சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஷாங் பிங்னான் (Zhang Bingnan) தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் தொடர்புடைய நடப்பு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த CCCC நிறுவனத்தின் பிரதிநிதிகள்,
ஜனாதிபதியின் தொலைநோக்குக் கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உதவியுள்ளதாகவும், இலங்கையில் மேலும் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளை ஆராயத் தங்களை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
புதுப்பிக்கத்தக்க சக்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
இத்துறை சார்ந்த பிராந்திய மையமாக இலங்கை உருவெடுப்பதற்கும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், தங்களது முதலீட்டுத் திட்டங்களில் 90% ஊழியர்கள் உள்ளூர் மட்டத்திலேயே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இதன் மூலம் இலங்கையர்களுக்குப் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும், தேங்காய் உற்பத்தியை அதிகரித்து நிலையான பயிர்ச் செய்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு தெங்குச் செய்கை நில மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு தேங்காய் விநியோகத்தை உறுதி செய்யவும், சிறு அளவிலான தெங்கு உற்பத்தியாளர்களின் நில உற்பத்தித் திறனை அதிகரிக்க ஊக்குவிக்கவும் இத்திட்டம் இலக்கு வைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் சுமார் 85,000 ஏக்கர் தெங்குச் செய்கை நிலங்களை உள்ளடக்கும் இத்திட்டம், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் அல்லது அதற்கு குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிறு அளவிலான தெங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும் தொகையில் 65% வரை கொடுப்பனவாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச ஊக்கத் தொகைக் விவரம்:
1. உரம் மற்றும் டோலமைட் (Dolomite) இட்டு மூடாக்கிடுதல் (Mulching): ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 700 2. டோலமைட் (Dolomite) மட்டும் இட்டு மூடாக்கிடுதல்: ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 200 3. தென்னந் தோட்டங்களுக்கான நீர்ப்பாசனம்: ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வேய் ஹுவாசியாங் (H.E. Wei Huaxiang), சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியளித்து, தனது பதவியைப் பொறுப்பேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தை வந்தடைந்ததும் தனது கருத்தை வெளியிட்ட அவர்,
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் இந்நியமனம் வழங்கப்பட்டமை தமக்குக் கிடைத்த “பெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்” எனக் குறிப்பிட்டதுடன், இலங்கையின் செழுமையான நாகரிகம், இயற்கை எழில் மற்றும் மக்கள் மீதுள்ள தமது மதிப்பையும் வெளிப்படுத்தினார்.
பண்டைய கடல்சார் வர்த்தகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதை வழியிலான இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட ‘இறப்பர்-அரிசி ஒப்பந்தம்’ (Rubber-Rice Pact) இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு ஒரு முக்கிய சான்றாகும் என்றும்,
இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ‘பட்டுப் பாதை பொருளாதார மண்டலத் திட்டம்’ (Belt and Road Initiative), நீர்த் தொழில்நுட்பம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா-இலங்கை உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழியைக் கொடுத்துள்ளதாகவும்,
“சீனா தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்திகளை ஒருங்கிணைக்கவும், பரஸ்பர வெற்றியை ஊக்குவிக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டுப் பங்காண்மையை ஆழப்படுத்தவும் இலங்கையுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக தூதுவர் வேய் தெரிவித்துள்ளார்.
சீனா-இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்தாகி 75 ஆண்டுகள் நிறைவடைவதையும் எதிர்வரும் ஆண்டு குறிப்பதால், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்றும்,
“இதன் பின்னாலுள்ள மகத்தான கடமையையும் பாரிய பொறுப்பையும் நான் முழுமையாக உணர்ந்துள்ளேன்” எனக் கூறிய தூதுவர் வேய், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இலங்கையிலுள்ள சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தானும் தனது சக அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் உறுதியளித்தார்.
