Sunday, July 12, 2026
Huis Blog

தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம்..!

0

மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது.

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இன்று (12) ஞாயிற்றுக் கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

விவசாயிகளிடமிருந்து துரித கதியில் நெற்கொள்வனவை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,046மெற்றிக் தொன் அளவில் 2025 ஆம் ஆண்டின் சிறுபோக நெல்லும், 4,172மெற்றிக்தொன் அளவில் 2025/2026 பெரும்போக நெல்லும் களஞ்சிய சாலைகளில் தேங்கிக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை உடனடியாக அகற்றிவிட்டு, துரிதகதியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக வவுனியா உள்ளிட்ட பிற மாவட்டங்களிலுள்ள களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற குழு அறையில் கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில் அமைச்சர் லால்காந்தவின் தலைமையில், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக சிறுபோக நெற்கொள்வனவு தாமதமாகுவது தொடர்பில் சுட்டிக்காட்டி, எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவு மேள்கொள்ளப்படும் என்பதை கேட்டிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியும், மன்னார் மாவட்டத்தில் ஒருசில நாட்கள் பிந்திய நிலையும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை சார்ந்த அதிகாரியால் இதன் போது பதில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையே ஏற்படுமென இதன்போது நான் குறித்த அதிகாரியிடம் தெரிவித்திருந்தேன்.

ஏன் எனில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் இதுவரை உரியவகையில் வெளியேற்றப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் அதிகளவான நெல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல் ஆறு களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 3,046மெற்றிக் தொன் நெல் இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேக்க நிலையில் காணப்படுகின்றது.

இதுதவிர 2025/2026 பெரும்போக நெல் 16களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. 4,172 மெற்றிக் தொன் நெல் இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மெற்றிக் தொன் நெல் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டு தரமிழந்து செல்கின்றது.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள களஞ்சிய சாலைகள் அனைத்திலும் நெல் நிறைந்து காணப்படுகின்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருடைய முயற்சியால், களஞ்சிய சாலைகள் வேறு திணைக்களங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு கடந்த பெரும்போக காலத்தில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லும் களஞ்சிய சாலைகளில் இருந்து உரிய வகையில் அப்புறப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு களஞ்சியசாலைகளை நிறைத்து வைத்துக் கொண்டு எவ்வாறு எதிர்வரும் 13ஆம் திகதி சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்கப் போகின்றீர்கள் என இதன் போது கேள்வி எழுப்பியிருந்தேன்.

எனவே களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உரிய வகையில் அகற்றிவிட்டு, மிகவிரைவாக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் தேங்கிக்கிடக்கின்ற நெல்லை வாகனங்களின் மூலம் வவுனியா உள்ளிட்ட ஏனைய இடங்களில் காணப்படுகின்ற களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, சிறுபோக நெற்கொள்வனவு மேற்கோள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி இதன் போது பதிலளித்தார்.

குறித்த செயற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு துரித கதியில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு நான் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தேன்.

அத்தோடு நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

பொம்மையாக இருக்க விரும்பவில்லை என பதவியை விட்டு விலகிய அதிகாரிகள்..!

0

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி அவர் தனது இராஜினாமா கடிதத்தில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடிகள், நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு சங்கங்களில் தமது சங்கத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிருப்தி வெளியிட்டும் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தலைவர் பதவியின் மதிப்பை குறைத்துக் கொண்டு தொடர விரும்பாத காரணத்தினாலேயே பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உப தலைவரும் குறித்த அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு..!

0

மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக் கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி பசன் அமரசேன இராஜினாமா?

0

நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதிவான் பசன் அமரசேன இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிச்சேவை சங்கத்தின் செயலாளரால் நேற்றைய தினம் கூட்டப்பட்ட சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்தே நீதிபதி பசன் அமரசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, சங்கத்தின் செயற்குழு இந்த விசேட பொதுக்குழு கூட்டத்தைக் கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் தீர்மானித்திருந்தது.

நீதிபதி பசன் அமரசேனவினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படுகின்ற நிலையில், அதில் அவர் தனது இராஜினமாவை உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தனது இந்த முடிவிற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளரான நீதிபதி சுரங்க முனசிங்கவினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படுகிறது.

