Saturday, August 22, 2026
Huis Blog

பல்கலைக் கழகங்களில் பகிடிவதைக்கு எவ்வித அனுமதியும் இல்லை – வவுனியாவில் பிரதமர்

0

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22.08.2026) சிறப்பாக நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்தில் (பம்பைமடு) நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், கல்விப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள்,

“நாங்கள் கல்வியில் முதலீடு செய்யும் போது, கல்வித் தரத்தில் மட்டுமன்றி ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தின் முக்கிய பண்புகளில் ஒன்றாக மாணவர் மற்றும் பணியாளர்களின் நலனும் அமைய வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும். எமது இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற போது தேசிய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தங்குமிட வசதி, சிற்றுண்டிச்சாலைகள் போன்ற போதிய வசதிகளின்மையால் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது தெளிவாகத் தெரிந்தது.

இந்தப் பின்னணியில்தான், 2026ஆம் ஆண்டில் முழு பல்கலைக் கழகக் கட்டமைப்புக்கும் ஒரு விடுதித் திட்டத்தை எம்மால் ஆரம்பிக்க முடிந்தது.

இத்திட்டத்தின்கீழ் கொழும்புக்கு வெளியேயுள்ள, குறிப்பாக மாணவர்களுக்கு மாற்று வழிகள் குறைவாகக் காணப்படும் மற்றும் நகரத்திற்குத் தூரமாக அமைந்துள்ள புதிய பல்கலைக்கழகங்களுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். இதனாலேயே வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகங்களுக்கு விசேட கவனமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 55 விடுதித் திட்டங்கள் மூலம் சுமார் 16,000 இளங்கலை மாணவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். வவுனியாப் பல்கலைக் கழகத்திற்கான நான்கு புதிய விடுதித் திட்டங்களில், 400 மாணவர்களுக்கான இரண்டு விடுதிகளும், 200 மாணவர்களுக்கான மேலும் இரண்டு விடுதிகளும் அடங்கும். இதன் மூலம் மாணவர்கள் தங்குமிடப் பிரச்சினை இன்றி நிம்மதியாகக் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படும்.

பல்கலைக்கழகம் என்பது கட்டடங்கள் மாத்திரமல்ல; சிறந்த எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான கலாச்சாரமும் அங்கு இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு (Ragging) எவ்வித அனுமதியும் இல்லை என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, மாணவர்களின் ஏனைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன், 231,101,547.65 ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 200 மாணவர் கொள்ளளவு கொண்ட நான்கு மாடி விடுதிக் கட்டடமானது, வவுனியாப் பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகாலத் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாப் பல்கலைக் கழகம் தனது விடுதித் திட்டத்திற்கான ஏலப் பத்திரம் கோருதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளைத் துரிதமாக நிறைவு செய்ததன் பலனாகவே இம்மாபெரும் திட்டத்தின் முதலாவது கட்டடப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இணைந்த வட – கிழக்கிற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி கலந்துரையாடல்..!

0

இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (22) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இடம் பெற்றன.

இதில் சிவில் சமூக பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனைவின் நான்காவது வருட அணி திரளல் நிகழ்வாக இது காணப்படுகிறது

இலங்கையின் இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூக–பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப் படுத்தப்படாத நிலை தொடர்வதாகவும், எனவே எதிர்காலத்தில் மாற்ற முடியாத மற்றும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சமஷ்டி அரசியல் தீர்வே அவசியம் எனவும் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், வடக்கு–கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டிய அவசியமும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் 14 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடுங்காவல் சிறை..!

0

14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச் செயல் இடம் பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் (21.08.2026) வழங்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார். குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச் செயலைப் புரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக் குற்றச் செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்பளித்திருந்தார்.

தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியம்..!

0

செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழி அவலங்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் உயரிய சபையில் விடயங்களை முன்வைக்கும் பொறுப்பு எமக்கு காணப்படுகிறது. இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் ஊடாக 584 மனித எழும்புக்கூடுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன.

 

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுமா, இல்லையா என்பதை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அறிவிப்புக்களும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுத்தது. இருப்பினும் உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

முன்னாள் அரசாங்க அதிபர் தேவநேசன் நேசையா தலைமையில் கமிலஸ் பெர்னாண்டோ, ஜெசீமா இஸ்மாயில், எம்.சி.எம். இக்பால் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு 1995 மற்றும் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் மண்ணில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்த குழு காணாமல் போன 281 பேரின் விபரங்களுடன், செம்மணியின் விடயங்களையும் வெளிப்படுத்தியது. இந்த குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் இருந்து இதுவரையில் 584 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 57 எழும்புக்கூடுகள் கூட்டாக மீட்கப்பட்டுள்ளன. சுமார் 600 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுவரையில் அவை வெளியில் கொண்டு வரப்படவில்லை. காரணங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவுடன் மேற்கொள்ளப்பட்ட 3 ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த 19 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. தடயவியல் தொடர்பில் எதிர்வரும் மாதாம் 30 ஆம் திகதி அறிக்கை தருமாறு பேராசிரியர் ராஜ்சோம தேவாவிடம் கோரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி முதற்கட்டமாக 09 நாட்களும், இரண்டாம் கட்டமாக 45 நாட்களும், மூன்றாம் கட்டமாக 56 நாட்களும் என்ற அடிப்படையில் 110 நாட்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170 பிற சான்று பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அரசாங்கம் அனுமதியளித்தது. ஆனால் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச இராஜதந்திரிகளுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.

செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

கொக்கிளாய், மன்னார் – சதொச , மன்னார் – திருக்கேதீச்சரம், கிளிநொச்சி – கணேசபுரம் ஆகிய பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றும் அவை முறையாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. கொக்கிளாய் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் பெரும்பாலானவை வாய் பிளந்த வண்ணம் அடையளப் படுத்தப்பட்டன. ஒன்று அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது குற்றுயிருடன் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இந்த அகழ்வு பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை.

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும். தென்னாபிரிப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

செம்மணி மனிதபுதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச் சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு..!

0

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முரசுமோட்டை சேர்ந்த சிறுவன் தனது சகோதரருடன் சேர்ந்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் ‘டிரெய்லர்’ பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு வந்த உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிறுவர்கள் இருப்பதை அறியாமல், அதை இயக்கி முற்றத்தில் திருப்ப முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இருந்து கீழே விழுந்த சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான்.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இச்சம்பவம் தொடர்பாக உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்..!

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்இடம்பெற்றது.

​இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றுமுன் தினம் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை (KKS) துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் சிக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்..!

0

உயர்தரப் பரீட்சை மண்டபம் ஒன்றில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி, பிடிப்பட்ட மேற்பார்வையாளரையும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை மேற்பார்வை பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்ததாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உடன் வேண்டும்..!

0

எமது சங்கத்தால் கடந்த திங்கட்கிழமை (17/08/2026) அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் உட்படாது, எமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான தீர்வை பெறும் வரை முன்னெடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகதர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (19.08.2026) இடம்பெற்ற ஆளுநருடனான சந்திப்பிற்கும் குறித்த போராட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்த எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எமது போராட்டத்தின் முதல்நிலை நோக்கமான ‘குறித்த அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்” என்பதில் இருந்து நாம் பின்வாங்கப் போவது இல்லை என்பதை எம் சக உத்தியோகத்தர்கள், எமக்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை உடையோருக்கு தெரியப்படுத்துகின்றோம்.

தொழிற் திணைக்களத்தில் முறையாக பதிவுசெய்து வடக்கு மாகாணம் தழுவிய வகையில் மாகாண சேவை மற்றும் மத்திய சேவையில் கடமையாற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டு கடந்த 10 வருங்களுக்கு மேலாக செயற்படும் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி செயற்படுவோம் என்பதனையும், குறித்த போராட்டத்தின் இலக்கை அடைய நாம் ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்த குறித்த கலந்துரையாடலுக்கு, வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய எமக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதனை கவனத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது போராட்டத்தையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் மலினப்படுத்தும் நோக்கோடு பிரதான தொழிற்சங்கமாகிய எம்மைத் தவிர்த்து பிறிதொரு பகுதியினரை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியமைக்காக எமது கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் அவர்கள் முன்னெடுக்க மாட்டார் என நம்புவதோடு தனது நேர்மையான செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் “வாய்மையே வெல்லும்” என்ற நோக்கோடு செயற்படுவார் என நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களது காணிகளில் உப்பளம்; சஜித்தின் கவனத்திற்கு கொண்டு வந்த ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 19.08.2026இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்படி விடயத்தினை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு தமிழ்மக்களின் தனியார் வயல் காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் 54ஏக்கர் தனியார் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்பட்டு வருவதாகவும், மாத்தளன் பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு ஏற்ற அரச காணிகள் காணப்படுவதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச,

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி அந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றும் போது பராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது தொடர்பாக கடந்த 2026.03.12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கௌரவ. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது.

குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.

அமைச்சர் அவர்களால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அத்தியேட்கரால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 2026.07.28 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

மகாவலி அதிகார சபை இந்தத்தீவிலுள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப் பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப் பேரவையில் மீண்டும் பதிவு செய்கிறேன். தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் தெரிவிக்கின்றேன் – என்றார்.

கல்முனை தாதியர்களின் சீருடைச் சர்ச்சை; சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு..!

0

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான விவகாரம் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்துச் சுகாதார அமைச்சர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டது.

​அம்பாறை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்யும் நோக்கோடு இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 19.08.2026 சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

​இச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள், வைத்திய சாலையின் நிர்வாகக் கட்டமைப்பு சீராகச் செயற்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட அவர், மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை அமைதியான வழியில் கையாண்டு இவ் விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுமாறு அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

​இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!