Monday, February 9, 2026
Huis Blog Bladsy 40

இன்று 57வது பிறந்தநாளில் ஜனாதிபதி தோழர் அனுரகுமார திசாநாயக்க..!

0

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று, நவம்பர் 24 அன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1968 இல் பிறந்த ஜனாதிபதி திசாநாயக்க பல தசாப்தங்களாக நீடித்த தனது வாழ்க்கையில் இலங்கை அரசியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஆரம்பக் கல்வி மற்றும் பல்கலைக் கழக வாழ்க்கை

ஜனாதிபதி திசாநாயக்க தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் தனது கல்வியைத் தொடங்கினார், பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் சேர்ந்து, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்து விளங்கினார். 1992 இல், அவர் களனி பல்கலைக் கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழைந்தார், 1995 இல் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு ஆர்வலராக ஆனார். அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அரசியலில் நுழைதல்

1993 ஆம் ஆண்டு, அரசின் அடக்குமுறைக்குப் பிறகு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மீண்டும் எழுச்சி பெற்றதால், திசாநாயக்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1997 ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார், அதே ஆண்டு ஜே.வி.பி மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு வாக்கில், அவர் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் இணைந்தார்.

திசாநாயக்க 1999 மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணத்திற்கான ஜே.வி.பியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு, தேர்தல் அரசியலில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். 2000 ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.


பாராளுமன்றம் மற்றும் அமைச்சர் பதவிகள்

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், திசாநாயக்க குருநாகல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (யு.பி.எஃப்.ஏ) அரசாங்கத்தின் கீழ் விவசாயம், நிலம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். 2015 ஆம் ஆண்டு, அவர் நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

தலைமைத்துவம்

பெப்ரவரி 2, 2014 அன்று நடைபெற்ற ஜே.வி.பி.யின் 7வது தேசிய மாநாட்டில் திசாநாயக்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். 2019 ஆம் ஆண்டு, ஜே.வி.பி உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி (NPP) உருவாவதற்கு அவர் தலைமை தாங்கினார்.

செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்றைப் படைத்தார், இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் காணப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர்கள் டிசம்பர் 12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..!

0

2026 ஜனவரியில் அமுலுக்கு வர உள்ள அரசின் கல்வி சீர்திருத்தங்களை எதிர்த்து, ஆசிரியர்களும் அதிபர்களும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் நாடளாவிய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதால், கல்வித் துறையில் பெரும் குழப்பம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கொழும்பு மற்றும் காலி/ களுத்துறை பகுதிகளில் நேற்று தனித்தனியாக பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெற்றன. பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படுவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை செய்யாமல் திணிக்கப்படுவதாக சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

களுத்துறை மாவட்ட ஐக்கிய اسசிரியர் சங்கச் செயலாளர் தரிந்து தில்ஷான் கூறியதாவது,

2024 தேர்தல்களில் NPP-ஐ ஆசிரியர்கள் ஆதரித்தது கல்வித் துறையின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையினால். “அதற்கு பதிலாக எங்களின் விருப்பத்திற்கு முற்றிலும் முரணான சீர்திருத்தங்களை கொண்டு வருகின்றனர். எந்த ஆசிரியருடனோ, அதிபருடனோ ஆலோசனை செய்யவில்லை,” என்ற அவர், இந்த நடவடிக்கையை “தோற்கடிக்க” சங்கங்கள் உறுதியுடன் உள்ளன என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் (CTU) பிரியந்த பெர்னாண்டோ கூறியதாவது,

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த மாற்றங்களுக்கு எதிராக உள்ளனர். “ஊதிய வேறுபாடுகளை சரிசெய்வார்கள் என்று நாங்கள் நம்பி வாக்களித்தோம். ஆனால் யாரும் கேட்டுக் கொள்ளாத சீர்திருத்தங்களே வந்துள்ளன,” என அவர் கூறி, அனைத்து சங்கங்களும் டிசம்பர் 12 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றார்.


இங்கு CTU பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது,

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளது. தலைவர் அனுர குமார திஸாநாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில், ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினைகள் 2027 வரை தீர்க்க முடியாது என்று கூறியது, “வாக்குறுதியின் முற்றிலும் எதிர்மறை” என அவர் குறிப்பிட்டார். “ஆசிரியர்களின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடிய CTSU கூட இப்போது எங்களுடன் இணைந்துள்ளது,” என்றார்.

மேலும், கல்வி தொழில்முறை சங்கத் தலைவர் வெண். உலாபனே சுமங்கல தேரர் கூறும் போது,

பல தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைவதோடு, அரசு சீர்திருத்தங்களை வாபஸ் பெறவில்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என எச்சரித்தார். பரவலான எதிர்ப்புகள் இருந்த போதும், அரசு ஏற்கனவே சுற்றறிக்கைகளை வெளியிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதுவரை கல்வி அமைச்சு அதிகாரிகளிடமிருந்து கருத்து பெற முடியவில்லை.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்படாத மருத்துவர்கள்..!

