Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 6

அனுர ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லையா? – பிமல் ரத்நாயக்க விளக்கம்

0

சிறீதரன் எம்.பியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சிறீதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று(21) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது அவதானத்துடன் பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை செய்யப்பட்டதாக ஹக்கீம் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டுள்ளார்.

குறித்த விடயத்துக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரன் எம்.பி.க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இது அரசாங்கத்தின் முடிவும் அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல என்று பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

225 எம்.பிக்களுக்கும் வாகனங்கள் வழங்க திட்டம்; இறக்குமதிக்கு அனுமதியில்லை..!

0

எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

‍நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறைவடைந்த கோழி இறைச்சி விலைகள்; விற்பனையும் வீழ்ச்சி..!

0

மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளது. இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்திக்கு 750 ரூபாயும், முட்டை உற்பத்தி செய்ய 34 ரூபாயும் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனத்தின் மீதான வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஒரு முட்டைக்கு 6 ரூபாயும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாயும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மிதிவெடி அகற்றும் பணியாளர்களை துரத்திய யானை..!

0

கொக்குதொடுவாய் தெற்கு பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த சம்பவம் நேற்று (20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப் பகுதிக்குள் கண்ணிவெடி பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். குறித்த பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து துரத்தியுள்ளது.

யானை துரத்தியதை கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியுள்ளனர் அதன் போது 3 பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளார்கள்.பின்னர் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்கள் உடன் மீள்குடியேற்றப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி

0

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கூட்டுறவு பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் ஆளுந்தரப்பு பராளுமன்ற உறுப்பினர்கள், உரியஅரச அதிகாரிகள் முன்னிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.

தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குத் தயாராக இருக்கின்றனர். குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு என்னிடமும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு அப்பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். இருப்பினும் அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையில் இவ்வாறாகத் தம்மை தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற விடாமல் தடுத்து வைத்துக் கொண்டு, தமது பூர்வீக கிராமங்களில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற அச்சத்துடன் அப்பகுதிகளுக்குரிய மக்கள் காணப்படுகின்றனர்.

எனவே புதிய அரசாங்கமானது தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராம மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கூடிய கவனஞ் செலுத்த வேண்டும். அவர்களை மீள்குடியேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்றார்.

மேலும் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் பகுதிகளில் தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் குடியிருந்த பெருமளவான பகுதிகளை தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன கையகப்படுத்தி வைத்துள்ளதுடன், தண்ணிமுறிப்பில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையில் அடாத்தாக பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இன்றைய இராசி பலன்கள் (21.01.2025)

0

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்
இன்று முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான நாளாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்
இன்று கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்
இன்று உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்
இன்று படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி
இன்று உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்
இன்று வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். எதிலும் அடக்கமாகப் பேசுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்
இன்று செலவழிப்பதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வீர்கள். மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு
இன்று பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்
இன்று உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்
இன்று உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்
இன்று வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறையாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

அநுர அரசுக்கு எதிராக “மும்முனைத் தாக்குதல்” ஆட்டம் காணுமா அரசு..!

0

நாட்டு மக்களின் பேராதரவுடன் அரியணையேறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, எதிரணிகள் மும்முனைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியை ஆட்டம் காண வைக்கும் நோக்கில் எதிரணிகளால் அரசியல் சமர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமது அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. அந்த வகையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குரிய அடித்தளம் அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள பாதீடு ஊடாக இடப்படவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது மண்கவ்விய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன, இரு தரப்பும் இணைந்து களமிறங்கி இருந்தால் வெற்றி வாகை சூடி இருக்கலாம் என தமக்கு தாமே ஆறுதல் கூறி வருவதுடன், சங்கமத்துக்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் இரு தரப்பு இணைவு பற்றி கொழும்பில் இன்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது. இரு கட்சிகளும் இணைந்து மீண்டும் ஒரு கட்சியாக மாறுவதற்குரிய சாத்தியம் இல்லை என்பதால் பொதுவானதொரு கூட்டணியின்கீழ் இணைவது பற்றியே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டணியின் சின்னம் யானையா, தொலைபேசியா என்பதிலும் குழப்பம் நீடிக்கின்றது.

இந்த இணைவுக்கு சஜித் இழுபறிபோக்கை கடைபிடித்து வந்தாலும் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பலைகளால் கடைசியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளார் என்றே கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சஜித், ரணில் அணிகள் இணைந்து கூட்டணியை உருவாக்கினால் அதன்மூலம் திசைக்காட்டியை திணற வைக்கலாம் என அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அதற்குரிய பலப்பரீட்சையாக உள்ளாட்சி சபைத் தேர்தலை பயன்படுத்தலாம் எனவும் யோசனை முன்வைத்துள்ளனர்.

