DMC இன்று (04) மாலை 4 மணிக்கு வெளியிட்ட சூழ்நிலை அறிக்கையின்படி, நாட்டில் பேரிடர் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 345 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 1,814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 171,492 பேர் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட 1,236 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் பரவிய போலிச் செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத புதுப்பிப்புகள் அடங்கிய 57 சமூக ஊடக இடுகைகளை போலீசார் அடையாளம் கண்டதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவசரகால விதிமுறைகளின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பரவலாகப் பகிரப்பட்டால், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமா, ஒழுங்கை சீர்குலைக்க முடியுமா அல்லது பதட்டத்தைத் தூண்டுமா என்பதைத் தீர்மானிக்க சிறப்பு சிஐடி பிரிவு தற்போது அவற்றை மதிப்பாய்வு செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள அவசரகால விதிமுறைகளின் கீழ், சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தற்போதைய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் போது சரி பார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் ASP F. U. Wootler பொது மக்களை வலியுறுத்தினார்.
தவறான தகவல்களைத் தடுக்கவும், பொதுப் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் சமூக வலைத் தளங்களை போலீஸ் குழுக்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தத் தடை அமுல்படுத்தப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது விடயமாகப் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும், மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைக் கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொலை குற்றத்திற்கு தயாராகி வந்த குற்றவியல் கும்பல் உறுப்பினரான கரந்தெனிய சுத்தாவின் கூலி கொலையாளியை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், அவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதுடன், அந்தக் காலகட்டத்தில் அவர் கருணா தரப்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வரையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காலி சிறையில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர், அந்த நேரத்தில் தன்னை கரந்தெனிய சுத்தா என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கரந்தெனிய சுத்தா நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், மீட்டியாகொட பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் கீழ்பகுதி ஒன்றில் இருந்து உயிருடன் இருவர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
பாதி சரிந்த மண்ணிக்குள் சிக்கியிருந்த பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி ஹுன்னஸ்கிரியவில் இருநது பாரிய மலைத் தொடர் சரிந்து குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 356 பேர் காணாமல் போயுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் (சுமார் 15 இலட்சத்து 86 ஆயிரத்து 329 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 971 வீடுகள் முழுமையாகவும், 40,358 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
டித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் குழந்தைகள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நவம்பர் 28 ஆம் திகதி அதிகாலை கிழக்குக் கரையை கடந்து சென்ற புயல், பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளை ஏற்படுத்தி பல மாவட்டங்களை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி, பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் பல பகுதிகளுக்கான அணுகுமுறை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
புயலால் குழந்தைகளும், அவர்கள் நம்பியிருந்த அத்தியாவசிய சேவைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். உயிரிழப்பு, சொத்து இழப்பு, இடம்பெயர்வு என துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.
மிகவும் அபாயத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவுவது தற்போதைய நிலைக்கு ஏற்றதாக உள்ளது. புயல் மறைந்துவிட்டதாக தோன்றினாலும், அதன் விளைவுகள் இன்னும் கடுமையாகவே உள்ளது.”
குழந்தைகளுக்கு நோய் பரவல், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற வாழ்வு, மனஅழுத்தம் போன்ற அபாயங்களை அதிகரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவசர தேவைகளுக்காக, அரசு, தேசிய அதிகாரிகள், கூட்டாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து யுனிசெப் பணியாற்றி வருவதாகவும், மேலும் அவசர உதவிகளை வழங்க நிதி ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வடக்கு மாகாணம், இன்று கல்வித் தரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.
போருக்குப் பின்னரான சவால்கள், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல காரணிகள் இதற்குக் கூறப்பட்டாலும், கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தக் கட்டுரையானது, வடக்கு மாகாண கல்வியின் தற்போதைய நிலை, அதன் வீழ்ச்சிக்கான காரணிகள், குறிப்பாக அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது.
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது வெறும் புள்ளி விவரங்களில் அடங்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் அபாயகரமான அறிகுறியாகும்.
க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாகாணம் தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 70% மாணவர்கள் மாத்திரமே உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியை விடக் குறைவானதாகும். குறிப்பாக, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவது, இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
அதிகாரிகளின் அசமந்தமும் நிர்வாகச் சீர்கேடுகளும் இந்தக் கல்விச் வீழ்ச்சிக்குப் பின்னால் காணப்படுவதுடன், மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து வலயக் கல்வி அலுவலகங்கள் வரை பரவியிருக்கும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், நிர்வாகத் திறமையின்மையுமே பெரும் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் இனங்காணப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவோம்.
1. ஆசிரியர் பற்றாக்குறையும் சமனற்ற நியமனங்களும்
மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, குறிப்பாக முக்கிய பாடங்களுக்கு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. தற்காலிக மற்றும் தொண்டர் ஆசிரியர்களைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அவலநிலை பல பாடசாலைகளில் காணப்படுகிறது.
