவலி போன்றன அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியில் உருவாக்கப்படவுள்ள கிபிள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை.
அந்த திட்டத்தால் பாதிக்கப்படப் போவது அந்த பகுதியின் பூர்விக மக்கள், ஆனால் பயனடைபவர்கள் வேறு யாரோ. எனவே இனவாதத்தை நாங்கள் விரும்பவில்லை என கூறியுள்ளார். அதற்கான சூழலை நீங்களே ஏற்ப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஆதரவாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், து.ரவிகரன், றிசாட் பதியூதீன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இது தொடர்பாக நீண்ட விவாதம் இடம்பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க வவுனியா வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் கோரியதுடன், கிபுள் ஓயாத் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக இங்கிலாந்திற்குள் போதைப் பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப் பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை இங்கிலாந்தில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு வழங்கினால், அவர்களுக்கு இலவச அல்லது குறைந்த விலையில் எல்லைய கடக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்கெய்ன், ஹெரோயின் கடத்த ஒப்புக் கொள்ளும் சில புலம்பெயர்ந்தோருக்கு VIP முறையில் எல்லையை கடக்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப் பொருளை கடத்தும் குற்றவாளிகள் புலம்பெயர்ந்தோர் படகுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இணைகிறார்கள்.
இங்கிலாந்தில் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டவுடன், உள்துறை அலுவலக ஹோட்டல்களில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பொதுவாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு கைமாற்றப்படும் என்று ஆட்கடத்தற்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “The Telegraph” இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
இங்கிலாந்தின் எல்லைகளை கடப்பதற்காக ஆட் கடத்தற்காரர்களும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களும் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.