Saturday, April 18, 2026
Huis Blog Bladsy 40

“Facebook Party” மீது போலீஸ் சுற்றிவளைப்பு; 34 பேர் போதைப் பொருட்களுடன் கைது..!

0

கொழும்பு, கோட்டே பகுதியில் Facebook மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ‘Party’ மீது வெலிக்கடைப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி 34 பேரை கைது செய்துள்ளனர். இந்த சோதனை New Jayaviru Mawatha பகுதியில் நடைபெற்றது என போலீஸ் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 32 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். இவர்களின் வயது 20 முதல் 35 வரை காணப்படுகின்றது. போலீசாரின் தகவலின்படி, இந்த சந்திப்பு Facebook வழியே ஒருங்கிணைக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு போது போலீசார் தடை செய்யப்பட்ட ஹெரோயின், ஐஸ், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்களை பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ் அதிரடி நடவடிக்கையானது வெலிக்கடை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜயசிங்ஹே அவர்களின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

டிட்வா சூறாவளி காரணமாக இதுவரை 123 பேர் பலி; 130 பேர் மாயம் – DMC

0

நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளி மற்றும் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 123 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் இராணுவம், கடற்படை, காவல் துறை இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் படையணி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கம் மக்கள் தேவையற்ற பீதி அடையாமல், அதிகார பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் அரசு ஊடகங்கள் மூலம் மட்டுமே தகவல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வானிலை தொடர்பான போலித் தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் டிஜிட்டல் அமைச்சு..!

0

நாடு தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான வானிலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை கண்டறிந்து அகற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், துல்லியமான மற்றும் நேரத்திற்குத் தக்க தகவல்களுக்காக அரசு ஊடகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வழிகளைப் பின்பற்றுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டிற்கு முக்கியமான இந்த காலக்கட்டத்தில் தவறான தகவல்கள் தேவையற்ற பீதி ஏற்படுத்தியுள்ளதால், அதன் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Join US Click Here

கிண்ணியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது.!

0

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா – சமாவாஜதீவு பிரதேசத்தைச் சேர்ந்த, 28 வயதான சு. பர்சாத் என்பவர், நவம்பர் 28ஆம் திகதி, அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வாளால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கிண்ணியா – 6, சமாவாஜ தீவு பகுதியைச் சேர்ந்த, முகைதீன்வாவா கலீமுள்ளா (வயது 26), அப்துல் அஜீஸ் அஸீம்(வயது 19) ஆகிய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கொலை குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இன்றைய தினம் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டிலேயே அதிகபட்ச கனமழை; புளியம் பொக்கனைப் பகுதியில் 271 மி.மீ..!

0

2025 நவம்பர் 28 ஆம் தேதி காலை 8.30 மணிமுதல் இரவு 11.00 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம் பொக்கனையில் 271 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான மிக உயர்ந்த மழை இதுவாகும்.

அதே நேரத்தில் பல மாவட்டங்களிலும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

முக்கிய மழை பதிவுகள் (28.11.2025 – 8.30 a.m. to 11.00 p.m.)
இடம் மாவட்டம் மழை அளவு (மி.மீ)
புலியம் பொக்கனை கிளிநொச்சி 271.0
துனுமலை எஸ்டேட் கேகாலை 178.5
கட்டுநாயக்க கம்பஹா 176.4
மறிச்சுக்கட்டி மன்னார் 166.0
பொற்கேணி மன்னார் 165.0
மடு மன்னார் 156.5
மன்னார் (நகரம்) மன்னார் 125.9
மடோல்தென்ன எஸ்டேட் கேகாலை 122.0
கிரிந்திவெள கம்பஹா 120.5

மன்னார், கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல இடங்களில் அதிகளவு மழை பதிவானது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம் (General Information Technology – GIT) பாடத்துக்கான பரீட்சையும் இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் புதிய திகதி அறிவிக்கப்படும் வரை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாடசாலைகள் மூன்றாந் தவணைக்காக 16 டிசம்பர் மீள ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னர் பரீட்சை நடைபெறும் வாய்ப்புக் காணப்படுவதால் உங்கள் கற்றல் செயற்பாட்டைக் கைவிடாதீர்கள்.

