Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 131

முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியரும் – மாணவியும் வைத்திய சாலையில் அனுமதி..!

0

முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்றைய தினம் (04.03.2025) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பாடசாலைக்கு நேற்றைய தினம் அதே பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அதனை சக மூன்று மாணவிகள் அருந்தியுள்ளதுடன் தண்ணீரை குடித்த மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த விடயம் ஆசிரியர் ஒருவருக்கு தெரியப்படுத்தப் பட்டதனையடுத்து குறித்த மாணவி தண்ணீர் போத்தலை சோதனை செய்து பார்த்த போது போதைபொருள் வாசனை வீசியுள்ளது.

அதனையடுத்து குறித்த மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் முறையிட்டதனை தொடர்ந்து பாடசாலைக்கு விரைந்த தந்தை குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியரும் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் சட்ட விரோத மீன்பிடியை தடுக்க வேண்டும்..!

0

வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன் மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு.

வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடான இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வடக்கில் அதிகளவான கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தெற்கில் உள்ள மீனவர்களை காட்டிலும் வடக்கில் உள்ள மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டப்படுகிறார்கள்.

இந்திய மத்திய அரசிடமும், தமிழ்நாடு அரசிடமும் விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் ‘ படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு வர வேண்டாம்’ என்று பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டது. அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.

மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு எந்த கைத்தொழில்களும் கிடையாது. வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க இடமளிக்க வேண்டாம் என்று இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள். இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது.

இதன்போது எழுந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டடணியின் தலைவர் மனோ கணேசன், உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது, இந்திய பிரதமர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். ஆகவே தயவு செய்து பேச்சுவார்த்தையில் ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துக்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள். யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல உதவிகளை செய்கிறது. வடக்கு மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது.

இந்திய மீனவர்களின் எல்லை மீறல் செயற்பாடு நாளாந்த பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி; காரணத்தை போட்டுடைத்த அர்ச்சுனா..!

0

வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் முன்வைத்த பிரேரனை தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்களை பாதுகாப்போம் என அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டு, நீங்களே ஒரு பாதுகாப்பு பிரேரணையை கொண்டு வந்து வடக்கு கிழக்கில் போதைப்பொருளை ஒழிக்கப்போவதாக கூறுவது மிகவும் கேவலமாக இருப்பாகவும் அரச்சுனா தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின், அந்த நாட்டிலே நீதி, நியாயம் ஒரு போதும் நிலை நாட்டப்படாது என சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் பதவி உயர்வு வழங்காத கேவலமான அரசாங்கத்தில் பங்கு வகித்து கொண்டு எவ்வாறு நீங்கள் இவ்வாறான பிரேரணையை கொண்டு வருவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் பகுதியில் விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற அரச ஊழியருக்கு நேர்ந்த கதி..!

0

விவசாயி ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தரை மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் இன்று புதன்கிழமை (05) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும் அத்துடன் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்று தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை விவசாயிடம் இலஞ்சமாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள (Colombo) இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான இன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விவசாயிடம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50 ஆயிரம் ரூபாவை மீட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகள் பொய்யானவை..!

0

நாட்டிற்கு மோட்டார் வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று சுங்க செய்தித் தொடர்பாளர் சீவலி அருகோட தெரிவித்தார்.

மோட்டார் வாகன இறக்குமதி வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், அதன்படி அனுமதி நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பல மோட்டார் வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, பல வாகனங்களின் அனுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களுக்கான தொடர்புடைய ஆவணங்களை இலங்கை சுங்கத்தில் சமர்ப்பிக்குமாறு வாகன இறக்குமதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, இந்த வாகனங்களின் அனுமதி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் தொடர்புடைய ஆவணங்கள் கிடைத்த பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி மோட்டார் வாகனங்கள் சமீபத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தன. இறக்குமதி செய்யப்படும் இரண்டாவது தொகுதி மோட்டார் வாகனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து நாட்டிற்கு வந்தன.

அதன்படி, நாட்டிற்கு வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், மோட்டார் வாகன இறக்குமதி வழக்கம் போல் தொடர்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், பிப்ரவரி 27, 2025 அன்று, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP) அதன் முதல் வாகன ஏற்றுமதியைப் பெற்றது.

