Friday, October 24, 2025
Huis Blog Bladsy 40

புலிகளின் புதையலை தோண்டிய குற்றச்சாட்டில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்..!

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மாணிக்கபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் தங்கம் காணப்படுவதாக தெரிவித்து சந்தேகநபர்களால் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை, கிளிநொச்சி – உருத்திரபுரம், பெரிய பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கான மீள் நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்த இஸ்ரேல்..!

0

இலங்கையர்களுக்கான மீள் நுழைவு விசாவின் செல்லுபடியாகும் காலத்தை ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்க இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

0

யாழ் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு 60 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் – விஜய் தணிகாசலம் ஆதங்கம்

0

தமிழினப் படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை மேற்கோள்காட்டி, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

செம்மணி பகுதியில் 1990களில் இலங்கை இராணுவத்தால் புரியப்பட்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் இங்கு புதைந்துள்ளதாகவும், இதற்கான ஒரு விசாரணையின் தேவையை அழுத்தமாக எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தணிகாசலத்தின் இந்தக் கருத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரும் தமிழ் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப் போகிறது.

2021 ஜனவரியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையும், இலங்கையின் உள்நாட்டு நீதி விசாரணைகளின் தோல்வி காரணமாக சர்வதேச நடவடிக்கைகளின் தேவையை வலியுறுத்தியிருந்தது.இலங்கை உணவகம்

இதனால், செம்மணி புதைகுழி உள்ளிட்ட இடங்களில் நடந்த மீறல்களுக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பது தமிழ் சமூகத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில் விஜய் தணிகாசலத்தின் கருத்து, செம்மணி விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதற்கு சர்வதேச விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.

யாழில் காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி; முற்றுகையிட்டு கைது செய்த கிராம சேவகர்கள்..!

0

யாழ்.புங்குடுதீவு இறுப்பிட்டி ஜே/27 கிராமசேவகர் பிரிவிலுள்ள பற்றைக்காடு நிறைந்த பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை கிராமசேவகர்கள் இருவர் முற்றுகையிட்டனர்.

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அன்ரன் பயஸ் விதுசன் எனும் நபர் ஒன்றரை லீற்றர் கசிப்பு போத்தலுடன் புங்குடுதீவு பிரதேச கிராம சேவகர்களான சிறீதரன் நிமால் மற்றும் பிரியலக்சன் ஆகியோரால் கடந்த 25 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெறப்பட்ட இறுப்பிட்டி காட்டுப் பகுதியில் காணப்பட்ட சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து குறித்த பற்றைக் காட்டுக்குள் இரு கிராம சேவகர்களும் துணிச்சலாக சென்று சட்டவிரோத கசிப்பு நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

பின்னர் இது தொடர்பில் குறிகாட்டுவான் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். எனினும் வாகனம் இல்லாததால் 50 நிமிடங்களுக்குப் பின்னரே பொலிஸார் அவ்விடத்தை சென்றடைந்தனர்.

முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையத்தில் 180 லீற்றர் கொள்ளளவு உடைய கோடா பரல்களை மீட்ட பொலிஸார் அதனை நிலத்தில் ஊற்றி அழித்தனர்.

அத்துடன் கிராம சேவகர்களால் கைது செய்யப்பட்ட அன்ரன் பயஸ் விதுசன் என்பவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான குறித்த காட்டுக்குள் பயமின்றி சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு நபரையும் கைது செய்த கிராம சேவகர்கள் இருவரின் துணிச்சலான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர்களுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யாழ். செம்மணிப் புதைகுழியில் இன்றும் இரண்டு மனித எலும்புக் கூடுகள் மீட்பு..!

0

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக் கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் வியாழன் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நேற்று (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழியில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

0

இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலையில் இணைந்த சேவை உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக மட்டத்திலான இடமாற்றம் தாபன விதிக்கோவைக்கு முரணானது. இதனை மீள் பரிசீலனை செய்யுமாறு வழியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பில் இடமாற்ற சுற்றறிக்கையில் பிழைகளை விட்டுவிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தூரப் பகுதிகளுக்கு பிரதேச செயலக ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை உத்தியோகத்தர்களை உடல், உள ரீதியாக பாதிக்க வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்தோடு இடமாற்றத்தில் பிரதேச செயலகங்களுக்கிடையிலும் ஆண், பெண் என்ற ரீதியிலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர் என்றவாறான விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தர்.

