Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 8

NPP எம்.பியின் வாகனத்தில் மாடுகளுக்கு புல் விநியோகம்; விசாரணை ஆரம்பம்..!

0

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்கவின் பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது

விலங்குகளுக்கு தேவையான புல் இந்த வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் கோரியுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பேணுமாறு 25 அமைப்புகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை..!

0

உலகளவில் ஊடகவியலாளர்கள பாதுகாக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் (Committee to Protect Journalists) இணைந்து வேறு பல 24 சிவில் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகள், இலங்கையில் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவுடன் சர்வதேச பத்திரிகை நிறுவனம் (International Press Institute), சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட 24 அமைப்புகள், ஊடகச் சுதந்திரத்தை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளன.

சர்வதேச அளவில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளப் பாதுகாக்கும் சட்டங்களுக்கு உடன்படுவதாக இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது என்பதை அவர்கள் ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளனர். மேலும் அந்த உடன்படிக்கை மாத்திரமன்றி நாட்டின் அரசியல் யாப்பிலும் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தலைமையில் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் அறிக்கையில் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னர் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதை முன்னெடுத்து உறுதிபடுத்தப்படும் என கூறியிருந்ததையும் நினைவூட்டியுள்ளனர்.

“நாங்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசிடம் இவ்வாறாக கோரிக்கை வைக்கிறோம்: கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் ஆகியவை தொடர்பில் உடனடியாக மீள் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

அவை பாரபட்சமற்ற முறையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் மேலும் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை இவை சில பல ஊட்கவியலாளர்களின் மரணங்கள், கடத்தல்கள், உடல்ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படாமல், 26 ஆண்டுகள் இடம்பெற்று 2009ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த போர்க் காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள்களையும் உள்ளடக்க வேண்டும்”.

25 அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவ்வகையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், சட்டவிரோத மரணங்களாக இருக்கக்கூடும் வழக்குகளின் விசாரணை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ‘மின்னசோட்டா நெறிமுறைகளின்’ (UNA Minnesota Chapter) அடிப்படையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

“சட்டவிரோதமான படுகொலைகளை காத்திரமான வகையில் தடுப்பது மற்றும் அதை விசாரிப்பது, தன்னிச்சையான, அழித்தொழிக்கும் படுகொலைகளை குறித்த சட்ட நடவடிக்கைகள்’ தொடர்பில் அந்த மின்னசோட்டா நெறிமுறைகளை 20 முக்கிய கோட்பாடுகளை கூறுகிறது. இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

அனைத்து நாடுகளும் அனைவரின் உயிர்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மரணங்களை உறுதியான வகையில் சர்வதேச சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களில் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய கடப்பாடுகளை அந்த மின்னசோட்டா நெறிமுறை வலியுறுத்துகிறது.

“சந்தேகத்திற்குரிய வகையில் இடம்பெற்ற சட்டவிரோதமான அனைத்து படுகொலைகள், இயற்கைக்கு மாறான மரணங்கள் எனக் கருதப்படுபவை போன்றவைகள் மீது உடனடியாக, முழுமையான, பாரபட்சமற்ற முறையிலான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளிக்கும் முறைப்பாடுகளும் அடங்கும். அப்படியான விசாரணைகளை முன்னெடுக்க அரசு உரிய விசாரணை அலுவலகங்கள் மற்றும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அந்த விசாரணையின் நோக்கமானது மரணத்திற்கான காரணம், எப்படி அது நிகழ்ந்தது, எந்த நேரம் அல்லது சமயத்தில் இடம்பெற்றாது, அதற்கு பொறுப்பானவர் யார், அல்லது அந்த மரணம் சம்பவிப்பதற்கு தொடர்ச்சியான மாதிரிகள் அல்லது நடவடிக்கை ஏதாவது இருந்துள்ளதா” போன்றவை ஆராயப்பட வேண்டும் என்று அந்த நெறிமுறைகளில் ‘விசாரணை’ என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வேளையில் அது திறன்பட இருக்க வேண்டுமென்றும் அச்சமயத்தில் சாட்சியம் அளிப்பவர்கள் மற்றும் விசாரணையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்கள் கோரியுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ மற்றும் பிரகீத் எக்நெலிகொட போன்ற ஊடகயவிலாளர்களின் மரணம் தொடர்பில் எவ்வித காத்திரமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிவராம் வழக்கு உட்பட 7 வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்ட அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அவர்கள், அந்த மீள் விசாரணையும் இழுத்தடிக்கப்படாமல், குறித்த காலத்திற்குள்ளும், திறன்படவும் முடிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், ஊடகவியலாளர்கள், குறிப்பாக தமிழர்கள் மீதான துன்புறுத்தல், அச்சுறுத்தல் ஆகியவை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. அவர்கள் நீண்டகாலமாக தமது செய்தி சேகரிப்பு பணியின் போது கண்காணிக்கப்படுவதும், தேவையில்லாத தடைகள் விதிக்கப்படுவதையும் எதிர்கொண்டு வருகிறார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“ஊடகவியலாளர்கள் மீது அவர்கள் பணி தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள குற்ற வழக்குகளை சட்டத்தை நிலைநாட்டு அதிகாரிகள் மீளப்பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் ”பொதுச் சேவை ஊழியர்களை அச்சுறுத்துவதான” குற்றச்சாட்டில் அவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக்கூடாது”.

