Thursday, July 31, 2025
Huis Blog Bladsy 60

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது..!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச (இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நுவன் போபகே

0

தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி வழங்கியபடி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், அது தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் “மக்கள் பேரவைக்கான இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சட்டத்தரணி நுவன் போபகே இது குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, மாற்று சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி, அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறை செய்யும் வரலாற்றில், இவ்வாறான சட்டங்களை கொண்டுவருவது அந்த ஒடுக்குமுறையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் செயலாக இருக்கிறது.

மேலும், ஜனநாயகம் குறித்த தெளிவான நிலைப்பாட்டில் இல்லாது, பொருளாதாரம் தொடர்பாக கடந்த காலங்களில் அரசாங்கம் தெளிவான புரிந்துணர்வு இல்லாமையால் நாட்டு மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீனா விஜயத்தின் போது எட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் அடிப்படையில், அந்த நாடுகளின் அதிகார நோக்கங்களுக்காக மக்களின் வளங்களை விற்கும் முறையும் அதே முறையில் செயற்படுத்தப்படுகிறது.

அதன்படி, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்றும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ முன்வைக்கப்படவில்லை என்பதுடன், மேலும் இந்த விடயத்தில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அரசாங்கம் பல்வேறு பிரச்சார திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. எனத் தெரிவித்தார்.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி..!

0

2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை மீளாய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பரீட்சார்த்திக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமாயின் பரீட்சைத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 மற்றும் 0112784208, 0112784537 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(23) மாலை வெளியாகின.

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 323,900 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களில் 51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

வவுனியாவில் மாமியை சுட்டுக்கொலை செய்த 28 வயது நபரை வெட்டிக் கொன்றது யார்?

0

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்த போதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு – ரவிகரன் எம்.பி

0

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 24.01.2025இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றதாகவும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12பேரும், தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் 24.01.2025இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப் படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது பேசப்பட்டது.

இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

(விஜயரத்தினம் சரவணன்)

சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை..!

0

சட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

2025-01-21ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தேன்.

அன்றைய தினம் விசாரணைக்கு சமூகம் அளிக்க முடியாதற்கான காரணத்தை தெரிவித்து குறித்த விசாரணையை 2025-01-23ஆம் திகதிக்கு மாற்றித் தருமாறு என்னால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தேன்.

உப பொலிஸ் பரிசோதகர் டில்ரங்காகுறித்த விசாரணையை முன்னெடுத்த நிலையில் எனது வாக்குமூலத்தை தமிழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி பதிவு செய்தார்.

2023.09.17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் 16 மாதங்கள் கடந்து குறித்த விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு எனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபனின் அரசியலை முன்னெடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பணியாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக எனது தரப்பு நியாயத்தை முன் வைத்திருந்தேன்.

“எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும் திலீபனும் காவி நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன். இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்.” என்பதை நான் பதிவு செய்தேன்.

யாழில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்; 52 வயதான ஆசிரியர் கைது..!

0

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார் , மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு; ஊடகத் தொழிற் சங்கம் கண்டனம்..!

0

ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளனம் (FMETU) கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை தொழில் சங்க சம்மேளத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல் துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகவியலாளர் தற்போது நாட்டுக்குள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஊடக சுதந்திரத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களையும் வழக்கு விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளதாகவும் உடனடியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

முல்லை – வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 22.01.2025இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் விமல் ரத்நாயக்க இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், குறித்த கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும், சகபாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக் காண்பித்திருந்தார்.

அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர்மாதம் 04ஆம் திகதி நாடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே ஜனவரி.22 இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல்ரத்நாயக்க மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற சந்திப்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் தமது தொடர்ச்சியான கடும் பிரயர்தனத்திற்கு பலன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும், கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

விஜயரத்தினம் சரவணன்

என் மீதான பயணத் தடை; பின்னணியில் சூழ்ச்சி – விசாரணை நடத்துமாறு சிறீதரன் MP கோரிக்கை

0

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறீதரன்,

மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறிய முடியும்.

ஆனால் சுமந்திரனை நான் சென்னையில் கண்ட போதும் அவர் என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.

இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான கருதுகிறேன்.

நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய முடியும். எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!