Sunday, July 19, 2026
Huis Blog Bladsy 40

கங்கன்குள குவாரி விடயம்; உடன் தலையிடுமாறு ஆளுநருக்கு கடிதம் -சத்தியலிங்கம் பா.உ

0

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் கிரவல் அகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொது மக்களை பொலிசார் கைது செய்தமை தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிரதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கங்கன் குளம் கிராமத்தில் அங்குவாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி கிரவல் அகழ்வு நடைபெற்றது.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது, அவரும் இச் செயற்பாட்டை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு அகழ்வை நிறுத்துமாறு கோரப்பட்டது.

ஆனால் பிரதேச செயலாளர் தன்னிச்சையாக அனுமதிக்கான ஒப்புதலை கனியவள திணைக்களத்திற்கு வழங்கியதால் அவர்கள் அகழ்விற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

பிரதேசசபை தமது வீதியை கிரவல் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று கூறி இன்று (15) கிராம மக்கள் 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் எனக்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலாளருடன் பேசிய போது அவரும் மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தினார்.

உடனடியாக எதிர்ப்புப் போராட்டம் நடத்த கிராமவாசிகள் அணி திரள்கிறார்கள். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தாங்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்து பிரச்சினையை தீர்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டில் மீண்டும் கைதான பிரதேச சபை உறுப்பினர்..!

0

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நேற்று(15) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் 4 பற்கள் உடைக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரரணைகளில் தாக்குதலின் பின்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்ததையடுத்து சர்வஜன அதிகாரம் கட்சியின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினரின் மனைவி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ் குடவத்தை மக்களிடமிருந்து றஜீவன் எம்.பிக்கு பறந்த முறைப்பாடு..!

0

யாழ் குடவத்தை பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறைப்பாடு ஒன்றை முன் வைத்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடவத்தை மக்களே இவ்வாறு முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

தாம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் உள்ளன என்றும் இருப்பினும் இதுவரை எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை என்றும் தமக்கான நிவாரணங்களை பெற்றுத் தருமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரை உடனடியாக அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலரை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டு..!

0

கடற்றொழிலாளர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு கடற்றொழில் அமைச்சர் வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்காலத்தில் 5000 பேரை திரட்டி போராட்டம் நடாத்தி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை இல்லாது செய்வோம் என்றும் அமெரிக்கா மற்றும் சீன தூதரகத்தை யாழில் அமைப்போம் என்றும் கடற்றொழிலாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

அந்த ஒரு கடற்றொழிலாளர் தெரிவித்த கருத்தானது இன்று ஒட்டுமொத்தமான கடற்றொழிலாளர்களுக்கும் மாத்திரமல்ல குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இராஜதந்திர நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இது பாரிய வேதனைக்குரிய விடயம் மாத்திரம் அல்ல அவலங்களை சுமந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் மக்களை மீண்டும் ஒரு அவலத்திற்குள் தள்ள கூடிய செயற்படாகத்தான் அமைந்திருக்கின்றது.

இந்தக் கருத்துக்கு பின்னால் ஆளும் தரப்பு இருக்கின்றது என்ற விடயம் தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

போராட்டத்தை நடத்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி இருந்த நிலையில் அதில் ஒரு விடயத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர்.

தற்போது இருக்கின்ற கடற்தொழில் அமைச்சர் தான் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுங்கள் என வற்புறுத்துவதாக கடற்றொழிலாளர்கள் நேற்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இந்த விடயத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது இனத்தை மீண்டும் இராஜதந்திர ரீதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாக்க கூடாது.

ஜனாதிபதி ஒரு நல்ல தீர்வு தருவார் என மக்கள் நம்புகின்றார்கள் அத்தோடு அவர்கள் இவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கையில் ஆளும் தரப்பின் அமைச்சர ஒருவர் இவ்வாறு மக்களை வழிநடத்துவது என்பது என்னை பொறுத்தவரையில் ஒரு பாரிய தவறாகும்.

அதுமட்டுமல்ல இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினை அத்தோடு இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொழில் முதல்களை இழப்பதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு அவலத்திற்கு உள்ளாகின்றனர். இந்த இழுவைமடி மீன்பிடி முறையானது இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட இனத்தை தூண்டி மீண்டும் அவர்களை பிரச்சினைகளுக்குள் தள்ளி விடுவது ஆபத்தான விடயமாகும்.

ஏனெனில் பேரிடர் ஒன்று ஏற்பட்டபோது எமக்கு உடனடியாக கை கொடுத்தது பாரத தேசம். கடந்த காலத்தில் கோட்டாபயவின் ஆட்சியில் எமது நாடு வீழ்ச்சி அடைந்த போது கூட அதை மீட்பதற்கு பாரத தேசமே உதவி புரிந்தது.

எதிர்காலத்திலும் எமது தேசத்தை காட்டியெழுப்ப இந்திய தேசம் கரம் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் போதைப்பொருள் விற்பனை; கணவன் – மனைவி உட்பட ஐவர் கைது..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றைய தினம் (15) குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகரின் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி இளைஞன் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது..!

