முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்ட விரோத அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக் காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்தி குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் 12.03 2026இன்று இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளி என்னுமிடத்தில் அப்பாத்துரை துரைசாமி, கதிரேசு நாகரட்ணம், குமாரசாமி கணபதிப்பிள்ளை, கதிரேசு கந்தசாமி என்பவர்களுக்குரிய தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை என்பன சட்டவிரோதமாக அனுமதிகளை வழங்கியுள்ளன.
இந்நிலையில் அங்கு தமிழ் மக்களுக்குரிய அந்த காணிகளில் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியால் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கும், சட்டவிரோத அனுமதியுடன் அங்கு உப்பளம் அமைக்க முயற்சித்தவர்களுக்குமிடையில் கடந்த 27.02.2026அன்று முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இவ்வாறு தமது தனியார் காணிகளுக்குள் இவ்வாறு அத்துமீறி நுளைந்து உப்பளம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமும் அப்பகுதி மக்களால் நேரடியாகச் சென்று முறைமயீடும் செய்யப்பட்டது.
அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பதற்கான ஆவணங்களும் என்னிடமுள்ளன. இவ்வாறு தனியார் காணிகளாக இருக்கும் போது அந்தக் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு அங்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களும் என்னிடமுள்ளன. இந்த ஆதாரங்களை அமைச்சரிடம் கையளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.
தமிழ் மக்களின் தனியார்காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகார சபையாலும், வனஜீவராசிகள் திணைக்களத்தாலும் எவ்வாறு அனுமதி வழங்க முடிந்தது. இவ்வாறாக மகாவலி அதிகாரசபையும், வனஜீவராசிதள் திணைக்களமும் மிகமோசமான அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொக்கிளாய் களப்பில் நீர் வரத்து அதிகமாக இருக்கும்போது பாதிப்பு ஏற்படுமா என கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடமும் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களமும் இதுதொடர்பில் எம்மிடம் கலந்துரையாடவில்லை. முல்லைத்தீவு மாவட்ட ஒரங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கான அனுமதி கோரப்பட்டபோதும் அதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. இந்த அரசின் ஆட்சியில் கூட இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரசேசசெயலாளர் ஆகியோரிடமிருந்தும் கூடுதல் தகவல்ஈளைப்பெறமுடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் கே.டி.லால்காந்த இதன்போது மகாவலி அதிகாரசபையிடம் இவ்விடயம் தொடர்பில் விக்கங்கோரினார்.
அதற்கமைய மகாவலி அதிகாரசபையின் அதிகாரி இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டிற்கு உரியவாறு அனுமதிகள் பெறப்பட்டதாகவும், வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அக்காணிகள் காணிகள் தனியார் காணிகள் எனில், அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்கமுடியும் எனவுந் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இடையிட்டுக் கருத்துத் தெரிவிக்கையில்,
மகாவலி அதிகார சபையிடம் நாமும், எமது தமிழ் மக்களும் வருகைதரவேண்டிய அவசியமில்லை.
எமது மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கும், முறைப்பாடுகளைப் பதிவுசெய்யவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குத்திற்குத்தான் செல்வார்கள். எமது மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகமே பொறுப்பாகும்.
அவ்வாறிருக்கையில் நீங்கள் எமது தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி அபகரித்துள்ளீர்கள். ஒருபோதும் மகாவலி அதிகாரசபைக்கு எமது தமிழ் மக்கள் வருகைதர மாட்டார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரே எமது மக்களுக்குப் பொறுப்பானவர்கள்.
அங்கு வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன தமக்கு அனுமதிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்து மரங்களை வெட்டி குடில்கள் அமைக்கும் சட்டவிரோத செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறெனில் இங்கு என்ன நடக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த உப்பளம் அமைப்பதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கூறியதைப்போல, அந்த உப்பளம் அமைக்கப்படுகின்ற பகுதியில் ஒரு தனியார் காணி இருப்பதாக உரிய ஆவணங்களுடன் வருகைதந்து அந்த ஊர்மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
அந்த காணி அமைந்திருக்கின்ற இடமும், உப்பளம் அமைக்கப்படுகின்ற இடமும் ஒரே பிரதேசமாக இருந்தாலும் அந்த இடத்தை எம்மால் சரியாக இனங்காணவேண்டிய தேவையுள்ளது.
அதில் இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக மக்களால் தனியார்காணி என முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் காணிகளுக்குள்ளேதான் அந்த உப்பளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்.
அத்தோடு அங்கு உப்பளம் அமைக்கப்படுவதால் தமக்குப் பாதிப்பு இருப்பதாக அருகே உள்ள களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களாலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்குரிய அனுமதியை சுற்றாடல் அமைச்சு வழங்கியுள்ளது. எனவே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் இதுதொடர்பில் மகாவலி அதிகாரசபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
காணியை உறுதிப்படுத்திய பிற்பாடு இந்த உப்பளம் அமைகும் திட்டத்தை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். எனவே உப்பளம் அமைக்கும் செயற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னர் அந்த திட்டத்தை மேற்கொள்வதுகுறித்துத் தீர்மானிக்கலாம்.
ஏன் எனில் தமிழ் மக்களால் தமது உறுதிக்காணிகள் எனக் கோருகின்ற காணியும், உப்பளம் அமைக்கப்படுகின்ற காணியும் ஒரே காணியா வெவ்வேறு காணியா என்பதை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தாலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தாலும் மிகச் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையிருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
நிலம் என்பது எமது இறைமை. எமது தமிழ் மக்களின் நிலங்கள் அனைத்தையும் பறித்தெடுத்தால் எமது மக்கள் எங்கு செல்வது.
எனவே இந்த விடயத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தனியார் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு பொறுப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லால் காந்தவிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்தவிடயத்தை ஆராய்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் பாரப்படுத்துவதாக விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி லால் காந்த இதன் போது பதிலளித்தார்.