பாராளுமன்ற உடை விவகாரமும் திரிபுபடுத்தப்பட்ட அரசியல் விமர்சனங்களும்..!

0

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம், சமூக வலைத் தளங்களிலும் அரசியல் களத்திலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது.

வவுனியா ஊடகத் தளத்தில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த முழுமையான மற்றும் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த அர்ச்சுனா ராமநாதன், வேட்டி மற்றும் தேசிய அங்கியை (National Shirt) அணிந்து, அதன் மேல் பாரதியார் பாணியிலான கோட் ஒன்றினை அணிந்திருந்தார். இருப்பினும், அவரது உடையை காரணம் காட்டி பாராளுமன்ற பணியாளர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்ற பிரதி முதல் கோலாசானாகிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

 

பாராளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் உடை ஒழுக்கத்தைப் பேண வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்ததாலும், சபை நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த இந்த அசௌகரியத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய கடமை அவருக்கு இருந்ததாலும், அவர் இது குறித்து சபையில் உரையாற்றினார்.

இதன்போது, அவர் தனது உரையில்,

“பாராளுமன்றத்திலே உடை அணிதல் தொடர்பான சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அந்த சம்பிரதாயங்களை மீறும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் இன்று உடை அணிந்து வந்திருக்கிறார்” என்பதையே சபாநாயகருக்கும் சபைக்கும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதனை ஊடகங்கள் திரிவு படுத்தி “வேட்டியுடன் வந்திருந்தார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் M.ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டதாக போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார்கள். அதனை அறையும் குறையுமாக தெரிந்து கொண்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும் ஏளனம் செய்யும் விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்த உண்மைத் தன்மை தெரிந்திருந்தும், M.ஜெகதீஸ்வரன் மற்றும் தேசிய மக்கள் சக்தி மீதான காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், அவர்களுக்கு சார்பான ஊடகக் கட்டமைப்புகளும் இதனை ஒரு சர்ச்சையாக உருமாற்றி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக்கியுள்ளனர்.

மேலும் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளிலும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவர்களின் அர்ப்பணிப்பான அரசியலுக்கு எதிராக, சமூகத்தை பிழையாக வழிநடாத்த துடிக்கும் சிலர் பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என சமூக ஆர்வலர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.

இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது என்றும் சமூக வலைத் தளங்களிலும், தமக்குச் சார்பான ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களைப் பரப்பி, தேசிய மக்கள் சக்தியின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிப்பதுடன், இந்த ஆட்சியையும் வீழ்த்தத் துடிக்கின்றனர் எனக் கருத்துத் தெரிவித்தும் வருகின்றனர்.

இத்தகைய காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் போலிப் பிரச்சாரங்களுக்குத் துணை நிற்பவர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பிரபாகரன் பயங்கரவாதியா? என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு விக்னேஷ்வரன் வழங்கிய அதிரடி பதில்..!

0

பிரபாகரன் ஒரு பயங்கரவாதியா? ஒரு முன்னாள் தொழில்முறை நீதிபதியாக நீங்கள் அவரை எவ்வாறு ஆதரிக்க முடியும்? சிங்களப் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய அதிரடி பதில்

பதில்: நீங்கள் கெப்பட்டிபொல திஸாவவை (Keppetipola Dissawe) ஒரு விடுதலைப் போராளி என்றும், பயங்கரவாதி அல்ல என்றும் அழைப்பீர்கள் என்றால், நானும் பிரபாகரனை ஒரு விடுதலைப் போராளி என்றே அழைப்பேன், பயங்கரவாதி அல்ல.

சட்டத்தின்படி பயங்கரவாதி என்பவர் யார்?

பயங்கரவாதி என்பவர், அச்சத்தைப் பரப்புவதற்காகப் பொதுமக்கள் அல்லது சொத்துக்களுக்கு எதிராக வன்முறை, வற்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தும் அல்லது அவ்வாறு செய்யப் போவதாக அச்சுறுத்தும் ஒரு தனிநபர் என்று கூறப்படுகிறது.

