Sunday, August 16, 2026
Huis Blog Bladsy 40

மாகாண சபைகள் வட-கிழக்குத் தமிழருக்கு அவசியம் தேவை – நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்

0

திரு. திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

திரு. திலித் ஜயவீர அவர்கள் ஒரு திறமையான சட்டத்தரணியும், முன்னணி தொழிலதிபரும், சிங்கள தேசியவாதியாக அரசியலில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட நீதியரசர், அவரது சிங்கள தேசியவாதத்தை முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக கருதுவது தவறான புரிதல் என சுட்டிக் காட்டினார்.

அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், புத்தமதம் பரவுவதற்கும், சிங்கள மொழி உருவாவதற்கும் முன்னரே, தமிழ் மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக இருந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் கே. இந்திரபாலாவின் ஆய்வுகளின் படி, தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதனை அரசியல் ரீதியாக அங்கீகரித்துள்ளதும் அவர் நினைவூட்டினார்.

மாகாண சபைகளின் உண்மையான நோக்கம்

மாகாண சபைகள் முழு இலங்கைக்காக அல்ல, மாறாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடு என நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

“சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவை சிங்கள மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்ட அவர்,

தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட காரணங்களாக,

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் அரச மொழியாக்கப்பட்ட சட்டம்,
1958, 1977, 1981 மற்றும் 1983 இனப்படுகொலை,
1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் (Standardisation) போன்ற அரச கொள்கைகள், தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை முற்றிலும் உடைத்தன, இவைதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சட்டமும் சுயநிர்ணய உரிமையும்

சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (ICCPR) –
கட்டுரை 1 இன் படி, “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது” என்பதையும், அது தனி நபர்களுக்கல்ல, மக்கள் என்ற குழுவுக்கே உரியது என்பதையும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு – கிழக்கின் தமிழ் பேசும் மக்கள், ICCPR வரையறைப்படி ஒரு “இன மக்கள்” ஆகும் என்றும், அவர்களுக்கு சுய ஆட்சி உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு, தமிழ் மக்களுக்கு முழுமையான தன்னாட்சியை வழங்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றான அரசியலமைப்பு ஏற்பாடு உருவாகும் வரை, மாகாண சபைகளை ஒழிப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முற்றிலும் அழிக்கும் செயல் ஆகும்” என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதனால், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என்ற திரு. திலித் ஜயவீர அவர்களின் கருத்தை, தான் திடமாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை; மீள ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை..!

0

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன்(09) முடிவடைகிறது.

அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தர (உயர்தர) பரீட்சை பாடங்கள் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறும்.

இந்த நிலையில், அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை (NIC) இழந்த மாணவர்கள் தற்காலிக அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தற்காலிக அடையாள அட்டை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலை அதிபரால் வழங்கப்படும் என்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை..!

0

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்த ஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் (09.01) திகதியிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.

குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் வடக்கின் கல்வியை உயர்த்தும் விசேட கூட்டம்..!

0

வடக்கு மாகாணத்தின் கல்வித் துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் 08.01.2026 அன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் 1ம் மற்றும் 6ம் தரங்களிற்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக உரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை அதிபர்களை தயார்ப்படுத்தல், புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விரிவான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல், வடக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்கள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், மாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தற்போதய பிரதம செயலாளர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் பொருத்தமற்ற பின்கதவு நியமனம் பெற்ற ஒருவர் அக் கதிரைக்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக – ரவிகரன் எம்.பி கோரிக்கை

0

வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.

குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப் பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதார வசதிக் குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் வன்னியில் காணப்படுவதாகவும் அக் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு பிரதமரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 09.01.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.

அந்த வகையில் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் அவசர கல்விசார் குறைபாடுகள் தொடர்பில் உடனடித் தலையீடு கோருதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கல்வி மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் எழுப்பிய விடயங்களைத் தொடர்ந்து, வன்னி தேர்தல் மாவட்டம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் முறைமைசார் சவால்களை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பாரதூரமான வளப் பற்றாக்குறைகள் குறித்து உங்களின் உடனடித் தலையீட்டை நான் பணிவுடன் வேண்டுகிறேன்.

கல்வியில் சமத்துவம் மற்றும் இலக்கமுறை நிலைமாற்றம் ஆகியவற்றுக்கான தேசியக் கொள்கையில் அர்ப்பணிப்புகள் இருந்த போதிலும், வன்னி பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் கட்டமைப்பு ரீதியான, மனிதவள ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாணவர்களைக் கடுமையான பின்னடைவுக்கு உள்ளாக்குகின்றன.

பின்வரும் ஐந்து முக்கிய விடயங்களை நான் உங்கள் கவனத்திற்கு ஈர்க்க விரும்புகிறேன்:

01. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை: வடமாகாணத்தில் மாத்திரம் ஆரம்பக் கல்வியில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது ஒரு குழந்தையின் கற்றல் பயணத்தின் அடித்தளத்தையே இது பாதிக்கின்றது.

02. முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள்: வன்னிப் பிராந்தியத்தில் 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் முற்றுப்பெறாமலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் கைவிடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

03. இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) நெருக்கடி: மன்னார் கல்வி வலயத்தில் 45 பாடசாலைகளுக்கு இணைய வசதி இல்லை, 26 பாடசாலைகளில் ஒரு கணினி கூட இயங்கும் நிலையில் இல்லை. வன்னிப் பிராந்தியத்தில் தற்போது 2000 இற்கும் மேற்பட்ட கணினிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ( மன்னார் கல்வி வலயத்தில் 539, முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 552, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 318). இலத்திரனியல் மயமாக்கலில் சமத்துவத்தை உறுதி செய்ய இவற்றை பழுதுபார்க்க அல்லது மாற்றீடு செய்ய ஒரு முறையான பொறிமுறையை விரைவாக உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

04. சுகாதார வசதிகள்: குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற விகிதம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பாடசாலைகளுக்கு கிடைக்கும் மிகவும் குறைவான பராமரிப்புச் செலவு காரணமாக பாடசாலைகள் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்கொள்கின்றன. இது குறிப்பாக மாணவிகளின் வரவு மற்றும் பாதுகாப்பினைப் பாதிக்கின்றது.

