கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இதன் விலை 379,200 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக் கிழமை 410,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்களும் 21 பெண்களும் உள்ளனர். தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். தென் மாகாணம் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது.
இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்படி பாரிய அளவில் போதைப் பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள்.
இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள்.
எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல என்றும் சிறைச்சாலை ஆணையாளர் கூறினார்.
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்ற தீர்மானித்தற்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M .A.சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு தொடர்பில், இன்று மாலை 2மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் நீதிமன்றில் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது .
இதன் அடிப்படையில் 2025.11.10 ஆந்திகதியன்று விசாரணைக்காக திகதியடப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரரவானது இன்றைய தினம் (21.10.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
“வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது ஜனநாயக தேசிய முன்னணியின் மேலதிக ஆசனத்தினால் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி மேயர் பதவி கோரி ஆதரவளித்திருந்தார்.
எனினும் அவர் புதிய எல்லை பிரிப்பின் காரணமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்த நிலையில் மாநகர சபையில் போட்டியிட்டமை அதனூடாக பதவியை பெற்றமை சட்ட விதிகளுக்கு மீறிய செயற்பாடு என மாநகர சபை உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் க. விஜயகுமாரும் சுயேற்சை குழு உறுப்பினர் ஒருவரும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதன் பிரகாரம் கடந்த நான்கு தவணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தினால் மேற்குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ் மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரும் இத்தகைய சிக்கலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறினார்.
மேல் மாகாணத்தில் 4,630, தென் மாகாணத்தில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேல் மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 மற்றும் வடக்கு மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள தேசியப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் மற்றும் 13 ஆண்டு தொடர்ச்சியான பாடங்களுடன், க.பொ.த உயர்தர சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வெற்றிடங்களுக்காக 28.07.2024 முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.
ஆசிரியர் சேவையின் தரம் 3 (ஆ) 1 தரத்தை சேர்ந்த பொறுப்பேற்காத 353 பட்டதாரிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், ஆசிரியர் சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கின் நியமனங்களை வழங்க முன்னர் அது தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு உரிய வெற்றிடங்கள் தொடர்பில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
நேற்று (2) மட்டும் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தியோப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து இடப்பட்டுள்ள பதிவில், முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் தொடர்பில் நடந்ததாகவும், மற்றையது பலவந்தமாக நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலவந்தமாக செய்யப்பட்ட குற்றத்தில் சந்தேகநபர் தாயின் சட்டபூர்வமற்ற கணவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அனைத்து சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் 12,14 மற்றும் 15 ஆகிய வயதுகளில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள போதும், சிலர் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகே பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 06 சம்பவங்கள் ஆனமடுவ, தெபுவன, கம்பளை, பயாகல மற்றும் தமன பொலிஸ் நிலைய பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலிருந்தும் தினமும் பல சம்பவங்கள் பதிவாகி வருவதால், தங்களின் மகள்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ளுமாறு பொலிஸார், பெற்றோர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இளம் வயதிலேயே உணர்ச்சிகளின் அடிப்படையில் கவனக் குறைவாகச் செயல்பட்டால், அவர்கள் ஏதேனும் குற்றத்திற்கு பலியாகி, படிக்கும் மாணவ, மாணவிகளாக பொலிஸ் நிலையம் வந்து சிறை செல்லவும் நேரிடும் என்பதால், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இளைஞர் சமூகமும் செயற்பட வேண்டும் என பொலிஸார், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த வருடத்திற்கு (2026) தரம் ஒன்று மற்றும் தரம் 06 மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்தது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இந்த மாணவர்களுக்கு செயன்முறை புத்தகங்கள் மற்றும் வழிகாட்டல் புத்தகங்கள் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தரங்களுக்கான மாணவர்களின் புத்தகப்பைகளின் நிறை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வடக்குத் தவிர்ந்த கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்திற்கு பதில் பாடசாலையாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடக்கு மாகாண இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டு சபை ஆகியவற்றில் ஏற்பட்ட குழப்பகரமான தகவல்கள் குறித்து ஆளுநரால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரப்பட்டது.
அதற்கமைய மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன், வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளும் – ஆசிரியரைப் பழிவாங்கி வரும் முயற்சிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில்,
“மாகாண கல்வி திணைக்களத்தினர் தமது மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே, திருபுபடுத்தப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டவிரோதமான, அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் அனைத்தையும் மறைத்து, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, எமது இந்த ஊடக அறிக்கை மூலம் ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளரின் பொய்யானதும் புனையப்பட்டதுமான அறிக்கையின் உண்மை நிலையையும், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் என்பதற்காக குறித்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டுள்ள விடயத்தையும் அறியத் தருகின்றோம்.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக வட மாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.