வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கர வண்டி சாரதியும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (25) மாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதியதொரு டிஜிட்டல் மோசடி குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் பெயரிலோ வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக ஆபத்தான “apk” கோப்புகள் அனுப்பப்படுகின்றன.
இவை திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண விபரங்கள் அல்லது பரிசுப் போட்டிகள் போன்ற பெயர்களில் வரக்கூடும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இவற்றை ஒரு புகைப்படம் என்றோ அல்லது PDF கோப்பு என்றோ நினைத்து கிளிக் செய்தால், அது உடனடியாக உங்கள் தொலைபேசியில் ஒரு மென்பொருளாக தானாகவே நிறுவிக் கொள்ளும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மென்பொருள் ஊடாக ஹேக் செய்பவர்கள் கைபேசியை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தொலைபேசிக்கு வரும் SMS மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கான OTP இரகசிய குறியீடுகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் வங்கி கணக்கிலுள்ள பணம் முழுமையாக கொள்ளையிடப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு “apk” கோப்புகளையும் தரவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம்.
மென்பொருள்களைப் தரவிறக்கம் செய்ய எப்போதும் உத்தியோகபூர்வமான Google Play Store அல்லது Apple App Store ஐ மாத்திரம் பயன்படுத்துங்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், தொலைபேசி அமைப்புகளில் உள்ள “Install Unknown Apps” என்ற தெரிவை முடக்கி வைத்திருப்பதை உறுதி செய்யவும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோசடிக்கு உள்ளாகியிருந்தால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதோடு, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரித்தானியா சென்ற போது 16.2 மில்லியன் ரூபாய் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இத்தகைய நீதிமன்றத்தை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் ரீதியாக இம்முடிவுகள் அறிவிக்கப்படுவது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு ஜனாதிபதி தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டாலும் அவருக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும், அதற்கான செலவுகளை நிதி முறைகேடாகக் கருத முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.டி. ஜயநாயக்க வாதிட்டார்.
அத்துடன் 650 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய பெரிய அளவிலான ஊழல்கள் விசாரிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகவே தெரிவதாகக் கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2029ம் ஆண்டிற்குள் வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் வீதி விபத்துகளினால் ஏற்படும் 2,700-க்கும் மேற்பட்ட மரணங்களை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “சீரற்ற போதைப் பொருள் பரிசோதனையின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்” (Principles and Practice of Random Drug Testing) என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல பணிகளை முன்னெடுத்துள்ளது. நாம் எவ்வளவுதான் வீதிகளை மேம்படுத்தினாலும், நவீன வாகனங்களை இறக்குமதி செய்தாலும் அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்தினாலும், முறையான பயிற்சியும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் சாலை பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
ஆண்டுதோறும் இழக்கப்படும் 2,700-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது இலக்கு 2029ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை பெருமளவு குறைப்பதாகும்,” என்றார்.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, 15%-18% வரையிலான சாரதிகள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், வீதி விபத்துகளில் சுமார் 53% ஓட்டுநர் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒழுக்கம் மற்றும் பயிற்சி இன்றி போக்குவரத்து பாதுகாப்பை நிலைநாட்ட முடியாது. போக்குவரத்து செயல் திட்டத்தின் (Transport Action Plan) கீழ் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. வெறும் யோசனைகளுடன் நின்று விடாமல், நாங்கள் அவற்றைச் செயற்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டிற்கு ஏற்ற தரமான பேருந்துகள் மற்றும் வாகனங்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டது.
வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு இலக்கம் 8 மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த வழக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த வழக்கிலும் பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விடயங்களை ஆராயந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வழக்கை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயித்தார்.
