யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் , மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல் துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகவியலாளர் தற்போது நாட்டுக்குள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளதாகவும் உடனடியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 22.01.2025இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் விமல் ரத்நாயக்க இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், குறித்த கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும், சகபாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக் காண்பித்திருந்தார்.
அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர்மாதம் 04ஆம் திகதி நாடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே ஜனவரி.22 இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல்ரத்நாயக்க மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற சந்திப்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழலில் தமது தொடர்ச்சியான கடும் பிரயர்தனத்திற்கு பலன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும், கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறீதரன்,
மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.
ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்ட போதும் அவர் என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.
நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்கள் நிலங்கள் மழை வெள்ளம் காரணமாக
அழிந்துள்ளதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் இவ்வாண்டு 1400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
இந்நிலையில் கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கெண்ட நாங்கள் மருந்து குடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.
மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிட கூட இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்
கடந்த போகத்திலும் காப்புறுதி செய்து அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில் பார்வையிடவோ இழப்பீடு வழங்கபபடவோ இல்லை. இம்முறையும் இதுவரை எந்த அதிகாரிகளும் வருகை தந்து பார்வையிடவில்லை.
அரசாங்கம் உடனடியாக எமது நிலமைகளை கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை இலஞ்சமாக கோரியுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த நிலையத்தில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்து, சட்டப் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும், விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை, பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறீதரன் எம்.பியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சிறீதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று(21) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை செய்யப்பட்டதாக ஹக்கீம் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டுள்ளார்.
குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிறீதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இது அரசாங்கத்தின் முடிவும் அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்று பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளது. இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்திக்கு 750 ரூபாயும், முட்டை உற்பத்தி செய்ய 34 ரூபாயும் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனத்தின் மீதான வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஒரு முட்டைக்கு 6 ரூபாயும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாயும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.