Sunday, April 26, 2026
Huis Blog

2029ம் ஆண்டிற்குள் வீதி விபத்து மரணங்களை கணிசமாகக் குறைக்க இலக்கு – பிமல்

0

போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2029ம் ஆண்டிற்குள் வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று தெரிவித்தார்.

ஆண்டுதோறும் வீதி விபத்துகளினால் ஏற்படும் 2,700-க்கும் மேற்பட்ட மரணங்களை படிப்படியாகக் குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “சீரற்ற போதைப் பொருள் பரிசோதனையின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்” (Principles and Practice of Random Drug Testing) என்ற ஒரு நாள் விழிப்புணர்வு பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

“போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல பணிகளை முன்னெடுத்துள்ளது. நாம் எவ்வளவுதான் வீதிகளை மேம்படுத்தினாலும், நவீன வாகனங்களை இறக்குமதி செய்தாலும் அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்தினாலும், முறையான பயிற்சியும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் சாலை பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.

ஆண்டுதோறும் இழக்கப்படும் 2,700-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களது இலக்கு 2029ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை பெருமளவு குறைப்பதாகும்,” என்றார்.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, 15%-18% வரையிலான சாரதிகள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், வீதி விபத்துகளில் சுமார் 53% ஓட்டுநர் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஒழுக்கம் மற்றும் பயிற்சி இன்றி போக்குவரத்து பாதுகாப்பை நிலைநாட்ட முடியாது. போக்குவரத்து செயல் திட்டத்தின் (Transport Action Plan) கீழ் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. வெறும் யோசனைகளுடன் நின்று விடாமல், நாங்கள் அவற்றைச் செயற்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டிற்கு ஏற்ற தரமான பேருந்துகள் மற்றும் வாகனங்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரஸ்ட்டுக்கு எதிரான வழக்கை மீள விசாரிக்க உத்தரவு..!

0

நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டது.

வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு இலக்கம் 8 மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி, அந்த வழக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த வழக்கிலும் பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விடயங்களை ஆராயந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வழக்கை எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயித்தார்.

2009 மார்ச் 31ஆம் திகதியில் இருந்து 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 வங்கிக் கணக்குகளில் பேணப்பட்ட 59 மில்லியன் ரூபாவை ஈட்டிய விதத்தை உறுதிப்படுத்தாமை காரணமாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து யோஷித ராஜபக்ஸ மற்றும் அவரது பாட்டியான டேஸி பொரஸ்ட்டுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பிரதிவாதிகள் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பெண்களின் வயிற்றில் பணிஸ் சுவைத்து விளையாட்டு; CID விசாரணை ஆரம்பம்..!

0

சிங்கள கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்குக் கடும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்கே மீது குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ராயல் சிங்களப் புத்தாண்டு விழா’ (Royal Sinhala New Year Festival) என்ற பெயரில் நடைபெற்ற கொண்டாட்டம் தொடர்பாக, ஜோதிட நிபுணர் குழு மற்றும் சிங்களப் பாதுகாப்பு முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

இளம் பெண்கள் தங்கள் அக்குள்களுக்கு அடியில் பிடித்துக் கொண்டிருக்கும் பாட்டில்களிலிருந்து இளைஞர்களை பீர் குடிக்க வைப்பது மற்றும் இளம் பெண்களின் வயிற்றின் மீது வைக்கப்பட்டிருக்கும் பணிஸ்களை இளைஞர்களைச் சாப்பிட வைப்பது போன்ற சமூக ஒழுக்கமற்ற விளையாட்டுகளை ‘தேசிய விளையாட்டுகளாக’ முன்னிறுத்தியதன் மூலம், சிங்கள கலாச்சாரத்திற்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டினர்.

இத்தகைய கண்ணியமற்ற நடவடிக்கைகளைத் தேசிய விளையாட்டுகளாகப் பிரபலப்படுத்த முயலும் அரசு சாரா நிறுவனங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் CID யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவுடன் (UNESCO) இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் படி, இது மிகவும் தீவிரமான ஒரு குற்றமாகும் என்று ஜோதிட நிபுணர் குழுவின் தேசிய அமைப்பாளர் திரு. ரவிசங்க சேனநாயக்க வலியுறுத்தினார்.​​

சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்கொலை செய்த மாணவி தாய்க்கு எழுதிய கடிதம்..!

0

அன்பான பெற்றோர்களே உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள்.

பாடசாலைக் கல்வி முடியும் வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். தற்போதய பிள்ளைகள் எது சரி, பிழை என்பதை சிந்திக்காத உணர்ச்சி முட்டாள்கள் இதுபோன்ற சிறுவர்களின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல அது கோழைகளின் முடிவு

NPPயின் கோட்டைக்குள் விரலை விட்டு ஆட்டி டித்வா நிவாரணத்தில் பாரிய மோசடி செய்த அதிகாரிகள்..!

