யாழில் 14 வயது மாணவி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பிலான முறைப்பாடு நேற்று (14) முன் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. 14 வயது சிறுமியொருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று (14) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் கோட்டா அரசில் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்தவருமான கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயன்றமை பாரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அவசியமும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.
எனினும் தாம் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சுகத் திலகரட்ன அவுஸ்திரேலியாவிலிருந்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு தாம் 10 முதல் 12 தடவைகள் பயணம் செய்துள்ளதாகவும் இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஓர் பயணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 20ம் திகதி நாம் நாடு திரும்ப உள்ளதாக சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார். நாட்டின் விளையாட்டுத் துறை தொடர்பில் தம்மிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகளை இலங்கை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.
புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை காவல் துறையில் உள்ள அதிகாரிகளின் பட்டியலைத் தொகுத்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
குறித்த அதிகாரிகளின் மருத்துவ அறிக்கைகள் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டன. வெளியாகிய முடிவுகளைத் தொடர்ந்து, குறித்த அதிகாரிகள் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்கா உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிரேஷட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக் குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளுக்கமைய 7,456 பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நிலவும் 3,000 பதவி வெற்றிடங்களையும், பாதுகாப்பு அமைச்சில் நிலவும் 9 பதவி வெற்றிடங்களையும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சில் நிலவும் 179 பதவி வெற்றிடங்களையும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிலவும் 132 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400 பதவி வெற்றிடங்களையும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நிலவும் 161 பதவி வெற்றிடங்களையும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நிலவும் 3,519 பதவி வெற்றிடங்களையும், மேல் மற்றும் கிழக்கு மாகாணசபைகளில் நிலவும் 39 பதவி வெற்றிடங்களையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிலவும் 17 பதவி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நிர்வாக சீர்கேடுகள், நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்வதாகவும் தெரிவித்து, அதிபரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து பாடசாலை நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் இந்த அதிபர் வலயத்துடன் இணைத்தே விசாரணை செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ்விசாரணையை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுகிறோம் எனவும் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, போராட்ட இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன் பிரதிகள் வட மாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுநர் செயலகம், ஆளுநர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இலங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதுவரை இது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை சுகத் திலகரத்ன ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
அதேவேளை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற சுசந்திகா ஜெயசிங்க, தமயந்தி தர்ஷா ஆகியோரும் தற்போது அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக அங்கு வசித்து வருகின்றனர்.
இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரித்தோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக் கேடாகும் எனவும் அவர் கூறியுள்ளார்
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
“ இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக் கூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர்.
இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
சமூக வலைத் தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக் கூட ஆதரித்துள்ளனர்.
எனவே, இணைந்து வாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றோம்.
அரகலய போராட்ட காலத்தில் தமது சொத்து சேதமடைந்ததாக கூறி அரசிடமிருந்து பாரியளவான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்திய சாலையில் இன்று சனிக் கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.
தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரைவிடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத் துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் இன்று சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் அது பரவி வருவதாக சுட்டிக் காட்டப்பட்டது.
விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
தென்னை மரங்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை தம்மால் கட்டுப்படுத்துவது சவாலானது எனவும் அதற்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
ஏனைய விவசாயப் பயிர்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரசாயன முறையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். அதற்கான உதவிகளை வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக வழங்குவதாக, வடக்கு மாகாண பிரதம செயலர் இதன் போது உறுதியளித்தார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையினரையும், தென்னை பயிர்ச் செய்கை ஆராய்ச்சி அலகினரையும் அழைத்து விரைவில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் இதன் போது குறிப்பிட்டார்.