Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 14

யாழிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல்; மக்கள் விசனம்..!

0

யாழில் இருந்து சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோண மலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலேயே சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

”தென்மராட்சியில் குறிப்பாக, மந்துவில், வேம்பிராய் பகுதிகளில் தனியார் ஒருவர் பெருமளவான நிலப்பரப்பினை வாங்கி, தனது காணிக்குள் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

யாழில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை அவரிடம் வாங்கி அவற்றை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.

குறித்த தனிநபர்களின் செயற்பாடுகளினால் அப்பகுதிகளில் பாரிய பள்ளங்கள் தோன்றியுள்ளன. தமது காணிகளில் கனிம வளங்களை அகழ்ந்தவர்கள் தற்போது, அரச காணிகளிலும் தமது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது. இது நீரினை தேக்கி வைக்க உதவுகின்றது. இங்கு மழைநீர் மூலம் ஊடுருவும் முழு நிலத்தடி நீரும் நன்னீராக மாறுகின்றது. கடல் மட்டத்துக்கு கீழே உவர்நீரும் கடல் மட்டத்துக்கு மேலே நன்னீரும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சட்டவிரோதமான முறையில் பெருமளவில் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெறுவதால், நிலத்தடி நீர் உவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரி வந்த நிலையில், கடந்த மே மாதம் 30ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், “சட்டவிரோதமான முறையில் 2 முதல் 3 மீற்றருக்கு மேல் ஆழமாக சுண்ணக்கல் அகழப்பட்டு யாழ் மாவட்டத்தில் இருந்து அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றம் சாட்டி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

அதனை தொடர்ந்து ஜூன் மாதம் குறித்த பகுதிகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழு தலைவரான டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் சுண்ணக்கல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அகழ்வு பணிகளை இடைநிறுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

ஆனாலும் இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால், தமது பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து உண்மை – சட்டத்தரணி நீதிமன்றில் வாதம்

0

யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரரான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் பிரதிவாதி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் பல விடயங்கள் அவதூறாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம்(30) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும் அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனவரி 9 இல் சமர்பிக்கத் தீர்மானம்..!

0

2025 ஆம் ஆண்டு முதல் வாசிப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை 2025 ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று (31) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 25 மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

மேலும், வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழு விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

NPP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் ஒருவர் கைது..!

0

குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயசிரி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான ​போக்குவரத்து வசதிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தாம் அங்கு சென்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிரி பஸ்நாயக்க பின்னர் தெரிவித்திருந்தார்.

எனினும், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை தற்போதைக்கு வழங்கும் ஒப்பந்ததாரரை இரத்துச் செய்து விட்டு தமக்கு நெருக்கமானவர்களுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குமாறு அவர்கள் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அழுத்தம் பிரயோகித்ததாக தெரிவித்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரதேசவாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த நிலையில், பொலிஸார் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக வெளியில் அனுப்பும் நிலையேற்பட்டிருந்தது.

இதன் போது, இருதரப்பிலும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தனது அலுவல்களுக்கு இடையூறு மேற்கொண்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் இன்னும் எட்டுப் பேரைக் கைது செய்யவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் துயரம்; திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

0

யாழில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் கல்வியில் நிலையத்துக்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க் கிழமை யாழ். போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

யாழில் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயர்தர மாணவி உயிரிழப்பு..!

0

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக் கிழமை (30.12.2024) இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுரவின் “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்..!

0

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01.01.2025) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம் பெறவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத் திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (01.01.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.

கொழும்பு பிரதான நீதவானாக தனுஜா லக்மாலி நியமனம்..!

0

கோட்டை நீதவானாகச் செயற்படுகின்ற தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு பிரதான நீதவானாக செயற்பட்ட திலின கமகே மொராட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கல்கிஸ்ஸை நீதவானாகச் செயற்படும் நிலுபுலி லங்கா கோட்டை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மொரட்டுவை மேலதிக நீதவான் சத்துரிக்கா சில்வா கல்கிஸ்ஸை நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலின கமகேயின் சகோதரர் அண்மையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!