மேலும், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் காணப்படும் அரசியல் தலையீடுகளும், அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
தேவைப்படும் பாடசாலைகளை விடுத்து, நகர்ப்புற மற்றும் வசதியான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் முண்டியடிப்பதும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதும் வடக்கின் கல்வியின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
உதாரணமாக தீவகம், மடு, துணுக்காய், வவுனியா வடக்கு போன்ற பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட அரசியல், அதிகாரிகளின் தயவுடன் தமக்கு விருப்பமான வலயங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்கின்றனர். இதற்கு சில வலய அதிகாரிகளும் மேலதிகாரிகளுடனான தமது நல்லுறவு பாதிப்படையும் என்பதற்காக விடுவிப்பை வழங்குகின்றனர்.
2. வளப் பங்கீட்டில் பாரபட்சம்
பாடசாலைகளுக்கான வளப் பங்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், பாரபட்சம் காட்டப்படுவதும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை மேலும் நலிவடையச் செய்கிறது.
பௌதீக மற்றும் கற்றல் உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்பதுடன் திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் குளறுபடிகள், பல திட்டங்கள் ஆரம்பத்திலேயே முடங்கிப் போகக் காரணமாகின்றன.
உதாரணமாக வளம் தேவை உள்ள அதிக மாணவர்களை உடைய பாடசாலைகளுக்கு குறைந்த உதவிகளை வழங்கியபடி குறைந்த வளத் தேவையுள்ள போதும் சில அதிபர்களுடன் காணப்படும் தனிப்பட்ட நல்லுறவு காரணமாக அதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன ( ஆதாரங்கள் உள்ளது)
3. கண்காணிப்பின்மையும் பொறுப்புக்கூறல் இன்மையும்
பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைக் கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய வேண்டிய கல்வி அதிகாரிகள், தமது கடமைகளிலிருந்து தவறுவதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பாடசாலைகளுக்கு விஜயம் செய்வது, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவது, மாணவர்களின் அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்வது போன்ற அடிப்படைப் பணிகள் கூட முறையாக நடைபெறுவதில்லை.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் ஒருவித பொறுப்பற்ற தன்மை உருவாகிறது. தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது, அதனைத் திருத்திக் கொள்வதை விடுத்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டித் தப்பிச் செல்லும் போக்கே அதிகாரிகளிடம் மேலோங்கியுள்ளது.
எனினும் அதிகாரிகள் தமக்கான எரிபொருள் கொடுப்பனவு, வாகன அனுமதிப் பத்திரம், தொலைபேசிக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, போக்குவரத்துக் கொடுப்பனவு, அரச வாகனம், அரச நிதியில் கல்விச் சுற்றுலா, இடருதவிக் கடன்கள், கடமை விடுமுறைகள் எனப் பல சலுகைகளைப் பெறுகின்ற போதும் தமது கடமையைச் சரிவரச் செய்வதாகத் தெரியவில்லை.
4. சமூகப் பொருளாதாரக் காரணிகள்
கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கு பிரதான காரணியாக இருந்தாலும், சில சமூகப் பொருளாதாரக் காரணிகளும் இந்தக் கல்வி வீழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன. அந்த வகையில்,
பெற்றோர்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலை, போரினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள், சொத்தழிவுகள், அதிகரித்துவரும் தனியார் கல்வி மோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகள் போன்றவை மாணவர்களின் கற்றல் சூழலை முழுமையாகப் பாதிக்கின்றன.
எனினும், இந்தக் காரணிகளைக் கையாண்டு, மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும் கல்வி நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
தீர்வுகள்
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பாரிய நெருக்கடியாகும். இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் மாகாணத்தை கல்விப் பாதையில் நிமிரச் செய்ய, பின்வரும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன,
1. வெளிப்படையான நிர்வாகம்
ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் வளப் பங்கீட்டில் முழுமையான வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளின் நிர்வாக விடயங்களில் அதிபரை மீறி தலையீடு செய்தல் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
ஒரு பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்பது ஒரு குடும்பம், ஆகவே இதற்குள் ஏனையோரின் தலையீடுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
2. வகைகூறல்
அனைத்து மட்டங்களிலுமுள்ள கல்வி அதிகாரிகள் தமது கடமைகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை உருவாக்க வேண்டும். செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகாரிகளின் பதவி உயர்வுகளும், ஏனைய சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும்.
3. திட்டமிட்ட வள முகாமைத்துவம்
பாடசாலைகளின் தேவைகளை துரிதமாக இனங்கண்டு, வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
4. ஆசிரியர் நலன்
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் தொழில் சார் மேம்பாட்டிற்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அரசியல் தலையீடுகளற்ற, அதிகாரிகளின் பழிவாங்கல் மற்றும் அழுத்தமற்ற, நேர்மையான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு கல்வி நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமே, வடக்கு மாகாணத்தின் கல்விப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும்.
தவறின், வடக்கு சமூகத்தின் எதிர்காலத்தையே நாம் முழுமையாக இழக்க நேரிடும்.
இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.