இத்தகைய நபரின் குறிக்கோள், அரசாங்கங்கள், அமைப்புகள் அல்லது பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி, தங்களின் குறிப்பிட்ட அரசியல், மத அல்லது கருத்தியல் கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பதாகும்.

எனவே, இத்தகைய கலைச்சொற்களைப் பயன்படுத்தும் நிறுவனம் பொதுவாக அரசியல், மத, இராணுவ அல்லது சமூக அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரசாங்கமாக அல்லது ஓர் அமைப்பாகவே இருக்கும்.

பொதுவாக ஒரு அரசாங்கமே ஒரு நபரைப் பயங்கரவாதி என அடையாளம் காண்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயங்கரவாதி என்று சொல்லப்படுபவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள், ஏற்கனவே அந்த நாட்டின் தண்டனைச் சட்டத்தில் (Penal Code) குற்றங்களாகவே இருக்கின்றன. அந்த நாட்டின் அரசாங்கம்தான் அவற்றைச் சாதாரண தண்டனைச் சட்டக் குற்றங்களிலிருந்து பிரித்து, அந்தச் செயல்களுக்குப் ‘பயங்கரவாதச் செயல்கள்’ என்று புதிய பெயரிடுகிறது.

அவர்களது சொந்த இராணுவமே தங்களது மக்களுக்கு இடையே அச்சத்தைப் பரப்புவதற்காகப் பொதுமக்கள் அல்லது சொத்துக்களுக்கு எதிராக வன்முறை, வற்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தினால், அரசாங்கம் அந்தச் செயல்களைப் பயங்கரவாதச் செயல்களாக அடையாளம் காணாது.

அதாவது, அரசின் இயந்திரங்களால் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதம் சாதாரணமானதாகக் கருதப்படும் வேளையில், மாநிலத்தில் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்களின் வன்முறைகள் பயங்கரவாதச் செயல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் செயல்கள் இரண்டுக்கும் ஒன்றுதான். ஆனால், அரசாங்கம் தனக்குச் சாதகமாக இருக்கும்போது, அந்தச் செயல்களுக்குப் புதிய பெயரைக் கொடுப்பதற்காக அவற்றை முதன்மைச் சட்டத்திலிருந்து பிரிக்கிறது.

இதன் மூலம் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்த ஒரு சாதாரண தனிநபர், அந்த நாட்டின் அரசாங்கத்தால் பயங்கரவாதி என்ற அந்தஸ்துக்கு “உயர்த்தப்படுகிறார்”!

பயங்கரவாதம் என்பது அகநிலை சார்ந்தது (subjective), புறநிலை சார்ந்தது (objective) அல்ல. தமிழ் பேசும் ஒரு நபரும், சிங்களம் பேசும் ஒரு நபரும் ஒரே மாதிரியான குற்றங்களைச் செய்தால், அரசு தமிழ் பேசுபவரைப் ‘பயங்கரவாதி’ என்றும், மற்றவரை ஒரு ‘குற்றவாளி/எதிரி’ என்றும் குறிப்பிடுவதற்கே வாய்ப்புகள் அதிகம்!

இன்று இலங்கையில், ஒரு காலத்தில் பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்ட ஜே.வி.பி (JVP) அமைப்பைச் சேர்ந்த முதன்மை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசாங்கம் நம்மிடம் உள்ளது. அதன் உறுப்பினர்கள் பலர் கடந்த 1971 மற்றும் 1988 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் அப்போதைய அரசாங்கங்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டனர்.

எங்களின் தற்போதைய ஜனாதிபதியை நீங்கள் பயங்கரவாதி என்று அழைப்பீர்களா? உண்மையில், அவர் உதாரணத்திற்கு ராஜபக்சக்களை விட மிகவும் எளிமையானவராகவும் மனிதாபிமானம் உள்ளவராகவும் காணப்படுகிறார்.

பயங்கரவாதம் என்ற கோட்பாடு பரந்தது என்பதால், வெவ்வேறு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் அவர்களின் செயல்களின் குறிப்பிட்ட சூழலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பயங்கரவாதியை வரையறுக்கின்றன.

