ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் வெள்ளிக் கிழமை (17) இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
யாழில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக “முழு நாடுமே ஒன்றாக” என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில் யாழ் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்.
இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசோகரிங்களுக்கு உள்ளாகினர்.
யாழ். மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பேருந்து பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பேருந்துகளை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பேருந்துகளை விசேட கட்டணங்களின் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.
எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்த போதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு குறித்துப் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, சனிக்கிழமை (17) முற்பகல் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.
விஞ்ஞானப் பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.
ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன.
எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.
பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காகச் சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாகத் தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக அசாதாரண மற்றும் முழு அதிகாரம் கொண்டவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததையிட்டு எரிக் மேயர் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயர் மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினராக உள்ளார். தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் மூத்த பணியக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியம் முழுவதும் அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளையும் அவதானிக்கின்றார்.
அவரது மிகச் சமீபத்திய பணிகளில் நோர்வேக்கான அமெரிக்க மிஷனில் சார்ஜ் டி’அஃபைர்ஸ், ஏ.ஐ. மற்றும் வடக்கு மாசிடோனியாவின் ஸ்கோப்ஜியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராக பணியாற்றுவது ஆகியவை அடங்கும்.
கஜகஸ்தானின் அல்மாட்டியில் அமெரிக்க தூதரக ஜெனரலாகவும் பணியாற்றினார், மத்திய ஆசியாவில் உள்ள ஒரே அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள தெற்கு கஜகஸ்தானில் நிறுவனங்களுக்கு இடையேயான நடவடிக்கைகளை வழிநடத்தி அமெரிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
வாஷிங்டனில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தில் சிறப்பு உதவியாளராகவும் மூத்த ஆலோசகராகவும் மேயர் பணியாற்றியுள்ளார், அங்கு அவர் பிராந்தியம் முழுவதும் கொள்கையை ஒருங்கிணைத்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப் புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 16.01.2026 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன.
மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கலாசார பொங்கல் விழா இன்று (16.01.2026) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடுகள் இடம்பெற்றதுடன் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. தொடர்ந்து கலாசார நிகழ்வுகளும், அதிதிகள் வாழ்த்துரையும் இடம்பெற்றது. மேலும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பணப் பரிசில்களும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் திட்டமிட்டும், பரவலாகவும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு உடனடி நீதியும், பொறுப்புக் கூறலும் வழங்கப்படுவதுடன், தமக்கு தொடர்ச்சியான உளவியல் மற்றும் சமூக ஆதரவும் தேவையென்றும் கூறுகின்றார்கள்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP), பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து, வெளிநாடுகளுக்குத் தப்பி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் தாம் நடத்திய கலந்தாய்வின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மையமாகக் கொண்ட இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை ஆராய்கின்றது.
இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும்
“என்னைப் பொறுத்த வரையில், இழப்பீடு என்பது பிரதானமாக உளரீதியான நிவாரணமே ஆகும்-பாதிக்கப்பட்டவர்களை உளரீதியாகவும், சிகிச்சை மூலமாகவும் குணமடைவதற்கு உதவுவதே. இரண்டாவதாக, இந்த அட்டூழியங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுப்புக் கூற வைக்க வேண்டும்” இவ்வாறு பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.
2009இல் முடிவடைந்த ஆயுத மோதலின் போதும், அதற்குப் பின்னரும் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கும் இதர பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகி, உயிர் தப்பிய ஆண்கள், பெண்கள் என ஐம்பது பேரிடம் (ITJP) கலந்தாய்வு நடாத்தியது.
சிறிலங்காவில் போர்நடந்த வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான கலந்தாய்வினை நடாத்துவது பாதுகாப்பானதும் கிடையாது அதற்கு அனுமதி கிடைக்கவும் மாட்டாது என்பதால் இந்த ஆய்வு இலண்டனில் நடாத்தப்பட்டது.
68 பக்கங்களைக் கொண்ட “Opening a Conversation: The Justice and Reparations Needs of Exiled Tamil Survivors of Conflict-related Sexual Violence” என்னும் இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் அவர்களது வாக்கு மூலங்களிலிருந்து சில மேற்கோள்களும் இடம் பெற்றுள்ளன.
இக்கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர் போர் முடிந்த பின், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறிலங்காவில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமக்கு அவசரமான தேவைகள் எவை என்பதை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர்.
முழுமையான உளவள மற்றும் ஆரோக்கிய ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு, சேர்ந்திருக்கும் உணர்வையும் சமூகத்தையும் மீளவும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள், சட்டரீதியான தீர்வுகள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டநடவடிக்கைகள் எடுத்தல் என்பன இதில் அடங்கும்.
மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், ஆரோக்கியமான மனநிலை, தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு” என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.
அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்
பாலியல் வன்முறைகள் தனிநபர்கள் மீதும் பரந்துபட்ட தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தியிருக்கும் நீண்டகாலப் பாதிப்புக்களை இந்த அறிக்கை வெளிப் படுத்துகின்றது. ‘அதன் தாக்கம் உணர்வை மரத்துப்போகச் செய்து விட்டது” என்று ஒருவர் கூறினார்.
“அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்” என இன்னொருவர் தெரிவித்தார். தாம் இலங்கையில் இருந்த போதும் சரி, அல்லது புலம்பெயர்ந்து இருக்கும் போதும் சரி தங்களது வாழ்க்கையில் பயம், களங்கம் மற்றும் தனிமை வாட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் விபரித்தார்கள்.
சீருடை தரித்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பயங்கரக் கனவுகள், திடீர் நினைவுகள் என்பன இப் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்திடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலக்கி வைத்திருக்கின்றன.
மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிணற்றில் குதித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் இல்லை” என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
தன்னுடைய உடலிலுள்ள தழும்புகள் பற்றி தன்னுடைய சிறுமகன் தன்னிடம் கேட்ட போது தனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஒரு தந்தை வேதனையுடன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள், முதலில் தாம் அரசால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தங்களது சொந்தச் சமூகத்தினாலும் பாதிப்படைந்ததாகவும், தமது இரட்டைப் பாதிப்புப் பற்றிக் கூறினார்கள். ‘
இது எங்கள் குடும்பத்திற்கே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது – எங்களது சொந்தக் குடும்பமே எங்களை விமர்சித்து, ஒரங் கட்டுகின்றது, எங்கள் சமூகமும் அதையே செய்கின்றது”. ‘சில நேரங்களில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் பாலியல் தாக்குதல்களுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகின்ற நேரத்தில், தமிழ்ச் சமூகத்திலுள்ள இதர மக்கள் எங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதனையே எமக்கும் செய்ய முயல்கின்றனர்.”
ஆண்களையும் பெண்களையும் கொண்ட இக்குழு, ஒரு உளவளத் துணைச் செயற்பாட்டிற்காக வாரந்தோறும் இலண்டனில் சந்தித்தது – இதற்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை
பிரித்தானியாவிலும் இலங்கையிலும் மருத்துவ மற்றும் உளவளத் துணை உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொண்டதாகத் தெரிவித்தனர். பாலியல் வன்முறையிலிருந்து உயிர் தப்பிவந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்து தங்களது அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியது இதுவே முதன் முறையாகும்.
‘இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்ட பின்னர், பாலியல் வன்முறைகளால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். இது முக்கியமான உண்மை” என இன்னொரு பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இதுவரை பேசப்படாமல் இருந்த இப்படியான விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர், ஆயினும் பேசுவதற்குப் பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உணர்ந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபற்றிக் உரையாடத் தொடங்கினார்கள்.
‘பாதிப்புக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது எங்களால் அதனைச் செய்ய முடியும். இது ஒரு பெரும் சாதனையே,” இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார்.
வெறுமனே பாலியல் வன்முறைகள் மட்டுமன்றி, அதி பயங்கரமான மீறல்களையும் இப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொண்டார்கள். ‘பொதுவாக, அவர்களும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களும் சண்டைக்கு ஆட் சேர்க்கப்பட்டார்கள், திரும்பத் திரும்ப இடம் பெயர்ந்தார்கள், குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் ஆளானார்கள், பட்டினியால் வாடினார்கள், மருத்துவ உதவியின்றித் தவித்தார்கள், தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டார்கள், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதையோ அல்லது விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப் படுவதையோ நேரடியாகக் கண்டார்கள்” இவ்வாறு ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
இழப்பீடுகள் பற்றிய இந்த ஆய்வு பாலியல் வன்முறைகள் பற்றியே குறிப்பாக கவனம் செலுத்திய போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட இனம் என்பதற்காக நடாத்தப்பட்ட பரந்துபட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகவே இதனை நோக்கினர்.
‘தமிழர்களுக்கான தனித்துவமானதும் கலாச்சார ரீதியிலானதுமான அடையாளங்களையும், மனோதிடத்தையும் அழித்தொழிக்கும் நோக்குடன் நடாத்தப்படும் சித்திரவதையின் ஒரு பகுதியாகவும் தனிநபர்களை அவமானப்படுத்துவதற்கும் நன்றாகத் திட்டமிட்டு வேண்டுமேன்றே இத்தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன.”
