பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான பணிச்சுமை குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை (Module) முறை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த கல்வி மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறுகிறது என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவளை புதிய நடைமுறையில் மாணவர்களுக்கு பயனுள்ள பல விடயங்கள் உள்ள போதும் ஆசிரியர்கள் விடுமுறை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன் பரிகாரக் கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
யாழ், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின்போது, உடமையில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி கோணேஸ்வரன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய என தெரிவித்த பொலிசார் சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக பல பகுதிகளில் போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்ற போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கள் (3) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
lசந்தேகநபரான குறித்த பெண் காரை ஓட்டிச் சென்ற போது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பெண், போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
அதன் போது தான் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் சகோதரி எனவும் கூறியுள்ளார். எனினும் அவர் கூறியதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் நடந்துக் கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த பெண்ணுக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக் குறைவான முறையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சமிஞ்கையை மீறியமை, குற்றவியல் அத்துமீறல் மற்றும் வேறொருவர் போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முன் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கோரிக்கைகள் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
எனினும், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்படவில்லை.
தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவின் சில கிராமங்களுக்கு இ.போ.சபை பேருந்தின் சேவை சீரின்மை தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நடாளுன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனுக்கும் இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளருக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31.10) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே இந்த தர்க்க நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவின் கூமாங்குளம், கள்ளிக்குளம், கந்தபுரம், வேலங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இ.போ.ச பேருந்து சேவை சீராக இடம் பெறுவதில்லை எனவும், இதனால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதில் அளித்த இ.போ.சபை வவுனியா சாலை உதவி முகாமையாளர்,
எமக்கு சாரதிகள், காப்பாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எங்களால் முடிந்தளவு நாம் செயற்படுகின்றோம். இல்லாதவிடத்து நடத்துங்கள் என்றால் எம்மால் எப்படி செயற்பட முடியும். நீங்களே எமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பேருந்து ஏன் வரவில்லை என கேட்கிறீங்கள்.
எங்களது இடத்தில் இருந்து பார்த்தால் எங்கள் நிலை தெரியும். விபத்து நடந்தால் நான் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்போது பேருந்தை அனுப்ப சொன்னால் நான எப்படி அனுப்புவது எனத் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், அரச அதிகாரிகள் கதைக்கும் போது தெளிவாக கதைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை கதைக்கவில்லை. மக்களது பிரச்சனையைத் தான் கதைக்கிறார்.
உங்கள் வேலையை விட்டு போங்கள். நான் இருந்து பார்க்கிறேன். என்ன கதைக்கிறீர்கள். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும். மக்களது முறைப்பாடு வரும் போது உங்களிடம் தான் கேட்க முடியும். வீதியால் செல்பவனிடம் கேட்க முடியுமா. இது உங்களது கடமை. கேட்ட கேள்விக்கு பதில் வழங்குங்கள். சரியான முறையில் பதில் அளிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் போது பதில் அளித்த ஒருங்கிணைப்பு குழுர் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, மக்கள் வரிப்பணத்தில் தான் உத்தியோகத்தர்கள் சம்பளம் பெறுகிறார்கள். எங்களுக்கு தேவைப்பாடுகள் இருக்கிறது.
மக்களது தேவைகள், அபிவிருத்தி தொடர்பில் இங்கு தான் கதைக்க முடியும். இதில் அமைதியாகவும், பொறுமையாகவும் கதைக்க வேண்டும். புத்திசாதுரியகமாக நடக்க வேண்டும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.
இ.போ.சபைக்கு திறைசேரியில் இருந்து பெருமளவான பணத்தை ஒதுக்கீடு செய்கின்றோம். வவுனியா சாலை நட்டத்தில் இயங்குகின்றது. மக்கள் வரிப்பணத்தில் வவுனியா சாலைக்கும் பெருமளவு பணம் சம்பளத்திற்காக வழங்குகின்றோம். சங்கமாக கதைப்பதாக இருந்தால் வெளியில் வந்து அப்படி கதைக்க வேண்டும்.
இங்கு உள்ள பற்றாக்குறை தொடர்பில் எமக்கும் தெரியும். அது தொடர்பில் கதைப்பதானால் வெளியில் தான் கதைக்க வேண்டும். மக்களுக்கான சேவைக்காக தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றோம். அதற்கான சேவைவை உரிய கால அட்டவணை படி நீங்கள் செயற்பட வேண்டும், என்றார்.
அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது.
இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார்.
அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார் படுத்தும் முகமாக யாழ் இந்துக் கல்லூரியின் ஆதரவுடன் அந்த மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழர்களின் அடையாளமான யாழ்.பல்கலைக் கழகத்தில் நேற்றைய தினமும், இன்றைய தினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆனால், குறித்த சம்பவம் தொடர்பில் அங்கிருந்த பொலிஸாரிடமோ, படைத் தரப்பினரிடமோ பரபரப்பு தன்மை அற்று இருந்ததாக ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அத்தோடு, மீட்கப்பட்ட ஆயுதங்கள் 2008 அல்லது 2009 ஆண்டு காலப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கார்த்திகை மாதத்தில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்படுவது வழமை.இந்த நிலையிலே குறித்த சம்பவம் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டதா என்கின்ற கேள்வி எழுகின்றது.
மேலும், பல்கலைக் கழகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி பாகங்கள், வயர்கள், T – 56 ரக துப்பாக்கி போன்றவை புதியது போன்று காணப்படுவதால் அவை நவம்பர் மாத அஞ்சலியை இலக்கு வைத்து அண்மைக் காலங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போதைய விலைத் திருத்த அறிவிப்பின் படி இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது.
நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.