கொழும்பில் நடைபெற்ற லலித் அதுலத் முதலி அவர்களின் 89வது நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நவம்பர் 21 அன்று நுகெகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பொதுக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
“யூ.என்.பி மீண்டும் எழுச்சி காண முயற்சிக்கும் நேரத்தில், ஒருசிலர் தேவையற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.
இத்தகைய விஷயங்களை மறந்து, ஒற்றுமையான வலுவான எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டும்” எனவும் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.
மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப் பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப் பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு தமிழ் இனத்தின் இறைவனான வே.பிரபாகரனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு”
தமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.
மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.
காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது. போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக் கூடிய நிலையிருந்தது. தாயகப் பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர்.
எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்க காலமாகவும் போற்றுகின்றனர்.
அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பதாகைகளை அகற்றியமை தொடர்பில், பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் மூவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது அவர்கள் சார்பில் சட்டத்தரணி விஜயகுமார் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான் அண்ணத்துரை தர்ஷினி, மூவரையும் தலா 25000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் இந்தாண்டும் அமைதியாக நடைபெற்றன.
அவரது 71ஆவது பிறந்தநாள் தினமான (26) நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறை பகுதியில் அவர் பிறந்ததாகக் கருதப்படும் வீட்டின் முன் பகுதியில் இடம் பெற்றிருந்தது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு கேக் வெட்டினார்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கேக், இனிப்புகள், பானங்கள் வழங்கப்பட்டன.
இந்தாண்டு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இது நிகழ்வின் மற்றொரு சிறப்பான அம்சமாகும்.
வடமாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வு தொடர்பாக மக்களிடையே பல்வேறு அணுகுமுறைகள் காணப்படுகின்றன. சிலர் இதை வரலாற்று மற்றும் அரசியல் சம்பவமாகக் கருதி நினைவு நாள் எனக் காண்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த ஆண்டும் சில அரசியல் பிரதிகள் நிகழ்வில் பங்கேற்றனர். குறிப்பாக, எம்.கே. சிவாஜிலிங்கம் தொடர்ந்து இவ்வகையான நினைவு நிகழ்வுகளோடு தொடர்புடையவர் என்பதால், அவர் பங்கேற்பு செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
அவர் நிகழ்வில் உரையாற்றாமல், அமைதியான முறையில் கேக் வெட்டும் நிகழ்வில் மட்டுமே ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வு முறையாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.
இந்த நிகழ்வு வரலாறு, அரசியல் மற்றும் சமூக அணுகுமுறைகள் கலந்து காணப்படும் தனிப்பட்ட வகை நினைவு நிகழ்வாகவே இன்றும் இருந்து வருகிறது.
மூதூர் நகரில் பயங்கர போதைப் பொருளுடன் ஒரு பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) மாலை நெய்தல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது.
மூதூர் காவல்துறை அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,
சந்தேக நபர் தனது வீட்டில் இருந்து 10.2 கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு வங்கி புத்தகத்துடன் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கை
மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் போதை ஒழிப்பு பிரிவு போலீஸார் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையால், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
சந்தேக நபர் தற்போது மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான ஏற்பாடுகள் போலீஸார் செய்து வருகின்றனர்.
போதைப்பொருள் சம்பவங்களின் பாதிப்பு
இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கை விடையாக உள்ளது. குறிப்பாக, கல்வி வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் மாணவர்கள் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவது எதிர்கால வாழ்விலும் தொழில்துறை வாய்ப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல்கலை மாணவன் கைது சம்பவம் பொதுமக்களுக்கு போதைப் பொருள்களின் ஆபத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதே சமயம், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு, சிகிச்சை மற்றும் மனநல உதவிகளை வழங்குவது அவசியம் என்பதை உணர்த்துகிறது.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முக்கியமான ஒரு பிரச்சினையை முன்வைத்தார்.
வெளிமாவட்டங்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,
“நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் போக்குவரத்து வசதி சீராக இல்லாத காரணத்தால் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் போக்குவரத்து வசதி மிக மோசமானது.
கல்வி துறையின் முன்னேற்றத்தைப் பேசுவதற்கு முன்னர், கல்வித் துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது மிக அவசியம். இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
“சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள், ஆசிரியர் பயிற்சி மேம்பாடு, தொழில்நுட்ப அமைப்புக் கூறுகள் அனைத்தும் மிக முக்கியமானவை.
கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டின் எதிர்கால முதலீடாகும்.
எனவே இதனை அரசியல் பார்வையைத் தாண்டி அனைவரும் ஒருமித்து ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
கல்வி துறையில் நடைபெற்று வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தமிழர்களின் வரலாற்றை கட்டாயப் பாடமாக கற்பிப்பது அவசியம் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய மாற்றமடையும் உலகில் ஒவ்வொரு சமூகமும் தமது அடையாளத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தமிழர் சமூகத்தின் வரலாறு பாடத்தில் தகுந்தளவில் இடம்பெறாததால், எதிர்கால தலைமுறைகள் தமது பண்பாட்டு அடையாளத்தை சரியாக அறிய முடியாத நிலை உருவாகிறது.
இதனால் எதிர்காலத்தில் சமுதாயங்களிடையே சமமான அந்தஸ்தும் புரிதலும் உருவாக வேண்டுமானால், தமிழர்களின் வரலாற்றை கட்டாயப் பாடமாக கற்பிப்பது மிக அவசியம்.” என்றார்.
அதாவது, கல்வி என்பது வெறும் பாடநூல்களின் சேர்க்கை அல்ல, அது ஒரு சமூகத்தை உருவாக்கும் அடிப்படை அமைப்பு. எனவே கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்படும் எந்த மறுசீரமைப்பிலும் தமிழர் வரலாறும் பண்பாடும் சரியான வகையில் இடம் பெற வேண்டும் என்று சாணக்கியன் வலியுறுத்தினார்.
மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழில் இடம் பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழில் இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்ற சொன்ன வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த பதாகையில் உள்ள பாதணி விடுதலைப் புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.
மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.
தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.