Sunday, August 16, 2026
Huis Blog Bladsy 40

யாழில் இளைஞனால் பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்து; பொலிஸ் விசாரணை ஆரம்பம்..!

0

யாழில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மன்னாரின் கரையோர பகுதிகளிற்குள் உட்புகுந்த கடல்நீர்..!

0

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடல்நீர் உட்புகுந்தபோதிலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் சனிக்கிழமை (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.

இதே வேளை இன்றைய தினம் சனிக்கிழமை (10) அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை.இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை ஒரு பார்வை..!

0

யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என்பது ஈழத் தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான, அதே நேரத்தில் மிகக் கொடூரமான ஒரு சம்பவமாகும். 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற மூன்வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு ஆகியவற்றை உலக அளவில் உயர்த்தும் நோக்குடன் நடத்தப்பட்டது.

ஆனால் இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கை அரசின் காவல் துறை வன்முறையால் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என்ற துயரமான பெயரைப் பெற்றது. இன்று வரை “1974 யாழ் மாநாடு”, “யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை” என்ற சொற்கள் ஈழத் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற அமைப்பு 1966 கோலாலம்பூரில் தொடங்கப்பட்டு, 1968 சென்னையில் நடைபெற்ற பின்னர், 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த 1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கைத் தமிழர்களால் சுயமுயற்சியில் நடத்தப்பட்ட முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பதால் அதற்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம்.

யாழ் மாநாடு, ஈழத் தமிழ் அறிவுசார் அடையாளத்தை உலகுக்கு காட்டிய ஒரு மேடையாக அமைந்தது. அதனால் தான் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இலங்கை அரசுக்கு ஒரு அரசியல் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது.

1974 ஜனவரி மாதம் முழுவதும் யாழ்ப்பாணம் நகரம் ஒரு தமிழ் பண்பாட்டு தலைநகராக மாறியது. யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், மொழியியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, சங்க இலக்கியம், ஈழத் தமிழ் பண்பாடு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த யாழ் மாநாடு, ஈழத் தமிழர்களின் அறிவுத் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தருணமாக இருந்தது.

1974 ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்ற யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி, பெரும் மக்கள் திரளை ஈர்த்தது. யாழ் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியை காண ஆயிரக் கணக்கான பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் யாழில் திரண்டனர்.

ஆனால் இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் இலங்கை காவல் துறையின் கடுமையான கண்காணிப்பும், அரசின் இனவாத அணுகுமுறையும் நிலைமையை பதற்றமாக மாற்றின.

யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நடந்த அந்த இரவில், இலங்கை போலீசார் கூட்டத்தை கலைக்கும் பெயரில் தடியடி மற்றும் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த போலீஸ் வன்முறையே யாழ் மாநாட்டுப் படுகொலையின் நேரடி காரணமாக அமைந்தது.

அச்சத்தில் மக்கள் ஓட முயன்றபோது பெரும் நெரிசல் ஏற்பட்டது. யாழ் மாநாட்டு வளாகத்திற்கு அருகில் இருந்த மின்கம்பிகள் மற்றும் மின்கோபுரங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சிலர் நெரிசலில் மிதிபட்டு மரணமடைந்தனர். இதுவே வரலாற்றில் யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை என பதிவானது.

அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசு, யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் 9 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது. ஆனால் தமிழ் ஆதாரங்கள், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஈழத் தமிழ் வரலாற்று பதிவுகள், 1974 யாழ் மாநாட்டுப் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதைவிட அதிகம் எனக் கூறுகின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பதே இந்த யாழ் மாநாட்டுப் படுகொலையின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசு இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையை ஒரு தற்செயலான விபத்து என கூறியது. ஆனால் ஈழத் தமிழர்கள் இதை ஒரு விபத்தாக ஏற்கவில்லை. யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒரு அமைதியான பண்பாட்டு நிகழ்வு.

அந்த நிகழ்வின் மீது காவல் துறை மேற்கொண்ட வன்முறை, திட்டமிட்ட அரசியல் அடக்குமுறையாகவே பார்க்கப்பட்டது. அதனால்தான் இந்த சம்பவம் “யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை” என்று அழைக்கப்படுகிறது; “யாழ் மாநாட்டு விபத்து” என்று அல்ல.

