Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 5

வவுனியாவில் மாமியை சுட்டுக்கொலை செய்த 28 வயது நபரை வெட்டிக் கொன்றது யார்?

0

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு – ரவிகரன் எம்.பி

0

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12பேரும், தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் 24.01.2025இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப் படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பேசப்பட்டது.

இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

(விஜயரத்தினம் சரவணன்)

சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை..!

0

சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

2025-01-21ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தேன்.

அன்றைய தினம் விசாரணைக்கு சமூகம் அளிக்க முடியாதற்கான காரணத்தை தெரிவித்து குறித்த விசாரணையை 2025-01-23ஆம் திகதிக்கு மாற்றித் தருமாறு என்னால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தேன்.

உப பொலிஸ் பரிசோதகர் டில்ரங்காகுறித்த விசாரணையை முன்னெடுத்த நிலையில் எனது வாக்குமூலத்தை தமிழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி பதிவு செய்தார்.

2023.09.17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் 16 மாதங்கள் கடந்து குறித்த விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு எனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபனின் அரசியலை முன்னெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பணியாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக எனது தரப்பு நியாயத்தை முன் வைத்திருந்தேன்.

“எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும் திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன். இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்.” என்பதை நான் பதிவு செய்தேன்.

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்; 52 வயதான ஆசிரியர் கைது..!

0

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் , மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு; ஊடகத் தொழிற் சங்கம் கண்டனம்..!

0

ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல் துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகவியலாளர் தற்போது நாட்டுக்குள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளதாகவும் உடனடியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

முல்லை – வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 22.01.2025இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் விமல் ரத்நாயக்க இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், குறித்த கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும், சகபாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக் காண்பித்திருந்தார்.

அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர்மாதம் 04ஆம் திகதி நாடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே ஜனவரி.22 இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல்ரத்நாயக்க மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற சந்திப்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் தமது தொடர்ச்சியான கடும் பிரயர்தனத்திற்கு பலன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும், கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

விஜயரத்தினம் சரவணன்

என் மீதான பயணத் தடை; பின்னணியில் சூழ்ச்சி – விசாரணை நடத்துமாறு சிறீதரன் MP கோரிக்கை

0

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறீதரன்,

மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.

ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்ட போதும் அவர் என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.

இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.

நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அரசு நட்டஈடு தராது விட்டால் மருந்து குடித்து தான் சாகவேண்டும் – புதுக்குடியிருப்பு விவசாயிகள் கவலை

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்கள் நிலங்கள் மழை வெள்ளம் காரணமாக

அழிந்துள்ளதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் இவ்வாண்டு 1400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் கடன்களை பெற்று நெற்செய்கை மேற்கெண்ட நாங்கள் மருந்து குடித்து சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.

மழை வெள்ளத்தால் வயல்கள் அழிவடைந்து பல தரப்புக்களுக்கும் அறிவித்து இதுவரை யாரும் வருகை தந்து வயல் நிலங்களை பார்வையிட கூட இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்

கடந்த போகத்திலும் காப்புறுதி செய்து அழிவடைந்த வயல் நிலங்கள் உரிய வகையில் பார்வையிடவோ இழப்பீடு வழங்கபபடவோ இல்லை. இம்முறையும் இதுவரை எந்த அதிகாரிகளும் வருகை தந்து பார்வையிடவில்லை.

அரசாங்கம் உடனடியாக எமது நிலமைகளை கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது..!

0

விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை இலஞ்சமாக கோரியுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த நிலையத்தில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

யாழ் மாவட்ட எம்.பி அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய உத்தரவு..!

0

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்து, சட்டப் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும், விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை, பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!