இரு தரப்பு இணைவுக்கு பின்னர் நிழல் நாடாளுமன்றமொன்றை ஸ்தாபித்து, நிழல் அமைச்சரவையை நியமித்து, அதன் ஊடாக நகர்வுகளை முன்னெடுப்பதற்குரிய திட்டமும் உள்ளது. ரணில், சஜித் கூட்டென்பது அரசுக்கு எதிராக ஒரு முனையில் முன்னெடுக்கப்படும் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சர்வஜன அதிகாரம் தரப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிங்கள தேசியவாத அமைப்புகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதாவது சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை குறிவைத்து, வாக்கு வேட்டை நடத்துவதற்குரிய களத்தை உருவாக்குவதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த காலங்களைப் போலவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் புலிப்புராணம் பாட ஆரம்பித்துள்ளது. போரை முடிந்த தலைவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், வீட்டை விட்டு வெளியேற்ற சதி என்றெல்லாம் ஒப்பாரி வைத்து, அனுதாப வாக்குகளைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

எடுத்த எடுப்பிலேயே அல்லாவிட்டாலும் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகள் எடுக்கும்போது, தலைதூக் குவதற்குரிய தூரநோக்கு திட்டமே மேற்படி தேசிய வாத அமைப்புகளிடம் உள்ளன என்பதை அவற்றின் நகர்வுகளில் இருந்து அறியமுடிகின்றது.

இனவாதம், மதவாதம் மறந்து, புரட்சிகரமானதொரு மாற்றத்துக்காக வாக்களித்த மக்களின் மனங்களில், பிரிவினைவாதத்தை விதைக்கும் வகையில் ஒரு சில ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் உரையாற்றுவதைக் காணமுடிகின்றது.

மூன்றாவதாக இடதுசாரிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு கட்சியின் அதிருப்திக்குழு என்பன ஈடுபட்டு வருகின்றன. முன்னிலை சோசலிசக் கட்சியும், அரசின் திட்டங்களை சரமாரியாக விமர்சித்து வருகின்றது.

தமது கட்டமைப்பின்கீழ் உள்ள தொழிற்சங்கங்கள் ஊடாக சில நகர்வுகளை முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் பற்றியும் அக்கட்சி ஆராய்ந்து வருகின்றது எனலாம். இது முன்றாவது முனை தாக்குதலாக கருதப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, வளமான நாடு ,அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரம் காட்டி வருகின்றது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கள்வர்களை பிடிக்கவில்லை, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள சொத்துகளை கொண்டுவரவில்லை என்பதும் அரசுமீது தொடுக்கப்படும் விமர்சனக் கணைகளில் பிரதானமானவையாக உள்ளன.

கள்வர்களை ஒரே இரவில் பிடித்து விடமுடியாது. அதனால்தான் சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாட்சி, ஆதரமின்றி கைவைத்தால் அரசியல் பழிவாங்கல் என முத்திரை குத்திவிட்டு, குற்றவாளிகள் நாயகர்களாக கூடும்.

கடந்த காலங்களில் அப்படி நடந்தும் உள்ளது. எனவே, காலம் தாமதத்தைவிட, உண்மை மற்றும் நீதி என்பன மிக முக்கியமாகும்.

(தொடரும்…..)
ஆர்.சனத்

அனைவரும் அறிந்து வைக்க வேண்டிய அடிப்படைச் சட்டதிட்டங்கள்..!

0

1. நீங்கள் சாலையில் இருக்கும்போது, ​​ஒரு காவல்துறை அதிகாரி உங்களைத் தடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் நிறுத்த முயற்சித்தால், நீங்கள் தொடரலாம்.

2. ஒரு போலீஸ் அதிகாரி உங்கள் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க முடியாது.

3. நீங்கள் ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது, ​​உங்கள் தேசிய அடையாள அட்டையைத் தவிர வேறு ஆவணங்களைக் கோர “போக்குவரத்து போலீஸ் அதிகாரி” மட்டுமே உரிமை உண்டு.

4. ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி உங்களிடம் அபராதம் விதிக்கவோ அல்லது கட்டணம் வசூலிக்கவோ முடியாது. அவருக்கு நிச்சயமாக ஒரு சாட்சி தேவை. சாட்சி ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும். (எனவே, சாலையில் எப்போதும் இரண்டு போக்குவரத்து போலீசார் ஒன்றாக இருப்பார்கள்)

5. காவல்துறை அமைதியைக் காக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்தி. ஆயுதப்படை அல்ல. தடியடி தவிர வேறு ஆயுதம் ஏந்திச் செல்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. (இருப்பினும், நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக, போர் முடியும் வரை அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.) எனவே, ஒரு போலீஸ் அதிகாரி உங்களிடம் துப்பாக்கியை நீட்டினால், அவர் மீது புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உண்டு.

6. மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டினால், நீங்கள் பலூன் சோதனைக்கு கோரலாம். அந்த நேரத்தில் அவர்களுக்கு பலூன்கள் இல்லையென்றால், நீங்கள் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

7. நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒரு வாகனத்தை நிறுத்த ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். (எனவே, இராணுவ சோதனைச் சாவடியில் குறைந்தது ஒரு காவல்துறை அதிகாரி இருக்க வேண்டும்.)

8. எழுத்துப்பூர்வ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரி உங்கள் வீடு அல்லது பணியிடத்திற்குள் நுழையக்கூடாது. எழுதப்பட்ட உத்தரவைக் கோர உங்களுக்கு ஒவ்வொரு உரிமையும் உண்டு. அவர்கள் நுழையப் போகிறீர்கள் என்றால், அதை எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு.

9. குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வரை உங்களுக்கு ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாது. நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், நீங்கள் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.

10. ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி உங்கள் உரிமத்தை வலுக்கட்டாயமாகப் பெற்று, அதை திரும்பப் பெற காவல் நிலையத்திற்கு வரும்படி கேட்கும்போது, ​​காவல்துறை கண்காணிப்பாளரிடமோ அல்லது அப்பகுதியின் டி.ஐ.ஜியிடமோ புகார் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. முறைகேடு அல்லது தவறான நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்படலாம்.

11. ஒரு போலீஸ் அதிகாரி ஒரு பெண்ணின் பெயர், முகவரி, அடையாள அட்டை, தொலைபேசி எண்ணைக் கேட்டால், அந்தக் கோரிக்கையை பின்பற்றாத உரிமை அவளுக்கு உண்டு (அவர் உங்களைத் துன்புறுத்துகிறார் என்று நீங்கள் நினைக்காவிட்டால்). அவர் உங்களை (பெண்ணை) கைது செய்ய முடியாது. ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியை நாட உங்களுக்கு உரிமை உண்டு.

12. ஒரு பெண்ணை பரிசோதிக்க விரும்புவதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறும்போது, ​​அதைச் செய்ய ஒரு போலீஸ் அதிகாரியைப் பெற உங்களுக்கு (பெண்) உரிமை உண்டு. உங்களிடம் போலீஸ் பெண் இல்லையென்றால், மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.

13. நீங்கள் அபராதம் விதிக்க அல்லது வேகமானதாக வழக்குத் தொடரத் திட்டமிட்டிருந்தால், முதலில் வாகனத்தின் வேகமானியைக் காட்டுமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு. (பெரும்பாலான பொலிஸ் வேகமானிகள் செயலற்றவை, மேலும் அவை குற்றவாளிகளைப் பிடிக்க மீட்டரை நீடிக்கின்றன)

14. நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தால், காவல்துறைக்கு அறிக்கை அளிப்பதற்கு முன்பு ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் ஒரு வழக்கறிஞரைக் கேட்கலாம்.

சட்ட விவகாரம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், தயவுசெய்து

சட்ட உதவி ஆணையம்,
எண் 129/5, உயர் நீதிமன்ற வளாகம், ஹல்ப்ட்ஸ்டார்ப், கொழும்பு 12

உள்ளூராட்சி தேர்தலில் முக்கிய திருப்பம்; சுமந்திரன் வெயியிட்ட தகவல்..!

0

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்த வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக செயற்பட்டிருப்பின், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“2023ஆம் ஆண்டில் பலரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்பித்திருந்தனர். எனினும், வேட்பு மனுக்களை சமர்பித்தவர்கள் இந்த இரண்டு வருடங்களில் கட்சிக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம்.

அல்லது, சிலர் இறந்திருக்கலாம். மேலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவ்வாறு இருப்பின் அவர்களின் பெயர்கள் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்..!

0

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ் – மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் இடமாற்றம் நடைபெறுகின்றது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களிலே பணி செய்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளி மாவட்ட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.

இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள், வெளிமாவட்ட சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் உள நெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இடமாற்ற சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்ற போது தேசிய இடமாற்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் ஒரு அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்போது இருக்கின்ற அரசாங்கம் தங்களுக்கு சார்பானவர்களை பெரிய பெரிய பதவிகளில் அமர்த்துவதுடன், அரசியல் சார்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இடமாற்றத்திலேயே அரசியல் சார்பான தொழிற் சங்கங்கள் செயற்பட்டு கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள். வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்

இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு – தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வழி மாவட்டத்தில் வேலை செய்கின்ற போதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சனையும் செல்வாக்கு செலுத்துகின்றது. தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

error: Content is protected !!