சட்டப்பூர்வ வரையறைகள் வெவ்வேறு அதிகார வரம்புகளுக்கு ஏற்ப மாறுபட்டாலும், பெரும்பாலான சர்வதேச மற்றும் தேசிய முகமைகள் இந்த முக்கிய கூறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன:

(1) செயல்கள் பொதுவாக இராணுவப் போராளிகளை நோக்கியதாக இல்லாமல், நிராயுதபாணியான பொது மக்கள், உள்கட்டமைப்புகள் அல்லது பொதுமக்களை நோக்கியதாகவே அமைகின்றன. இதையேதான் இலங்கை இராணுவமும் செய்தது! வடக்கில் செம்மணியும், கிழக்கில் சத்துருக்கொண்டானும் நிராயுதபாணியான பொதுமக்கள் அவர்களால் எவ்வாறு கையாளப்பட்டார்கள் என்பதற்கான தெளிவான உதாரணங்களாகும்.

(2) மரணம், கடுமையான காயம், பெரிய சொத்து சேதம் அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களைப் பயன்படுத்துவது அல்லது அவ்வாறு செய்ய அச்சுறுத்துவது. நான் மல்லாகத்தில் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் இருந்த போது, அப்பாவிப் பொதுமகன் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இலங்கை இராணுவ வீரர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட ஞாபகம் எனக்கு இருக்கிறது.

அதற்கு அடுத்த நாள், அப்போதைய அமைச்சராக இருந்த எனது நண்பர் லலித் அதுலத்முதலி ஹெலிகாப்டர் மூலம் மல்லாகத்திற்கு வந்து, நான் நீதிமன்ற அமர்வில் இருந்தபோதே எங்களது நீதிமன்றக் கட்டடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது பாதுகாப்புப் படை வீரருக்கு உத்தரவிட்டார். இறந்த பொதுமகனின் உடலில் எந்த வீரர்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதோ, அந்த இரு வீரர்களைக் கைது செய்ததற்காக அவர் நீதிமன்றத்தை அச்சுறுத்தினார்.

யார் அதிகாரபூர்வமாக “பயங்கரவாதி” என்று முத்திரையிடப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பொதுவாக தேசிய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது.

அமெரிக்கா: ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமெரிக்காவிற்குள் நடக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பயங்கரவாத அச்சுறுத்தல்களை விசாரித்து கண்காணிக்கிறது. அதே நேரத்தில், வெளியுறவுத்துறை (Department of State) வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளை (FTOs) நியமிப்பதைக் கையாள்கிறது.

பிரித்தானியா: பயங்கரவாதச் சட்டத்தின் (Terrorism Act) கீழ், க்ரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் (CPS) போன்ற இங்கிலாந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அத்தகைய வன்முறைத் திட்டங்களுக்குத் திட்டமிடுதல் அல்லது உதவுதல் ஆகிய இரண்டையும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள்.

உலகளாவிய கட்டமைப்புகள்: ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC), பயங்கரவாதத்தை உலகளவில் வரையறுப்பதில் உள்ள முக்கிய சிக்கல்களை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இத்தகைய செயல்களை அரசியல், மத அல்லது தத்துவ ரீதியான காரணங்களால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

பயங்கரவாதி” (terrorist) என்ற சொல் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி (Reign of Terror – 1793-1794) காலத்தின் போது உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், இது தனது சொந்த குடிமக்களை அடக்குவதற்கும் அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதற்கும் பயம், வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்திய ஒரு அரசாங்கத்தை — குறிப்பாக ஆளும் பிரெஞ்சு புரட்சிகர அரசாங்கத்தை — விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், இந்த வரையறை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது:

