Tuesday, August 11, 2026
Huis Blog

தனியார் கல்வி நிலையம் சென்ற 14 வயது சிறுமி மாயம்; கண்டு கொள்ளாத பொலிசார்..!

0

மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா(வயது 14) என்ற மகளையே கடந்த 02 ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

வழமையாக பாடசாலை சென்று வந்து பிற்பகல் 02 மணிக்கு தனியார்கல்வி நிலையம் சென்றுள்ளார்.மாலை ஆறுமணியாகியும் அவர் வராத காரணத்தால் 119 என்ற காவல்துறையின் அவர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.

மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்த போதிலும் இன்றுவரை காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி; உடன் நிறுத்துக – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளி மாவட்ட மீனவர்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக் காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 11.08.2026இன்று இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் மீனவர்களால் கையளிக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன்.

இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம் கையளிக்கின்றேன்.

அத்தோடு வெளிமாவட்ட மீனவர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வழங்குகின்றார். அவ்வாறு மீன்பிடிக்கான அனுமதியைப் பெறுபவர்கள் இங்கு வந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முள்ளிவாய்காலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர், சாலைப் பகுதியில் ஐந்து படகுகளை வைத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர். இவ்வாறாகத்தான் எமது முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் ஊடுருவுகின்றன.

இவ்வாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்குகின்ற அனுமதிகளாலேயே, எமது மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே எமது மாவட்டத்தில், வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறே நாம் கோருகின்றாம்.

இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்படையினரும், போலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.

பாடசாலைகளின் அதிபர் சார்ந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு..!

0

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர்களின் சிக்கல்களை தீர்ப்பதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அதிபர்கள் மேலதிகமாக காணப்படுவதுடன் சில பாடசாலைகளில் அதிபர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

நினைத்த மாத்திரத்தில் அதிபர்களை இடமாற்றம் செய்ய முடியாது எனவும் இடமாற்றங்கள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கூறினார்.

சில பாடசாலைகளில் அதிபர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்ற போதிலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக கோரிக்கை விடுக்கப்படாத நிலை உள்ளதாகவும்

அண்மையில் இடம்பெற்ற அதிபர்களுக்கான பரீட்சையின் மூலம் குறிப்பிடத்தக்க அதிபர்களை எதிர்காலத்தில் சேவையில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதிபர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் விரைவில் திட்டமொன்று வகுக்கப்படும் எனவும் மேலதிகமாக அதிபர்கள் இருந்தால் அவர்களை வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு மட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன மேலும் கூறினார்.

மன்னாரில் விசேட அதிரடிப் படையின் சுற்றிவளைப்பு; கேரள கஞ்சா மீட்பு..!

0

மன்னார் – தாராபுரம் வனப் பகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்றம் 18 முதல் 21 வரை கூடும் – செயலாளர் நாயகம் அறிவிப்பு

0

பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும் 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 19ஆம் திகதி புதன்கிழமை 11.30 மணி முதல் 5.00 மணி வரை நிதிச் சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் 5.00 மணி வரை பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச் சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11.30 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகர ஆணையாளரின் இடையூறுகளுக்கு எதிராக போர்க்கொடி; அடையாளப் பகிஷ்கரிப்பு..!

0

​யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

​45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

​இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

​இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில் நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இன்றைய சபை அமர்வின் போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட இடையூறுகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக விவாதித்திருந்தனர்.

​இதன்போது, அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகள் சபையின் நற்பெயருக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது என விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

​குறித்த தீர்மானத்தை அடுத்து, அதிகாரிகளின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்க்குடனேயே இன்றைய அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் குறித்த விடயம் தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்ட போது ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என அவர் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் அனுமதியின்றி இயங்கும் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விசேட நடவடிக்கை..!

0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த இவ்விடயம் வரவேற்கத்தக்கது என்பதுடன் தெற்கிலிருந்து வடக்கிற்குள் வரும் இத்தகைய பதிவற்ற சொகுசு பேரூந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

சித்தி எய்தாத தமக்கு பட்டம் ஏன் வழங்கப்பட்டது; பல்கலை மாணவன் வழக்குத் தாக்கல்..!

0

பரீட்சையில் சித்தி எய்தாத தமக்கு உயர் டிப்ளோமா பட்டம் எவ்வாறு வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீதிமன்றில் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட குழுவினரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஹான் குமார் அத்துகோரல என்ற மாணவன் நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மற்றொரு மாணவர் மூலம் தன்னிடம் கோரிய 80,000 ரூபாய் பணத்தை வழங்க மறுத்ததால், பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தாம் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதாக அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் தாம் உள்ளிட்ட சில மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடையச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல், முதற்கட்டத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என அறிவிக்கப்பட்ட தாம் உள்ளிட்ட சில மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் சித்தி எய்தவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் எந்தவொரு பரீட்சையும் நடத்தப்படாமல் எவ்வாறு சித்தியடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் வினவிய போதிலும், அதற்கு இதுவரை தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இதன் மூலம் ஏதோவொரு பரீட்சை முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை புலப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தினால் நடத்தப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேலாண்மை உயர் டிப்ளமோ பாடநெறியை (2022/2023) பயின்ற மனுதாரர் சார்பில், சட்டத்தரணி தனோஷா பெரேரா மூலம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது..!

0

தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 40,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) திங்கட்கிழமை அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த அலுவலர் அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் அலுவலராவார்.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் குறித்த உத்தியோகத்தர் பணத்தை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அவரை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகிழக்கின் பல்வேறு அலுவலகங்களில் கடமை புரியும் இத்தகைய தொழிநுட்ப அலுவலர்களால் இலஞ்சம், ஊழல், தரமற்ற கட்டுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆதாரங்களுடன் தகவல்களை வழங்குகின்ற போதும் குறிப்பாக வடக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதுவித கண்காணிப்பையோ, நடவடிக்கைகளையோ மேற்கொள்வதில்லை எனப் பலரும் குற்றம் சுமத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கறுப்புச் சந்தை ஆயுத கொள்வனவும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்; சீனாவின் கோர முகமும்..!

0

ஈழத் தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத் தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை.

ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிக் களிப்புரை, வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.

‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்

2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. “பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?” என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.

“இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்” என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்த போது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.

அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்

போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர் கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.

இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’

“ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்” என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.

‘பொருட்களைப் பெற்றுக் கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.

போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்த போது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

வடக்கு – கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்

தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு – கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு – கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.

வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்

நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்று கொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.

நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து

கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.

தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.

அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.

உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.

சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத் தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.

error: Content is protected !!