Friday, March 6, 2026
Huis Blog Bladsy 102

மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் விடயத்தில் அரசு தோல்வி கண்டுள்ளது..!

0

மித்தெனிய பகுதியில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அனுராதபுரம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் இவ்வருடம் இந்த கொலை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகின்றன. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளூம் சமூகத்தைப் பயமுறுத்தி வருகின்றனர். சட்டத்தின் ஆட்சி இன்று சமூகத்தில் இல்லாத நிலையே காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய வலுவான பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தத் தவறிவிட்டது.

இவ்வாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை நாம் இழக்கும் போது, ​​கொலையாளிகள் மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் மனித உயிர்கள் இழக்கப்படும் போது, ​​தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய அம்சமாக அமைந்து காணப்படும் வாழும் உரிமையை உறுதி செய்யத் தவறிவிட்டது. கொலைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரசாங்கம் பல்வேறு புள்ளி விவரங்களைக் காட்டினாலும், இந்த மனித உயிர்களை வெறும் புள்ளிவிவரங்களுடன் சுருக்கிக் கொள்ள முடியாது. இந்த மனித உயிர்களின் மதிப்பை பணத்தை வைத்தும் அளவிட முடியாது.

கொலைகாரர்களின் அச்சுறுத்தல்களால் முழு சமூகமும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்திடமிருந்து இதற்கான தீர்வுகளும் பதில்களும் தேவை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, ஐஸ் போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக வியாபித்து காணப்படுகின்றது. இளைஞர்கள் மட்டுமல்லாது, பாடசாலை மட்டத்திலும் கூட இந்த போதைப்பொருள் பரவி காணப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு இளம் தலைமுறையினரை இழந்து வருகிறது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். இவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவாலாக அமைந்து காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்புரி சார் விடயங்களில் நடக்கும் வெட்டுக்கள் போலவே மறுபுறம் கொலை கலாச்சாரத்தால் உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்களில், ​புள்ளிவிவரங்களை முன்வைத்து, இவை சாதாரண கொலைகள் என்று அரசாங்கம் பிரஸ்தாபித்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் தரப்பினர் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்தனர்.

மக்களுக்கு இவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தனர். அவர்களால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாது போயுள்ளது. தேசிய பாதுகாப்பு, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாநகர சபை SJB உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்..!

0

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

அந்த மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதில் கட்சி எடுத்த முடிவை மீறியமை காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.என். நுஸ்கியின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு; தவிசாளராக கிருஸ்ணவேணி, உபதவிசாளராக சஞ்சுதன் தேர்வு..!

0

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27 ஜூன் 2025) மாலை நடைபெற்ற தேர்வில், தவிசாளர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தி. கிருஸ்ணவேணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஞானமுத்து அகிலன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

தவிசாளர் தேர்வை இரகசிய வாக்கெடுப்பு மூலமா அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலமா நடத்துவது என ஆணையாளர் கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பைக் கோரினர், ஆனால் ஆணையாளர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால், தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மீதமிருந்த 15 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி, பகிரங்க வாக்கெடுப்பில் கிருஸ்ணவேணி 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 3 வாக்குகள், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகள், தமிழ் மக்கள் கூட்டணியின் 4 வாக்குகள் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் 1 வாக்கு ஆகியவை ஆதரவாக அளிக்கப்பட்டன.

12 வாக்குகள் வெற்றிக்குப் போதுமான நிலையில், 15 வாக்குகளுடன் கிருஸ்ணவேணி தவிசாளரானார்.

உபதவிசாளர் பதவிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் மட்டும் பரிந்துரைக்கப்பட்டதால், அவர் போட்டியின்றி உபதவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திசைகாட்டி எம்.பியின் நித்திரை கலக்கத்தால் கோர விபத்து..!

0

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார செலுத்திய கார் ஹேனகம நகரில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த அவர் மாவனெல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நேற்று (26) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, ஹெம்மாதகம நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்சார விநியோக நிலையத்தின் அதிகாரிகள் சென்று, வீதியில் விழுந்திருந்த மின்கம்பிகளை பாதுகாப்பாக அகற்றி, மின்சாரத்தை மீண்டும் வழங்கியுள்ளனர்.

