Saturday, March 14, 2026
Huis Blog Bladsy 59

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு..!

0

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை காலை (28.10.2025) நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

தேசிய மட்டத்தில் சாதித்த வீரர்களை ஊக்குவிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் ஏனையோரையும் சாதிக்கத் தூண்ட முடியும். அதேபோல தேசிய மட்டத்தில் சாதிக்கும் மாணவர்களின் பாடசாலைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.



கடந்த சில ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடான கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் என்பது பெருமளவில் இடம்பெறவில்லை.

இந்த விடயத்தில் மாகாண விளையாட்டுத் திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தி, பிரதேச மட்ட கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தந்த மாவட்டச் செயலர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி என்பனவற்றுடன் தமது பணி முடிந்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக பிரதேச விளையாட்டுக் கழகங்களை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துக் கலந்துரையாடுவதுடன் விட்டு விடுகின்றனர்.

அந்தக் கழகங்களை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் செயலாற்றுவதில்லை. விளையாட்டு உத்தியோகத்தர்கள் களத்தில் எப்படி பணியாற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதுடன் அவர்களின் வினைத்திறனின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என ஆளுநர் குறிப்பிட்டார்.

தேசிய மட்டப் போட்டிகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்து வசதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மாகாண அமைச்சுக்களிலுள்ள பேருந்துகளை அவற்றுக்குப் பயன்படுத்துமாறு ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு பாடசாலையைத் தெரிவு செய்து அங்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.



ஏற்கனவே வலய ரீதியான ஒவ்வொரு பாடசாலை மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை மாகாண நிதியில் புனரமைப்புச் செய்து பராமரிப்பதற்கான ஒழுங்குகள் திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை மாகாண மட்ட போட்டிகள் முடிவடைந்த பின்னரே தேசிய மட்டத்துக்கான வீரர்களை அடையாளப்படுத்தி தயார் படுத்தல்கள் நடைபெறுவதால் அவர்களுக்குரிய போதுமான பயிற்சிகள் வழங்கப்படாமல் தேசிய ரீதியில் சாதிக்க முடிவதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் கோட்ட மட்ட போட்டி முடிவுகளின் அடிப்படையில் தேசியத்துக்கு தகுதி பெறக் கூடியவர்கள் எனக் கருதும் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு தொடர் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்;டச்சத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான கோரிக்கையும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

பாடசாலைகளில் விளையாட்டு வாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும், பாடசாலைகளின் மைதானத் துப்புரவு வேலைத்திட்டத்தை மாகாண ரீதியில் ஒரே காலப் பகுதியில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் போசாக்கற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றமை தடை செய்யும் சுற்றறிக்கையை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

இதேநேரம், முதல்தர அணிகளை மாத்திரம் வளர்த்தெடுக்காமல் இரண்டாம் நிலை அணிகளை வளர்த்தெடுப்பதற்கான யோசனையும் விளையாட்டு உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக அதிகளவான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.

பாடசாலைகளில் சிறப்பாகச் செயற்படும் விளையாட்டு வீரர்களை தொடர் பயிற்சிக்கு அனுமதிப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப்பட்டது. அந்த மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களால் இவ்வாறு தடை ஏற்படுத்தப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டது.

விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களை குழுவாக்கி அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதன் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.



மேலும், பாடசாலைகளிலுள்ள விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஆண்டுக்கான விளையாட்டு நாட்காட்டியை அனைவரும் இணைந்து தயாரிப்பதன் ஊடாக பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும் என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைக்குமாறும் மாகாணப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விளையாட்டுத்துறை மாகாணப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொழும்பு 7 இல் நான்கு புதிய உயர் நீதிமன்ற வளாகங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்..!

0

கொழும்பு 7 இல் உடனடியாக நான்கு புதிய உயர் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தின் (2025–2029) கீழ் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் அதன் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஆதரவளிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.



பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக அமைச்சகம் அரசுக்குச் சொந்தமான பல கட்டிடங்களை நீதி அமைச்சகத்திற்கு மாற்றும் என்று அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.



புதிய நீதிமன்றங்களுக்காக நியமிக்கப்பட்ட கட்டிடங்கள் எண் B 88, கிரிகோரி வீதி, கொழும்பு 07 இல் அமைந்துள்ளன; எண். சி 76, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07; எண். பி 108, விஜேராம வீதி, கொழும்பு 07; மற்றும் எண். பி 12, ஸ்டான்மோர் கிரசென்ட், கொழும்பு 07.

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களை மருத்துவரிடம் ஆஜர்படுத்தல் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பு..!

0

ஒரு நபர் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் உட்கொண்டதாக ஒரு போலீஸ் அதிகாரியால் சந்தேகிக்கப்பட்டால், அத்தகைய நபரை அரசு மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துவது சட்டப்பூர்வமானது என்று மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகள் கூறுகின்றன.