சடலங்களைக் கூட இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது
தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை தங்களது முழுச் சமூகத்தின் மீதும் ஆழமான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்:
‘பெண்களை, ஏன் பெண்களின் சடலங்களைக் கூட எவ்வாறு சிறிலங்கா இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது என்பது பற்றிய காணொளிகள் வெளிவந்து, எங்கள் சமூகத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என அவர்கள் கூறினார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெரு விருப்பம். “அவ்வாறு நடந்தால் அது எமக்குச் சிறிய ஆத்ம திருப்பதியைக்
கொடுக்கும்”.
2009இல் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து முன்னர் மோதல் நடந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளது. ஐ. நா. அமைப்புக்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் வன்முறைகள் நடாத்தப்படுவதாகத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திய போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதனை மறுப்பதுடன், இக்குற்றங்கள் நடைபெறவில்லை என்றும் சொல்லி வருகின்றது.
சர்வதேச சட்டப் பொறுப்புக்களை மீறும் இந்த மறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாரதூரமான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்புத் தொடர்பிலும் சர்வதேச சமூகம் தீர்க்ககரமாகச் செயற்படத் தவறியது தொடர்பிலும் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்.
சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை
‘முகவர் அமைப்பு” தொடர்பிலான விவாதம் அவர்கள் மத்தியில் ஆழமாகப் புதைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, தம்மை விட்டு விலகாத துரோகம் மற்றும் அநீதி உணர்விற்கு ஒரு தீர்வு வேண்டும் கோரிக்கையாக மாறிய காரசாரமானதாக மாறியது.
‘எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இப்போரில் இறந்து போனார்கள். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை.
தற்போது நீங்கள் ‘முகவர் அமைப்புக்கள்” பற்றி எம்மிடம் கதைக்க விரும்புகின்றீர்களா? சர்வதேச சமூகமே எதுவும் செய்யாத போது, எங்களால் எதைத்தான் செய்ய முடியும்?” தாம் அனுபவித்த குற்றச் செயல்களுக்கு நீதி கிடைக்காதது மீண்டும் மீண்டும் பேசுபொருளாக மாறியது:
‘சட்ட முறைமையில் எமக்கான தீர்வு கிடைக்கப் போவது கிடையாது. நாம் ஒருவரைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு முயன்றால்கூட, அவர்கள் இதிலிருந்து தப்புவதற்கு மேலும் பத்து முறைகளைக் கண்டு பிடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில்லை,’ எனப் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களது உள ஆரோக்கியத்திற்கும், கௌரவத்திற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதற்கும் நீதியும் பொறுப்புக் கூறலும் அத்தியாவசியமானவை என்பதை இக் கலந்தாய்வு காட்டுகின்றது.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகரமான சர்வதேச பொறுப்புக் கூறல் கட்டமைப்பும், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய முழுமையான பரிகாரங்களும், நீடித்து நிலைக்கக் கூடிய உளவளத் துணையும் அவசியம் என்பதை இது வலியுறுத்துகின்றது.
சிறிலங்காவில் நடந்துவரும் மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் படியும், தண்டனை இன்மையினையும் மறுதலிப்பினையும் முடிவுக்குக் கொண்டு வரும் படியும், தொடர்ந்து நடைபெற்று வரும் அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் மௌனத்தை உடைக்கும் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் குரல்களை வலுப்படுத்தும் படியும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் உறுப்பு நாடுகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் ITJP அழைப்பு விடுக்கின்றது.
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த யோசனையை “திறமையான மற்றும் மிகவும் அவசியமான ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தெற்காசிய நாடுகளுடன் (உதாரணமாக பாகிஸ்தான்) ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக் கொள்ள முறையான திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்றும், இந்த முன்மொழிவு மிகவும் முற்போக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சமிந்ரனி கிரியெல்ல முன்வைத்தார்.
பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதன் மூலம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பெண்கள் குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைப்பதற்கும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இது ஒரு தீர்வாக அமையும் என்று அவர் வாதிட்டார்.
நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.
பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர்.
பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச் சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder) பிரிவு 300: கொலை முயற்சி (Attempt to Murder)
சாரதி வேண்டுமென்றே பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பாலத்தைக் கடக்க முயன்றதால், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவசியமானவை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.
நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதி தனுஷ்க குமாரசிங்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “சாரதிக்கு எவரையும் கொல்லும் நோக்கம் இருக்கவில்லை” என வாதிட்டு பிணை கோரினர்.
எனினும், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கானது நேற்றைய தினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்ட விரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்ட போது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் நேற்றைய தினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.