கிழக்குப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் வந்தாறு மூலையில் நடந்த விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவரொருவர் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான முஹம்மத் மஸூத் (வயது-23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
கொழும்பு கஹதுடுவாவில் உள்ள வெதாரா மாவட்ட மருத்துவமனையில் 26 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 40 வயது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையில் அளித்த புகாரில், அந்தப் பெண் நவம்பர் 12 ஆம் தேதி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்ததாகவும், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு நவம்பர் 19 ஆம் தேதி மீண்டும் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முறைப்பாட்டின் படி, குறித்த பெண் நவம்பர் 19 ஆம் தேதி சிறுநீர் பரிசோதனை அறிக்கையுடன் OPDக்கு வந்ததாகவும், மருத்துவர் ஒரு பெண் உதவியாளரின் உதவியின்றி அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவளைப் பரிசோதிப்பது போல் நடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் இன்று மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடக அடக்கு முறைக்கான ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
“பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் ஊடக அடக்கு முறைக்கான ஓர் ஆயுதமாகும். மஹிந்த இலேபெருமவை பொலிஸ் விசாரணைக்கு அழைப்பது தவறானது”
கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் பயன்படுத்தப்பட்ட பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை இரத்து செய்யுமாறு சுதந்திர ஊடக இயக்கம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.
அவ்வாறு இருக்கையில், இத்தகைய அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய அரசியல் இயக்கம் ஒன்று தலைமையேற்று நடத்தும் தற்போதைய அரசாங்கம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்த அல்லது ஒடுக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க ஒரு நிலையாகும்.
பதிவாகியுள்ள மிகச் சமீபத்திய சம்பவம், அருண பத்திரிகையின் ஆசிரியர் மஹிந்த இலேபெரும வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப் பட்டுள்ளமையாகும்.
பொலிஸ் அறிக்கைகளைப் பெறுவதற்கு கிராம உத்தியோகத்தர் சான்றிதழுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரின் சான்றிதழும் அவசியம் எனக் குறிப்பிட்டு, இலேபெரும ஆசிரியராகப் பணியாற்றும் அருண பத்திரிகையில் செய்தி வெளியானதே இதற்குக் காரணமாகும்.
பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆனந்த விஜேபால, இச்சந்தர்ப்பத்தில் மக்கள் நிராகரித்த கடந்த அரசாங்கங்களைப் போன்று தன்னிச்சையாக நடந்து கொள்ளக் கூடாது. செய்தி தவறாக இருப்பின் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி உண்மையை வெளியிடுவதும், செய்தி உண்மையாக இருப்பின் அந்த தவறான நடைமுறையை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்துவதுமே அவரது அமைச்சுப் பதவிக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதாகும்.
எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் உண்மையானதாகும். முழு சமூகமும் அந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொலிஸ் சான்றிதழைப் பெறுவதற்கு அரச அதிகாரியான கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்தலைப் பெறுவது தவறல்ல.
ஆனால் அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கக்கூடிய சிவில் குழுவொன்றின் தலைவரிடமிருந்து இவ்வாறான உறுதிப்படுத்தலைப் பெற வைப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில் அத்தகைய நபர்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்வார்கள் என்று கூறுவது கடினமாகும்.
அவ்வாறிருக்கையில், அமைச்சர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டம் பற்றிக் குறிப்பிட்டு ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்கவோ அல்லது தனது பொறுப்பில் உள்ள பொலிஸாருக்கு அழைக்கவோ முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறான முன்னுதாரணமாகும்.
இந்நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தின் ஊடாக இவ்வாறான நடத்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது உட்பட ஒட்டுமொத்த மாற்றத்தையே எதிர்பார்த்தார்கள் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நம்பிக்கையாகும்.
எனவே, ஊடகவியலாளர் மஹிந்த இலேபெருமவை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பது செய்யக்கூடாத ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொலிஸாருக்கு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவரிடம் செல்ல முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.
அத்தோடு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பதிலளிக்கும் உரிமை இருப்பதால் பத்திரிகையைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் உள்ளதென்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அடக்குமுறைச் சட்டமாகவும், சில ஊழல் மிக்க அரசியல்வாதிகள் ஊடகங்களிடமிருந்து தமது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளும் திரையாகவும் அமையும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் எதிராகப் பயன்படுத்த வேண்டாம் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலை முற்றாக ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளை இத்தகைய பரந்த சீர்திருத்தங்களின் மூலமே நிறைவேற்ற முடியும்.” என்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடைந்தது.
கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் ஹர்ஷ ரத்நாயக்க, எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்தார்.
அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், பொது முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது.
யாழ் – புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்த சென்ற நபர் ஒருவர் இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார்.
தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர்மீது தாக்குதலை நடத்திய இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், அவர்களில் ஒருவரை இன்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 25 வயது யுவதி ஒருவர் காதலனை ஏமாற்றி சுவிஸிலிருந்து வந்த குடும்பஸ்தருடன் தொடர்பட்டு சுவிஸ்லாந்து சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
யாழ் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 40 வயதான குறித்த சுவிஸ் குடும்பஸ்தர் சுவிஸில் மனைவியை விவாகரத்து செய்த பின் கடந்த வருட தொடக்கத்திலிருந்து வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சியில் சில மாதங்கள் தங்கியிருந்த பின் மீண்டும் சுவிஸ் சென்றுள்ளார்.
அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவரை யாரும் அறியாத வண்ணம் பதிவுத் திருமணம் முடித்துள்ளார். ஆனால் அந்தப் பதிவுத் திருமணம் யுவதியின் பெற்றோருக்கு தெரியும் என காதலன் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த யுவதி வவுனியா பல்கலைக் கழகத்தில் கற்று வந்ததுடன் அங்கு கல்வி கற்றுவந்த விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை காதலித்தும் வந்துள்ளார்.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், காதலனின் சகோதரியின் திருமணம் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலியின் பெற்றோரால் கூறப்பட்டு வந்ததாம்.
இந் நிலையிலேயே குறித்த யுவதி தனது காதலனுக்கும் தெரியாமல் சுவிஸ்லாந்துக்கு சென்றுள்ளதாக காதலன் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புக்கு தனியார் வங்கி ஒன்றின் பரீட்சை ஒன்று எழுதுப் போவதாகவும் 5 நாட்கள் அதற்காக கொழும்பில் தங்கியிருக்கப் போவதாகவும் தனது தாயாருடன் கொழும்பு சென்று அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து பரீட்சை எழுதி விட்டு வரப் போவதாகவும் காதலனுக்கு தெரிவித்து காதலனை ஏமாற்றிவிட்டு சுவிஸ் சென்றுள்ளார் குறித்த யுவதி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருட்கள் உள்ள இடங்களுக்கான திசைகளைக் காட்டும் வகையில் திசைப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது.
அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதுடன் அப்பலகைகள் கழற்றி அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. அதற்கமைய உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இன்று (24.11.2025) நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கும் சுகாதார அமைப்புக்கும் தீர்வுகளை அறிவிப்பதற்கு பொறுப்பானவர்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் வழங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
48 மணி நேரத்திற்குள் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், 26 ஆம் திகதி நடைபெறும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுடன் தொடர்ச்சியான தீர்வுகளை அறிவிப்பதன் மூலம் சுகாதார அமைப்பில் தற்போதைய சிக்கல் நிறைந்த சூழ்நிலையைத் தீர்க்க ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் பிற பொறுப்பான நபர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று சங்கம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமர் முன்னெடுக்கும் கல்விக் கொள்கைகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூகத்திடம் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக குற்றம் சுமத்திய ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளின் நேரத்தை இரண்டு மணிவரை நடாத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முடிவும் தவறான தீர்மானம் என்றார்.
அத்துடன் பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் போது முஸ்லிம் பிள்ளைகள் வெள்ளிக்கிழமைகளில் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மேலும் இம்முறை அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் தொகையும் மிக சொற்பமான நிலையில் இந்த விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்கள் கூட எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை, மற்றும் சுபோதினி அறிக்கையிலும் விடயங்கள் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவும் இது தொடர்பாகவே தமது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. என்றார்.
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதாவது குற்றச் செயலுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக் குழுக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் 07 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து அத்துப்பாக்கியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டை குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து அவ்வாயுதத்தை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாயுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப முகவராக செயற்பட்டுள்ளதுடன் சுமார் 7க்கும் மேற்பட்ட மொழியறிவு கொண்டவராக தன்னை இனங்காட்டி சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.