Monday, October 27, 2025
Huis Blog Bladsy 6

வடக்குத் தவிர்ந்த ஏனைய மாகாண மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை..!

0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வடக்குத் தவிர்ந்த கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்திற்கு பதில் பாடசாலையாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

0

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடக்கு மாகாண இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டு சபை ஆகியவற்றில் ஏற்பட்ட குழப்பகரமான தகவல்கள் குறித்து ஆளுநரால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டது.

அதற்கமைய மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன், வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளும் – ஆசிரியரைப் பழிவாங்கி வரும் முயற்சிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

“மாகாண கல்வி திணைக்களத்தினர் தமது மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே, திருபுபடுத்தப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோதமான, அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் அனைத்தையும் மறைத்து, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, எமது இந்த ஊடக அறிக்கை மூலம் ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளரின் பொய்யானதும் புனையப்பட்டதுமான அறிக்கையின் உண்மை நிலையையும், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் என்பதற்காக குறித்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டுள்ள விடயத்தையும் அறியத் தருகின்றோம்.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக வட மாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய சட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு..!

0

பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொது மக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இன்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 28ஆவது தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில்,

“பெற்றோர்களின் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்புகளை நியாயமாகவும் நீதியாகவும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக, நாங்கள் பாரிய கல்வி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியுள்ளோம்.

சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறேன். பொது மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன, எனக்காகவோ அல்லது நாடாளுமன்றத்திற்காகவோ அல்ல. பொதுமக்கள் உடன்படாத எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என உறுதியளிக்கிறேன்.

சட்டங்கள் மக்களுக்காகவே இயற்றப்படுகின்றன. மக்கள் அவற்றை ஏற்கவில்லை என்றால், அந்தச் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது. ஆட்சியாளர்களின் நலன்களுக்காக அல்ல, மக்களின் நலன்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.

அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்களுக்கு யாழில் தடை..!

0

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிறுவனங்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெற்றே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (15) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் அவர்களால் முன்மொழிவு ஒன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவில் வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண் நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துள் உள் நுழைந்து ஏழை மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி ஏப்பமிட்டு வருகின்றது.

இந்த விளம்பரங்களால் எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வடிகளுக்கு நிதியை பெற்றுக் கொள்கின்றனர். அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திகின்றனர்.

இதனால் மீளவும் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம். பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன் கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர்.

இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப் படுகின்றது. எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

குறித்த முன்மொழிவு குறித்து சபையின் தவிசாளர் அசோக்குமார், சபையின் அனுமதி பெறாது எந்தவொரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின் நியமங்களை ஏற்று சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

அவ்வாறு சபையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று கூறியதுடன் குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் பாடசாலைகளை மூடி போராடுவோம் – ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

0

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப் படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிலையில் ஆசியர்கள் போராட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தம்மை வந்து அதிகாரிகள் சந்திப்பார்கள் என ஆளுநர் செயலகம் முன்பாக ஆசிரியர்கள் காத்திருந்த போது , ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் ஆளுநர் செயலகத்தின் பின் கதவு வழியாக வெளியேறி சென்று விட்டனர் என ஆசியர் சங்க செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சகல பாடசாலைகளையும் மூடி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். நாங்கள் பிழையான செயலில் ஈடுபடவில்லை நியாமான கோரிக்கைகளை முன் வைத்து எமது உரிமைக்காகவே போராடி வருகிறோம்.

ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பின் கதவால் சென்றமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என மேலும் தெரிவித்தார்

மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது – பேராயர் சுட்டிக்காட்டு

0

சிறுவர்கள் தண்டனை தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் போது, சில மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட திருப்பலியில் பங்கேற்றபோது பேராயர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சிறுவர்கள் தண்டிக்கப்பட்டு சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கல்வியில் அனைத்து மேற்கத்திய சட்டங்களையும் பின்பற்றப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இது சிக்கலை உருவாக்கும், அப்படியென்றால் ஆசிரியர்களும் எப்படி சமாளிப்பார்கள்? ஆசிரியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பாடசாலையில் மாணவர்கள் தவறாக நடந்து கொண்டால், ஆசிரியர் தலைமுடியை அவ்வளவு நீளமாக வளர்க்க வேண்டாம் என்றும் அதை வெட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறலாம்.

அப்படிச் சொன்னால், அந்த மாணவர்களுக்கு பொலிஸ் நிலையம் சென்று என் ஆசிரியர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறலாம். இதைச் சொன்னதற்காக ஆசிரியரைக் கைது செய்யலாம். அது மிகப் பெரிய தவறு.

இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது என்ற அனைத்தும் இலங்கைக்கு ஏற்றதல்ல.

நமது இலங்கையில், நாம் மதிக்க வேண்டிய ஒரு கலாச்சாரம், ஒரு அமைப்பு மற்றும் நெறிமுறைகள் உள்ளன.

எனவே, கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மாகாவலி ஆற்றில் காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு..!

0

கண்டி – தென்னகும்பும்புர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களின் உடல்கள் தென்ன கும்பும்புர பாலத்திலிருந்து சுமார் 2 1/2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருதெனிய பகுதியில் மகாவலி ஆற்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 14 மற்றும் 13 வயதுடைய கே. ஜெகதீஸ் மற்றும் முகமது மில்ஹான் என்ற இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் நேற்று (09) மாலை திகன பகுதிக்கு வளர்ப்பு மீன் வாங்கச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு மாணவர்களும் நேற்று (08) மகாவலி ஆற்றிலுள்ள பாறைகள் மீது இருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

அப்போது, மீனவர் இரண்டு மாணவர்களையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தாலும், அவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்று மீனவருக்கு பதில் அளித்துள்ளனர்.

மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தென்னகும்பும்புர பாலத்திற்கு அருகிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியிலும் காவல்துறை மற்றும் கடற்படை டைவர்ஸ் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், மாணவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்..!

0

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு:

அமைச்சரவை அமைச்சர்கள்

பிமல் நிரோஷன் ரத்நாயக்க
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

அனுர கருணாதிலக
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

எச்.எம். சுசில் ரணசிங்க
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

அனில் ஜெயந்த பெர்னாண்டோ
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

டி.பி. சரத்
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

எம்.எம். முகமது முனீர்
மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

எரங்க குணசேகர
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

முதித ஹன்சக விஜயமுனி
சுகாதார பிரதி அமைச்சர்

அரவிந்த செனரத் விதாரண
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

எச்.எம். தினிது சமன் குமார
இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

யு.டி. நிஷாந்த ஜெயவீர
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌசல்யா அரியரத்ன
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

ஈ.எம். ஐ. எம். அர்காம்
எரிசக்தி பிரதி அமைச்சர்

பேசாலையில் காற்றாலை அமைக்க மணல் ஆய்வுக்கு வந்த குழு; மக்களால் விரட்டியடிப்பு..!

0

மன்னார் – பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயற்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறியது.

பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காற்றாலை திட்டத்தை செயற்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!