செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியானது பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தும் என செயற்கை நுண்ணறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
one decision பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
AI தொழில்நுட்பத்தால் ஏற்படவிருக்கும் மிக பெரிய ஆபத்துக்களை மென்பொருள் நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், AI யினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தாது மறைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த 03 வருடங்களில் 20,000 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளை தெளிவுபடுத்தும் வடமேல் மாகாணத்திற்கான கலந்துரையாடல் குருணாகல் மாவட்ட செயலகத்தில் இன்று(30) நடைபெற்றது.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்தும் போதே பிரதமர் இதனை கூறினார். நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6 க்கும் புதிய பாடவிதானங்களை அறிமுகப்படுத்துவதாகவும் இதன்மூலம் புதிய இலக்குகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு ஒன்று 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிலர் சாட்சியமளித்திருந்தனர்.
அத்துடன் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு முன்னிலையாகுமாறு 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
எனினும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிமன்றுக்கு செல்ல முடியவில்லை என்பதனை குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரணைக்குட்படுத்திய மேன்;முறையீட்டு நீதிமன்றம், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கோட்டபய ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து ரிட் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று யசந்த கோதாகொட குமுதினி விக்ரமசிங்க ஷிரான் குணரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டார்
இன்றில் இருந்து நான்கு வாரங்களுக்குள் யாழ் நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து உத்தரவுகளை பெறுமாறு சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
அத்துடன் தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இதனால் குறித்த வழக்கின் விசாரணையை நிறைவுக்கு கொண்டுவருமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் மனுதாரர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போப்பகே இந்த கோரிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
வெற்றிலையை மென்று துப்பிய நபர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த வாரம் (26) குருநாகல் பேருந்து நிலையத்தில் 07 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2025 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.
பொது இடத்தில் மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் வெற்றிலையை மென்று துப்புதல், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் என்பது இலங்கையில் குற்றமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, குழந்தையின் எலும்புக் கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 37 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .
வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.
வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குடியிருப்பு மடத்தடிவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலம் இருப்பது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீட்டின் கீழ்தளத்தில் தனிமையில் இருந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பொலிசார் அதனை உடைத்து உள்ளே சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.
ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.
செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.
கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.
இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.
பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.
ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.
உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.
அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.
அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.
இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
அதன்போது பொதுஜன பெரமுன கட்சி அந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி அது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் நேற்று (28) கருத்து தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஓரிரு தினங்களில் கட்சி கூடி அதற்கான முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,
”தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பைத் தெரிவித்து வரும் கட்சி என்ற வகையில் மேற்படி யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நியமனத்திற்கும், போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கும் தமது கட்சி ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த அனைத்து காரணங்களையும் முன்வைத்து மேற்படி யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக் கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் நடவடிக்கை முறைசட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தை ஓகஸ்ட் 05ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த யோசனை தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடகத்தின் விரிவாக்கமும் அதன் தாக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதோடு, மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளுக்காகவும் பாடுபடுவது இந்தச் சங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.
டிஜிட்டல் ஊடகத்தில் முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ ஈடுபடும் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தச் சங்கம் திறந்திருக்கும்.
எந்தவொரு இன, மத, தேசிய அல்லது புவியியல் பாகுபாடுகளுமின்றி, பொதுவான இலங்கை அடையாளத்தின் கீழ் செயல்படுவது சங்கத்தின் நோக்கமாகும்.
டிஜிட்டல் ஊடகத்திற்கு உள்ள வெளியைப் பாதுகாப்பதோடு, அதை விரிவுபடுத்துவதும், அதற்கு எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்களை ஒருமித்து எதிர்கொள்வதற்கு ஒரு தளமாக மாறுவது எங்களது மற்றொரு எதிர்பார்ப்பாகும்.
டிஜிட்டல் ஊடகத்தின் வளர்ச்சியுடன், அதன் பயன்களைப் பெறும் மக்களுக்கு, சில சமயங்களில் ஊடகத்தின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.
தொழில்முறை ஊடகப் பயன்பாட்டிற்குத் தேவையான நிபந்தனைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் தவறான தகவல் பரப்புதல், மக்களைத் தவறாக வழிநடத்துதல், வெறுப்புணர்வு தூண்டும் தகவல்கள், தனிநபர்களின் மற்றும் நிறுவனங்களின் புகழுக்கு வேண்டுமென்றே இழிவு செய்தல் போன்றவை இதில் அடங்கும்.