1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, ஈழத் தமிழர் அரசியலில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த யாழ் மாநாட்டுப் படுகொலையின் பின்னர், இலங்கை அரசின் மீது இருந்த தமிழர்களின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது.

மாணவர் இயக்கங்கள் தீவிரமடைந்தன. இளைஞர்களிடையே எதிர்ப்பு, போராட்ட உணர்வு வலுப்பெற்றது. பல ஆய்வாளர்கள், 1974 யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையே ஈழத் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி எனக் குறிப்பிடுகின்றனர்.

யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, தமிழ் இலக்கியம், கவிதைகள், அரசியல் உரைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது.

யாழ் மாநாட்டில் உயிரிழந்தவர்கள், தமிழுக்காகவும், தமிழ் பண்பாட்டுக்காகவும் உயிர் தந்தவர்களாக ஈழத் தமிழர்களால் போற்றப்படுகின்றனர்.

இன்றுவரை இந்த யாழ் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணையோ, நீதியோ கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த 1974 யாழ் மாநாட்டுப் படுகொலை, ஈழத் தமிழ் வரலாற்றில் ஒரு தீராத வடுவாக உள்ளது.

கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலான புதிய வரைபை வாபஸ் பெறுங்கள்..!

0

நீதியமைச்சினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என கத்தோலிக்க பாதிரிமார் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் கத்தோலிக்க பாதிரிமார் 37 பேர், கத்தோலிக்க அருட்சகோதரிகள் 3 பேர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 8 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் புதிய சட்ட வரைவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச் சட்டமானது சிறுபான்மையின மக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்துப் பிரயோகிக்கப்படுவதனை மேற்கோள்காட்டி, அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

முதலில் தற்காலிக நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. அச்சட்டமானது ஒருவரைப் பிடியாணையின்றிக் கைது செய்வதற்கும், 18 மாதங்கள் வரை தடுத்து வைப்பதற்கும் இடமளிப்பதுடன், குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மீறல்களுக்கு இடமளிப்பதாகக் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவை வெளியிட்டிருப்பதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அதிகாரங்களையும் அரச ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தற்போதைய நகர்வானது ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாகவும், சிவில் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகவும் அளித்த தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவானது கருத்து வெளிப்பாடுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலானதாக இருப்பதனால், அதனை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெனிசுலா பாணியில் யாழில் தரையிறங்கிய இந்தியாவின் டெல்டா படைக்கு கிடைத்த பரிசு..!

0

வெனிசுலாவில் அமெரிக்காவின் டெல்டா படைப்பிரிவு அதிரடியாக களமிறங்கி அந்நாட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப் பிடித்து தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றதைப் போன்றதொரு படை நடவடிக்கையை இலங்கையிலும் இந்திய படையினர் 1987ல் மேற்கொண்டிருந்தனர்.

மிகவும் கனகச்சிதமாக இந்திய சிறப்பு படையால் திட்டமிடப்பட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை படுதோல்வியில் முடிவடையும் என்பதை அவர்கள் கனவிலும் உணர்ந்திருக்கவில்லை என்பதுடன் இதில் ஈடுபட்ட பலர் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் தரையிறங்கியது. இதன் முதன்மை நோக்கம், ஆயுதக் குழுக்களை ஆயுத ஒழிப்பு செய்து, ஒப்பந்தத்தை அமுல்படுத்தி, வடக்கு – கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதாகும்.

ஆரம்பத்தில், தமிழ் மக்களிடையே ஒரளவு எதிர்பார்ப்பு இருந்தாலும், விரைவில் புலிகள் – IPKF மோதல்கள் தீவிரமடைந்தன. யாழ் நகரம் மற்றும் சுற்றுப் புறங்களில் நடந்த இராணுவ நடவடிக்கைகள், கடும் சண்டைகள், ஊரடங்குகள் ஆகியவை தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. குறிப்பாக 1987 அக்டோபரில் நடந்த யாழ்ப்பாணப் போர் இந்த மோதல்களின் உச்சக் கட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்வுகள், இந்திய இராணுவத்தின் பங்கு அமைதி காக்கும் பணியிலிருந்து நேரடி போர் நடவடிக்கையாக மாறிய ஒரு முக்கிய கட்டமாக வரலாற்றில் பதிவானது.

