முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையான ரணிலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் ரணில் சார்பில் சட்டத்தரணி ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் முன்னிலையானார்.
அதன் போது ரணிலின் 2023 லண்டன் பயணத்திற்காக 10 பேருக்கு 16.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் முதலில் அதை “தனிப்பட்ட பயணம்” என்று குறிப்பிட்ட ஆவணங்கள் பின்னர் மாற்றப்பட்டதாகவும் ஏஎஸ்ஜி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் விசாரணைகளின் பின்னர் ரணிலை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தபால் தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட மேலதிக வேலை நேரத்தை அதிகரிப்பது மற்றும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
தபால் துறையில் போதுமான மேலதிக நேரம் இல்லாத மற்றும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்த விரும்பாத ஊழியர்கள் வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த கோரிக்கைகள் ஒருபோதும் வழங்கப்படாது என்ற கடுமையான கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ளது என்றும், இந்த நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு விடுமுறையை அங்கீகரிப்பது மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர்அனில் ஜாசிங்க ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் ஊழியர்கள் விடுமுறை எடுப்பதால், அமைச்சின் அவசியமான கடமைகளைத் தொடர்வது கடினமாகி விட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய பொருளாதார நெருக்கடியின் போது, அரசு ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் இந்த சுற்றறிக்கையின்படி இந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வருட விடுப்பு எடுத்து வெளிநாட்டில் பணிபுரிந்தவர்களுக்கு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவிய போது, சுகாதார மற்றும் வெகுசன ஊடகங்களுக்கான அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸ, ஐந்து வருட விடுமுறைக்குப் பிறகு வெளிநாடுகளுக்குச் சென்ற சுகாதாரத் துறை ஊழியர்களை திரும்ப அழைப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், சமீபத்திய பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக அவர்கள் நாடு திரும்புவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டிற்கு வரும் அத்தகைய பணியாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அவர்களின் வேலை வாய்ப்பு வசதிகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சுகாதார ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை ஒரு தன்னிச்சையான மற்றும் குறுகிய பார்வை கொண்ட முடிவு என்று அகில இலங்கை செவிலியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
சுகாதார செயலாளரின் தன்னிச்சையான முடிவு நாட்டில் உள்ள முழு மருத்துவமனை அமைப்பையும், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தையும், நோயாளி பராமரிப்பு சேவைகள் உட்பட அனைத்து சேவைகளையும் மேலும் சீர்குலைக்கும் என்று அதன் தலைவர் ரவீந்திர கஹடவராச்சி கூறினார்.
கடந்த ஆண்டு (2024) 1118 நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாட்டு வேலைக்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் 592தாதிய அதிகாரிகளும், 2024 ஆம் ஆண்டில் 592 தாதியஅதிகாரிகளும் தங்கள் வேலையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு (2024) சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்த 487 தாதிய அதிகாரிகளும், 388 மருத்துவர்களும், தகவல் தெரிவிக்காமல் சேவையை விட்டு வெளியேறிய 217 மருத்துவர்களும், தகவல் தெரிவிக்காமல் சேவையை விட்டு வெளியேறிய 26 சிறப்பு மருத்துவர்களும், விடுப்பில் வெளிநாடு சென்ற 22 சிறப்பு மருத்துவர்களும் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்று(19) விளக்க அறிக்கையை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவிக்கின்றது.
மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக அதன் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சேவைகளை பெறுவதற்காக வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
ஐக்கிய தேசிய தபால் ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலைதந்தி பொது ஊழியர் சங்கம், ஐக்கிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர தபால் சேவைகள் சங்கம் மற்றும் இலங்கை தபால் ஊழியர் முன்னணி உள்ளிட்ட 23 தொழிற் சங்கங்கள் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
பணிப்பகிஷ்கரிப்பினால் தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தொழிற் சங்க நடவடிக்கைகளை கைவிட்டு கலந்துரையாடலுக்கு வருமாறு தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியா வைத்திய சாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே காணாமல் போனவராவார்.
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வசித்து வந்த மேற்படி யுவதி ஒருவர் தொடர் தலைவலி காரணமாக மருந்து எடுப்பதற்காக பேருந்தில் நேற்றைய தினம் (18.08) வவுனியா வைத்திய சாலைக்கு சென்றுள்ளார். குறித்த யுவதி வைத்தியசாலையில் மருந்தும் எடுத்துள்ளார்.
