Wednesday, October 29, 2025
Huis Blog Bladsy 14

பலஸ்தீன தேசம் ஒருபோதும் உருவாகாது; ஹமாஸ் ஸ்தாபகரின் மகன் பரபரப்புப் பேட்டி..!

0

ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஷேக் ஹஸன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசுப், “பலஸ்தீன தேசம் ஒருபோதும் உருவாகாது” என ஸ்கை நியூஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கம் ஒரு பலஸ்தீன தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், பலஸ்தீன அதிகாரசபை ஊழல் நிறைந்தது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

“பசுமை இளவரசன்” (Green Prince) என அறியப்படும் மொசாப் ஹசன் யூசுப், ஹமாஸ் இயக்கத்தின் எதிர்கால தலைவராகக் கருதப்பட்டவர். ஆனால், 1997 முதல் 2007 வரை, அவர் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு சேவையான ஷின் பெட்-ன் உயர்மட்ட ரகசிய உளவாளியாகச் செயல்பட்டார்.

இந்த கால கட்டத்தில் பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்துள்ளார். இது குறித்த தகவல்களை அவர் தனது சுயசரிதையான ‘ஹமாஸின் மகன்’ (Son of Hamas) என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

யூசுப் தனது பேட்டியில்,

ஹமாஸ் தலைவர்கள் பலஸ்தீன மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், அதிகாரத்தையும் தனிப்பட்ட ஆதாயங்களையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்றும் கூறினார்.

பலஸ்தீன தேசம் என்பது சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான ஒரு அரசியல் கருவி மட்டுமே என்றும், ஹமாஸின் உண்மையான நோக்கம் ஒரு இஸ்லாமிய கலிபாவை நிறுவுவதே என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பலஸ்தீன அதிகாரசபை ஒரு “ஊழல் நிறைந்த மற்றும் தோல்வியடைந்த அமைப்பு” என்றும் அது இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு உளவாளி என்று அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, யூசுப் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். அவருக்கு 2010 இல் அங்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, அவர் பலஸ்தீன அரசியல் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதுடன், இஸ்ரேல்-பலஸ்தீன மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வை ஆதரிப்பவராகவும் மாறியுள்ளார்.

இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை..!

0

அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் தந்தை ஒருவர், Zoom தொழில்நுட்பம் மூலம் இணைந்து கொண்டு, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது..!

0

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்த பரிந்துரை மற்றும் நியமனம் ஆகியவற்றை வலுவற்றதாக்கி தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் மீளப் பெறப்பட்டுள்ளது.

உடவலவே சோம விகாரையின் விகாராதிபதி வேவெல்துவ ஞானபிரபா தேரர் உள்ளிட்ட தரப்பினர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று பிரத நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது.

அப்போது, ​​மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுவை மீளப்பெற அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.

அதன்படி, குறித்த மனுவை மீளப்பெற அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஈழத் தமிழரின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது – சாணக்கியன் MP

0

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஒருவருட காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை.

அண்மையில் யாழிற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கும் காணப்படவில்லை.

இராணுவ முகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வன இலாகா துறையினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழ் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் கடந்த கால அரசாங்கள் நாங்கள் செய்ய மாட்டோம் என வெளிப்படையாகச் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லிச் சொல்லியே ஏமாற்றுகின்றனர்” என்றார்.

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா..!

0

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தையில் ரயிலுடன் விபத்து; கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

0

ஓமந்தையில் நேற்று இரவு (22) ரயில் மோதி ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இரவு 11.15 மணியளவில் வவுனியா -ஓமந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயில் மோதி குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆளுநரின் கூட்டத்தில் ரீசேட் அணிந்து வந்த வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்..!

0

வட மாகாண ஆளுநர் தலைமையில் மத்திய அரசின் பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அவர்கள் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது ரீசேட் அணிந்து கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

ஏலவே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தொடர்பில் பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றமை, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றமை உள்ளிட்ட பல்வேறு முறைபாடுகள் காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தினத்தில் சிவசேனை அமைப்பினரால் அமைச்சுக்கு முன்னால் அமைதி வழி ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பாக தன்னை சந்திக்க வரும் ஆசிரியர்கள் சேலை அணிந்து வராவிட்டால் திருப்பி அனுப்பும் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆடை ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டமை உயரதிகாரிகளை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதா என எண்ணத் தோன்றியுள்ளது.

போதைப் பொருள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு வெகுமதி – காவல்துறை மா அதிபர்

0

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக தொகையான ஐஸ் போதைப்பொருள் தங்காலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களும், விற்பனையாளர்களும், அதன் பின்னணியிலிருந்து செயற்படுவோருக்கு மகிழ்ச்சியடைய முடியாததொரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு எதிராக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளளோம்.

முன்னதாக மாத்தறையில் கைப்பற்றப்பட்ட 394 கிலோகிராம் போதைப்பொருளே இன்றுவரை தரைவழி சோதனையில் சிக்கிய அதிக தொகையான போதைப்பொருளாக இருந்தது.

அதன்பின்னர் முதல் முறையாக தரைவழி சோதனையில் இன்று 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில், எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் அடைக்கலம் வழங்க எந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளிப்பதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெற்றிகரமான போதைப்பொருள் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், போதைப்பொருட்கள் தொடர்பில் பயனுள்ள தகவல்களை வழங்கும் பொது மக்களுக்கு காவல் துறையினால் வெகுமதிகளும் வழங்கப்படும் எனவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி அநுர..!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொள்வார்.

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்..!

0

திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் தனது கணவரின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தங்கள் திருமண வாழ்வில் தெரிந்தே தலையிட்டதாகக் கூறி, பெண் ஒருவர் தனது கணவரின் சக ஊழியரிடம் இருந்து 4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து வழக்குகள் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற நஷ்டஈடு கோரும் தனி உரிமையியல் வழக்கை தனியாகத் தொடரலாம் என்று சட்டத்தில் இடம் இருப்பதால், பாதிக்கப்பட்ட மனைவி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கணவன் அல்லது மனைவியின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் மூன்றாவது நபர் மீது, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி) நஷ்டஈடு கோரி உரிமையியல் வழக்குத் தொடரலாம் எனத் தீர்பளித்துள்ளது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு என்பது குற்றச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. தற்போது, அது குற்றமாகாது என்றாலும், அதுவே தம்பதிகளுக்கு இடையிலான திருமண முறிவுக்கு காரணமாக அமையும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பாதிப்புகளுக்கு இழப்பீடு கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண உறவில் வேண்டுமென்றே, தவறான நோக்குடன் தலையிடும் மூன்றாவது நபருக்கு அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது செயலால் திருமணம் முறிந்தால், நஷ்டஈடு கோருவது செல்லும். அதே சமயம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபட்ட கணவன் அல்லது மனைவியின் செயல்பாடு, எந்தவித வற்புறுத்தலும் இன்றி முற்றிலும் தன்னிச்சையானதாக இருந்தால், மூன்றாவது நபர் மீது நஷ்டஈடு கோர முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்குகளில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை நிரூபிக்க, கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை மனைவி கோரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!