Thursday, February 26, 2026
Huis Blog Bladsy 53

இடை நிறுத்தப்படும் மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.


குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மேற்படி திட்டங்களை தவிர மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இது குறித்து அமைச்சரவைக்குத் தெரிவித்து அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க எரிசக்தி அமைச்சர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் காணி அபகரிப்பில் மாற்றம் தராத அரசு – விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

0

இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு மாகாணத்தில் 65000 ஏக்கர் அரச காணி இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.


அரச திணைக்களங்கள் வடக்கு மாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவேபடுகின்றது.

நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.


நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்


குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பேராசிரியர்; பிரதமர் அளித்த உறுதிமொழி..!

0

வயம்ப பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


வயம்ப பல்கலைக் கழகத்தில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரபூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் இன்று (03) பங்கேற்ற பின்னர், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த விசாரணை மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.


நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது.

அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் உள்நுழைந்த நால்வர் கைது..!

0

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னாரைச் சேர்ந்த அந்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் குறித்த அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.


இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மீதான வழக்குகள் தற்போது முடிவடைந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.


இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மன்னாருக்கு படகொன்றில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் தரப்பு; அரசுக்கு எச்சரிக்கை..!

0

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பணியை உறுதிப்படுத்தி தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.


இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தமக்கான ஆசிரியர் நியமனத்தை உறுதிப் படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமனத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் தமக்கு ஆசிரியர் நியமத்தை வழங்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 03.11.2025 திகதியும் நாளை 04.11.2025 திகதியும் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்..!

0

சுன்னாகம் காவல் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டடனர்.


கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிசார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.


தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற வேளை சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக் கழக மாணவனின் உயிரிழப்புக்கு பகிடிவதையா காரணம்?

0

வவுனியாப் பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


மாணவர் உயிரிழந்த போது, ​​அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


உயிரிழந்த மாணவரின் சகோதரி தெரிவிக்கையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக் கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு; ஆசிரியர்களின் வேலைப்பளு குறைப்பு..!

0

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை (Module) முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.


இந்த கல்வி மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவளை புதிய நடைமுறையில் மாணவர்களுக்கு பயனுள்ள பல விடயங்கள் உள்ள போதும் ஆசிரியர்கள் விடுமுறை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன் பரிகாரக் கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

யாழ் சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது..!

0

யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின்போது, உடமையில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணேஸ்வரன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய என தெரிவித்த பொலிசார் சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக பல பகுதிகளில் போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு சிறை..!

0

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்ற போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கள் (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


lசந்தேகநபரான குறித்த பெண் காரை ஓட்டிச் சென்ற போது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.


அதன் போது தான் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனவும் கூறியுள்ளார். எனினும் அவர் கூறியதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக் குறைவான முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

error: Content is protected !!