அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மிக மோசமாக காயமநை்த நிலையில் நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், சிட்னியில் உள்ள இஸ்ரேலின் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய விரும்பத்தகாத பயங்கரவாத சம்பவங்கள் இடம் பெறலாம் என பல நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் ஏலவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்து ஐயன் கட்டுக் குளம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவலையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 14.12.2025இன்று குறித்த இடத்திற்கு நேரடியாகக் கள விஜயமொன்றினை மேற்கொண்டு நிலமைகள் குறித்து பார்வையிட்டார்.
அத்தோடு வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், நீர்பாசனப் பொறியியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத்தினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது முத்துஐயன்கட்டு குளம் உடைப்பெடுக்கும் அபாயத்திலிருப்பது தொடர்பாக வெளியான செய்திகளில் உண்மைத் தன்மைகள் இல்லை எனத் தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்து ஐயன்கட்டு குளத்தின் நீரை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற்உறுப்பினர் ரவிகரன் உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள். தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஒரு ஆயுதமற்ற போராளியாக ஆனால் ஆயுதங்களுக்குச் சமமான வலிமை கொண்ட சிந்தனையாளராக விளங்கினார் அன்ரன் பாலசிங்கம்.
அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு கோட்பாட்டு வடிவம் கொடுத்த முக்கிய ஆளுமையே தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.
1938 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். வீரகேசரிப் பத்திரிகையில் பத்திரிகையாளராக தனது பயணத்தை தொடங்கி பின்னர், கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இணைந்தார்.
அங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.
அன்ரன் பாலசிங்கம் தொடர்பில் தேசியத் தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது,
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்க பலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்து விட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தேசத்திற்கே இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக் காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது.
துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்று போய் விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.
பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம் புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்து கொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது.
தினம் தினம் நாம் பகிர்ந்து கொண்ட வாழ்பனுபவத்தில் வலிமை பெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.
பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல என்பதைக் கண்டு கொண்டேன்.
மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடிய போதும், தாங்க முடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டு நின்றது. அவர் துன்பத்தால் துவண்ட போதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.
எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.
ஈழத் தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப் பணிக்கு மதிப்பளித்து “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.
பாலாண்ணை உண்மையில் எம்மை விட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற் செய்கையானது அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற் செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.
இதேவேளை மாவட்டத்தின் வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் ஏற்பட்ட வரலாறு கானாத வெள்ளம் காரணமாக அனைத்து குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும் 124 குளங்கள் உடைப்பெடுத்திருந்தமையாலும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒரு ஏக்கரில் நெற் செய்கையினை மேற்கொள்வதற்கு நிலத்தினை பண்படுத்ததுதல், விதை நெல் மற்றும் பசளை, கிருமிநாசிகள் உட்பட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை செலவாகும் நிலையிலே வங்கிக் கடனை பெற்றும் தங்களது நகைகளை அடகு வைத்தும் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
இதேவேளை அரசினால் வயல் அழிவிற்காக ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பணத்தினையாவது விரைந்து வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடனான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தந்தை உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் அன்றைய தினம் சந்தேக நபர்களான தந்தை, தாய் தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
இதே வேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி துரிதமாக செயல்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த சிறுமி கூறியுள்ளார்.
இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக 12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் ஆபாச படம் பார்த்து வன்புணர்வு செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள யோத வாவி நீரேந்துப் பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று (13) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முறையான ஆய்வை மேற்கொண்டதன் பின்னர் தொடர்ந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக கடற் தொழிலாளர் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்படாது விட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சமூகங்களுக்கு சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்காக சீன தூதரகத்துடன் கலந்துரையாடுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கடந்த சில மாதங்களாக மன்னார் பொது வைத்திய சாலையினை மத்திய அரசின்கீழ் கொண்டு செல்ல சில வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுத்திருந்த நிலையில் இன்று (13.12) மன்னாரில் நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது,
இன்றைய கூட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இதற்கு சக பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்கள்,
வடக்கு மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளமையால் அதற்கு முன்பதாக வைத்திய சாலையை மத்திய அரசின்கீழ் கொண்டு வருமாறும், இல்லாது விட்டால் வடக்கு மாகாணசபை வந்து விட்டால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களும் சேர்ந்து மத்திய அரசின் கீழ் கொண்டுவர விடமாட்டார்கள். அவர் இப்பொழுதே அதற்கு எதிர்ப்பாக உள்ளார் என தெரிவித்தார். இதன் போது ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் சிரித்தவாறே சத்தியலிங்கம் எம்.பியை நோக்கினர்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்,
வைத்திய சாலை மாகாணத்திற்கு சொந்தமானதா மத்திக்கு சொந்தமானதா என்பதுவல்ல விடயம், மன்னார் பொது வைத்திய சாலையின் பிரதான பிரச்சினை வளப் பற்றாக்குறை. அதனை நிவர்த்தி செய்து தேவையான வளங்களை கொடுத்தால் வைத்தியசாலை திறம்பட இயங்கும். உதாரணமாக வைத்திய சாலையில் சி.ரி ஸ்கான் பிரிவிற்கான கட்டிடம் உள்ளது. ஆனால் அங்கு சி.ரி ஸ்கான் இயந்திரம் இல்லை.
இவ்விடயம் தொடர்பாக அன்மையில் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரை சந்தித்து சி.ரி ஸ்கேன் இயந்திரம் ஒன்றினை கோரியிருந்தேன். வரும் வருடத்திற்கான ஒதுக்கீட்டில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு தேவைப்பாடுகள் நிறைய உள்ளது. அவற்றை பூரணப்படுத்தினாலே வைத்தியசாலை சிறப்பாக இயங்கும். ஆகவே அதனை செய்து தாருங்கள் என கோரினார்.
இதனையடுத்து பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு வைத்திய சாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கென நடைமுறைகள் உள்ளது. அதனை பூர்த்தி செய்தே அவ்வாறு செய்யமுடியும். அத்தோடு வெறுமனே பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப் போவதில்லை, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியும்.
அந்தவகையில் வைத்தியசாலைக்கு தேவையான வளங்களை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து குறித்த விடயத்திற்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.
இந்த வைத்தியசாலை விடயம் தொடர்பாக இதற்கு முன் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பங்கேற்காத நிலையில் மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்தினை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள்,
வடக்கு மாகாண சபையின் 2015/01 ம் இலக்க சுகாதார நியதிச்சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்திய சாலைகளும் மாகாண சபையின் நிறுவனங்களாக வர்த்தமானியூடாக பிரகடனப்பட்டுள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்றார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பரீட்சைகள் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 27 ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது.
மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நேற்று (13) மாலை இடம்பெற்றது.
இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை,பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக் கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபா நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் கெளரவ என்.வேதநாயகன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன், ரிஷாட் பதியுதீன் உட்பட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.