1987 அக்டோபரில், இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிந்தைய சூழலில், இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் ஹெலிகாப்டர்கள் மூலம் படையினரை இறக்கி பிரம்படி வீதியில் இருந்த புலிகளை அழித்தல், பிரபாகரனை கைது செய்தல் எனும் நோக்கில் முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இம்முயற்சி படுதோல்வியுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நடவடிக்கைகள் குறிப்பாக யாழ் நகரப் பகுதிகள், பலாலி, கோப்பாய், நல்லூர் போன்ற இடங்களை மையமாகக் கொண்டு, வான்வழி தரையிறக்கம் மற்றும் சமாந்தரமாக தரைப் படை முற்றுகை போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்த தாக்குதல்களில் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். அதே நேரத்தில், கடும் உயிரிழப்புகள், பொது மக்கள் பாதிப்பு, மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டதாகவும் வரலாற்றுகள் கூறுகின்றன.

இதன் மூலம், IPKF-யின் பங்கு “அமைதி காக்கும் படை” என்ற நிலையிலிருந்து “இன அழிப்புப் படை” என்ற நிலைக்கு மாற்றியது.

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை விரைந்து வழங்குக – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மருத்துவமனை மரணத்திற்கு விரைந்து நீதியை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 03.01.2026அன்று சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி 986பேர் கையொப்பமிட்ட மகஜரும் இக்கடிதத்துடன் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “மாணவி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் நியாயமான விசாரணை கோருதல் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை” எனத் தலைப்பிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு மாவட்டம் – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவி குகநேசன் டினோஜா என்பவரின் மரணம் தொடர்பில் தங்களின் மேலான கவனத்திற்கு மரியாதையுடன் கொண்டு வருகிறேன்.

கடந்த 2025.12.21 அன்று இரவு 7.20 மணியளவில், குறித்த மாணவி உணவு ஒவ்வாமையால் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஒவ்வாமையின் விளைவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், குழந்தை நல மருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் பரிந்துரையோடு குறித்த மாணவிக்கு அதிகளவான மருந்து ஏற்றப்பட்டு அதன் பின்னர் 10 நிமிடத்தின் பின்னர் பிள்ளை மரணமடைந்ததாக பொதுமக்கள் பலரும் முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேலும் இது தொடர்பில் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் நேரடியாக என்னிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவத்தின் தீவிர நிலையை கருத்திற் கொண்டு, இது தொடர்பில் நியாயமான, வெளிப்படைத் தன்மையான, சுயாதீன விசாரணை அவசியம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொது மக்களால் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டமையையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணி பற்றாக்குறை ஆகியவற்றால் மாவட்ட பொது மருத்துவமனை என்ற வகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்த மருத்துவ மனையில், வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கல் தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்பும் பொறுப்புக் கூறலும் அவசியமாகிறது.

எனவே, மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பில் நீதியான, சுயாதீன விசாரணை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் பாதுகாப்பான, தரமான மற்றும் வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தோடு முல்லைத்தீவு சமூகத்தினரின் 986 கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதத்தையும் தங்களுக்கு இணைத்து அனுப்புகிறேன்.

தங்கள் கனிவான கவனத்திற்கும் மேற்படி வேண்டுகைக்கான விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவலி, வனவள – பயங்கரவாத சட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி

0

இலங்கையில் காணப்படும் மோசமான சட்டங்களான மகாவலி அதிகார சபை சட்ட மூலம், பயங்கரவாத சட்ட மூலம் மற்றும் வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களங்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கிய சட்டமூலங்கள் திருத்தம் செய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09.01) இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இங்கு உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்களின் ஒழுங்குவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்காக நாங்கள் விவாதிக்கின்றோம்.