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்: பிரெஞ்சு சொல்லான terroriste என்பது ஆங்கிலத்தில் உள்வாங்கப்பட்டு, கொடுங்கோல் ஆட்சியாளர்களை அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களை அச்சுறுத்தியவர்களை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி: இதன் பொருள் தலைகீழாக மாறியது. அரசு ஆதரவு வன்முறையை விவரிப்பதற்குப் பதிலாக, இந்தச் சொல் அரசுக்கு எதிரான தீவிரவாதிகள் மற்றும் புரட்சியாளர்களுக்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. உதாரணமாக, 1870கள் மற்றும் 1880களில் ஜார் மன்னரின் அதிகாரிகளைப் படுகொலை செய்ய முயன்ற ரஷ்ய நிஹிலிஸ்டுகள் (nihilists) மற்றும் அராஜகவாதிகளை (anarchists) விவரிக்க இது பயன்படுத்தப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டு: முதலாம் உலகப் போரைத் தொடர்ந்தும், உலகளாவிய காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் வேரூன்றியபோதும், இந்த முத்திரை அரசாங்கங்களால் விடுதலைப் போராட்ட வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் காலனித்துவ எதிர்ப்பு குழுக்களைக் கண்டிக்கத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப்பட்டது. இது “ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் மற்றொருவருக்கு விடுதலைப் போராளி” என்ற தொடர் விவாதத்தைத் தூண்டியது.

நவீன பயன்பாடு: இன்று, அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபையும் உலகளாவிய பாதுகாப்பு முகமைகளும் “பயங்கரவாதி” என்பதை அரசியல், கருத்தியல் அல்லது மத நோக்கங்களை அடைவதற்காகப் பொதுமக்களுக்கு எதிராக முறையான வன்முறை மற்றும் பயத்தைப் பயன்படுத்தும் ஓர் அரசு சாரா நபர் (non-state actor) என்று பரவலாக வரையறுக்கின்றன.

இருப்பினும், அரசு பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறது; ஆனால் அரசாங்கங்கள் பயங்கரவாதி என்ற சொல்லை அரசு சாரா நபர்களுக்குப் பயன்படுத்தவே விரும்புகின்றன. ஆனால், ஆரம்பத்தில் பயங்கரவாதம் என்பது அரசு ஆதரவு வன்முறைக்கே உரித்தாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பொதுவாக அரசு ஆதரவு வன்முறை என்பதே பயங்கரவாதம் என்ற சொல்லின் அர்த்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் தனிநபர் அல்லது குழுக்களின் வன்முறைச் செயல்கள் அரசின் அடக்குமுறையின் விளைவே ஆகும். (எடுத்துக்காட்டாக: 1960களின் முற்பகுதியில் யாழ்ப்பாண இளைஞர்கள் மீது இன்ஸ்பெக்டர் பாஸ்டியாம்பிள்ளை நடத்திய பயங்கரவாத மற்றும் சித்திரவதை செயல்கள், பின்னர் தமிழ் ஆயுதப் படைப் பிரிவுகள் உருவாவதற்கு வழிவகுத்தன). அரசின் தரப்பிலிருந்து நிகழும் பயங்கரவாதம், தனிநபர் அல்லது குழுக்களின் வன்முறைச் செயல்களைப் பெற்றெடுக்கிறது.

நான் அவரை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்று நீங்கள் என்னைக் கேட்டுள்ளீர்கள். நான் அவரது வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால் அவரது தேசப்பற்றை நான் மதிக்கிறேன்.

அகிம்சை குறித்த தங்களின் கடுமையான கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், சுபாஷ் சந்திர போஸின் தேசப்பற்று, வீரம் மற்றும் தியாகத்தை காந்தி ஆழமாக மதித்தார். 1942 இல், காந்தி அவரைப் புகழ்ந்து “தேசபக்தர்களின் இளவரசர்” (Prince among the Patriots) என்று குறிப்பிட்டார், அவருடைய வீரம் அவருடைய எல்லாச் செயல்களிலும் பிரகாசித்தது என்பதை ஒப்புக்கொண்டார்.

அவர்கள் உத்திகள் குறித்து அடிக்கடி முரண்பட்டாலும் — காந்தி அகிம்சையை ஆதரித்தார், போஸ் ஆங்கிலேயர்களை வெளியேற்ற ஆயுதப் போராட்டம் அவசியம் என்று நம்பினார் — காந்தி ஒருபோதும் நாட்டின் மீதான போஸின் அன்பை சந்தேகிக்கவில்லை. அவர்களின் உறவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பரஸ்பர மரியாதை: போஸ் காந்தியை இந்திய தேசியவாதத்தின் அடையாளமாகக் கருதினார், மேலும் 1944 ஆம் ஆண்டு ஆசாத் ஹிந்த் ரேடியோ உரையின் போது அவரை முதன்முதலில் “தேசிய தந்தை” என்று அழைத்தார்.