0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட நிவாரணங்களில் 60 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி இடம் பெற்றுள்ளதாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களின் உத்தரவுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த விசாரணைகளின் போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைளில் மோசடி இடம்பெற்றமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நால்வர் உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், 8 இற்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களிடமும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், குறித்த மோசடியில் ஈடுபட்ட சில அலுவலர்கள் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டு மோசடி செய்த பணத்தை மீள செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழே இவ்வாறான மோசடிகள் அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் வெளிப்படையான நீதியான விசாரணைகள் இடம்பெற்று மோசடி செய்த உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வன்னியின் அபிவிருத்தி நாயகனாக வலம் வந்த திலீபன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காணி, மணல், கிரவல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக செயற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய விசாரணைகள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

2026-ல் எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

2026-ல் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் கணிசமாக உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை காரணமாக, வரும் காலத்தில் எண்ணெய் விலைகள் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுகளில் எரிபொருள் இறக்குமதி செலவுகள் ஒரு பெரும் பகுதியை உருவாக்குகின்றன என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மொத்த இறக்குமதிகளில் சராசரியாக கிட்டத்தட்ட 20% ஆக இருந்துள்ளன என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், 2025-ல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிகளின் அளவு அதிகரித்த போதிலும், மொத்த செலவு 2024-ல் 4.4 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணமாகும்.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, ஒரு பரல் கச்சா எண்ணெயின் சராசரி இறக்குமதி விலை 2024-ல் 84.7 அமெரிக்க டொலரிலிருந்து 2025-ல் 73.2 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக ஜனாதிபதிக்கு ஊடக சங்கம் கடிதம்..!

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் ஒருவரால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

‘எகிபஸிக்கோ’ அமைதி நடைபயணத்தை செய்தியாக்கச் சென்ற அரசிற்குச் சொந்தமான ‘சண்டே ஒப்சேவர்’ பத்திரிகையைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஆலோசகர் சந்தன சூரிய பண்டாரவின் இத்தகைய நடவடிக்கைகளை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அவர் ஒரு அரச அதிகாரிக்குரிய அதிகார வரம்பைத் தாண்டிச் செயற்பட்டதாகவும், நிகழ்வின் போது தனியார் ஊடக நிறுவனமொன்றுக்கு தேவையற்ற முன்னுரிமை அளித்து முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு ஊடகவியலாளர்களும் அரச ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆலோசகரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது ஒரு முரணான விடயம் என்று அந்தச் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அச் சங்கம், கடந்த கால அரசாங்கங்களின் ஊடக அடக்குமுறை நடைமுறைகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் தெரிவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்த அண்மைக்கால விவாதங்கள் மற்றும் வெளிப்பாட்டு விவகாரங்களில் கலாசார அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் உதவியை நாடுவதாக வெளியாகும் செய்திகள் ஆகியவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடகக் கொள்கை எவ்வழியில் செல்கிறது என்பதைக் காட்டுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தமது தொழில்முறை கடமைகளை கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும் முன்னெடுப்பதை உறுதி செய்யவும், அரச அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோர் கையொப்பமிட்ட இக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டிய சலூன்களுக்கு சீல்..!

0

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல்’ என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாமல், ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து,பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலூன் உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரண்டு சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் விமானப் படைக்கு இடம் கோரப்பட்டுள்ளது..!

0

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக் கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப் படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முதலாவது அங்கத்தவராக நான் இருக்கின்றேன். அத்துடன் ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றேன். திருக்கோணஸ்வர ஆலயமானது 247 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டுள்ளது.

இதற்கு பிரித்தானியர் ஆட்சியில் வழங்கப்பட்ட சி.வி 217 என்ற இலக்கம் கொண்ட செம்பு உறுதி இந்தியாவில் உள்ள ஆதீனம் ஒன்றில் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்நிலையில் ஆலய பகுதிகள் ஒவ்வொரு படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்கோணேஸ்வர வாசலில் முதலாவதாக கேணி இருந்த இடத்தை மூடி ஸ்ரீ லங்கா இராணுவமும் அதனைத் தொடர்ந்து மத்தியில் பொலிஸ் கொட்டேச்சும் அதனைத் தொடர்ந்து நந்தி மலையில் கடற்படைத் தளமும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஆகாயப்படைத் தளத்திற்கும் இடத்தைக் கொடுத்தால் எமது நிலம் எங்கே என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். இதனால் கோணேசரின் இருப்பிடம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ரேடார் கருவியை சீனக்குடா பகுதியிலேயே அமைக்க முடியும் அதை விடுத்து இங்கே அமைப்பதன் நோக்கம் என்ன என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே அனைத்து திருகோணமலை மக்களும் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நில அபகரிப்பை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்..!

0

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதுடன், சட்டத்தினூடாக அதிபர் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல பிரச்சினைகளை சவாலாக எடுத்து வென்று காட்ட வேண்டும் என்பதை போதிக்க வேண்டும்.

error: Content is protected !!