இந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதியிட்டுள்ள அவர்களின் அறிக்கையில், ஊடகச் சுதந்திரத்திற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் இணையதள பாதுகாப்புச் சட்டமும், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.

“கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளை கடுமையாக நசுக்கும் அந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இணையதளத்தில் வெளியாகும் விடயங்களை கடுமையாக தணிக்கும் செய்யும் ஆணைக்குழுவிற்கு அதி கூடிய அதிகாரங்கள் வழங்கும் நிலையில், அது இரத்து செய்யப்பட வேண்டும்”.

அந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய இணையபாதுகாப்புச் சட்டம் ஒன்று ஏற்படுத்தப்படலாம் என கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், அது இணையவழியாக ஏற்படுத்தும் நியாயமான தீங்குகளை தடுக்க முயன்றாலும், இணையத்தில் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரத்தை நியாயப்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது எனவும் கோரியுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம் ஊடகவியலாளர்களை மாத்திரமன்றி காலவரையின்றி மக்களை தடுத்து வைக்கும் ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஏகமனதாக அந்த 25 அமைப்பினரும் கண்டித்துள்ளனர்.

“ஊடகவியலாளர்களை அவர்களின் பணிக்காக மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி, சிறையில் அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட குற்றங்கள் ஏதாவது இருந்தால் அவை நாட்டில் காணப்படும் குற்றவியல் சட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும்”. நாடாளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தையும் திருத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

அந்த சட்டம் பொது நலனில் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அது குறித்து செய்தி வெளியிடுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்றும், நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க ஊடக அனுமதி அதிகரிக்கப்பட வேண்டும், நல்லுறவு பேணப்படும் வகையில் அது இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புலனாய்வு விசாரணை செய்திகளுக்கு மிகவும் அவசியமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும், அப்படியான அம்சங்கள் அந்த சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை வேண்டுகிறது.

எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு, பெண் இண்டர்நேசனல், சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் ஆகியோரும் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஊடகத்துறை தொடர்பாக சுய தணிக்கை ஆணைக்கழு ஒன்றை ஏற்படுத்த அவர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கவை வேண்டியுள்ளனர். அந்த ஆணைக்குழு ஊடகவியலாளர்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல், அவர்களை குற்றவாளிகள் போன்று சித்தரிக்காமல், ஊடக அறம் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

“அந்த ஆணைக்குழு நேர்மையாகவும் நியாயமான வகையிலும் ஊடகத் துறையிலிருந்து போதிய பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் ஒரு நீதிமன்றத்தில் அதன் முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்”.

ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க, தான் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர் என நிரூபிக்க அவருக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர்கள் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

எதேச்சதிராகப் போக்கில் தமிழக மீனவர்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

0

தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளத் தமிழகம் சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் தமிழக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

”தமிழக மீனவர்களால் ஆந்திரா, கேரளா, குஜராத் அல்லது பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியுமா?. ஆனால், இலங்கை கடல் பரப்பில் மாத்திரம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், எதிர்கால தலைமுறையின் கடல்பரப்பையும் சூறையாடுகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை.