இரு நாடுகளையும் சேர்ந்த பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் பேண விரும்புவதாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
“சீனா-இலங்கை உறவுகளின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாம் கைகோர்த்து அயராது உழைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள பல அரசிற்குச் சொந்தமான பங்களாக்களை 30 ஆண்டு குத்தகை ஒப்பந்தங்களின் கீழ் வர்த்தக ரீதியாக மேம்படுத்தி இயக்குவதற்காக, தனியார் துறையிடமிருந்து முதலீட்டு முன்மொழிவுகளை அரசாங்கம் கோரியுள்ளது.
இந்தச் சொத்துக்களை சுற்றுலா சார்ந்த வர்த்தக நிறுவனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அவற்றின் தகவமைப்பு மறுபயன்பாடு, புனரமைப்பு, மேம்பாடு, செயற்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளது.
மேம்பாட்டிற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள சொத்துக்கள், கொழும்பு 5-இல் உள்ள ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள B13, B14 மற்றும் B20, பேஜெட் வீதியில் உள்ள C61 மற்றும் C62, மற்றும் ஸ்கெல்டன் வீதியில் உள்ள E01 மற்றும் E02 ஆகும்.
முன்மொழியப்பட்ட இடங்கள் சுற்றுலா சார்ந்த சில்லறை விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு அதிகளவில் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைக் காவலர் ஒருவர், 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெஹிவளை, வைத்திய வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து இந்த போதைப்பொருள் தொகுதியுடன் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் ‘வட்ஸ்அப்’ அழைப்பு மூலம் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த போதைப்பொருள் பொட்டலத்தை பொரளை, வனாத்த வீதியில் வைத்து வேறொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர், மற்றைய சந்தேக நபரையும் கைது செய்வதற்காக இரகசிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி, அதிகாரிகளைச் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தினர்.
இதன்போது, சிறைச்சாலையின் விளையாட்டு உடையில் வந்த நபர் ஒருவர், கைது செய்யப்பட்ட முதலாம் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்ள முயன்ற போது, அங்கு மறைந்திருந்த பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறைக்காவலர் கடந்த ஜனவரி மாதம் மெகசின் சிறைச்சாலையில் பணிக்கு இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கின்றது.
யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்தாய்வின் போது, நிலவும் மோசமான சுகாதாரச் சூழல் குறித்தும், அதனைத் தடுப்பதற்கான பல்துறை கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய மட்டத்தில் 1 லட்சம் பேருக்கு 15 பேர் என்ற அளவில் உள்ள இந்நிலை, யாழில் 1 லட்சம் பேருக்கு 30 பேர் எனும் இரு மடங்கு வீதத்தை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக இளைஞர்களும் பெண்களுமே அதிகளவில் இவ்வாறான தவறான முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
மதுப்பழக்கம், குடும்ப வன்முறைகள், உறவுகளுக்கு இடையிலான தொடர்பாடல் இடைவெளி, தனிமை மற்றும் கடுமையான உளவியல் அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இச்சிக்கலை வெறும் சுகாதாரத் துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் கல்வி, நிர்வாகம், பொலிஸ், ஆன்மீகம் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய “மாகாண அளவிலான சமூக இயக்கமாக” மாற்ற வேண்டும்.
இதுவரை பதிவான உயிரிழப்புகள் குறித்த பின்னணியை விரிவாக பகுப்பாய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு திணைக்களங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப் போக்கி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையத்தை உடனடியாக மீளமைக்க வேண்டும்.
மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் அல்லது தனிமையால் தவிப்பவர்கள் உடனடி உளவியல் ஆலோசனை பெற, வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ‘நேயம்’ (021 222 6666) என்ற 24 மணிநேர இலவச அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இங்கு தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் 40%க்கும் அதிகமான அதிபர், ஆசிரியர்கள் கடும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருவதாக அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் வடக்கில் இவ் எண்ணிக்கை இன்னும் அதிக அதிகமாகவே காணப்படுகின்றது என்பதற்கு வடக்கின் கல்வித் துறையினர் மத்தியில் ஏற்பட்டு வரும் திடீர் மரணங்களே சாட்சியாக உள்ளது.