எனவே இன்று அறிமுகப்படுத்தப்படும் இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம், தொழில்முறை மற்றும் ஒழுக்கமான ஊடகப் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை குறைப்பதற்கு, ஊடகத் துறையிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.
அத்துடன், இணைய வழி ஊடகம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பிரகடன உரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் பிற ஊடக மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, ஊடகம் சார்ந்த சீர்திருத்தங்கள், கொள்கைகள் மற்றும் சட்டவாக்கங்களுக்கு ஒரு பங்குதாரராக இருப்பது எங்களது நோக்கமாகும்.
செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேசக் குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அகழ்வுப் பணிகளில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இரண்டு சிறிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கைகள் இடம் பெறுகின்ற போதும் நூற்றுக்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்படுகின்ற காரணத்தால் இன்னும் அதிக எண்ணிக்கையில் என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது.
மேலும் என்புத் தொகுதிகள் ஆழமாகப் புதைக்கப்படவில்லை. நில மட்டத்திலிருந்து ஐம்பது சென்ரிமீற்றர் ஆழத்தில் கூட உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றமையைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இங்கு உடல்கள் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய விதமானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. வயது குறைந்தவர்களுடைய என்புத் தொகுதிகளும் கண்டெடுக்கப்படுகின்றன.
மேலும் செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதி மயானமாக இருப்பதனால் ஒரு சில முறையாக புதைக்கப்பட்ட என்புத் தொகுதிகளும் கண்டறியப்படலாம். ஆனால், அவற்றை இலகுவாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.
கொக்குத்தொடுவாய், மன்னார், மாத்தளை போன்ற இடங்களிலும், 1994களுக்குப் பின்னர் தெற்கிலே சில இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுடன் சம்பந்தப்பட்ட அனுபவமுடையவர்கள் இருந்தாலும் கூட மனிதப் புதைகுழியில் இருந்து அகழப்படும் என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையைச் செய்வதற்கான நிபுணத்துவம் இலங்கையில் இல்லை.
உலகில் ஒரு சில பல்கலைக் கழகங்களில் மாத்திரமே அந்தத் தொழில்நுட்பம் உள்ளது. அகழ்ந்தெடுக்கப்படுபவை யாருடைய எச்சங்கள் என்பது அடையாளம் காணப்படுவது மிக முக்கியமானது.
அகழப்படும் என்புத் தொகுதிகளை ஆய்வுக்காக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் சான்றுப் பொருள்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது போன்ற நிபுணத்துவங்கள் கூட சர்வதேச நிபுணர்கள் இடத்தில் இருந்தே பெற வேண்டியனவாக உள்ளன.
ஆகவே, செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே நாட்டில் நடைபெற்ற பலவிதமான சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரும். நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்லுகின்ற அரசு இந்த உண்மைகள் வெளிவருவதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சர்வதேச குற்றச் செயல்களுக்கான சாட்சியங்கள் வெளி வருகின்றன. அரசு நல்லிணக்கத்தை நோக்கி நகர்கின்றோம் எனச் சொல்கின்ற போது, எந்த நல்லிணக்கமும் உணமையின் அடிப்படையிலேயே செய்யப்படலாம். உண்மையை மூடி மறைத்து விட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
எனவே,செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையும் வெளிவருவதற்குச் சகல நடவடிக்கைகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். அதற்கான அனுமதிகளைக் கொடுக்க வேண்டும். இதனைப் பரிசோதிக்கச் சர்வதேச நிபுணர்களை வரவழைத்து பரிசோதனைக்காகச் சர்வதேச நிபுணர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை நாமும் வேறு விதங்களில் செய்து கொண்டிருக்கின்றோம். சர்வதேச நிபுணர்களை வரவழைத்து அவர்களுடைய கையிலே செம்மணி விடயத்தை ஒப்படைக்க வேண்டும். என்புத் தொகுதிகள் பற்றிய பரிசோதனையை மேற்கொண்டு அறிவிக்கும் பொறுப்பு முழுவதும் சுயாதீனமாகச் செயற்படுகின்ற சர்வதேச நிபுணர்களிடத்தே கையளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான நகர்வுகளை வேறு வழிகளிலும் மேற்கொண்டு வருகின்றோம். வரும் நாள்களில் நீதிமன்றம் ஊடாக ஏதாவது கட்டளைகள் பெறப்பட வேண்டிய தேவை ஏற்படின் அந்தக் கருமங்களிலும் ஈடுபடுவோம் என்றார்.