அந்த வகையில் காலசூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டு மக்களிந் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சட்டங்களில் மாற்றம் செய்யப்படவேண்டிய தேவை இருக்கின்றது, அந்த சட்டங்களிற்கு கீழே வருகின்ற ஒழுங்குவிதிகளை மாற்றம் செய்ய வேண்டியிருக்கின்றது.

எமது நாட்டில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் மிகவும் பாரதூரமான மனித உரிமைகளைக்கு மதிப்பளிக்காத இந்தநட்டின் குடிமக்களை சமனாக நடத்தாத பல மோசமான சட்டங்கள் இருந்திருக்கின்றது. இந்த நாட்டில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கக்கூடிய பல சட்டங்கள் இருந்திருக்கின்றது. அந்தவகையிலே இந்தச்சட்டங்களை காலசூழ்நிலைக்கு ஏற்ப மாற்றவேண்டிய கடப்பாடு இப்பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது.

ஆகவே இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் இறக்குமதி, ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்யும் விடயத்தை எடுத்து பார்க்கும்போது, இங்கே விவாதிக்கப்படுகின்ற ஏற்றுமதி, இறக்கிமதி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றமை காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆனால், இந்த சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் செய்யப்படுகின்ற மாற்றங்களை குறிப்பிட்ட அந்த தேவைக்காக மட்டும் பாவிக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாக இந்த சபைக்கு சொல்ல விரும்புகின்றேன்.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களிற்க்கு உதவும் முகமாக வெளிநாட்டு நிறுவனங்கள், அரசாங்கள், வெளிநாட்டிலே வாழும் தனிநபர்கள் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு வழங்கும் நன்கொடைகளை எந்தவிதமான இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு உரிமமும் இல்லாமல் எங்களது நாட்டுக்குள்ளே வரவழைக்கலாம் என்கின்ற அனுமதி இந்த சட்டத்தின் திருத்தப்படும் ஒழுங்குவிதிகளினூடாக வழங்கப்படுகின்றது.

மோசமான ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள சூழல்நிலையில் அவ்வாறான ஒரு அனுமதியை வழங்குவது அவசியமானதாக இருந்தாலும் இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன். ஏனெனில் இவ்வாறான விசேட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தங்களுக்கு தேவையான, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான விடயங்களை செய்யலாம் என்ற எச்சரிக்கையினையும் அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.

அவ்வாறே இந்த சட்டத்தினூடாக நன்கொடையாக கிடைக்கும் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் அவசியமான, எமது நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் போன்றவற்றை கொண்டுவருவதற்கு கூட இந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்படுகின்றது.

2004ம் ஆண்டு இந்த நாடு மிக மோசமாக சுனாமியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வைத்தியராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கு கிடைக்கப்பெற்ற இவ்வாறான நிவாரனப்பொருட்களில் அவை உணவுப் பொருட்களாக இருக்கலாம், மருந்துப் பொருட்களாக இருக்கலாம், அல்லது உடுபுடவைகளாக இருக்கலாம் கனிசமானவை எங்கள் நாட்டின் காலநிலைக்கு ஒவ்வாத உடுதுணிகளாக, எங்கள் நாட்டில் பேசப்படாத, புரியப்படாத மொழிகளிலே விளக்கம் கொடுக்கப்பட்ட மருந்துகளாக எங்கள் மக்கள் பயன்படுத்த பழக்கப்படாத உணவுப் பதார்த்தங்கள், எமது மக்கள் பயன்படுத்தாத பிளாஸ்ரிக் பொருட்கள் என பல வகையான நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தது.

இறுதியில் எங்களுடைய நிர்வாகத்திற்கு அந்தப்பொருட்களை எவ்வாறு கையாளுவது என்று தெரியாமல் களஞ்சியங்கள் யாவும் நிறைந்து மக்களிற்கு பயனில்லாமல் அவற்றை இருப்பிலிருந்து வெளியே எடுப்பதற்கு பட்டபாடு அந்த காலத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே, இந்த சட்டத்தை பயன்படுத்தி எங்களுக்கு கிடைக்கக் கூடிய பொருட்கள் எல்லாவற்றையும் கையேந்தி வாங்காமல் , கட்டுப்பாட்டுடன் பொருட்களை பெற எத்தணிக்க வேண்டும்.

