Friday, March 13, 2026
Huis Blog Bladsy 148

வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையில்லை – வடக்கு ஆளுநர்

0

வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்து விடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி வாழ்க்கைக்கு முக்கியமானது. கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதமைக்கு சமனானவர்கள். நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்னை சந்திக்க வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் கற்பதற்கு ஆர்வமாக இருந்த போதும் அவர்களுக்கு சீருடைகள், கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கல்வியைக் கைவிடக் கூடாது. வறுமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கு எமக்கு எந்தவொரு சுற்றறிக்கைகளும் தடையாக இருக்கப் போவதில்லை. நாம் சரியானதை சரியாகச் செய்தால் எதற்கும் பயப்படதேவையில்லை.

இன்று உங்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர் பெற்றுத் தந்திருக்கின்றார். வறுமையைப்போக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை.

கல்வியில் சிறந்த நிலைக்கு நீங்கள் வருவதே, இன்று நீங்கள் பெற்றுக் கொள்ளும் உதவிக்கு பிரதியுபகாரமாக அமையும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்து ஏனையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும். உங்களால் முடியும் என்று நினைத்து எதையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைந்தவர்களாக மாறலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிகரன் எம்.பி உள்ளிட்டோர் கைதான வழக்கு; மூவரும் ஆஜராகத் தேவையில்லை..!

0

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும் வரை ஆஜராகத் தேவையில்லை என முல்லைத்தீவு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை இந்தவழக்குடன் தொடர்புடைய ஆஜராகாத நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு 16ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்டமைக்காக தொல்லியல் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் 16ஆம் திகதி வியாழக்கிழமை, விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்தவகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவான், மன்றில் ஆஜராகிய மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை, நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்குடன் தொடர்புடைய ஆஜராகத் தவறியோரை நிதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றால் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கும் ஆதரவாக நீதிமன்றிற்கு வருகை தந்த அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதி திறன் மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் பயன்படுத்த முடியாது..!

0

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை சிறிலங்கா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளை மேற்கோள்காட்டி இந்த தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதிகபட்சமாக 450 சிசி எஞ்சின் கொள்ளளவுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஏப்ரல் 11, 2013 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில், விளையாட்டு மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக மாத்திரம் 450 சிசி முதல் 1001 சிசி வரையிலான எஞ்சின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்ச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிறப்பு ஒப்புதல் தேவை என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஒப்புதல் செயல்பாட்டின் போது, ​​விண்ணப்பதாரர் மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்யும் போது, ​​மோட்டார் சைக்கிள்களை பொது வீதிகளில் பயன்படுத்த முடியாது, ஆனால் பந்தயப் பாதைகளுக்கு மட்டுமே என்று ஒரு நிபந்தனை அதன் பதிவுப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று காவல்துறை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

இன்றைய இராசி பலன்கள் (16.01.2025)

0

மேஷம்

இன்று தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

ரிஷபம்

இன்று தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்

இன்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

சிம்மம்

இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

கன்னி

இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்

இன்று குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்

இன்று உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு

இன்று சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்

இன்று சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்

இன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் துண்டிப்பு..!

0

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் இன்று (15) துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் இன்று காலை (15) மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்டுகின்றது.

இந்நிலையில் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்து அலுவலகத்திற்கான மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

NPP எம்.பியின் வாகனத்தில் மாடுகளுக்கு புல் விநியோகம்; விசாரணை ஆரம்பம்..!

0

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்கவின் பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது

விலங்குகளுக்கு தேவையான புல் இந்த வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் கோரியுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை..!

0

உலகளவில் ஊடகவியலாளர்கள பாதுகாக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் (Committee to Protect Journalists) இணைந்து வேறு பல 24 சிவில் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள், இலங்கையில் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் சர்வதேச பத்திரிகை நிறுவனம் (International Press Institute), சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட 24 அமைப்புகள், ஊடகச் சுதந்திரத்தை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளன.

சர்வதேச அளவில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளப் பாதுகாக்கும் சட்டங்களுக்கு உடன்படுவதாக இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது என்பதை அவர்கள் ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளனர். மேலும் அந்த உடன்படிக்கை மாத்திரமன்றி நாட்டின் அரசியல் யாப்பிலும் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தலைமையில் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் அறிக்கையில் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னர் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதை முன்னெடுத்து உறுதிபடுத்தப்படும் என கூறியிருந்ததையும் நினைவூட்டியுள்ளனர்.