யுத்தத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும்?

ரோலர் படகுகள் மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனையே தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர். ஒருசில மீனவர்கள்தான் இவ்வாறு செயல்படுகின்றனர்.

தமிழக மீனவர்கள் எதேச்சதிரகாரப் போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரிடம் நாம் கோருவது ஒன்றுதான். பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப்படும் ரோலர் படகுகளில் சட்ட விரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முறையை தடை செய்ய வேண்டும்.

இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல் வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்.” என்றார்

இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமான ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் வருடத்தின் இறுதியில் அல்லது 2026ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதே 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்தான்.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அதனை அமுல்படுத்த வேண்டியதில்லை. அது அரசியலமைப்பில் உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் தமக்கான தீர்வாக கருதுவதால் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், எம்மை பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு இதனையும் தாண்டிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வை காண இந்த முறையுடன் மேலும் பல விடயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.” என்றார்.

‘அரசியல் கைதிகள் இல்லை’ என்ற பழைய பல்லவியை பாடாமல் உடனடியாக விடுவியுங்கள்..!

0

‘அரசியல் கைதிகள் இல்லை’ என்ற பழைய பல்லவியை பாடாமல் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜே.வி.பி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்.

அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது.

இது எங்களுக்கு பழகி போன ஒரு பழைய பல்லவி. இன்று புது புரட்சி மாற்றம் செய்ய போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த புரட்சி அரசாங்கமும் அதே அரைத்த மாவையே அரைக்கிறது.

இப்படியான பல பல்லவிகளை கேட்டு, முரண்பட்டு, ஜனநாயக ரீதியாக போராடிய வரலாற்றை கொண்ட எமக்கு, இது பழகி போன ஒரு மேலாதிக்க அரசியல் கருத்து.

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்.

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.

தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலை 25ரூபாவால் குறைத்தால் பாணின் விலை 100 ரூபாய்..!

0

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அந்த அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டது.

டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இன்றைய இராசி பலன்கள் (15.01.2025)

0

மேஷம்

இன்று உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5

ரிஷபம்

இன்று நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்

இன்று எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்

இன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7

சிம்மம்

இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கன்னி

இன்று சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்

இன்று குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்

இன்று பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

தனுசு

இன்று கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்

இன்று உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பிந்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்

இன்று கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்

இன்று வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி; நடந்தது என்ன?

0

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற பாரிய நிதி மோசடி தற்போதய சூழலில் பேசு பொருளாகியுள்ள நிலையில் நடுநிலை தவறாது உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்த வேண்டியது ஊடக தர்மம் என்ற வகையில் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் நீதியான விசாரணை நேரடியாக ஜனாதிபதியால் நடாத்தப்படும் பட்சத்தில் எமக்குத் தெரிந்த உண்மைகளையும் பகிரத் தயாராக இருக்கின்றோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயம் உட்பட அரச திணைக்களங்களில் கடமை புரியும் ஆளணியினரின் சம்பளப் பட்டியல் கணினி மென்பொருள் ஊடாக கணிப்பிடப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.

வவுனியா வடக்கு கல்வி வலய ஆளணியினரின் சம்பளப் பட்டியல் மிகுதி சமப்படாத நிலையில் கணக்குக் கிளையில் பணிபுரிந்த அபிவிருத்தி அலுவலர் ஒருவரால் ஆராயப்பட்ட நிலையில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் அதிகளவு கொடுப்பனவு கணிப்பிடப்பட்டு முன்னர் பணியாற்றிய உத்தியோகஸ்தர் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய சிலரின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

2018ஆம் ஆண்டு வவுனியா வடக்கு கணக்காளர் மாற்றத்தின் பின்னர் கணினி மென்பொருளில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் மோசடியாக கொடுப்பனவு மாற்றம் செய்யப்பட்டு குறித்த உத்தியோகஸ்தர் உட்பட சில அலுவலர்களின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர், 2018ஆம் ஆண்டு தொடக்கம் 16 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்துள்ளார் என்பது வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் கண்டறியப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்களால் மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு உடன் அறிவிக்கப்பட்டது.(November 2020)