அதேபோல இன்னொரு முக்கிய விடயம் யாதெனில், இலங்கை தரநிலைகள் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பெறக்கூடிய பொருட்களை நாட்டிற்கு உள்ளே கொண்டுவரலாமா இல்லையா என்கின்ற தீர்மானத்தை இறுதியாக எடுக்கக் கூடியவராக இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு தனிநபருக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை கொடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இவ்வாறே எமது நாட்டில் இன்னும் பல சட்டங்களை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை குறிவைத்து அவர்களின் அடிப்படையான வாழும் உரிமையை இல்லாமல் செய்கின்ற பல சட்டங்கள் இன்றும் வலிதானவையாக இருக்கின்றன.

எங்கள் நாட்டிலே இருக்கின்ற மிகமோசமான சட்டங்களை பார்த்தால், குறிப்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டம், மற்றும் மகாவலி அதிகாரசபையை உருவாக்கிய சட்டமூலங்களை குறிப்பிடலாம். அவர்களிற்கு எந்த விசாரனையும் இல்லாமல் சிறைப்படுத்தக்கூடிய, எமது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வனவளத் திணைக்களம், வணஜீவராசிகள் தினைக்களம் போன்ற எல்லையற்ற அதிகாரம் குவிக்கப்பட்ட மேற்படி திணைக்களங்கள் இந்த நாட்டில் எவராலும் கட்டுப்படுத்த முடியாதவையாக உள்ளன.

எம் மக்களுக்கு தொடர்ச்சியாக துன்பங்களை தருபவர்களாக எமது இருப்பை, வாழும் உரிமையை மறுக்கின்ற திணைக்களங்களாக இவை உள்ளன. இவ்வாறான சட்டங்களிலும் நாம் மாற்றங்களை கொண்டுவர வேண்டியுள்ளது.

அதேபோல எமக்குப் பிரயோசனமான சில மாற்றங்களை சட்டங்களில் செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது. மிகக் குறைந்த வருமானத்தை பெறும் உள்ளூராட்சி சபைகளை எடுத்துக் கொண்டால், அவற்றை பலப்படுத்தக் கூடிய பல சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது.

நாம் சிறுவர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகள் மிதிவண்டிகளிற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதனூடாக தமக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்பொது அவர்களால் அந்த அனுமதிப் பத்திரம் வழங்கமுடியாமல் இருக்கின்றது.

ஏனெனில், அந்த இலக்கத் தகட்டை வழங்க இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபை வாங்கக் கூடிய கட்டணம் 5 ரூபாய். ஆனால் இலக்கத்தகடு செய்ய செலவாகும் பணம் 25 ரூபாய். ஆகவே அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு 20 ரூபாய் செலவை உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும். ஆகவே அந்த சட்டத்தையும் உடனடியாக திருத்த வேண்டும்.

அதேபோல இந்த உயரிய சபையில் நேற்று வீதிவிபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் துன்பங்களையும் குறைப்பதற்காக சட்டத்திருத்தம் ஒன்றினை கொண்டுவந்து விவாதித்திருந்தோம்.

நான் பல இடங்களில் இதுபற்றி பேசியிருக்கின்றேன். குறிப்பாக வடக்கு கிழக்கை எடுத்துக் கொண்டால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பிரதானமான காரணங்களில் ஒன்றாக இருப்பது கட்டாக்காலி விலங்குகள். குறிப்பாக உரிமையாளர்களால் முறையாக பராமரிக்கப்படாத கால்நடைகள். அந்த விலங்குகள் இரவு நேரத்தில் வீதியில் படுத்திருப்பதால் பலபேர் அவற்றுடன் மோதுண்டு இறக்கின்றார்கள்.

எமது நாட்டில் யுத்தத்தால் இறந்தவர்களை விட வீதி விபத்துக்காலால் இறந்தவர்கள் அதிகம். ஒரு வருடத்திற்கு சராசரியாக 2500 பேர் இந்த விபத்துக்களால் இறக்கின்றார்கள், 35,000 நபர்கள் காயங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள்.

