Friday, April 17, 2026
Huis Blog Bladsy 33

நிவாரணம் வழங்குவதில் கடும் அரசியல் அழுத்தம்; விசனத்தில் கிராம உத்தியோகத்தர்கள்..!

0

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

நிவாரணப் பணி மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்திவருவதில் அரசியல் தலையீட்டால் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. எனினும் உரிய தரப்பினரிடம் நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை அரசியல் தலையீடுகளால் கிராம உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர் கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற் சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை.

எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் என்றார்.

இன்று மீண்டும் மண்சரிவு; அதிகாலையில் தப்பியோடிய மக்கள்..!

0

டித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பதுளை எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்த போதிலும், பல குடும்பங்கள் அப் பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

யாழில் பேருந்தில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!

0

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

இதன் போது செம்மணிப் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.

இதன் போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும் போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு; இளைஞன் பலி..!

0

கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) மாலை வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பில் படுகாயமடைந்த இளைஞன் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக கட்டானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் பண்டாரவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் குறித்த பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த வெடிப்புச் சம்பவம் நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையொன்றில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கான வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

0

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கால் நடைகளை பராமரிக்கவும், தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

Facebook, WhatsApp, TikTok பயன்படுத்த தடை – அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியது..!

0

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.

அங்கு தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.

இதைத் தடுக்க, ‘இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம் கடந்த வருடம் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது.

16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, ‘டிக்டொக், எக்ஸ், மெட்டா’ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழிநுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரிடர் நிவாரண மோசடி கும்பல்கள் செயல்பாடு; கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்..!

0

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடக தளங்கள் மூலம் பரவி வருவது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் ஆதரவுடன், முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதைப் பொது மக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில் , பொதுமக்கள் இவ்வாறான மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாடு முழுவதுக்கும் சவாலான இந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இத்தகைய செயல்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு வலியுறுத்துகிறது.

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்வு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்..!

0

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், யாழ். பல்கலைக் கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணை வேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் இன்று, 09 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களையும், அளிக்கைகளையும் மதிப்பீடு செய்து தனித்தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.

பீடாதிபதி தெரிவு குறித்து உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவரால் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்ட பீடாதிபதி ஒருவர் மதிப்பீட்டில் கலந்து கொள்ளவில்லை.

உள்வாரி உறுப்பினர்களாக இருந்த போதிலும், துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பித்திருந்ததனால் நான்கு பீடாதிபதிகளும் இம்மதிப்பீட்டில் பங்கு கொள்ளவில்லை. இதனால் வெளிவாரி உறுப்பினர்களின் செல்வாக்கே மதிப்பீட்டில் அதிகமாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி – ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன் மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணை வேந்தராக நியமனம் செய்வார்.

உயர்தரப் பரீட்சை இரண்டாம் கட்டம்; உத்தியோகபூர்வ தீர்மானம் வெளியீடு..!

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம் பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடிகை பாலியல் வழக்கிலிருந்து நடிகர் திலீப் விடுவிப்பு; வழக்கின் பின்னணி என்ன?

0

சுமார் எட்டு வருட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு நடிகை ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி அல்ல என்று கேரள நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்தது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்று முதல் ஆறு பேர் வரை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி, கடத்தல் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளிகள் என்று நீதிபதி கண்டறிந்தார்.

அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, தவறான அடைத்து வைத்தல், அடக்கத்தை சீற்றப்படுத்தும் வகையில் தாக்குதல், கடத்தல், ஆடைகளை களைய முயற்சித்தல் மற்றும் கூட்டுப் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

காலை 11 மணிக்கு எர்ணாகுளம் மாவட்ட மற்றும் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம் வர்கீஸ் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கு, 2017 பெப்ரவரி 17 அன்று கொச்சியில் ஒரு முன்னணி மலையாள நடிகையை அவரது காருக்குள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

இதில் குற்றவியல் சதி, கடத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் பொதுவான நோக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் அடங்கும்.

error: Content is protected !!