கருத்தியல் உராய்வு: காந்தி போஸின் தீவிரவாத உத்திகளையும், அச்சு நாடுகளுடனான (Axis powers) அவரது கூட்டணிகளையும் எதிர்த்தார், ஏனெனில் சுதந்திரத்தை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் வழிகள் அதன் இலக்கைப் போலவே முக்கியம் என்று காந்தி நம்பினார்.

1939 காங்கிரஸ் நெருக்கடி: காந்திக்கு விருப்பமான வேட்பாளருக்கு (பட்டாபி சீதாராமையா) எதிராக போஸ் மீண்டும் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காந்தி “சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி” என்று பிரபலமாகக் குறிப்பிட்டார், இது போஸின் இறுதி ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

இந்த அரசியல் பதற்றத்திற்கு மத்தியிலும், 1945 இல் போஸ் இறந்ததாகக் கூறப்படும் செய்தியைக் கேட்டவுடன், காந்தி அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் நிறுவனத் திறன்களைப் பாராட்டினார், நேதாஜியின் “தேசப்பற்று யாருக்கும் சளைத்தது அல்ல” என்று உறுதிப்படுத்தினார்.

நான் என்னை காந்திஜிக்கோ, பிரபாகரனை நேதாஜிக்கோ ஒப்பிடவில்லை என்றாலும், உங்களுடைய கேள்விக்கான எனது பதிலை விளக்குவதற்கு இவ்விருவரையும் குறிப்பிட்டது பொருத்தமானதுதான். ஒன்பது வயது சிறுவனாக காந்திஜியின் படுகொலை என் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை நான் நினைவில் வைத்திருக்கிறேன்.

நான் அழுது அழுது, டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்பட்ட இறுதிச் சடங்கு வர்ணனைகளை எங்களது பிலிப்ஸ் வானொலியில் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நான் All Ceylon Congress of Religions ஒரு ஸ்தாபக உறுப்பினராக இருந்தேன்.

டாக்டர் ஈ.டபிள்யூ.அதிகாரம் போன்றவர்களின் முன்னிலையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை நான் கேட்கும் வழக்கம் கொண்டவன். நான் முற்றிலும் சைவ உணவு உண்பவன். ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக அகிம்சையின் மீதான எனது விருப்பத்தைக் கைவிடுவதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லை.

ஆனால், சுபாஷ் சந்திர போஸின் தேசப்பற்று, வீரம் மற்றும் தியாகத்தை காந்தி ஆழமாக மதித்தது போல, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்த இளைஞன் பிரபாகரனை மதிப்பதில் இருந்து என்னை எதுவும் தடுக்கவில்லை.

அவரை வீழ்த்துவதற்கு எமது நாட்டிற்கு 20க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவி தேவைப்பட்டது. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி அல்ல. அவர் ஆயுதப் போராட்டத்தின் ஆற்றலை நம்பிய ஒரு விடுதலைப் போராளி. என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

அஸ்வெசும திட்டத்தில் பாரிய மாற்றம்; பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்..!

0

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும் 400,000 குடும்பங்கள் இந்த நலன்புரித் திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தற்போதைய மறு ஆய்வுகளின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் இத் திட்டத்திலிருந்து வெளியேற உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றும், அதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை பாடப்புத்தக விநியோகத்தில் புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகம்..!

0

பாடசாலை பாடப் புத்தகங்களின் கொள்முதல், களஞ்சிய மேலாண்மை, விநியோகம் மற்றும் இருப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை முறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சும், கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் இணைந்து பல புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகம் அறிக்கைகளையும், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தற்போதைய செயல்பாடுகளையும் பரிசீலிப்பதற்காக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடிய போது இந்தத் தகவல் வெளியாகியது.

இதற்கமைய, அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய புத்தகங்கள்பற்றிய விபரங்களை 2024-ஆம் ஆண்டு முதல் நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்காக புதிய கணினி தரவுத்தள முறைமையொன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2025 உயர்தர மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது..!

0

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களது பெறுபேறுகளை மேற்கண்ட இணையத்தளங்களில் நேரடியாகச் சென்று சரிபார்த்துக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!