0

நாடு முழுவதும் உள்ள மருத்துவ அதிகாரிகள் (MOH) பிரிவுகளின் மட்டத்தில் மருத்துவ அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு சிகிச்சை அளிக்கும் ஏராளமான பதிவு செய்யப்படாத நபர்கள் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற் சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இந்த நபர்களில் பலர் இலங்கை மருத்துவ கவுன்சில் (SLMC) அல்லது ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்களில் பதிவு செய்யப்படாத ஆயுர்வேத மருத்துவர்கள், சுகாதார உதவியாளர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் மருத்துவரல்லாத வாழ்க்கைத் துணைவர்கள், வெளிநாட்டு ஆயுர்வேத முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இல்லாதவர்கள் கூட அடங்குவர்.


டாக்டர் சஞ்சீவவின் கூற்றுப்படி, முதலுதவி பணியாளர்கள் மற்றும் தகுதியற்ற நபர்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவ நிலையங்கள் தீவு முழுவதும் பரவலாக இயங்குகின்றன – முக்கிய நகரங்கள் உட்பட. இதுபோன்ற போலி மருத்துவர்களால் பல கருக்கலைப்பு மையங்களும் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் இந்த மையங்களை எளிதாக சோதனை செய்ய முடியும் என்றும், ஆனால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் அரசாங்கம் சில காலமாக தனியார் பயிற்சி ஆய்வுகளை நடத்தாததால் பல அதிகாரிகள் தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். இதன் விளைவாக, போலி மருத்துவ மையங்களுக்கு எதிரான நடவடிக்கை தேக்கமடைந்துள்ளது.


இந்த பதிவு செய்யப்படாத பயிற்சியாளர்களும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சட்டவிரோத சிகிச்சை முறைகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும் டாக்டர் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டார், இவற்றை SLMC தரநிலைகளின் கீழ் கட்டுப்படுத்த முடியாது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50,000 போலி மருத்துவர்கள் செயற்படக் கூடும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்பு மதிப்பிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களின் ஒழுங்குமுறை சரிந்து விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில்..!

0

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப் படுத்துகின்றன.

முதற் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையால் மீனவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்..!

0

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக ‘மீனவர் ஓய்வூதியத் திட்டம்’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே குறித்த திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக தவணைக்கட்டணங்களைச் செலுத்தி முடித்த பின்னர், 60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

75% தவணைக்கட்டணத்தைச் செலுத்தியுள்ள சந்தாதாரர்களுக்கு, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படாமல், அவர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப 60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.


25% முதல் 75% வரை சந்தா செலுத்தியுள்ள சந்தர்ப்பத்தில், செலுத்திய முழுத் தொகையையும் அதற்கான வட்டியுடன் பெற்றுக்கொள்ளும் வசதி இத்திட்டத்தில் உள்ளது.

அதேநேரம் ஓய்வூதியம் பெறுவதற்கு முன் பகுதி ஊனம் ஏற்பட்டால் பணிக்கொடை அல்லது ஓய்வூதியம் வழங்கும் நேரத்தில் மாதாந்த ஓய்வூதியத்தைப் பெறும் வசதி உண்டு.

நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதிகபட்சம் 50,000 ரூபா வரை பணிக்கொடையை ஒரே தடவையிலோ அல்லது தவணை முறையிலோ பெற்றுக்கொள்ளலாம்.

ஓய்வூதியம் பெறுவதற்கு முன் விபத்து காரணமாக உயிரிழந்தால், ஒரு வருடத்தின் பின்னர் வாரிசுதாரருக்கு முழு சந்தாத் தொகையும் அதற்கான வட்டியுடன் வழங்கப்படும்.

தவணைக்கட்டணம் செலுத்தத் தவறிய சந்தர்ப்பங்களில், நிலுவைத் தொகையையும் வட்டியையும் செலுத்தி காப்புறுதிப் பத்திரத்தை மீண்டும் செல்லுபடியாக்கிப் கொள்ளலாம்.


ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் போது சந்தாதாரர் உயிரிழந்தால், அவருக்கு 80 வயது பூர்த்தியாகும் காலம் வரை அவரது வாழ்க்கைத் துணைக்கு (கணவன்/மனைவி) மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும் அல்லது மீதமுள்ள தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த மீனவர் ஓய்வூதியத் திட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் கடந்த 22 ஆம் திகதி கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் அகற்றப்பட்ட அறிவிப்பு பலகைகள்; தீவிர விசாரணையில் அரசாங்கம்..!

0

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், தொல்பொருள் திணைக்கள பாரம்பரிய இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் ஒரு பொது அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக இதுபோன்ற அறிவிப்புப் பலகைகளை நிறுவி வருவதாகக் கூறியுள்ளார்.

எனினும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இந்த அறிவிப்புப் பலகைகளை அந்தப் பகுதியில் உள்ள நான்கு தொல்பொருள் இடங்களிலிருந்து அகற்றியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்பானவர்கள் தாமதமின்றி அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செயலுக்குப் பின்னால் அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு குழு இருப்பது தெளிவாகி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியில் கைவைத்தால் அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும் – தமிழரசுக் கட்சி கடும் எச்சரிக்கை

0

பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம், எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன், ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.

பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார், ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை, சமஷ்டியைக் கைவிடவுமில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராசா கஜேந்திரனும் சொல்வது போல் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை, கடல் வத்தும் கடல் வத்தும் எனப்பார்த்துக் கொக்கு மாதிரி குடல் வத்திப்போக முடியாது.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கின்றார், மாகாண சபையை வேண்டாம் எனச் சொல்பவரை எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும், அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையைப் பார்க்கலாம் என்கிறார், அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம், அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேசப் போகின்றோம், அந்த ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம்.

பொது விடயத்தில் அரசமைப்பும் வரும் மாகாண சபையும் வரும், கொச்சைப்படுத்தும் கருத்துக்களைச் சொல்ல வேண்டாம், மேட்டுக் குடியில் இருந்து நாங்கள் வரவில்லை என்பதால் நீங்கள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டீர்களே ?

ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காகப் புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடைய வரைபு வந்த பின்னர் பேசலாம் என்றே சொன்னோம், நாங்கள் அரசமைப்பு வரையோனும் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார், அது பிழையான அணுகுமுறை.

தமிழரசுக் கட்சி இறுமாப்புடன் கதைக்கவில்லை, கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கின்றோம், அடக்கமாகப் பேசக் காரணம் ஒற்றுமையாகப் பயணிக்க விரும்புகின்றோம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மைத் தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது.

நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம், துரோகம், காட்டிக்கொடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்குத் தெரியும், மக்களுக்குப் பதில் சொல்ல நாம் தயார், சொல்லில் தொங்கிக் கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது.


கஜேந்திரகுமாருடன் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம், நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாகத் திருப்பி அடிப்போம், எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டதுதான், ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா ?

எங்களை நீங்கள் தாக்கியதால்தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது, சமஷ்டியைக் கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கின்றோம், நான் இனித் தேர்தல் கேட்கப் போவதில்லை ஆனால் எமது கட்சியில் கைவைத்தால் எந்தத் தரத்தில் பதில் வருகின்றதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும்.

ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாகப் பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன், இதற்குச் சாதகமாகப் பதிலளியுங்கள்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சாதகமாகப் பதிலளித்துள்ளது, கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார், கூட்டுத் தலைமையாகப் பொது விடயங்களில் ஒன்றாகுவோம், மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும், இனியாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய கல்லூரியில் பதட்டம்; திரைநீக்கம் செய்யாது திரும்பிச் சென்ற அமைச்சர்..!

0

நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாது விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (23) நிகழ்விடத்தை விட்டு வெளியேறினார்.

2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில ஆண்டுகளிலேயே பராமரிப்பு செயலிழந்து கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் தடாகத்தை மீளப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.


இந்த நிலையில் இன்று திடலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், டைவிங் தடாகத்தை விட பொதுமக்களும் மாணவர்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வகையில் இது சாதாரண ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக மாற்றப்படலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

பொது நிதி பயன்படுத்தப்படும் போது அதனால் அதிகமானோருக்கு பயன் கிடைக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த யோசனைக்கு பாடசாலை மட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் உருவாகி, இரண்டு விதமான கருத்துகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

ஒரு தரப்பு முன்னர் இருந்தபடி டைவிங் தடாகமாகவே புனரமைக்க வேண்டும் என வலியுறுத்த, மற்றொரு தரப்பு அமைச்சரின் யோசனையை ஏற்றுக் கொண்டது.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால், புனரமைப்பு பணிகளுக்காக முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாமல் அமைச்சர் உரையாற்றி உடனே வெளியேறினார்.


பாடசாலை அதிபர் உட்பட சிலர் திரைநீக்கம் செய்யுமாறு கோரிய போதும், ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில் அதை செய்ய முடியாது என அமைச்சர் மறுத்தார்.

பாடசாலை மட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்ட பின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் நிறை வெறியில் மேற்பார்வையாளர்..!

0

கிளிநொச்சி- பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குறித்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது கடந்த 20ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கி உள்ளனர். மேலும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை வடக்கின் கல்வித்துறை அதிகாரிகள் உயர்தர கல்வி கலந்துரையாடலுக்கு சென்ற வேளை மது அருந்தி சர்ச்சையில் சிக்கிய போதும் விசாரணைகள் இரண்டு வருடங்கள் கடந்த போதும் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் அதிரடி கைது..!

0

மாதம்பிட்டி – மிஹிஜயசெவன பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன், முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் பொலிஸாரினால் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பிட்டிய பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது, முதலில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்ட 32 வயதான ஆசிரியை மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.


அத்துடன், அவர் தனது வேலைக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பின்னர், ஒரு கிலோ 310 மில்லிகிராம் போதைப் பொருளுடன் வீட்டுக்கு வந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், சந்தேகநபரான கணவர் வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பொருட்களைப் பெறுபவர் என்றும், உயிரிழந்த ‘கெசெல்வத்தே தினுக’வின் உதவியாளர் என்றும் தெரிய வந்துள்ளது.


கைது செய்யப்பட்ட கணவர் இன்று (23) நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!