ஐ.நா. சித்திரவதை தடுப்புக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு..!

0

ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளை தடுக்கும் துணைக்குழு (SPT) 2026 ஆம் ஆண்டில் ஆறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒத்தி வைக்கப்பட்டிருந்த புருண்டி, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ பயணங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும், புதியதாக பராகுவே, ருவாண்டா மற்றும் இலங்கைக்கு விஜயங்கள் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் துணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான விஜயத் திட்டம் ஜனவரியில் நடைபெறும் மெக்சிகோ பயணத்துடன் தொடங்க உள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஐ.நா. நிதி நெருக்கடியினால் திட்டமிட்டிருந்த பயணங்களில் மொசாம்பிக், நியூசிலாந்து, பெரு மற்றும் செர்பியா ஆகிய நான்கு நாடுகளுக்கான பயணங்களை துணைக்குழு மேற்கொண்டிருந்தது.

இந்தத் திட்டம் ஜெனீவாவில் நவம்பரில் நடைபெற்ற SPT இன் அண்மைய அமர்வின் போது முடிவு செய்யப்பட்டது.

“எங்கள் வளங்கள் இன்னும் குறைவாக இருந்தாலும், குறைந்த வேகத்திலாவது எங்கள் நேரடி கண்காணிப்பு பொறுப்பை நிறைவேற்ற நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று துணைக் குழுவின் தலைவர் மரியா லூயிசா ரோமெரோ தெரிவித்தார்.

“நாடுகளுடனும், தேசிய சுயாதீன கண்காணிப்பு அமைப்புகளுடனும் துறைத்தள விஜயங்கள் மற்றும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் ஏற்படும் நேரடி தொடர்பு, பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், உலகளாவிய அளவில் கொடுமைப்படுத்தல் தடுப்பை மேம்படுத்தவும் அத்தியாவசியமானது.”

OPCAT உடன் இணைந்து, போலீஸ் நிலையங்கள், சிறைகள், மனநல மருத்துவ மனைகள், குடியேற்றக் காவல் மையங்கள் மற்றும் பிற காவல் சூழல்கள் போன்ற இடங்களில் முன் அறிவிப்பின்றி விஜயம் செய்வதன் மூலம், சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு மற்றும் தங்குமிட நிலைகளை SPT கண்காணிக்கிறது.

எம்.பி பதவியிலிருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முஹம்மது..!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.

சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஹிஷாட் பதியூதின் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு..!

0

மோசமான அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உடனுக்குடன் தகவல்களைப் பெற குழுவில் இணைந்து கொள்ள CLICK HERE

ஈழத் தமிழர் வரலாறு – ஒரு உணர்வுப் பயணம்..!

0

ஈழத் தமிழர் இந்நிலத்தில் வாழ்ந்த வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒன்றாகும். பண்டுகாபயனின் வரலாறு தொடங்கி பண்டைய சங்க இலக்கியங்கள், சீனப் பயணிகளின் குறிப்புகள் வரை சகலதிலும் தமிழர்கள் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் தம் அரசுகளை நிறுவி வணிகம், கல்வி, கலாசாரம் ஆகியவற்றை நிலை நிறுத்தியிருந்தனர் எனக் கூறப்படுகின்றது. ஏன் பண்டுகாபயனே ஒரு இந்து மன்னன் என்பதற்கு பல ஆதாரங்கள் மகாவம்சத்திலேயே உள்ளது.

மொழி என்பது ஒரு உயிரின் மூச்சு என்றால், ஈழத் தமிழர் அந்த மூச்சினைப் பாதுகாத்தவர். ஈழத்தில் மாறும் அரசியல் சூழல்கள் இருந்த போதிலும் தமிழ் கல்வி, கோவில் மரபுகள், திருவிழாக்கள், சைவத் தத்துவம் அனைத்தும் அந்த அடையாளத்தைத் தொடர்ந்து பேணி வளர்த்தன.

