பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள “எல் நினோ” இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் மிகக் கடுமையாகத் தாக்கும் என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கமக்காரர் அமைப்பு மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு ஏற்படப் போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர் கொள்வது தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வல்லிபுரம் வாசுகி, கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
150,000ரூபா பெறுமதியான பசு ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, மாமடுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மேய்ச்சலிற்காக அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கட்டியிருந்த மாட்டை, சந்தேக நபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இறைச்சிக்காக அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றிற்கு சந்தேக நபர்கள் அதனை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட லொறி வண்டியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடநிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில், சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் கேரள கஞ்சா 78 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, குறித்த வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வடலியடைப்பு பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி காலமானர். அவரது பூதவுடல் மறுநாள் 5ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த விளாவெளி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்ய பிரதேச சபையில் விண்ணப்ப படிவம் பெற்று , அதற்கான கட்டணமாக 2ஆயிரம் ரூபாய் செலுத்தி பற்று சீட்டை இந்து மயானத்திற்கு பொறுப்பான உத்தியோகஸ்தரிடம் கையளித்தே தகனம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் , பிரதேச சபையிடம் அனுமதி பெறாமல் , அதற்கான கட்டணத்தையும் செலுத்தாது , பிரதேச சபை உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து , தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச வாசி ஒருவர் , குறித்த இந்து மயானத்தில் உடல் தகனம் செய்தவர்களின் விபரம் தொடர்பிலும் , அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் தொடர்பிலும் தகவல் அறியும் சட்டம் ஊடாக மே மாதம் 15ஆம் திகதி தகவல் கோரியுள்ளார்.
இதனையடுத்து கட்டணம் செலுத்தாது தந்தையின் உடலை தகனம் செய்த உறுப்பினரிடம் பிரதேச சபையினர் கட்டணம் செலுத்த கோரி , உடல் தகனம் செய்து சுமார் 50 நாட்களின் பின்னர் மே மாதம் 25ஆம் திகதி கட்டணத்தை அறவிட்டு அதற்கான பற்று சீட்டை வழங்கியுள்ளனர்.
அதேவேளை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யும் போது, மரண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு , தகனம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று , பூரணப்படுத்தி சமர்பிப்பதுடன் , அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்று சீட்டை பெற்ற பின்னரே உடலை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது குறித்த பிரதேச சபை உறுப்பினர் இவை எவற்றையும் பின்பற்றாது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார்.
இந் நிலையில் குறித்த உறுப்பினர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளமை இதனூடாக வெளிப்பட்டுள்ளதால் , உறுப்பினருக்கு எதிராகவும் , பற்று சீட்டு எதுவும் வழங்காது உடலை தகனம் செய்ய அனுமதித்த உத்தியோகஸ்தர்கள் , 50நாட்கள் கடந்தும் கட்டணம் செலுத்த தவறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக தகவலை பெற்றுக் கொண்ட பிரதேசவாசி கோரியுள்ளார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்காகத், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை (Footwear) வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக தலா 3,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே இம்முறையும் விநியோகம் இடம்பெறும்.
மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊடாக பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படும்.
மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையிலிருந்து நேரடியாகக் காலணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.
இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் (2025/2026) இரு வேறு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் மூலம் 836,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்கள் பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த டித்வா புயலின் அகோரத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட வவுனியாவின் செட்டிகுள கோட்டம் மற்றும் மன்னாரின் நானாட்டான், முசலி கோட்டப் பாடசாலைகள் முழுவதற்கும் இம்முறை விசேட திட்டத்திலாவது பாதணி வவுச்சர்களை வழங்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
யாழ் பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தொடர்பான அவதூறான கூற்றுக்களை பிரசுரித்தனர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேருக்கு எதிராகவும், முகநூல் தளங்கள், வலையொளி தளங்கள், ரிக்ரொக் தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் 20ம் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை எடுத்துக் கொண்ட பருத்தித்துறை நீதிவான் எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதிக்கு நிபந்தனை உடனான கட்டளை ஒன்றை பிறப்பிப்பது தொடர்பிலான தீர்மானத்திற்காக வழக்கை திகதியிட்டார்.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதேவேளை யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கினுடைய தீர்ப்பின் பிரதியையும் இந்த வழக்கில் இணைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாக மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் நடத்தப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை செயல்படுத்த அமெரிக்கா – ஈரான் அதிகாரிகள் சந்திப்பு நடத்த இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதனை ஈரான் மறுத்துள்ளது.
சமீப நாள்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக வெளியான செய்திகளை ஈரான் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் காசிம் கரிபாபாடி மறுத்துள்ளார்.
“தொழில்நுட்ப ரீதியான எந்தச் சந்திப்பையும் இந்த வாரம் நடத்தப்போவதில்லை” என அவர் ஈரான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நாளை (29) கட்டாரில் பேச்சுவார்த்தை நடத்த ஈரானும் அமெரிக்காவும் முடிவு செய்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், வெள்ளை மாளிகையில் இருந்து அதுபற்றி உத்தியோக பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், பாகிஸ்தானுடன் இணைந்து கட்டாரும் மத்தியஸ்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து, 4 நாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டார், நிதி அம்சங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்காவின் தடைகள் காரணமாக முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்கள் கட்டாரில் உள்ளன. இந்த நிதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படு வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இன்று தெரிவித்தார்.
பொது அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வமாக சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நபர்கள், அபராதமின்றி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை (30) முடிவடைகிறது என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கத் தவறுகின்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அறிவிப்புகளும் https://ald.ciaboc.gov.lk/ என்ற இணைய தளத்தின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகித வடிவிலான சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது,
இதனிடையே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொது அதிகாரிகள் மற்றும் ஆண்டு தோறும் சொத்து விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய பிரிவினருக்கு இக்கட்டளை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது
யாழ் – மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன் போது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்களும் இணைந்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் 2026ம் ஆண்டிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டினூடாக குறித்த பாடசாலையில் கழிவு முகாமைத்துவ தொட்டியுடன் பாதுக்காப்புக் கூரை அமைத்தல் மற்றும் கூட்டெரு தயாரித்தலுக்கான தொட்டி அமைத்தல் செயற்திட்டத்திற்காக ரூபா. இரண்டு இலட்சம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்தார்.
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது கல்லூரியின் அதிபருடன் குறித்த வேலைத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியதுடன், பாடசாலையின் தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
யாழ் மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், மாண்புமிகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான 1810ஆம் இலக்க வர்த்தமானி முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.