முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காணொளி பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கும் எதிர்கால நீதித்துறை நடைமுறைகளுக்கும் தீங்கு விளைவிப்பதால் இந்த சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
காணொளி பதிவு மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்டதா அல்லது காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதா என்பது விசாரணைகளில் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.
இதேவேளை வடக்கின் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் பழிவாங்கும் நோக்கில் சில உயர் அதிகாரிகளால் இரகசிய ஆவணங்கள் கசியவிடப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொலிஸ் பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் தெரிவித்துள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
அவர் கடந்த 23 ஆம் திகதி விடுமுறையில் சென்றிருந்ததாகவும், விடுமுறையிலிருந்த போது இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் இன்று (28) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இதன்படி குறித்த இருவரும் நாளைய தினம் (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி அதிகாலை நானாட்டான் பிரதேசத்தில், மூவர் இணைந்து மாடொன்றைத் திருடி முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதைக் கண்ட பிரதேசவாசிகள் கூச்சலிட்டதால், முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த முச்சக்கர வண்டியைப் பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் முச்சக்கர வண்டியானது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்த போது, அவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் முச்சக்கர வண்டியிலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது.
அதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதியில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 36 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் அடைக்கக்கூடிய சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 36,000 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சட்டங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சமூக ஆர்வலர்களின் செயற்பாட்டால் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கைகள் கடுமையாகக் கட்டப்பட்டு வரும் நிலையில் இத்தகைய அதிகரிப்பை தவிர்க்க முடியாது.
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை காலை (28.10.2025) நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
தேசிய மட்டத்தில் சாதித்த வீரர்களை ஊக்குவிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் ஏனையோரையும் சாதிக்கத் தூண்ட முடியும். அதேபோல தேசிய மட்டத்தில் சாதிக்கும் மாணவர்களின் பாடசாலைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடான கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் என்பது பெருமளவில் இடம்பெறவில்லை.
இந்த விடயத்தில் மாகாண விளையாட்டுத் திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தி, பிரதேச மட்ட கழகங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தந்த மாவட்டச் செயலர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி என்பனவற்றுடன் தமது பணி முடிந்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக பிரதேச விளையாட்டுக் கழகங்களை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துக் கலந்துரையாடுவதுடன் விட்டு விடுகின்றனர்.
அந்தக் கழகங்களை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில் செயலாற்றுவதில்லை. விளையாட்டு உத்தியோகத்தர்கள் களத்தில் எப்படி பணியாற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குவதுடன் அவர்களின் வினைத்திறனின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என ஆளுநர் குறிப்பிட்டார்.
தேசிய மட்டப் போட்டிகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்து வசதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மாகாண அமைச்சுக்களிலுள்ள பேருந்துகளை அவற்றுக்குப் பயன்படுத்துமாறு ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு பாடசாலையைத் தெரிவு செய்து அங்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஏற்கனவே வலய ரீதியான ஒவ்வொரு பாடசாலை மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை மாகாண நிதியில் புனரமைப்புச் செய்து பராமரிப்பதற்கான ஒழுங்குகள் திட்டமிடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை மாகாண மட்ட போட்டிகள் முடிவடைந்த பின்னரே தேசிய மட்டத்துக்கான வீரர்களை அடையாளப்படுத்தி தயார் படுத்தல்கள் நடைபெறுவதால் அவர்களுக்குரிய போதுமான பயிற்சிகள் வழங்கப்படாமல் தேசிய ரீதியில் சாதிக்க முடிவதில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் கோட்ட மட்ட போட்டி முடிவுகளின் அடிப்படையில் தேசியத்துக்கு தகுதி பெறக் கூடியவர்கள் எனக் கருதும் வீரர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு தொடர் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்;டச்சத்துக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான கோரிக்கையும் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
பாடசாலைகளில் விளையாட்டு வாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும், பாடசாலைகளின் மைதானத் துப்புரவு வேலைத்திட்டத்தை மாகாண ரீதியில் ஒரே காலப் பகுதியில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் போசாக்கற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றமை தடை செய்யும் சுற்றறிக்கையை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.
