Friday, March 13, 2026
Huis Blog Bladsy 145

மகிந்தவின் மகன் கைது; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச, இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் யோஷித ராஜபக்ச இன்று (25.01.2025) மாலை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தாயும் தந்தையும் வேறு திருமணம்; நண்பியின் தந்தையால் சிறுமி துஷ்பிரயோக முயற்சி..!

0

அம்பாறை – ஏறாவூரில் மகளை தேடி வீட்டுக்கு வந்த நண்பியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட தந்தை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் 10 வயது சிறுமியே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

தாயும் தந்தையும் சிறுமியை விட்டுவிட்டு வெவ்வேறு திருமணங்கள் செய்து கொண்டுள்ள நிலையில், கைவிடப்பட்ட சிறுமி, சிறுவர் நன்னடத்தை இல்லம் ஒன்றின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதினத்தன்று இந்த சிறுமி மதியம் நன்னடத்தை இல்லத்துக்குத் திரும்பாததால் நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் சிறுமியைத் தேடி பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, சிறுமி பாடசாலையில் இல்லை எனவும் அவர் தனது நண்பியின் வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் சிறுமியின் நண்பியின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, நண்பி தனது தாயாருடன் வெளியே சென்றுள்ளதாகவும் நண்பியின் தந்தை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர், நன்னடத்தை இல்லத்தின் உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் நண்பியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது..!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச (இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நுவன் போபகே

0

தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், அது தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் “மக்கள் பேரவைக்கான இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி நுவன் போபகே இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, மாற்று சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி, அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறை செய்யும் வரலாற்றில், இவ்வாறான சட்டங்களை கொண்டுவருவது அந்த ஒடுக்குமுறையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் செயலாக இருக்கிறது.

மேலும், ஜனநாயகம் குறித்த தெளிவான நிலைப்பாட்டில் இல்லாது, பொருளாதாரம் தொடர்பாக கடந்த காலங்களில் அரசாங்கம் தெளிவான புரிந்துணர்வு இல்லாமையால் நாட்டு மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீனா விஜயத்தின் போது எட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் அடிப்படையில், அந்த நாடுகளின் அதிகார நோக்கங்களுக்காக மக்களின் வளங்களை விற்கும் முறையும் அதே முறையில் செயற்படுத்தப்படுகிறது.

அதன்படி, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ முன்வைக்கப்படவில்லை என்பதுடன், மேலும் இந்த விடயத்தில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அரசாங்கம் பல்வேறு பிரச்சார திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. எனத் தெரிவித்தார்.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி..!

0

2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை மீளாய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பரீட்சார்த்திக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமாயின் பரீட்சைத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 மற்றும் 0112784208, 0112784537 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(23) மாலை வெளியாகின.

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 323,900 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களில் 51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

வவுனியாவில் மாமியை சுட்டுக்கொலை செய்த 28 வயது நபரை வெட்டிக் கொன்றது யார்?

0

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு – ரவிகரன் எம்.பி

0

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12பேரும், தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் 24.01.2025இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப் படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பேசப்பட்டது.

இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

(விஜயரத்தினம் சரவணன்)

சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை..!

0

சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

2025-01-21ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தேன்.

அன்றைய தினம் விசாரணைக்கு சமூகம் அளிக்க முடியாதற்கான காரணத்தை தெரிவித்து குறித்த விசாரணையை 2025-01-23ஆம் திகதிக்கு மாற்றித் தருமாறு என்னால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தேன்.

உப பொலிஸ் பரிசோதகர் டில்ரங்காகுறித்த விசாரணையை முன்னெடுத்த நிலையில் எனது வாக்குமூலத்தை தமிழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி பதிவு செய்தார்.

2023.09.17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் 16 மாதங்கள் கடந்து குறித்த விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு எனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபனின் அரசியலை முன்னெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பணியாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக எனது தரப்பு நியாயத்தை முன் வைத்திருந்தேன்.

“எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும் திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன். இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்.” என்பதை நான் பதிவு செய்தேன்.

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்; 52 வயதான ஆசிரியர் கைது..!

0

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் , மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு; ஊடகத் தொழிற் சங்கம் கண்டனம்..!

0

ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல் துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகவியலாளர் தற்போது நாட்டுக்குள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளதாகவும் உடனடியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!