விபத்தின் போது எயார் பேக் திறந்ததால் நந்த பண்டாரவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார, விபத்து தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:

“நான்கு நாட்களாக ஒரேயடியாக கட்சி மற்றும் மக்களின் பல்வேறு பணிகளுக்காக உழைக்க வேண்டியிருந்தது. எனது கட்சி அலுவலகம் அரநாயக்கவில் உள்ளது. பொதுவாக, அங்கு பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது நள்ளிரவாகிவிடும்.

சாரதி அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அழைத்து வருவதில்லை. 8 கிலோமீட்டர் தூரத்தை ஒவ்வொரு நாளும் நானே தனியாக வாகனத்தை செலுத்தி வீட்டிற்கு செல்வேன்.

இந்த விபத்து நித்திரை வந்ததால் நடந்தது. மோதியபோதுதான் விபத்து நடந்ததை உணர்ந்தேன். ஆனால், அப்போது நான் மிகவும் கடினமான பாதையில் இருந்து வந்திருந்தேன். வீடு தெரியும் நிலையில் தான் இந்த விபத்து நடந்தது.

பொலிஸார் வந்தனர், மின்சார சபையின் பொறுப்பு அதிகாரிகளும் வந்தனர். சேதமடைந்த மின்கம்பத்திற்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டிற்காக மதிப்பீடு செய்யுமாறு கூறினர். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாததால், வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது” என்றார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கழுகுப் பார்வையில் சிக்குவார்களா வடக்கின் ஊழல் மன்னர்கள்?

0

வடக்கு மாகாணத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதுடன் அதன் மூலம் மக்களின் வரிப்பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மக்களால் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உட்பட அரசிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனினும் சிலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ள போதும் தாம் மேலதிகாரிகளால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் எழுத்து மூல முறைப்பாடுகளை வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பொருட் கொள்வனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, ஏனைய கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றில் சிலர் மிக நுணுக்கமான திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி தமது வாகன அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளமை, அதிகார துஸ்பிரயோகம், நிர்வாக துஸ்பிரயோகம், பழிவாங்கல் போன்றன தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் செய்யப்பட்டுள்ள நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கழுகுப் பார்வையில் சிக்குவார்களா வடக்கின் ஊழல் மன்னர்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னாள் அமைச்சர் ராஜித விரைவில் கைதாகும் சாத்தியம் ?

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இ​​லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர் இதன்போது கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தரமற்றவை; திருப்பி அனுப்பப் பரிந்துரை..!

0

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு அடங்கிய 05 கொள்கலன்களை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. குறித்த உப்பு தொகையானது இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட குறிப்பிட்டார். இதற்கமைய குறித்த 05 கொள்கலன்களும் தரமற்றவை என வௌிக் கொணரப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000 கொள்கலன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

செம்மணி புதைகுழியில் இருந்து குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு..!

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவைகள் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளை 45 நாட்கள் முன்னெடுக்க பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நிதியினை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதற்கான நிதி எதிர்வரும் திங்கட் கிழமையே கிடைக்கப்பெறும் எனவும் , 45 நாட்கள் அகழ்வு பணிகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று, பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்..!

0

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் (in front of Sri Lankan High Commission in UK) வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Date : Friday 27/06/2025
Time : 3pm to 6pm
Place : In front of Sri Lanka High Commission,
13 Hyde Park Gardens, Tyburnia, London, UK, W2 2LU

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச் செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப் படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும்.

ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலும் குறுந்தூர பயணிகள் சேவை..!

0

ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றுக்கு என்னால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

குறுந்தூர பேருந்து சேவை இல்லாத காரணத்தால் இப்பகுதி பயணிகள் நீண்டதூர பேருந்துகளை நம்பியுள்ளனர். ஆனால் பல நீண்டதூர பேருந்துகள் இப்பகுதியிலுள்ள பயணிகளை ஏற்றாமல் தவிர்க்கின்றன.

எனவே ஏ-9 வீதியில் சேவையில் ஈடுபடுகின்ற யாழ் – வவுனியா, யாழ் – முல்லைத்தீவு, யாழ் -கிளிநொச்சி, யாழ் – துணுக்காய் வழித்தட பேருந்துகள் அனைத்தும் கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகளை ஏற்றிச் செல்லுதல் கட்டாயம் என கடமையில் இருக்கும் சாரதி, நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றைக் கோரியுள்ளேன், என்று அந்த ஊடக அறிக்கையில் அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!