Thursday, August 13, 2026
Huis Blog

நீதிபதிகளின் ஓய்வு விவகாரம்; எதிராக இணைந்த எதிர்க்கட்சி நீதிமன்றில் மனு..!

0

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உடனான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இணைந்த எதிர்க்கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,

இந்தத் திருத்தத்தின் மூலம் வழக்குத் தேக்க நிலைக்கோ அல்லது நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்களுக்கோ எவ்வித உண்மையான தீர்வும் கிடைக்காது என உயர்நீதிமன்றத்தில் வாதிடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் சுமார் ஒரு சதவீத வழக்குகள் மட்டுமே உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த வயது அதிகரிப்பு அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு தராது என்றும் தெரிவித்தார்.

இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தானியா மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய உறவு நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் நம்பமுடியாத வகையில் உள்ளதாக உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெறவுள்ள சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

அனைத்தும் முடிவு செய்யப்பட்ட பின்னரே இச்சந்திப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தற்போதைய சூழலில் இந்தச் சந்திப்பினால் எவ்விதப் பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மின்சார மாஃபியாக்களுக்கு அஞ்ச மாட்டோம் – எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்தாலும் சரி, புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் (Renewable Energy) திட்டங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் திட்ட உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் மூலங்களிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதில் தாமும் தமது கட்சியும் உறுதியாக நம்புவதாகவும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் போது பசுமை ஆற்றல் பற்றி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் “வெப்பமின் மாஃபியாக்களுக்கு” அடிபணியும் அரசியல்வாதிகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன், பணத்திற்கோ, பதவிகளுக்கோ அல்லது சலுகைகளுக்கோ SJB இன் கொள்கைகள் ஒருபோதும் அடகு வைக்கப்பட மாட்டாது என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் புத்தாக்கம் செய்யப்பட்ட ஆற்றல் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு நிலையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்துறை வளர்ச்சி பெற உழைக்கும் அர்ப்பணிப்புள்ள ஆற்றல் முயற்சியாளர்களை விரட்டியடிக்க தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்கால SJB அரசாங்கத்தின் கீழ் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முழுமையான ஆதரவும் ஊக்கமும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு..!

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 25 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பண்டார சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அதன்படி, அவர் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்..!

0

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஓய்வு வயதை நீடிக்கும் தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட நபரையும் இலக்காகக் கொண்டதல்ல – ஜனாதிபதி

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் (BASL) இடையிலான உயர்நிலைச் சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித் துறை மறுசீரமைப்புகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.

ஜனாதிபதி தெரிவித்த முக்கிய விடயங்கள் :

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல; இது நாட்டின் பொதுநலன் மற்றும் நீதித் துறையின் கட்டமைப்புசார் மறுசீரமைப்பிற்கான ஒரு முக்கியப் படியாகும்.

நீதியை நிலைநாட்டுவது என்பது நீதிமன்றங்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் துறை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவள கட்டமைப்புகள் கணிசமாக அதிகரிக்கப்படும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகள் மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்தப்படும். மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் மாகாண மட்டத்திற்கு கொண்டு செல்ல உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

மேல்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகள் முழுமையாக வழங்கப்படும்.

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தமக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், இதுகுறித்து மேலும் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது சிறப்பு எனப் பரிந்துரைத்தனர்.

இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி; சிக்கிய NPP அமைச்சரின் மைத்துனர்..!

0

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.

அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று (11-08-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (12-08-2026) கேகாலை நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி நீடிப்பு விவகாரம்; ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு..!

0

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகளது பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அண்மையில் சங்கத்தின் சகல உறுப்பினர்களும் கொழும்பில் கூடி இவ்விடயம் தொடர்பில் ஐந்து யோசனைகளை நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் பிரதிநிதிகள் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு அமைய எடுத்த தீர்மானம் குறித்து தன்னால் உறுதியான தீர்மானத்தை வழங்க முடியாது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவற்கு சட்டத்தரணிகள் சங்கத்தினர் அனுமதி கோரிய நிலையி;ல் இன்றைய தினம், நீதியமைச்சர், நீதியமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

உடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் – சட்டத்தரணி மணிவண்ணன் கோரிக்கை

0

மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.

2017 கிழக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது.

அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும். இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட பகிரக்கூடாது.

அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி.

அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது.

ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச் சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். 13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது. நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும்.

மாகாண சபையோடு எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப் போவதில்லை சொல்லவுமில்லை.

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டும். அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை.

ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்..!

0

பழைய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலுக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது. தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதியத் தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த தயாராகவுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக எல்லை நிர்ணய விவகாரத்துக்கு உரிய தீர்மானம் எட்டப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம்.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் உருவாக்கப்படவில்லை. ஆகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் திகதியை தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது.

இவ்வாறான பின்னணியில் அனைவரும் வேண்டாம் என்று குறிப்பிடும் விருப்பு வாக்கு, ஊழல் மிக்க, தொகுதிக்கு உறுப்பினர் இல்லாத, பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாத பழையத் தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு திடீரென தீர்மானிக்க முடியாது.

பழைய தேர்தல் முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பவில்லை. மீண்டும் அந்த முறைமைக்கு செல்வதற்கு மக்கள் விரும்பினால் அது குறித்து ஆராயப்பட வேண்டும்.

தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக எல்லை நிர்ணயம் செய்து எல்லை மற்றும் தொகுதிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

இலங்கையில் மேலதிக முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் சீனாவின் CCCC நிறுவனம்..!

0

சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஷாங் பிங்னான் (Zhang Bingnan) தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் தொடர்புடைய நடப்பு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த CCCC நிறுவனத்தின் பிரதிநிதிகள்,

ஜனாதிபதியின் தொலைநோக்குக் கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உதவியுள்ளதாகவும், இலங்கையில் மேலும் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளை ஆராயத் தங்களை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்த ஆர்வமாக உள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

இத்துறை சார்ந்த பிராந்திய மையமாக இலங்கை உருவெடுப்பதற்கும், அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், தங்களது முதலீட்டுத் திட்டங்களில் 90% ஊழியர்கள் உள்ளூர் மட்டத்திலேயே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இதன் மூலம் இலங்கையர்களுக்குப் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

error: Content is protected !!