இதேவேளை வலயப் பணிப்பாளரின் அறிவித்தலுக்கு அமைய, குறித்த மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வவுனியா வடக்கு கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர் என்பதுடன் குறித்த மாகாண அலுவலர்கள் வருகை தந்த தினத்தில் குறித்த மோசடி செய்த அலுவலர் தான் மோசடி செய்த பணத்தை மீள ஒப்படைப்பதற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

எனினும் குறித்த தினத்தில் வலயத்தின் முழு அதிகாரமும் மாகாண அதிகாரிகளின் கையில் இருந்ததுடன் வருகை தந்த நபர் வாகன தரிப்பிடத்தில் நீண்ட நேரம் தரித்திருந்து பின்னர் வெளியேறிச் சென்றிருந்தார். எனவே குறித்த பணத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்த போதும் மாகாண அதிகாரிகளின் அசமந்தமே குறித்த பண இழப்பிற்குக் கரணமாக அமைந்தது.

இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கம் 7.11.2020 ஆண்டு தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்துடன் ஊடக அறிக்கையையும் விடுத்திருந்தது.

அந்த அறிக்கையில்,

நிதி மோசடியில் ஈடுபட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனை தரும் விடயம் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சந்தேகத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ள நிதிமோசடி தொடர்பாக சம்பந்தப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனையான விடயம் என்பதற்கு அப்பால் பல சந்தேகங்களையும் இவை உருவாக்குகின்றது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வி வலயத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக தன்னைக் காட்டிக் கொண்டு, உயர் அதிகாரிகளை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, தற்போதுள்ள அபாயகரமான கொரோனா சூழ்நிலையில் பலரை கொழும்பிற்கு அழைத்து விசாரிப்பதன் மர்மம் என்ன? குற்றவாளி என கண்டறியப்பட்டவரை கைது செய்து அவரூடாக அனைத்தையும் அறிவதே பிரதானமான விடயம்.

சம்பந்தமில்லாதவர்களை அழைத்து விசாரணை நடாத்தினால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக விசாரணை என்ற போர்வையில் இழுத்தடிப்புகள் மட்டுமே மிஞ்சும்.

ஆகையால் குற்றவாளி என இனங் காணப்பட்டவரை உடன் கைது செய்து உரிய இடத்தில் வைத்தே விசாரணை செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வலய பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் உட்பட வலய குழுவினரே குறித்த மோசடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினர் என்பதே உண்மை.

கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பின்னடைவு..!

0

சமீபத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பின்னடைவைச் சந்தித்துள்ளது, இது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமகி ஜன பலவேகய (SJB) ஆதரவு பெற்ற குழு களனி கூட்டுறவுச் சங்கத்தை வென்றுள்ளது, அதில் 99 உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஆளும் NPP ஆதரவு பெற்ற குழுவினர் 32 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குனகொல பெல்லஸ்ஸ சங்கத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது, அனைத்து 9 இடங்களும் பெரமுன கட்சிக்குச் சென்றன, அதே நேரத்தில் NPP ஆதரவு பெற்ற குழு எந்த இடங்களையும் வெல்லத் தவறியுள்ளது.

இருப்பினும், மஹரவில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தை NPP வெற்றிபெற முடிந்தது, அங்கு 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 89 உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது – எஸ்.எம்.சந்திரசேன

0

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளன.

1 இலட்சத்துக்கு 45 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தொடர்கிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் தான் சில்லறை அரிசி வர்த்தகர்கள் அரிசியை கொள்வனவு செய்ய முன் வருவதில்லை. அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது.

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இம்முறை பொங்கல் பொங்குவதற்கும் பச்சையரிசி இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமாக குறிப்பிடுகிறது.

20 கிலோகிராம் அரிசி இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டதே தவிர பிற நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முறையான திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். கோட்டபய ராஜபக்ஷ சேதன பசளைத் திட்டத்தை அமுல்படுத்தியதை போன்று க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்றார்.

அரசியல் கைதிகளென எவருமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

0

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொது மக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கும் முகமாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.

இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்ட காலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.

அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும் அவர்களின் விபரங்களையும் பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

error: Content is protected !!