2009 மார்ச் 31ஆம் திகதியில் இருந்து 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 வங்கிக் கணக்குகளில் பேணப்பட்ட 59 மில்லியன் ரூபாவை ஈட்டிய விதத்தை உறுதிப்படுத்தாமை காரணமாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டேஸி பொரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிங்கள கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்குக் கடும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்கே மீது குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘ராயல் சிங்களப் புத்தாண்டு விழா’ (Royal Sinhala New Year Festival) என்ற பெயரில் நடைபெற்ற கொண்டாட்டம் தொடர்பாக, ஜோதிட நிபுணர் குழு மற்றும் சிங்களப் பாதுகாப்பு முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
இளம் பெண்கள் தங்கள் அக்குள்களுக்கு அடியில் பிடித்துக் கொண்டிருக்கும் பாட்டில்களிலிருந்து இளைஞர்களை பீர் குடிக்க வைப்பது மற்றும் இளம் பெண்களின் வயிற்றின் மீது வைக்கப்பட்டிருக்கும் பணிஸ்களை இளைஞர்களைச் சாப்பிட வைப்பது போன்ற சமூக ஒழுக்கமற்ற விளையாட்டுகளை ‘தேசிய விளையாட்டுகளாக’ முன்னிறுத்தியதன் மூலம், சிங்கள கலாச்சாரத்திற்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டினர்.
இத்தகைய கண்ணியமற்ற நடவடிக்கைகளைத் தேசிய விளையாட்டுகளாகப் பிரபலப்படுத்த முயலும் அரசு சாரா நிறுவனங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் CID யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவுடன் (UNESCO) இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி, இது மிகவும் தீவிரமான ஒரு குற்றமாகும் என்று ஜோதிட நிபுணர் குழுவின் தேசிய அமைப்பாளர் திரு. ரவிசங்க சேனநாயக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அன்பான பெற்றோர்களே உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள்.
பாடசாலைக் கல்வி முடியும் வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். தற்போதய பிள்ளைகள் எது சரி, பிழை என்பதை சிந்திக்காத உணர்ச்சி முட்டாள்கள் இதுபோன்ற சிறுவர்களின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரணங்களில் 60 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி இடம் பெற்றுள்ளதாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களின் உத்தரவுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விசாரணைகளின் போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைளில் மோசடி இடம்பெற்றமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நால்வர் உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 8 இற்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களிடமும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், குறித்த மோசடியில் ஈடுபட்ட சில அலுவலர்கள் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டு மோசடி செய்த பணத்தை மீள செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழே இவ்வாறான மோசடிகள் அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் வெளிப்படையான நீதியான விசாரணைகள் இடம்பெற்று மோசடி செய்த உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வன்னியின் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்த திலீபன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காணி, மணல், கிரவல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக செயற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய விசாரணைகள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
2026-ல் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுகளில் எரிபொருள் இறக்குமதி செலவுகள் ஒரு பெரும் பகுதியை உருவாக்குகின்றன என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மொத்த இறக்குமதிகளில் சராசரியாக கிட்டத்தட்ட 20% ஆக இருந்துள்ளன என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், 2025-ல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிகளின் அளவு அதிகரித்த போதிலும், மொத்த செலவு 2024-ல் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணமாகும்.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, ஒரு பரல் கச்சா எண்ணெயின் சராசரி இறக்குமதி விலை 2024-ல் 84.7 அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 73.2 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் ஒருவரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
‘எகிபஸிக்கோ’ அமைதி நடைபயணத்தை செய்தியாக்கச் சென்ற அரசிற்குச் சொந்தமான ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் சந்தன சூரிய பண்டாரவின் இத்தகைய நடவடிக்கைகளை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அவர் ஒரு அரச அதிகாரிக்குரிய அதிகார வரம்பைத் தாண்டிச் செயற்பட்டதாகவும், நிகழ்வின் போது தனியார் ஊடக நிறுவனமொன்றுக்கு தேவையற்ற முன்னுரிமை அளித்து முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு ஊடகவியலாளர்களும் அரச ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆலோசகரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது ஒரு முரணான விடயம் என்று அந்தச் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அச் சங்கம், கடந்த கால அரசாங்கங்களின் ஊடக அடக்குமுறை நடைமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் தெரிவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்த அண்மைக்கால விவாதங்கள் மற்றும் வெளிப்பாட்டு விவகாரங்களில் கலாசார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் உதவியை நாடுவதாக வெளியாகும் செய்திகள் ஆகியவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடகக் கொள்கை எவ்வழியில் செல்கிறது என்பதைக் காட்டுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தமது தொழில்முறை கடமைகளை கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும் முன்னெடுப்பதை உறுதி செய்யவும், அரச அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோர் கையொப்பமிட்ட இக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.