யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
யாழ். காவல்துறையினரால் நேற்று (29.01.2025) இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை (31.01.2025) யாழ்ப்பாணம் வருகின்றார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து பேருக்குத் தடை கட்டளை கோரி காவல்துறையினர் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனா்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகத் தடை கட்டளை கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்வைக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டிருந்தது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து, ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது இன்றைய தினம் (30.01.2025) குறித்த மனுவை நிராகரித்துள்ளது.
யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ் பல்கலை ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ் பல்கலை ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
அண்மையில் இடம்பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடாதிபதி தனது பதவியினை இராஜினாமா செய்தார்.
இராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக் கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கலைப் பீடத்தில் இடம்பெற்றது.
மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களிற்கு எதிராகப் பல்கலைக் கழகத்தின் நிருவாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை குறித்து இந்தக் கூட்டத்திலே பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிருவாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
தண்டனைகளின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர் காலத்திலே செம்மையாகச் செயற்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதுவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலை ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
1. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலினை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிருவாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.
2. மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.
3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிருவாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.
4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது.
எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டது – என்றுள்ளது.
மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த 48 வயது சசிதா இன்று முல்லைத்தீவு நீதிபதியால் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை குறித்த பெண்ணிடம் நாயை ஒப்படைக்கச் சொன்ன இணக்கசபை முட்டாள்களும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள உயர்வை வழங்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குாமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரச சேவையை மக்களின் உரிமையாகவும், அரச அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதனை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அரச சேவையில் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் திறமையான சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அரச சேவையில் தற்போது உருவாகியுள்ள சுமார் 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை அவசரமாக நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26) காலியில் வசிக்கும் மக்களிடம் கூறியுள்ளார்.
மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் செய்தார்.
அந்த நேரத்தில் உள்ளூர்வாசிகள் வீட்டைச் சுற்றி திரண்டனர். விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு ரணில் விக்ரமசிங்க புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதிக்கு வந்திருந்த குடியிருப்பாளர்கள் சாப்பிட அரிசி இல்லை என்றும் தேங்காய் இருநூறு ரூபாய்க்கு உயர்ந்துவிட்டதாகவும் கூறினர்.
“எங்கள் நம்பிக்கை நீங்கள்தான் ஐயா,” என்று குடியிருப்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர்.
இதன் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
நுவரெலியா, அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி, தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், சித்தப்பாவின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. தகவல் வழங்கலிலும் தடுமாற்றம் இருந்துள்ளது.
அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது செயற்பட்டவர்கள் தொடர்பில் மாவட்ட ரீதியாக ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, வைத்தியர் சிவமோகன் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
பா.அரியநேத்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கே.வி.தவராசா, மிதிலைச் செல்வி ஆகியோர் கட்சியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மாவட்ட கிளைகளின் ஊடாக அவ்விதமாக செயற்பட்டவர்கள் தொடர்பில் வர்த்தமானி உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், தற்போது வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14பேருக்கு எதிராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 12பேருக்கு எதிராகவும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த இருவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், அவர்களிடத்தில் விளக்கமளிப்புக்கான எழுத்து மூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் அது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலிஸார் மோதியதில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த இரண்டு பொலிஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
முற்பகல் வேளையில் அதிக மது போதையில் உந்துருளி செலுத்தி வந்த பொலிஸார் குறித்த வயோதிப பெண் பாதசாரி கடவையில் கடந்து செல்வதனை கூட அவதானிக்காது வாகனத்தை செலுத்தியதன் காரணமாக குறித்த பெண் மோதுண்ட நிலையில் வீதியில் தூக்கி எறியப்பட்ட நிலையில் தலையில் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் (29) ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த (16) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் தொடர்ச்சியாக சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (23) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மன்னாரைச் சேர்ந்த கடற் தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியில் தரித்து நின்ற சமயத்தில் குறித்த தனியார் பேரூந்தினை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.
இதன் போது திடீரேன தனியார் பேரூந்து புறப்பட முற்பட்டமையினால் ஆடைத் தொழிச்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் கண்ணாடியுடன் தனியார் பேரூந்தின் கண்ணாடியுடன் மோதுண்டு சிறு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு பேரூந்தின் சாரதிகளுக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டமையுடன் பின்னர் இரு பேரூந்துகளும் தொடர்ந்து பயணித்தன.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தினை சூடுவெந்தபுலவு பகுதியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலையில் சாரதி தனது ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேரூந்தினை உடனடியாக எடுத்துக் கொண்டு வந்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி உலுக்குளம் பொலிஸ் பிரிவில் வருகின்றமையினால் அப்பகுதி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.