Wednesday, May 6, 2026
Huis Blog Bladsy 138

வவுனியாவில் நாளை கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு..!

0

இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) மத்தியகுழுக் கூட்டம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வவுனியாவில் நாளை (09) முற்பகல் மத்திய குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டமானது புதிய அலுவலகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழில் பெருமளவான போதைப் பொருளுடன் இளைஞன் கைது..!

0

யாழில் பெருமளவான போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இன்று(08) மானிப்பாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை தொடர்பில் தெரிய வருகையில்,

“வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம் எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் 24ரின் வாசனைத் திரவியம் போன்ற பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.

மேலும், கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பதவி விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும், பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில், வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாக அர்ச்சுனா சுட்டிக் காட்டினார்.

இதன்படி, நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர், தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

மேலும், யாழில் மக்களால் தெரிவு செய்ய்பப்பட்ட சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மறந்து விட்டதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அவர்களையும் கணக்கில் எடுத்தால் 10 வீதம் தாண்டிவிடும் என்றும் சுட்டிக் காட்டினார்.

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்..!

0

சந்தையில் கோழி இறைச்சியின் விலை தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கும்.

அத்துடன் கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் பெண்ணொருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற Youtuber..!

0

யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளர் ஒருவர் இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த யூரியூபர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது யூரியூப் பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார்.

அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது அந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

குறித்த விடயம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

9 மாதங்களாக சம்பளம் இல்லை; இல்மனைட் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

0

திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெராரி ரக வாகன சாரதி அல் ஜசீராவில் மோதி விபத்து – பிமல் ரத்நாயக்க

0

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கி விட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரராரி ரக வாகனத்தை ஓட்டுபவருக்கு போலியான அனுமதிப்பத்திரம் ஒன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க,

“ உண்மையிலேயே, சபாநாயகர் அவர்களே, இன்றைய விவாதத்தை நாம் ஒரு சோகமான செய்தியுடன் ஆரம்பிக்க வேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற ஒரு பயங்கரமான வாகன விபத்து தொடர்பிலான அறிவித்தல் தான் அது. பெரராரி ரக வாகன அனுமதிப்பத்திரம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவில் மோதி நசுங்கி விட்டார். அவருடைய மூளைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, இப்போதெல்லாம் அவர் கண்டவற்றை உளறி வருகிறார்.” எனத் தெரிவித்தார்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பெராரி ரக வாகனத்தின் அனுமதிப் பத்திரம் உடையவர், எல்போர்ட் உள்ளவர்களுடன் பயணிக்க விரும்புவதில்லை” என அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் (06) அவர் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக வீடுகளை பெற்ற வன்னியின் நாயகன்..!

0

இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்திடம் வீடுகளை பெற்ற முன்னாள் 26 அமைச்சர்கள், M. P மார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த போராட்டத்தின் போது வீடுகள் எரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் வியத்புர வீட்டுத் தொகுதியில் வீடுகள் பெறப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

வியட்புர வீர மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

இதன்படி, வியட்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து 26 எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும், சாதாரணத் திட்டத்தைத் தவிர்த்து, எம்.பி.க்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவு 25% ஆகக் குறைக்கப்பட்டு, மீதியை 15 வருடங்களில் செலுத்தும் முறைமை ஏற்படுத்தப்பட்டு வீடுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வீடுகளின் மதிப்பு ஆரம்ப மதிப்பீட்டுத் தொகையையும், தற்போதைய மதிப்பீட்டுத் தொகையையும் சேர்த்து இரண்டாகப் பிரித்து சொத்தின் மதிப்பாகக் கணக்கிடப்பட்ட தொகையைச் செலுத்தி அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

*குலசிங்கம் திலிபன்
*பிரசன்ன ரணதுங்க
* முகம்மது முஸம்மில்
*ஓபநாயக்க நிமல் பியதிஸ்ஸ
*காமினி ஜெயானந்த வலேபொட
*மஹிந்த யாப்பா அபேவர்தன
*காமினி குலவன்ச லொகுகே
*ஆர். எம். குமாரசிறி ரத்நாயக்க
*அஜித் நிஷாந்த ராஜபக்ச
*அமல் மாயாதுன்ன
*சஜித் ஜயதிலக்க
*திஸ்ஸகுட்டி ஆராச்சி
*பிரேம்நாத் சமிந்த டோலவத்த
*புனித்த பண்டார
* லலித் வர்ண குமார்
*அசங்க சமித்தஜீவ நவரத்ன
*எச்.எம்.டி. பண்டார ஹெராத்
*சமரகோன் சந்திர சேனா
*ரம்பத தேவாவின் பிரியமான அசோகர்
*எஸ். எம். எம். முஷாரப்
*பியால் நிஷாந்த டி சில்வா
*சுமித் வீரசிங்க உடுகும்புர
*எஸ்.ஏ. சேமசிங்க
*பி.ஏ.கே. அதுகோரல

முதூர் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனைவி..!

0

திருகோணமலை – முதூர் பொலிசாரினால் தனது கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரன் முனீஸ்வரி என்பவரினால் இன்று (07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது எமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் பொலிசார் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்யது சிறையில் அடைத்ததுடன் இரு தரப்பிலும் சிலரை தேடி வந்தார்கள்.

பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் (07) பாலர் பாடசாலைக்குச் சென்று திரும்பி வரும் வழியில் மூதூர் பொலிசார் எனது கணவரான லிங்கேஸ்வரன் என்பவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

அத்துடன் 30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் ஒரு பக்கச்சார்பாக பொலிசார் நடந்து கொள்கின்றனர்.

எனவே சட்டத்திற்கு முரனாண வகையிலும் அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தாக்குதல் மேற்கொண்டதுடன், பக்கச்சார்பான முறையிலும் நடந்து வருகின்ற பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எனது கணவரின் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு; மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

0

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.

பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டது.

இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிஸிற்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்பின் பிற்பகல் 2 மணியளவில வவுனியா பொலிஸாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிஸார் வரவில்லை.

அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது.

அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிஸார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிஸார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தினர். திடீர் மரண விசாரணை அதிகாரி டா.சுரேந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

பொலிஸார் தாமதமாக வந்தமையால் மாலை 5 மணிக்கே சடலம் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற் கூற்று பரிசோதனைகக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!