Monday, June 16, 2025
Huis Blog

மலசலகூடத்திற்கு அருகில் மயங்கிக் கிடந்த 14 வயது மாணவி; இளைஞன் கைது..!

0

பண்டாரவளையில் பாடசாலை மாணவி ஒருவர், கழிவறைக்கு அருகில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி, கடந்த 12 ஆம் திகதி பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பவில்லை, என அவரது தாயார் ஒரு ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இது குறித்து விசாரித்ததன் பின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து, பாடசாலை வளாகத்தில் தேடிய போது, அந்த மாணவி கழிப்பறைக்கு அருகில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

ஆசிரியரும் மாணவர்களும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மயக்கமடைந்த மாணவி, தனது பாடசாலை தோழியுடன் பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் கழிப்பறைக்குச் சென்ற போது, முகத்தை முழுமையாக மூடியிருந்த பாடசாலை சீருடையும் அணிந்திருந்த ஒருவனும், மற்றுமொருவர் தனது முகத்தை மறைத்ததாகவும், பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த தடயவியல் மருத்துவர், அவர் எந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் மயூரன் தெரிவு..!

0

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த ப.மயூரனும் உப தவிசாளராக தமிழரசு கட்சியை சேர்ந்த இ.ஜெயகரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாதமையால் மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவாகியுள்ளார்.

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை; காவல்துறை மா அதிபருக்கு பறந்த கடிதம்..!

0

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளுமாறு தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அவர் மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் ஆகும்.

தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த மக்களை கொன்றது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறலை குறிக்கின்றது.

இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது. இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்கள் நன்னடத்தைக்கு..!

0

சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதான மூன்று மாணவர்களையும் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை மூவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து அவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி , மருத்துவ சான்றிதழ்களை பெற்று , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , மூவரையும் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஊடாக நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , தான் ஐஸ் போதை பொருளை வாங்குவதற்காக மாணவர்களுக்கு மாத்திரை விற்று வருவதாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பயணமானார் ஜனாதிபதி அநுர..!

0

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன.

இதன் போது ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற் சங்கங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

வவுனியாவில் 22 இடங்களில் தன்சல்கள்; நீண்ட வரிசையில் மக்கள் உணவிற்காக காத்திருப்பு..!

0

பௌத்தர்களின் விசேட தினமான பொசன் தினத்தை முன்னிடடு இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, சீனிசம்பல் பாண் , பிரியாணி, என பல்வேறு உணவுப் பண்டங்கள் தன்சல்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் 3000 பேருக்கு பிரியாணி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில மதத்தலைவர்கள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயமுனி சோமரட்ண, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடி, பொலிஸ் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை பெருமளவான மக்கள் தன்சல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவை பெற்றதையும் அவதானிக்க முடிந்தது.

பாடசாலை மாணவர்களின் கேவலமான செயல்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

0

பாடசாலை மாணவிகளின் படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்திய இரண்டு ஆண் மாணவர்களை ஜூன் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பெண் மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி AI மூலம் காணொளிகள் மற்றும் படங்களை உருவாக்கி பாடசாலை வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற தயாராகும் நான்கு பேராவர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, ​​ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரியா இருவரையும் சிறைச்சாலையின் கீழ் உள்ள சிறார் புனர்வாழ்வு மையத்தில் வைக்க உத்தரவிட்டார்.

ஒரு மாணவியின் தந்தை இந்த படத்தைப் பார்த்து காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இணுவில் சிவனின் புனிதத்தை மீட்டெடுக்க நாளை யாழில் மாபெரும் போராட்டம்..!

0

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம் நாளை காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப் போராட்டத்தின் கருப்பொருளாக “சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தி சூழல் மாசடையச் செய்யும் செயலுக்கு எதிராக திரண்டு எழுவோம்” என முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிப்பரம்பல் அதிகரித்துள்ளது.இதனால் கழிவுகளும் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்

குறித்த நிலையத்தில் கழிவுகளை முகாமை செய்யக்கூடிய திறனோ கொள்ளளவோ போதுமானதாக இல்லை. தற்போது குப்பைகள் தேங்கி பெருக்கெடுத்து காணப்படுகின்றன.

உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த இடர்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு போராட்டத்தை ஏற்பாடு செய்த சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது..!

0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

110 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழில் எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது கட்சி இடையூறாக இருக்காது – சந்திரசேகர்

0

யாழில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது கட்சி இடையூறாக இருக்காது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் தமக்கு எதிராகச் செயற்பட்ட எந்தவொரு அணியினருடனும் தாம் இணையப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் – காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் – பொதிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் இன்று ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!