NYK லங்கா (PVT) லிமிடெட் இயக்கும் MV ஜூபிடர் லீடர், துறைமுகத்தை வந்தடைந்தது, ஜப்பானில் இருந்து மொத்தம் 378 வாகனங்களை வெளியேற்றியது, அவற்றில் 196 உள்ளூர் சந்தைக்கானவை. உள்ளூர் சந்தைக்கு வந்த ஜப்பானிய வாகனங்களில் லேண்ட் க்ரூஸர்கள், ஹிலக்ஸ் கேப்கள், பிராடோ SUVகள், டொயோட்டா செடான்கள் மற்றும் சுசுகி ஆல்டோ மினி கார்கள் அடங்கும்.

ஐ.நா.வின் சாட்சியங்களை சேகரிக்கும் வழிமுறைகளை இலங்கை அரசு நிராகரிக்கிறது..!

0

மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்குள் (OHCHR) உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் வழிமுறைகளை நிராகரிப்பதாக இலங்கை திங்களன்று மீண்டும் வலியுறுத்தியது, இது அதன் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, சம்பந்தப்பட்ட நாட்டின் சம்மதம் இல்லாத நாடு சார்ந்த தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“46/1, 51/1, மற்றும் 57/1 தீர்மானங்களையும், இந்தப் பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும் தீர்மானங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் நாங்கள் மீண்டும் நிராகரிப்பதாக வலியுறுத்தினோம்,” என்று அவர் கூறினார்.

எந்தவொரு இறையாண்மை கொண்ட அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாகவும், அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் உறுதிப்பாட்டை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை மிகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

மேலும், ஐ.நா. கடுமையான நிதிக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகி வரும் நேரத்தில் வெளிப்புற பொறிமுறையின் நிதித் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன,

அனைத்து குடிமக்களும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தி, அதன் விளைவாக ஏற்படும் பலன்களை சமூகத்தின் அனைத்து அடுக்குகளும் நியாயமாகப் பெற அனுமதிக்கும் வகையில், பொருளாதார வளர்ச்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக அருணதிலகா தெரிவித்தார்.

“நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் சமூக நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் போன்ற காரணிகளால் நல்லிணக்கம் மேலோங்கும்” என்று தூதர் கூறினார்.

காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ஆகியவற்றின் பணிகள் குறித்து தூதர் கவுன்சிலுக்கு விளக்கினார்.

“படிப்படியான சீர்திருத்தங்களுடன் கூடிய தேசிய உரிமை, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரே நடைமுறை வழி என்ற எங்கள் நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மனித உரிமைகள் கொள்கைகளை தொடர்ந்து சீரற்ற முறையில் பயன்படுத்துவதாக இருப்பதையிட்டு நாங்கள் வருந்துகிறோம் என்றும் தூதர் தெரிவித்தார்.

வவுனியாவில் மாணவர்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்த போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

0

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலகவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான குறித்த இல்லம் மீது திடீர் சுற்றிவைளைப்பை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்

இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதேபகுதியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரனைகளில் குறித்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நடவடிக்கையானது வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயசோமமுனியின் அறிவுறுத்தலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க அவர்களின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, அசங்க, மற்றும் பொலிஸ் கொஸ்தாபில்களான சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க ஆகியோர் இணைந்து செயற்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வந்தி தொடர்பில் தகவல் தெரிவிப்போருக்கு 1.2 மில்லியன் ரூபா பரிசு..!

0

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவிய மற்றும் பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் ஆவார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், குறித்த பெண்ணை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி குறித்த சந்தேகநபர் பற்றிய தகவல்களை வழங்கக் கூடிய தொலைபேசி எண்கள் –

கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் – 071-8591727
கொழும்பு குற்றப்பிரிவு OIC – 071-8591735

தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய புலனாய்வுப் பிரிவு – அமைச்சரவைப் பேச்சாளர்

0

கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய பொலிஸார் புலனாய்வுப் பிரிவுகளை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொலிஸார் முன்னாள் பொலிஸ் மா அதிபரைத் தேடி சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

நிதி மோசடி காரணமாக சேவையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அமைச்சரவையில் -சாணக்கியன் எம்.பி

0

உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது இடம்பெற்ற நிதி மோசடி காரணமாக இடை நிறுத்தப்பட்டவர் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

திரு அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்த போது குறித்த நபரை அழைத்து வந்ததாகவும் பின்னர் உரக் கூட்டுத் தாபனத்தில் இருந்த போதே அது தொடர்பான மோசடியை செய்ததாகவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் அவதூறாகப் பேச விரும்பாத காரணத்தினால் பெயரை வெளியிடவில்லை எனவும் நிதி மோசடி செய்பவர்கள் அமைச்சுப் பதவிகளில் இருக்கும் போது அரசாங்கம் தொடர்பில் தெளிவான சந்தேகம் எழுவது நியாயமானது எனவும் மேலும் சாணக்கியன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!