இதேநேரம், முதல்தர அணிகளை மாத்திரம் வளர்த்தெடுக்காமல் இரண்டாம் நிலை அணிகளை வளர்த்தெடுப்பதற்கான யோசனையும் விளையாட்டு உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்டது. இதன் ஊடாக அதிகளவான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.
பாடசாலைகளில் சிறப்பாகச் செயற்படும் விளையாட்டு வீரர்களை தொடர் பயிற்சிக்கு அனுமதிப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக் காட்டப்பட்டது. அந்த மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களால் இவ்வாறு தடை ஏற்படுத்தப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டது.
விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களை குழுவாக்கி அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதன் ஊடாக இந்தப் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலைகளிலுள்ள விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஆண்டுக்கான விளையாட்டு நாட்காட்டியை அனைவரும் இணைந்து தயாரிப்பதன் ஊடாக பல்வேறு சிரமங்களை தவிர்க்க முடியும் என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைக்குமாறும் மாகாணப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், விளையாட்டுத்துறை மாகாணப் பணிப்பாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பு 7 இல் உடனடியாக நான்கு புதிய உயர் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தின் (2025–2029) கீழ் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் அதன் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஆதரவளிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் முன்மொழிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக அமைச்சகம் அரசுக்குச் சொந்தமான பல கட்டிடங்களை நீதி அமைச்சகத்திற்கு மாற்றும் என்று அவர் அமைச்சரவையில் தெரிவித்தார்.
புதிய நீதிமன்றங்களுக்காக நியமிக்கப்பட்ட கட்டிடங்கள் எண் B 88, கிரிகோரி வீதி, கொழும்பு 07 இல் அமைந்துள்ளன; எண். சி 76, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07; எண். பி 108, விஜேராம வீதி, கொழும்பு 07; மற்றும் எண். பி 12, ஸ்டான்மோர் கிரசென்ட், கொழும்பு 07.
ஒரு நபர் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் உட்கொண்டதாக ஒரு போலீஸ் அதிகாரியால் சந்தேகிக்கப்பட்டால், அத்தகைய நபரை அரசு மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துவது சட்டப்பூர்வமானது என்று மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகள் கூறுகின்றன.
இருப்பினும், அத்தகைய விசாரணையை நடத்தக்கூடிய முறை மற்றும் அவர் போதைப்பொருள் உட்கொண்டதற்கான சான்றாகக் கருதப்படும் மருந்துகளின் அளவையோ தீர்மானிக்க விதிகள் வெளியிடப்படவில்லை.
எனவே, மோட்டார் வாகனச் சட்டத்தின் (203 அதிகாரசபை) விதிகளின் கீழ், 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் மோட்டார் வாகன (மருந்து) ஒழுங்குமுறை, 04-09-2025 தேதியிட்ட 2452/40 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது, இது போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரதிகளை பரிசோதனை செய்ய உதவுகிறது.
அதன்படி, மேற்கூறிய உத்தரவுகளை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் பதில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 192 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,677 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் 6,296 முறைப்பாடுகளும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத 1,381 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாதத்தில் மாத்திரம் 1,176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 49 முறைப்பாடுகள் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புடையவை, 111 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர் முறைமை தொடர்பாகவும், 203 முறைப்பாடுகள் பிச்சை எடுத்தலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துடன் தொடர்பில்லாத ஏனைய முறைப்பாடுகளில், இளவயது கர்ப்பம் தரித்தல் தொடர்பான 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அது தவிர, சிறுவர்களுக்கு எதிரான இணையத்தள துன்புறுத்தல் தொடர்பான 102 முறைப்பாடுகளும், வீட்டு வன்முறை தொடர்பான 38 முறைப்பாடுகளும், தற்கொலை முயற்சி தொடர்பான 13 முறைப்பாடுகளும், கருக்கலைப்பு தொடர்பான ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 83 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது தொடர்பில் 27 முறைப்பாடுகளும், 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்வது தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்கள் அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.