எனினும், யுவதி இன்று (19.08) வரை வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடிய பெற்றோர் இது தொடர்பில் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாடு தொடர்பாக நெளுக்குளம் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கோ அல்லது 0758446312, 0768446683 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்த போதிலும், அண்ணளவாக 40,000 வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் தங்கள் குறைகளை முன்வைத்த “குடிமக்களின் குரல்” நிகழ்ச்சியில் பேசிய சஜித், கடந்த தேர்தலின் போது பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரசாங்கத்தின் கொள்கை ஆவணத்தில் 20,000 ஆசிரியர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் 3,000 பட்டதாரிகள், உள்ளூர் வருவாய் மற்றும் வெளிநாட்டு சேவைகளில் 3,000 பேர் மற்றும் சுற்றுலா மற்றும் தொடர்புடைய தொழில்களில் 9,000 பேர் ஆகியோருக்கான வேலை வாய்ப்புத் திட்டங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
வேலையற்ற பட்டதாரிகள் இப்போது உதவியற்றவர்களாக விடப்பட்டுள்ளனர் என்றும், அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்த சிலருக்கு இளைஞர் நிறுவனங்களில் பணிப்பாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
இலவசக் கல்வியின் மூலம் கல்வி கற்ற பட்டதாரிகளை, உதவித் தொகையின் பயனாளிகளாக இழிவுபடுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார், மேலும், வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் வரை சமகி ஜன பலவேகயவும் அதன் பங்காளர்களும் இணைந்து ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் கூறினார்.
உயர்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் அமைச்சரவைக் குறிப்பை மேற்கோள் காட்டி, அரச துறையில் தற்போது பட்டத் தகுதியுடன் சுமார் 50,000 வெற்றிடங்கள் உள்ளன, ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர் என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 05 இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்த யாழ் . நீதவான் , ஐவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பில் ஐந்து இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐவரையும் யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து ஆலய சூழலில் வன்முறையில் ஈடுபட்ட ஐவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் , ஐவரையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில் பல்டி அடித்தபோது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய நண்பன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து இன்று (18) மதியம் தாளையடி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது தலையில் காயமுற்ற இளைஞரை உடனடியாக நண்பர்கள் மீட்டு உழவு இயந்திரத்தில் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞரின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல் ,மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.
சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.
அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.
மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் கடையடைப்பு அறிவிப்பு தொடர்பில் வவுனியா வர்த்தக சங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஊடகங்கள் முன்னிலையில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
“ஹர்த்தால் நிலவரம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
வர்த்தக சங்கத்தின் போசகரும், ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் அவ்விடத்தில் வருகை தந்து கருத்துக் கூறிய போது தலைவருக்கும் மற்றும் போசகருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்க தலைவர், “போசகர் தேர்தலில் படு தோல்வி அடைந்தவர். அவர் தற்போது இந்த இடத்தில் கூக்குரல் இடுவது எவ்விதத்திலும் நியாமில்லை.
சுமந்திரனை பின்கதவால் கூட்டி கொண்டு வந்தவர் இவர்தான், இவர் தான் சங்கத்தின் போசகர் எனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறி கூறுவது வேடிக்கை. ஆகையால் எமது வர்த்தக சங்க போசகர் என்ற மனநிலையில் இருந்து பேச சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த போசகர் செந்தில்நாதன் மயூரன், “நாங்கள் ஹர்த்தாலுக்கு அறிக்கை விட்டுள்ளோம். சுமந்திரனை நான் தான் வர்த்தக சங்கத்திற்கு கூட்டி வந்தேன், ஊடக அறிக்கை விடுமாறு எந்த தீர்மானமும் சங்கத்தில் எடுக்கவில்லை. ஒரு கட்சியின் பின்னனியில் இயங்குபவரே சங்கத் தலைவர், அவர் தன்னிசையாக தீர்மானம் எடுக்க முடியாது.
இது வர்த்தக சங்கம் என்பது வவுனியா நகரத்திற்குள் உள்ள ஒரு சங்கமே தவிர வவுனியாவுக்கானது அல்ல நெடுங்கேணி, செட்டிகுளம், பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் என பிரதேச ரீதியாக வர்த்தக சங்கங்கள் இருக்கும் போது இது வவுனியா மாவட்டத்திற்கான வர்த்தக சங்கம் என எப்படி இதனைப் பயன்படுத்த முடியும்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.