யாழ் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 49-வது நாளில், மேலும் 15 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 11 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
யாழ் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் குழுவினருடன் தடயவியல் பொலிஸார், யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதுவரையிலான அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 539 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 524 தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
மேலும், 516-வது இலக்கமிடப்பட்ட எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் தாயத்து போன்ற ஒரு பொருளும், மணல் குவியலிலிருந்து இலங்கை ஒரு ரூபாய் நாணயமும் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியை இலக்காகக் கொண்டு வெளியான அறிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணி ஜகத் அபேயநாயக்க எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதிலளித்துள்ளது.
இன்று (11) திகதியிட்ட கடிதமொன்றில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நலின் டி சில்வா ஆகியோர், ஜகத் அபேயநாயக்கவின் கடிதம் சங்கம் முறையாகப் பரிசீலிப்பதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் வெளியானமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கக்கூடிய செயற்குழுக் கூட்டத்தில் ஜகத் அபேயநாயக்க கலந்துகொள்ளவில்லை என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியே அடுத்ததாக ஓய்வு பெறவுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பதுடன், அவர் 2026 டிசம்பர் முதலாம் திகதி ஓய்வு பெறவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், இரண்டு பிரதம நீதிபதிகள் உட்பட ஆறு உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் இன்றி ஓய்வு பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவின் காலப்பகுதி காரணமாக, பதவியில் இருக்கும் பிரதம நீதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக பொதுவெளியில் ஊகம் உருவாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தத் திருத்தம் வழக்கத்திற்கு மாறாக விரைவாக முன்னெடுக்கப்படுவதும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தையும் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அரசியலமைப்பு மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், எந்தவொரு நீதிபதிக்கும் எதிரான தீங்கிழைக்கும், அவதூறான அல்லது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்களை ஆதரிக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முறையான விமர்சனம் மற்றும் பொது விவாதத்துக்கும், நீதித்துறையின் தனிப்பட்ட உறுப்பினர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு தமது எதிர்ப்பு, நீதித்துறை சுதந்திரம், அரசியலமைப்புச் செயன்முறைகளின் ஒருமைப்பாடு மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பது போன்ற கொள்கைகளின் அடிப்படையிலானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பிட்ட தனிநபர்களுக்கு சாதகமாக அவை பயன்படுத்தப்படுகின்றன என்ற ஊகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான ஜகத் அபேயநாயக்கவை, நிறுவப்பட்ட நிறுவன நடைமுறைகளின் ஊடாக இந்த விடயம் தொடர்பில் கலந்துகொள்ளுமாறு அழைத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், அவர் எழுப்பிய விடயங்கள் அடுத்த செயற்குழு மற்றும் சட்டத்தரணிகள் மன்றக் கூட்டங்களில் பரிசீலிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா(வயது 14) என்ற மகளையே கடந்த 02 ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
வழமையாக பாடசாலை சென்று வந்து பிற்பகல் 02 மணிக்கு தனியார்கல்வி நிலையம் சென்றுள்ளார்.மாலை ஆறுமணியாகியும் அவர் வராத காரணத்தால் 119 என்ற காவல்துறையின் அவர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்த போதிலும் இன்றுவரை காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளி மாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக் காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 11.08.2026இன்று இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் மீனவர்களால் கையளிக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன்.
இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம் கையளிக்கின்றேன்.
அத்தோடு வெளிமாவட்ட மீனவர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வழங்குகின்றார். அவ்வாறு மீன்பிடிக்கான அனுமதியைப் பெறுபவர்கள் இங்கு வந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முள்ளிவாய்காலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர், சாலைப் பகுதியில் ஐந்து படகுகளை வைத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர். இவ்வாறாகத்தான் எமது முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் ஊடுருவுகின்றன.
இவ்வாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்குகின்ற அனுமதிகளாலேயே, எமது மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே எமது மாவட்டத்தில், வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறே நாம் கோருகின்றாம்.
இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்படையினரும், போலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.