இருப்பினும், அத்தகைய விசாரணையை நடத்தக்கூடிய முறை மற்றும் அவர் போதைப்பொருள் உட்கொண்டதற்கான சான்றாகக் கருதப்படும் மருந்துகளின் அளவையோ தீர்மானிக்க விதிகள் வெளியிடப்படவில்லை.

எனவே, மோட்டார் வாகனச் சட்டத்தின் (203 அதிகாரசபை) விதிகளின் கீழ், 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் மோட்டார் வாகன (மருந்து) ஒழுங்குமுறை, 04-09-2025 தேதியிட்ட 2452/40 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது, இது போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரதிகளை பரிசோதனை செய்ய உதவுகிறது.



அதன்படி, மேற்கூறிய உத்தரவுகளை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் பதில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

யாழ்பாணத்தை அடுத்து வவுனியாவில் வேட்டையை ஆரம்பித்த விசேட பொலிஸ் குழு..!

0

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.



அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்..!

0

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,677 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் 6,296 முறைப்பாடுகளும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத 1,381 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதத்தில் மாத்திரம் 1,176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 49 முறைப்பாடுகள் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புடையவை, 111 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர் முறைமை தொடர்பாகவும், 203 முறைப்பாடுகள் பிச்சை எடுத்தலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய முறைப்பாடுகளில், இளவயது கர்ப்பம் தரித்தல் தொடர்பான 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அது தவிர, சிறுவர்களுக்கு எதிரான இணையத்தள துன்புறுத்தல் தொடர்பான 102 முறைப்பாடுகளும், வீட்டு வன்முறை தொடர்பான 38 முறைப்பாடுகளும், தற்கொலை முயற்சி தொடர்பான 13 முறைப்பாடுகளும், கருக்கலைப்பு தொடர்பான ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.



இந்த வருடத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 83 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் 27 முறைப்பாடுகளும், 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வது தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு; கல்வி அமைச்சின் இறுதி முடிவு..!

0

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தக்கு இந்தத் துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளது என்றும், அமைச்சு அதை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் விளக்கினார்.



தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணி நேரமாக நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின் படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கியக் கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.



தொழிற் சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.

எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்தார்.



தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.

இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.

வடக்கில் இரு வருடத்திற்கு முன்னர் அதிபர் நியமனம் பெற்றவருக்கு ஆசிரியர் இடமாற்றம்..!

0

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு அதிபராக பணியாற்றும் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரின் பெயரே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

”ஏற்கனவே அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.



குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவரின் பெயர் எவ்வாறு ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் உள்ளடக்கப்படும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறி அண்மையில் வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் அனுர அரசாங்கம்..!

0

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேர்தலை நடத்துவதற்கான முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.



குறித்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படாது எனவும் தெரியவருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒழிப்பு போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு தற்போது ஆதரவு கிடைத்துள்ளது.



இந்நிலையில், இவ்விடயமும் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாதீட்டு கூட்டத் தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.



மேலும், தேர்தல் எந்த முறையில் நடத்தப்படும் என்பது தொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

அத்தையின் தங்க நகை மாயம்; பாடசாலை மாணவி, காதலன் உட்பட மூவர் கைது..!

0

ஒரு பெண்ணிடமிருந்து 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது பாடசாலை மாணவி மற்றும் அவரது காதலன் மற்றும் மற்றொரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது கலேட்டுவமுல்ல, கணேமுல்லவைச் சேர்ந்த பாடசாலை மாணவி, அன்னாசிவத்த ராகமையைச் சேர்ந்த அவரது காதலன் மற்றும் மினுவங்கொட,நீல்பனகொடவைச் சேர்ந்த இளம் பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.



சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவி தனது அத்தையின் தங்க நகைகளைத் திருடி, அதை தனது 17 வயது காதலனிடம் கொடுத்து, அதை விற்று அவளுக்கு ஒரு தொலைபேசி வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில், 17 வயதுடைய காதலன் வயது குறைந்தவர் என்பதால், 21 வயது உறவினரான பெண்ணை பயன்படுத்தி தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்.



அவர் மூலம் 1.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து, அதில் ஒரு சிறிய தொகையை செலவழித்து, தனது காதலிக்கு ஒரு தொலைப்பேசியை வாங்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்ததாக காதலன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தங்க நகைகளை விட்டுச் சென்ற இடத்தில் இல்லை என்பதை அறிந்ததும், சிறுமியின் அத்தை காவல்துறையினர் முறைப்பாடு அளித்துள்ளார்.



முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தி, பாடசாலை மாணவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி மறுசீரமைப்பு; ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காத அரசு..!

0

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம் மெளனம் காப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளித்துத் தீர்வு காணுமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



நேற்று (26) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

“தொழிற் சங்கங்கள் இந்த மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியது.



இதன் போது அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டதுபோல் நடித்துவிட்டு, தற்போது 9 மாகாணங்களுக்கும் காண்பிக்கப்பட்ட அதே திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.



புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு (workshops) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியிருந்தாலும், அத்தகைய கட்டணம் எதுவும் இதுவரை செலுத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!