Monday, February 23, 2026
Huis Blog Bladsy 48

பொய்யான தகவல்களால் கடும் மன உளைச்சல் – செல்வம் எம்.பி

0

சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தன்மீது சேறுபூசும் வகையில் பொய்யான தகவல்கள் பதிவேற்றப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனூடாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் செயற்பாடுகளை சிறப்புரிமைகள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திலீபன் எம்பி உட்பட முன்னாள் அமைச்சர்கள் பெற்ற இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு..!

0

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக் கொண்ட வன்னி அபிவிருத்தி நாயகன் முன்னாள் எம்பி திலீபன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காகச் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு; எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை..!

0

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு உப குழுவின் இடைக்கால அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதாகவும், அதன்போது அவர்களின் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, ஒட்டுமொத்த அரச சேவையிலும் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியிலான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும்.

அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகளை மிகவும் நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை ஊழியர் நியமனங்களில் தலையிடவில்லை; ரஜீவன் எம்.பி பகிரங்கம்..!

0

யாழ் பல்கலைக் கழகத்தில் (UOJ) நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தலையிடுவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கல்வி அமைச்சின் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், உயர்கல்விக்கான உபகுழு உறுப்பினராகவும், மேலும் யாழ்ப்பாண மாவட்ட கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றேன்.


2025 செப்டம்பர் 12ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வி உபகுழு கூட்டத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் நியமனம் இதுவரை மேற்கொள்ளப்படாததற்கான காரணத்தைக் கேட்டேன்.

மேலும், அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அந்தக் கூட்டத்தில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தரும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்தேன்.

உடனடியாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் கல்வி அமைச்சு சாரா ஆலோசனைக்குழுவிற்கு ஒரு மோஷன் (Motion) எழுதியும் அனுப்பியிருந்தேன்.


உயர்கல்வி உபகுழுவின் தலைவர் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன என்னுடன் கலந்துரையாடி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கான ஆளணி நியமனம் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.

எனவே, கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக மட்டுமே நான் செயற்பட்டு வருகிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

நான் ஒருபோதும் யாழ் பல்கலைக் கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை. மேலும் எந்த நியமனங்களையும் யாருக்காக கோரியதுமில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது.

இச்செய்தி உண்மையை மறைத்து ஒரு பிழையை மூடிமறைக்க திட்டமிட்ட ஒரு குழுவினரால் பரப்பப்பட்ட தவறான தகவல் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்..!

0

கிளிநொச்சி – பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இச் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

0

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக (CIABOC) தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கிலும் சில உயர் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் பாதீடு குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை..!

0

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings), இலங்கையின் புதிய பாதீடு குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்புக்கு உறுதிபூண்ட போதிலும், இந்த பாதீடு நாட்டின் நீண்டகால பொருளாதார வாய்ப்புகளுக்கு கணிசமான அபாயங்களை ஏற்படுத்துவதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு நிதி முன்னேற்றத்தை அடைவதற்கு அத்தியாவசியமான பொது முதலீட்டுக்கான செலவினங்களை அரசாங்கம் கடுமையாகக் குறைத்தமை ஆகும்.


இந்த முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விகித அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப இலக்கை விட கணிசமாக குறைந்து விட்டதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கருதுகிறது.

இந்த செலவினக் குறைப்பு பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆற்றலை பலவீனப்படுத்தக்கூடும் என்றும், எதிர்காலத்தில் நிதி ஒருங்கிணைப்பு சவாலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.


அதேநேரம், அதிக அரசாங்கக் கடன் அளவு தொடர்ந்து நாட்டின் பிரதான பலவீனமாகவே இருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே,ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, தற்போதைய நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்காக அத்தியாவசிய பொது முதலீடுகளைக் குறைப்பது, இறுதியில் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக அமையலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

நண்பியை நம்பி ஏமாந்த யுவதியின் விபரீத முடிவு; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

0

கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற் சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத தாதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி குறித்த யுவதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், வீட்டில் இருந்த அவரது தாயும் தம்பியும் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தனது மகள் ஒரு நண்பரின் வேண்டுகோளின் பேரில் ஒன்லைனில் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தனது நண்பிக்கு வழங்கியதாக உயிரிழந்த தாதியின் தாயார் சுனிதா தெரிவித்துள்ளார்.

தோழி கடனை செலுத்தாமையினால் அதற்கான வட்டி 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடன் கொடுத்த நபர் தனது மகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துமாறும் இல்லை என்றால் பொலிஸாரை அழைத்து வருவதாக அச்சுறுத்து வந்துள்ளார்.


குறித்த நபரின் துன்புறுத்தல் தாங்க முடியவில்லையாமலேயே மகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இவ்வாறான இணையம் ஊடாக முறையற்ற வகையில் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நிறுவனங்களால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளான பலர் ஏற்கனவே உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்..!

0

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர், பலாங்கொடை சமனலவெவ – சீலகம பகுதியில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி இரவு, மதுபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.


அதன் போது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் சந்தேகநபரின் மகள் பரீட்சை அனுமதி அட்டை, சீருடை மற்றும் சில புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு தாயுடன் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர் அன்றிரவு வீட்டிற்கு வந்து தீ வைத்ததால், வீட்டின் ஒரு பகுதி எரிந்ததுடன், அந்தச் சிறுமியின் மீதமிருந்த அனைத்துப் புத்தகங்களும், உடைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


ஆரம்பத்தில், தனது வீட்டிற்கு வேறு யாரோ தீ வைத்ததாகச் சந்தேகநபர் கூறிய போதிலும், பொலிஸாரின் தொடர் விசாரணையில், தானே தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வீடு தீக்கிரையாகி, புத்தகங்கள் அனைத்தும் அழிந்தபோதும், அந்தச் சிறுமி மனந்தளராமல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி..!

0

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர் பயம் தாங்க முடியாமல் பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து தரையில் குதித்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

நேற்று மதியம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிக்கொண்டிருந்த பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் 19 வயது மாணவி, கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவரது இரண்டு கால்களும் உடைந்துள்ள நிலையில், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயமாகக் கருதப்படுகிறது.

அவர் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது முறையாகத் தோற்றும் மாணவி என்பது தெரியவந்துள்ளது.

பம்பலப்பிட்டி காவல்துறையினரின் கூற்றுப்படி, உயிரியல் வினாத்தாள் வெளியிடப்படுவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்தது.


மாணவி பரீட்சை அறையில் இருந்த நிலையில் தேர்வை எதிர் கொள்ளும் பயம் காரணமாக மேல் தளத்திலிருந்து குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

error: Content is protected !!