0

கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த இளைஞன்(வயது22) ஒருவர் போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பிரான்ஸ் போலி கடவுச் சீட்டை வைத்துக் கொண்டு ஓமான், மஸ்கட் நகர் ஊடாக ஜெர்மனி நோக்கி பயணிக்க முயன்ற இளைஞனே குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவராவார்.

ஓமான், செல்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை 05.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குறித்த நபர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு கரும பீடத்தில் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட சந்தேகத்தில் இளைஞனை தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போது, இளைஞனுடன் அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவரின் கடவுச்சீட்டு போலியானது எனவும் அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் மற்றும் முத்திரைகளும் போலியானவை என்றும் தெரியவந்துள்ளது.

பின்னர் இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​ஒரு தரகருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி குறித்த கடவுச்சீட்டை பெற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஸ்பிரயோகம்; மாணவன் உட்பட நால்வர் கைது..!

0

டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படிக்கும் மாணவி என கூறப்படுகின்றது.

சந்தேக நபர் டிக்டொக் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், நேரடியாக பேச வேண்டுமெனக் கூறி, லங்கா பட்டுன விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார்.

மாணவியும் மாணவனும் பேசிக் கொண்டிருந்த போது, ​​மாணவனின் மூன்று நண்பர்களும் அங்கு வந்தனர், அதோடு மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈச்சலம்பட்டு பொலிஸாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஈச்சலம்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன்

சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய வசனம்..!

0

30 வருடங்களாக போரை நடத்திக் கொண்டு, தன்னுடைய தலைமைத்துவத்திலும் எவ்வித குறையும் வைக்காமல் செயற்பட்டவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என தெரிபே சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

தர்ம போதனையொன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விரும்பியோ விரும்பாவிட்டாலும் சிலரின் வார்த்தைகளில் வெளிவரும் ஒரு வசனம் தான் ‘சிங்கள மக்களின் ஞாபகம் ஒரு வாரம்தான்’ என்பது. இதை நானும் கேட்டிருக்கிறேன். இது பிரபாகரன் சொல்லிப் பிரபலமான வார்த்தைகளாகும்.

முப்பது வருடங்களாக அவரின் தலைமைத்துவ செயற்பாட்டில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. அது அவர்களின் தேசிய பற்றாகும். நான் கூறும் இவை சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரபாகரனை தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்றனர். ஏனென்றால் அவர் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எங்கே ஒரு இடத்தில் இருந்த புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்து விட்டு பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

அத்தோடு பெயர் பலகையை கழற்றிவிட்டு மீண்டும் நாட்டுகின்றனர். இதெல்லாம் காட்டு மிராண்டித்தன செயற்பாடுகளாகும். தமிழ் மக்களுக்கு பிரபாகரன் மாவீரன், தெய்வமாகும். அதே போன்று சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்த ஒரு சந்தர்ப்பம் இல்லை.

விகாரையில் விகாராதிபதி ஏதும் சொன்னால் ஆயிரம் காரணம் சொல்ல ஆட்கள் இருக்கின்றனர். அதனால் இதை பௌத்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமறைவு; நீதிமன்றின் அதிரடி உத்தரவு…!

0

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (15) பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில், வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறித்தல் வழங்கியது.

இந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த 8-12-205 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி குறித்த தேரரை இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவான் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதவான் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டபோது தேரர் முன்னிலையாகாத நிலையில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சார்பாக முதலாம் தரம் கொண்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் முன்னிலையாகி, மட்டு தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னலையாகி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் நீதிமன்றில் இன்று முன்னிலையாக முடியவில்லை எனவும் குறித்த தேரர் தங்கியிருக்கும் மற்றும் மறைந்திருக்கும் இடம் என சந்தேகிக்கப்படும் மங்களகம கௌவ்லியாமடு மற்றும் சின்னவத்தை விகாரை பகுதிக்கு தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் அங்கு இல்லை எனவும் அவர் மறைந்திருக்கும் இடத்தை தேடி வருவதாகவும் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதவான் தேரரை கைது செய்வதற்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதித்து கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டு எதிர்வரும் ஜனவரி 26 திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறையிலுள்ள தக்சியுடன் பிஸ்கட் உண்ட பொலிஸ் அலுவலர் பணி நீக்கம்..!

0

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்சியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அலுவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அலுவலர் சந்தேகநபர் நந்தகுமார் தக்சியுடன் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்டதாகவும், சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவரும் அவரைப் போலவே தோற்றமளிக்கும் இந்தச் சந்தேகநபரான நந்தகுமார் தக்சி உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நந்தகுமார் தக்சி ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அலுவலர் கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உப சேவைக் கடமையில் இருந்த போது, இலக்கம் 03 சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்சி என்ற சந்தேக நபரிற்கு பிஸ்கட் கொடுத்ததாகவும், அதனை சந்தேகநபர் பாதி உட்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த பொலிஸ் அலுவலருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அவர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு அருகில் சென்றதாகவும், அவருடன் சைகைகள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சிசிரிவி (CCTV) காட்சிகளைச் சோதனைக்கு உட்படுத்திய போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!