“நாங்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசிடம் இவ்வாறாக கோரிக்கை வைக்கிறோம்: கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் ஆகியவை தொடர்பில் உடனடியாக மீள் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

அவை பாரபட்சமற்ற முறையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் மேலும் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை இவை சில பல ஊட்கவியலாளர்களின் மரணங்கள், கடத்தல்கள், உடல்ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படாமல், 26 ஆண்டுகள் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த போர்க் காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள்களையும் உள்ளடக்க வேண்டும்”.

25 அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்வகையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், சட்டவிரோத மரணங்களாக இருக்கக்கூடும் வழக்குகளின் விசாரணை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ‘மின்னசோட்டா நெறிமுறைகளின்’ (UNA Minnesota Chapter) அடிப்படையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

“சட்டவிரோதமான படுகொலைகளை காத்திரமான வகையில் தடுப்பது மற்றும் அதை விசாரிப்பது, தன்னிச்சையான, அழித்தொழிக்கும் படுகொலைகளை குறித்த சட்ட நடவடிக்கைகள்’ தொடர்பில் அந்த மின்னசோட்டா நெறிமுறைகளை 20 முக்கிய கோட்பாடுகளை கூறுகிறது. இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

அனைத்து நாடுகளும் அனைவரின் உயிர்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மரணங்களை உறுதியான வகையில் சர்வதேச சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களில் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய கடப்பாடுகளை அந்த மின்னசோட்டா நெறிமுறை வலியுறுத்துகிறது.

“சந்தேகத்திற்குரிய வகையில் இடம்பெற்ற சட்டவிரோதமான அனைத்து படுகொலைகள், இயற்கைக்கு மாறான மரணங்கள் எனக் கருதப்படுபவை போன்றவைகள் மீது உடனடியாக, முழுமையான, பாரபட்சமற்ற முறையிலான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளிக்கும் முறைப்பாடுகளும் அடங்கும். அப்படியான விசாரணைகளை முன்னெடுக்க அரசு உரிய விசாரணை அலுவலகங்கள் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த விசாரணையின் நோக்கமானது மரணத்திற்கான காரணம், எப்படி அது நிகழ்ந்தது, எந்த நேரம் அல்லது சமயத்தில் இடம்பெற்றாது, அதற்கு பொறுப்பானவர் யார், அல்லது அந்த மரணம் சம்பவிப்பதற்கு தொடர்ச்சியான மாதிரிகள் அல்லது நடவடிக்கை ஏதாவது இருந்துள்ளதா” போன்றவை ஆராயப்பட வேண்டும் என்று அந்த நெறிமுறைகளில் ‘விசாரணை’ என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் அது திறன்பட இருக்க வேண்டுமென்றும் அச்சமயத்தில் சாட்சியம் அளிப்பவர்கள் மற்றும் விசாரணையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்கள் கோரியுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ மற்றும் பிரகீத் எக்நெலிகொட போன்ற ஊடகயவிலாளர்களின் மரணம் தொடர்பில் எவ்வித காத்திரமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிவராம் வழக்கு உட்பட 7 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்ட அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அவர்கள், அந்த மீள் விசாரணையும் இழுத்தடிக்கப்படாமல், குறித்த காலத்திற்குள்ளும், திறன்படவும் முடிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், ஊடகவியலாளர்கள், குறிப்பாக தமிழர்கள் மீதான துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகியவை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. அவர்கள் நீண்டகாலமாக தமது செய்தி சேகரிப்பு பணியின் போது கண்காணிக்கப்படுவதும், தேவையில்லாத தடைகள் விதிக்கப்படுவதையும் எதிர்கொண்டு வருகிறார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“ஊடகவியலாளர்கள் மீது அவர்கள் பணி தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள குற்ற வழக்குகளை சட்டத்தை நிலைநாட்டு அதிகாரிகள் மீளப்பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் ”பொதுச் சேவை ஊழியர்களை அச்சுறுத்துவதான” குற்றச்சாட்டில் அவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக்கூடாது”.

இந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதியிட்டுள்ள அவர்களின் அறிக்கையில், ஊடகச் சுதந்திரத்திற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் இணையதள பாதுகாப்புச் சட்டமும், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.

“கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை கடுமையாக நசுக்கும் அந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இணையதளத்தில் வெளியாகும் விடயங்களை கடுமையாக தணிக்கும் செய்யும் ஆணைக்குழுவிற்கு அதி கூடிய அதிகாரங்கள் வழங்கும் நிலையில், அது இரத்து செய்யப்பட வேண்டும்”.

அந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய இணையபாதுகாப்புச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்படலாம் என கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், அது இணையவழியாக ஏற்படுத்தும் நியாயமான தீங்குகளை தடுக்க முயன்றாலும், இணையத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரத்தை நியாயப்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது எனவும் கோரியுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் ஊடகவியலாளர்களை மாத்திரமன்றி காலவரையின்றி மக்களை தடுத்து வைக்கும் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஏகமனதாக அந்த 25 அமைப்பினரும் கண்டித்துள்ளனர்.

“ஊடகவியலாளர்களை அவர்களின் பணிக்காக மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி, சிறையில் அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட குற்றங்கள் ஏதாவது இருந்தால் அவை நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும்”. நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தையும் திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

அந்த சட்டம் பொது நலனில் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அது குறித்து செய்தி வெளியிடுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்றும், நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க ஊடக அனுமதி அதிகரிக்கப்பட வேண்டும், நல்லுறவு பேணப்படும் வகையில் அது இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புலனாய்வு விசாரணை செய்திகளுக்கு மிகவும் அவசியமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும், அப்படியான அம்சங்கள் அந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை வேண்டுகிறது.

எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு, பெண் இண்டர்நேசனல், சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் ஆகியோரும் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஊடகத்துறை தொடர்பாக சுய தணிக்கை ஆணைக்கழு ஒன்றை ஏற்படுத்த அவர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவை வேண்டியுள்ளனர். அந்த ஆணைக்குழு ஊடகவியலாளர்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல், அவர்களை குற்றவாளிகள் போன்று சித்தரிக்காமல், ஊடக அறம் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

“அந்த ஆணைக்குழு நேர்மையாகவும் நியாயமான வகையிலும் ஊடகத் துறையிலிருந்து போதிய பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் ஒரு நீதிமன்றத்தில் அதன் முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்”.

ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, தான் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர் என நிரூபிக்க அவருக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர்கள் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

0

தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளத் தமிழகம் சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

”தமிழக மீனவர்களால் ஆந்திரா, கேரளா, குஜராத் அல்லது பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா?. ஆனால், இலங்கை கடல் பரப்பில் மாத்திரம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எதிர்கால தலைமுறையின் கடல்பரப்பையும் சூறையாடுகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை.

யுத்தத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும்?

ரோலர் படகுகள் மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனையே தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர். ஒருசில மீனவர்கள்தான் இவ்வாறு செயல்படுகின்றனர்.

தமிழக மீனவர்கள் எதேச்சதிரகாரப் போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரிடம் நாம் கோருவது ஒன்றுதான். பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப்படும் ரோலர் படகுகளில் சட்ட விரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முறையை தடை செய்ய வேண்டும்.

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல் வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்.” என்றார்

இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமான ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் வருடத்தின் இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதே 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்தான்.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை அமுல்படுத்த வேண்டியதில்லை. அது அரசியலமைப்பில் உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் தமக்கான தீர்வாக கருதுவதால் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், எம்மை பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு இதனையும் தாண்டிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வை காண இந்த முறையுடன் மேலும் பல விடயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.” என்றார்.

‘அரசியல் கைதிகள் இல்லை’ என்ற பழைய பல்லவியை பாடாமல் உடனடியாக விடுவியுங்கள்..!

0

‘அரசியல் கைதிகள் இல்லை’ என்ற பழைய பல்லவியை பாடாமல் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜே.வி.பி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்.

அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது.

இது எங்களுக்கு பழகி போன ஒரு பழைய பல்லவி. இன்று புது புரட்சி மாற்றம் செய்ய போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த புரட்சி அரசாங்கமும் அதே அரைத்த மாவையே அரைக்கிறது.

இப்படியான பல பல்லவிகளை கேட்டு, முரண்பட்டு, ஜனநாயக ரீதியாக போராடிய வரலாற்றை கொண்ட எமக்கு, இது பழகி போன ஒரு மேலாதிக்க அரசியல் கருத்து.

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்.

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.

தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலை 25ரூபாவால் குறைத்தால் பாணின் விலை 100 ரூபாய்..!

0

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அந்த அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டது.

டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!