மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றி கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன.
அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது. தங்களது உடலைப் பாதுகாத்துக் கொள்வது குறித்துக் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். என்றார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1,818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தினை தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த 800 முறைப்பாடுகளும் கடந்த 4 நாட்களுக்குள் கிடைத்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற, விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. 1818 அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னர், 4 நாட்களுக்குள் சுமார் 800 தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன.
அவை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான தகவல்கள் வருகின்றன.
அதேபோல், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 நாட்களில் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பரவல் அதிகளவில் உள்ளதைக் காண முடிந்தது.” என தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக Telegram, WhatsApp, பேஸ்புக் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி இலவசங்கள் வழங்குவதாக அவர்களது வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல், தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல்கள் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
இதுமட்டுமன்றி அண்மைக் காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும், பிறமிட் திட்டங்களூடாகவும், மரங்களில் முதலீடு எனவும் பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி என தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த மாணவி தம்புள்ளை தேசிய பாடசாலையில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது 19 என பொலிஸார் கூறியுள்ளனர். மாணவி தனது அறையில் ஞாயிற்றுக் கிழமை (09) படித்துக் கொண்டிருந்ததாகவும், மறுநாள் தேர்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்துவிட்டு தூங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்திருக்காதது குறித்து அவரது பெற்றோர் எழுப்பிய போது, அவர் மயக்கமடைந்திருப்பதாகக் கருதி தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், வெளிநோயாளர் பிரிவில் உள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வத்தளை காவல்துறை பிரிவில் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (08) காலை இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை காவல் அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரையும் மாபொல பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தான் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலைகளுக்கு சிபாரிசு செய்திருந்தால் அல்லது தனது பெயரில் எடுத்திருந்தால் உரிய விசாரணை நடத்தி தன் மீது சட்டநடவடிக்கை எடுத்து தனது பதவியை பறிப்பதற்கு பூரணமாக சம்மதிக்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(8) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 2025 ஒக்டோபர் 23ஆம் திகதியன்று நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக குறிப்பிட்டு உண்மைக்கும் அறத்திற்கும் மாறான வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தினால் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிவில் புத்தி பெரமுன அமைப்பை சேர்ந்த சஞ்சய் மகவத் என்பவரால் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக நிதிக்குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பார்வையிட்டேன். இந்த விடயம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துமாறு குறிப்பிட்டிருந்தேன்.
மூன்றரை மாதங்கள் கடந்த போதும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
யாழில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், தற்போது போதைப் பொருளைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையில் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும் யாழ்ப்பாணத்திலே இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக திருநெல்வேலி, கொக்குவில் சந்தைகளிலே போதைப்பொருள் மாபியாக்கள் அடாவடி செய்துள்ளனர்.
இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப் பொருளை விற்று அதில் வருகின்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வட்டிப் பணத்தைப் பெறுவதற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே யாழ் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான நடவடிக்கை என்ன என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையிலே இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.