மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், தொல்பொருள் திணைக்கள பாரம்பரிய இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் ஒரு பொது அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக இதுபோன்ற அறிவிப்புப் பலகைகளை நிறுவி வருவதாகக் கூறியுள்ளார்.
எனினும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இந்த அறிவிப்புப் பலகைகளை அந்தப் பகுதியில் உள்ள நான்கு தொல்பொருள் இடங்களிலிருந்து அகற்றியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சருக்கும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது, மேலும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்பானவர்கள் தாமதமின்றி அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் செயலுக்குப் பின்னால் அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு குழு இருப்பது தெளிவாகி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம், எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன், ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார், ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை, சமஷ்டியைக் கைவிடவுமில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராசா கஜேந்திரனும் சொல்வது போல் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை, கடல் வத்தும் கடல் வத்தும் எனப்பார்த்துக் கொக்கு மாதிரி குடல் வத்திப்போக முடியாது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கின்றார், மாகாண சபையை வேண்டாம் எனச் சொல்பவரை எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும், அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையைப் பார்க்கலாம் என்கிறார், அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.
இணைந்து செயற்படுவது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம், அடுத்த மாத முற்பகுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேசப் போகின்றோம், அந்த ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்கும் வழங்கினோம்.
பொது விடயத்தில் அரசமைப்பும் வரும் மாகாண சபையும் வரும், கொச்சைப்படுத்தும் கருத்துக்களைச் சொல்ல வேண்டாம், மேட்டுக் குடியில் இருந்து நாங்கள் வரவில்லை என்பதால் நீங்கள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டீர்களே ?
ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காகப் புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இங்கு குறிப்பிட்டார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடைய வரைபு வந்த பின்னர் பேசலாம் என்றே சொன்னோம், நாங்கள் அரசமைப்பு வரையோனும் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார், அது பிழையான அணுகுமுறை.
தமிழரசுக் கட்சி இறுமாப்புடன் கதைக்கவில்லை, கஜேந்திரகுமாருக்கும் கடிதம் எழுதியிருக்கின்றோம், அடக்கமாகப் பேசக் காரணம் ஒற்றுமையாகப் பயணிக்க விரும்புகின்றோம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்மைத் தொடர்ச்சியாக விமர்சிக்க முடியாது.
நியாயமான விமர்சனத்தை ஏற்கலாம், துரோகம், காட்டிக்கொடுப்பு, இனத்துரோகி என்ற வசனங்களே இவர்களுக்குத் தெரியும், மக்களுக்குப் பதில் சொல்ல நாம் தயார், சொல்லில் தொங்கிக் கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபை வேண்டாம் என்று சொன்னால் நாம் ஒத்துப்போக முடியாது.
கஜேந்திரகுமாருடன் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகின்றோம், நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் மென்மையாகத் திருப்பி அடிப்போம், எங்களுடைய வாக்கு வங்கி குறைந்து விட்டதுதான், ஏன் உங்கள் வாக்கு வங்கி குறையவில்லையா ?
எங்களை நீங்கள் தாக்கியதால்தான் தேசிய மக்கள் சக்தி வளர்ந்தது, சமஷ்டியைக் கைவிடமாட்டோம் என ஜனாதிபதிக்கு முன்னாலேயே சொல்லி இருக்கின்றோம், நான் இனித் தேர்தல் கேட்கப் போவதில்லை ஆனால் எமது கட்சியில் கைவைத்தால் எந்தத் தரத்தில் பதில் வருகின்றதோ அதே தரத்தில் பதில் கொடுக்கப்படும்.
ஒற்றுமையாக இனம் சார்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தளத்தில் இருந்து கொண்டு பொது விடயங்களில் ஒன்றாகப் பொது மையத்தில் இருந்து செயற்பட அழைப்பு விடுக்கின்றேன், இதற்குச் சாதகமாகப் பதிலளியுங்கள்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சாதகமாகப் பதிலளித்துள்ளது, கஜேந்திரகுமாரும் கடிதம் கிடைத்துள்ளது என்று பேட்டியளித்துள்ளார், கூட்டுத் தலைமையாகப் பொது விடயங்களில் ஒன்றாகுவோம், மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும், இனியாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது விடயத்தில் இணைந்து பேச வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாது விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (23) நிகழ்விடத்தை விட்டு வெளியேறினார்.
2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே பராமரிப்பு செயலிழந்து கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் தடாகத்தை மீளப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று திடலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், டைவிங் தடாகத்தை விட பொதுமக்களும் மாணவர்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வகையில் இது சாதாரண ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக மாற்றப்படலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.
பொது நிதி பயன்படுத்தப்படும் போது அதனால் அதிகமானோருக்கு பயன் கிடைக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த யோசனைக்கு பாடசாலை மட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் உருவாகி, இரண்டு விதமான கருத்துகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
ஒரு தரப்பு முன்னர் இருந்தபடி டைவிங் தடாகமாகவே புனரமைக்க வேண்டும் என வலியுறுத்த, மற்றொரு தரப்பு அமைச்சரின் யோசனையை ஏற்றுக் கொண்டது.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால், புனரமைப்பு பணிகளுக்காக முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாமல் அமைச்சர் உரையாற்றி உடனே வெளியேறினார்.
பாடசாலை அதிபர் உட்பட சிலர் திரைநீக்கம் செய்யுமாறு கோரிய போதும், ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில் அதை செய்ய முடியாது என அமைச்சர் மறுத்தார்.
பாடசாலை மட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்ட பின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கிளிநொச்சி- பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குறித்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கடந்த 20ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கி உள்ளனர். மேலும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கின் கல்வித்துறை அதிகாரிகள் உயர்தர கல்வி கலந்துரையாடலுக்கு சென்ற வேளை மது அருந்தி சர்ச்சையில் சிக்கிய போதும் விசாரணைகள் இரண்டு வருடங்கள் கடந்த போதும் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாதம்பிட்டி – மிஹிஜயசெவன பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன், முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் பொலிஸாரினால் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பிட்டிய பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது, முதலில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்ட 32 வயதான ஆசிரியை மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அத்துடன், அவர் தனது வேலைக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பின்னர், ஒரு கிலோ 310 மில்லிகிராம் போதைப் பொருளுடன் வீட்டுக்கு வந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், சந்தேகநபரான கணவர் வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பொருட்களைப் பெறுபவர் என்றும், உயிரிழந்த ‘கெசெல்வத்தே தினுக’வின் உதவியாளர் என்றும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கணவர் இன்று (23) நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் பாரிஸ் வொண்டிப் பகுதியில் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான கணவனும் 36 வயதான மனைவியும் நள்ளிரவு வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் விவாகரத்துப் பெற்றுள்ளனா்.
இந் நிலையில் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்குமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை மனைவி பெற்றுவந்த நிலையில் இரகசியமாக கணவனுடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிய வருகின்றது.
இந் நிலையிலேயே இவர்கள் இருவரும் பிரான்ஸ் பொலிசாரால் நள்ளிரவு வேளை வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கும்பல் ஒன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , கும்பலின் ஏனைய வலையமைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, தமக்கான வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே.
இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக் கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்து கொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது.
எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது” என கூறினார்.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுண்டிச் சாலைக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்குத் தொடுத்த நகராட்சி மன்றின் சார்பிலும், எதிர் தரப்பான சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர் சார்பிலும் விரிவான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது.
இதன் போது, சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார்.
அது தொடர்பில் ஆசிரியரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , மாமனாரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார்.