நான் குறிப்பிடும் சிறிய ஒரு விடயத்தை செய்தால் பல விபத்துக்களை தடுக்கலாம். அதாவது கால்நடை சுகாதார திணைக்களத்தால் ஒவ்வொரு பதிவு செய்யப்ப்பட்ட கால்நடைக்கும் காதிலே ஒரு பட்டி அணிகிறார்கள். அந்த பிளாஸ்ரிக் பட்டியை இரவிலே வெளிச்சத்தில் ஒளிரக் கூடிய வகையில் ஒளிரும் பட்டியாக போட்டால் இரவு நேரத்தில் இடம்பெறும் பல விபத்துக்களை தடுக்கலாம்.

இறுதியாக, எமது நாட்டில் இருக்கின்ற பல சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்கு பிரயோசனமான மாற்றங்கள் வரும் போது நிச்சயமாக எமது ஆதரவு அரசாங்கத்திற்கு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

மாகாண சபைகள் வட-கிழக்குத் தமிழருக்கு அவசியம் தேவை – நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்

0

திரு. திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

திரு. திலித் ஜயவீர அவர்கள் ஒரு திறமையான சட்டத்தரணியும், முன்னணி தொழிலதிபரும், சிங்கள தேசியவாதியாக அரசியலில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட நீதியரசர், அவரது சிங்கள தேசியவாதத்தை முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாக கருதுவது தவறான புரிதல் என சுட்டிக் காட்டினார்.

அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், புத்தமதம் பரவுவதற்கும், சிங்கள மொழி உருவாவதற்கும் முன்னரே, தமிழ் மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக இருந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் கே. இந்திரபாலாவின் ஆய்வுகளின் படி, தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதனை அரசியல் ரீதியாக அங்கீகரித்துள்ளதும் அவர் நினைவூட்டினார்.

மாகாண சபைகளின் உண்மையான நோக்கம்

மாகாண சபைகள் முழு இலங்கைக்காக அல்ல, மாறாக வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு தன்னாட்சி வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடு என நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

“சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களுக்கு மாகாண சபைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவை சிங்கள மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்ட அவர்,

தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட காரணங்களாக,

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் அரச மொழியாக்கப்பட்ட சட்டம்,
1958, 1977, 1981 மற்றும் 1983 இனப்படுகொலை,
1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக தரநிலைப்படுத்தல் (Standardisation) போன்ற அரச கொள்கைகள், தமிழ் மக்களின் அரசியல் நம்பிக்கையை முற்றிலும் உடைத்தன, இவைதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சட்டமும் சுயநிர்ணய உரிமையும்

சர்வதேச குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (ICCPR) –
கட்டுரை 1 இன் படி, “எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது” என்பதையும், அது தனி நபர்களுக்கல்ல, மக்கள் என்ற குழுவுக்கே உரியது என்பதையும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு – கிழக்கின் தமிழ் பேசும் மக்கள், ICCPR வரையறைப்படி ஒரு “இன மக்கள்” ஆகும் என்றும், அவர்களுக்கு சுய ஆட்சி உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும் இன்றுள்ள மாகாண சபை அமைப்பு, தமிழ் மக்களுக்கு முழுமையான தன்னாட்சியை வழங்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றான அரசியலமைப்பு ஏற்பாடு உருவாகும் வரை, மாகாண சபைகளை ஒழிப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முற்றிலும் அழிக்கும் செயல் ஆகும்” என நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதனால், “மாகாண சபைகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை” என்ற திரு. திலித் ஜயவீர அவர்களின் கருத்தை, தான் திடமாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை; மீள ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை..!

0

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன்(09) முடிவடைகிறது.

அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தர (உயர்தர) பரீட்சை பாடங்கள் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறும்.

இந்த நிலையில், அனர்த்தம் காரணமாக தேசிய அடையாள அட்டையை (NIC) இழந்த மாணவர்கள் தற்காலிக அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தற்காலிக அடையாள அட்டை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலை அதிபரால் வழங்கப்படும் என்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை..!

0

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்த ஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் (09.01) திகதியிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.

குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!