16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆட்சிகள் இலங்கைத் தீவினுள் நுழைந்த போது, அவர்கள் கொண்டு வந்த நிர்வாக மாற்றங்கள் தீவின் இனவியல்–அரசியல் உறவுகளை மாற்ற ஆரம்பித்தன.

போர்த்துகீசர், டச்சர், பிரிட்டிஷ் ஆட்சி – ஒவ்வொருவரும் தீவில் வேறு விதமான மாற்றங்களை உண்டாக்கின. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வி வாய்ப்புகள் தமிழ் சமூகத்துக்கு திறக்கப்பட்டாலும், அதே நேரத்தில் தீவின் மக்கள் இடையே அரசியல் பிரிவுகளும் வலுப்பட்டன. இவை எல்லாம் பின்னாளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான அரசியல் நிலைமைகளை உருவாக்கின.

1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தீவின் அரசியல் திசை மாற்றம் மிகத் தெளிவாகக் காணப்பட்டன. “ஒரு நாடு – ஒரு மொழி” என்ற இனவாத கோசத்துடன் வந்த சட்ட மாற்றங்கள், புறக்கணிப்புக்கள் தமிழ் மொழி மக்களிடம் ஆழமான கவலையையும் பாதுகாப்பு மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தின.

கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்பட்ட சமமின்மை, பாகுபாடு, புறக்கணிப்பு என்பன தமிழரின் அன்றாட வாழ்வியலைப் பாதித்தது.

இந்த காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அமைதியான ஜனநாயக வழியில் உரிமைகளை கேட்டனர். அவர்களின் கோரிக்கை எதுவும் தனி மேலாதிக்கத்திற்காக அல்ல; மொழி, கல்வி, நிலம், கலாசாரம் ஆகிய உரிமைகளில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. எனினும் வழங்கப்படவில்லை. புறக்கணிப்புக்கள் தொடர்ந்தன.

சரித்திரத்தின் ஒரு கட்டத்தில், அரசியல் பேச்சுவார்த்தைகள் முடக்க நிலையை அடைய தீவில் ஆயுத மோதல்கள் தீவிரமான பாதையில் சென்றன. இந்த காலம் இரு பக்க மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தியது.

வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்கள் தமது வீட்டை, நிலத்தை, வாழ்வாதாரத்தை, உறவுகளை இழந்தனர். மக்கள் இடம்பெயர்ந்தனர். தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை சிதைந்து போவதைக் கண்டனர்.

இந்த அனுபவம் ஈழத் தமிழர் மனதில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றது, ஆனால் அவர்களின் இடறாத மன உறுதியை வலுப்படுத்தியது.

போர் 2009-ல் போர் பாரிய மனித அவலத்துடன் நிறைவு பெற்ற பின்னர், ஈழத் தமிழர் வரலாறு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது. அவர்கள் சந்தித்தது ஒரு இரத்த இழப்பின் வடு அல்ல மாறாக அது மறுபிறப்பின் தொடக்கம். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள் குடியேறி தமது வாழ்வியலை கட்டமைக்கத் தொடங்கினர்.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைக் கட்டியெழுப்புகின்றனர். கல்வி, தொழில்நுட்பம், கலை, விவசாயம், கடல்சார் தொழில்கள் போன்றவற்றில் முன்னேறுகின்றனர். அவர்கள் சுமந்து கொண்டிருப்பது கடந்த கால வலியை மட்டுமல்ல; எதிர்காலத்தின் கனவுகளையும் தான்.

இன்று உலகம் கிராமமாக மாற்றமடைந்து வருகின்றது. ஈழத் தமிழர்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இன்றைய ஜனநாயகப் போராட்டம் வன்முறைக்கானது அல்ல மாறாக உரிமை, சமத்துவக் குரலுக்காக, எமது உரிமை, அடையாளம், கலாசாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக மட்டுமே.

எனவே, எம் தாயகத்தையும், எம் மொழியையும் எம் அடையாளத்தையும் பாதுகாத்து கெளரவமான எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க இன்றைய நாளில் உறுதியேற்போம்.

என்றும்,
பிரசாந்த்

error: Content is protected !!