05. கற்றல் பெறுபேறுகளில் உள்ள ஏற்றத்தாழ்வு: தேசிய மதிப்பீடுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பின்தங்கியுள்ளனர். சமமற்ற வளப் பகிர்வும், ஆசிரியர் பற்றாக்குறையுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, பின்வரும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சை நான் தயவோடு கேட்டுக்கொள்கிறேன்:

1. வன்னிப் பிராந்தியத்திற்கென பிரத்யேகமான ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றத் திட்டம்.
2. பாதியிலேயே கைவிடப்பட்ட அனைத்து பாடசாலைக் கட்டடங்களையும் உடனடியாகக் கட்டி முடித்தல்.
3. வசதிகள் அற்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கணினிகள், இணையம் மற்றும் ஆய்வுகூட வசதிகளை வழங்குதல்.
4. கிராமப்புறப் பாடசாலைகளுக்கு பிரத்தியேக சுகாதார மற்றும் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்.
5. முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பிராந்தியத்தின் உண்மை நிலையை நேரில் கண்டறிய தாங்கள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, மாணவர்களின் நிலையை அவதானித்தல்.

வன்னிப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு குழந்தையும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பின் தங்கிவிட மாட்டார்கள் என்பதை உங்கள் தலைமையின் கீழ் உறுதி செய்ய முடியும் என நான் பெரிதும் நம்புகிறேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கும் இடையே விசேட சந்திப்பு..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களுக்குமிடையில் இன்றைய தினம் (09.01.2026) விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தின் போது இன்றைய தினம் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே இன்று காலை 10.30 மணிக்கு குறித்த சந்திப்பு இடம் பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

இதன் போது தமிழ் மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத் திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவற்றினை மீண்டும் பாடப் புத்தகங்களில் கொண்டுவர வேண்டும் என தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு, கிழக்கு பல்கலைக் கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்களை இவ்விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்று தகவல்களை தொகுத்து அவற்றை தமிழ் மொழி மூல பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்ய இதன் போது பிரதமருக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத் திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படுமென பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தரம் – 01 இற்கான பாடப் புத்தகங்களில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக இதன் போது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றினையும் விரைவாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும் போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்கள். அவ்வாறு மொழி மாற்றம் செய்யும் போது நிறைய பிழைகள் ஏற்படுகின்றது.

மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலினால் பரீட்சை பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இந்த விடயத்திற்கும் உடன் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டதுடன், இவ் விடயம் மீள நிகழாது என பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டிடங்கள் இன்னும் பூரணப்படுத்தப் படாதுள்ளது. அவற்றில் சில ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவற்றினை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இங்கு பதிலளித்த பிரதமர் கடந்த வருடம் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பாவிக்கப்படாது மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாக தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியை பயன்படுத்தவும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கையெடுக்குமாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழினுட்ப கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் (Early Childhood Development and Education) கற்கை நெறியினை கடந்த 8 மாதங்களாக தமிழ் மொழி மூலம் கற்று வருகின்றவர்கள் அதற்கான பரீட்டையினை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அக்கறையோடு கேட்டுக்கொண்ட பிரதமர் விடயத்தை குறிப்பெடுத்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

 

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் பிரதமருடன் பேசப்பட்டது. வடக்கில் தமிழ்மொழி மூலம் 3771 வெற்றிடங்களும், சிங்களமொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5854 வெற்றிடங்களும் நிலவுவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது. இந்த வருட ஆசிரிய நியமனங்களின் போது இயலுமானவரை இந்த வெற்றிடங்களை நிரப்ப நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஶ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஶ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், மருத்துவர் ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..!

0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், ​​அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, ​​2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 15 வயதுச் சிறுமி 8 காவாலிகளால் துஸ்பிரயோகம்; 6 பேர் கைது..!

0

மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக விழிப்புணர்வுக்கான பதிவு

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம் – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 07.01.2025இன்று பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிற்பகல் 07.01.2025இன்று 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அந்த வகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது.

குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்கு காணிகள் விடுவிக்க வேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் குறிப்பிட்ட அளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்க வேண்டியுள்ளதாகவும் இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்பதை இதன் போது சுட்டிக்காட்டினேன்.

இதன் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன்.

அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது சுட்டிக்காட்டினேன்.

எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியா மோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேச செயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் இராணுவத் தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்ட செயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேச செயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் – என்றார்.

வவுனியாவில் மக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் – சத்தியலிங்கம் எம்பி

0

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் வீதிகளை திறக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று 7/1/2026 ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி படைத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக் காணிகள், பாதுகாப்பு வலயத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

முதற் கட்டமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று முறிப்பு தச்சங்குளம் பிரதான வீதிக்கு பதிலாக நோத்கேற்வே ஹோட்டலிற்கு பக்கத்தில் செல்லும் வீதியை மக்கள் பயன்படுத்தக் கூடியதாக புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் கனகராயன்குளத்தில் 561 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொதுக் காணிகள், மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக தெரிவித்தார்.

error: Content is protected !!