மேலும் நீதியான இடமாற்றம் வேண்டும், பாரபட்சமற்ற இடமாற்றத்தை ஏற்படுத்துங்கள், நியாயமற்ற இடமாற்றத்தினை உடனடியாக திரும்ப பெறவும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டவாறான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது..!

0

மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளூம் சமூகத்தைப் பயமுறுத்தி வருகின்றனர். சட்டத்தின் ஆட்சி இன்று சமூகத்தில் இல்லாத நிலையே காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய வலுவான பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தத் தவறிவிட்டது.

இவ்வாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை நாம் இழக்கும் போது, ​​கொலையாளிகள் மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் மனித உயிர்கள் இழக்கப்படும் போது, ​​தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய அம்சமாக அமைந்து காணப்படும் வாழும் உரிமையை உறுதி செய்யத் தவறிவிட்டது. கொலைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரசாங்கம் பல்வேறு புள்ளி விவரங்களைக் காட்டினாலும், இந்த மனித உயிர்களை வெறும் புள்ளிவிவரங்களுடன் சுருக்கிக் கொள்ள முடியாது. இந்த மனித உயிர்களின் மதிப்பை பணத்தை வைத்தும் அளவிட முடியாது.

கொலைகாரர்களின் அச்சுறுத்தல்களால் முழு சமூகமும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்திடமிருந்து இதற்கான தீர்வுகளும் பதில்களும் தேவை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, ஐஸ் போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக வியாபித்து காணப்படுகின்றது. இளைஞர்கள் மட்டுமல்லாது, பாடசாலை மட்டத்திலும் கூட இந்த போதைப்பொருள் பரவி காணப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு இளம் தலைமுறையினரை இழந்து வருகிறது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். இவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவாலாக அமைந்து காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்புரி சார் விடயங்களில் நடக்கும் வெட்டுக்கள் போலவே மறுபுறம் கொலை கலாச்சாரத்தால் உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்களில், ​புள்ளிவிவரங்களை முன்வைத்து, இவை சாதாரண கொலைகள் என்று அரசாங்கம் பிரஸ்தாபித்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் தரப்பினர் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்தனர்.

மக்களுக்கு இவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தனர். அவர்களால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாது போயுள்ளது. தேசிய பாதுகாப்பு, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாநகர சபை SJB உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்..!

0

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

அந்த மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதில் கட்சி எடுத்த முடிவை மீறியமை காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.என். நுஸ்கியின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு; தவிசாளராக கிருஸ்ணவேணி, உபதவிசாளராக சஞ்சுதன் தேர்வு..!

0

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27 ஜூன் 2025) மாலை நடைபெற்ற தேர்வில், தவிசாளர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தி. கிருஸ்ணவேணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஞானமுத்து அகிலன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

தவிசாளர் தேர்வை இரகசிய வாக்கெடுப்பு மூலமா அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலமா நடத்துவது என ஆணையாளர் கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பைக் கோரினர், ஆனால் ஆணையாளர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால், தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மீதமிருந்த 15 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி, பகிரங்க வாக்கெடுப்பில் கிருஸ்ணவேணி 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 3 வாக்குகள், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகள், தமிழ் மக்கள் கூட்டணியின் 4 வாக்குகள் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் 1 வாக்கு ஆகியவை ஆதரவாக அளிக்கப்பட்டன.

12 வாக்குகள் வெற்றிக்குப் போதுமான நிலையில், 15 வாக்குகளுடன் கிருஸ்ணவேணி தவிசாளரானார்.

உபதவிசாளர் பதவிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் மட்டும் பரிந்துரைக்கப்பட்டதால், அவர் போட்டியின்றி உபதவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

error: Content is protected !!