Saturday, October 25, 2025
Huis Blog

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விரைவு கணித போட்டியில் முறைகேடு..!

0

09/10/2025 அன்று நடைபெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான விரைவு கணிதப் போட்டியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன எனவும் அதனை உரிய முறையில் அறிவித்த போதும் வலயக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் எடுக்கவில்லை எனவும் இதனால் சிறுமி ஒருவர் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தரம் 04 விரைவு கணித போட்டியில் பங்கு பற்றிய போது குறித்த ஒரு மாணவிக்கு மட்டும் தரம் 02 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்களின் பின் வினாத்தாள் பெறப்பட்டு தரம் 04 வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின் மூன்றாவது தடவையாகவும் வேறொரு வினாத்தாள் வழங்கப்பட்டு போட்டி நடைபெற்றுள்ளது.



மேற்படி விடயங்கள் காரணமாக குறித்த மாணவி மன அழுத்தத்திற்கு உள்ளாகி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபர் ஊடாக 13/10/2025 அன்று எழுத்து மூலம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்திருந்தும் இன்று வரை எதுவிதமான பதிலும் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் 31/10/2025 அன்று மாகாண மட்ட விரைவு கணிதப் போட்டி நடைபெற உள்ளது.

குறித்த மாணவி சென்ற வருடம் தரம் 03 விரைவு கணிதப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றதுடன், இவ்வருடம் நடைபெற்ற கோட்ட மட்டப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



வட மாகாண கல்விப் புலத்திலுள்ள உரிய அதிகாரிகள் மாணவியின் கல்வி உரிமை பாதிப்படையாத வண்ணம் உடனடியாக விசாரணை ஒன்றை நடாத்தி குறித்த மாணவிக்கு நிவாரணத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் செயற்பாடுகள் மாணவர்கள் சார்பாக நடைபெறாமல் இருப்பதை மேற்படி விடயம் நிரூபணமாக்கியுள்ளது. இது மட்டுமின்றி வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே செல்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் அதிக கவனத்தை செலுத்தும் இலங்கை ஆசிரியர் சங்கமானது மேற்படி மாணவியின் விடயத்தில் அதிக கரிசனை கொண்டுள்ளதுடன், மாணவியின் கல்வி உரிமையைப் பாதுகாக்க எப்போதும் முன்னிற்கும் என்பதை தெரியப்படுத்துகின்றோம் எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில்; ஆதரவை வழங்குமாறு ஆளுநர் கோரிக்கை..!

0

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.10.2025) கலந்துரையாடல் நடைபெற்றது.



கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் த மனேஜ்ட்மன்ட் க்ளப் வடக்குக்கான முதலீட்டாளர் மாநாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், தொழில்துறை அமைச்சகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் இந்த மாநாட்டை முன்னெடுப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



மாநாட்டுக்குத் தேவையான எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக, எமது மாகாணத்தை மேம்படுத்த முடியும்.

உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு எமது மாகாணம் 4.2 சதவீதமே பங்களிப்புச் செய்கின்றது. அதனை ஆகக் குறைந்தது 10 சதவீதமாகவேனும் உயர்த்த வேண்டும். அதற்கு இவ்வாறான முதலீட்டாளர் மாநாடுகளும் அதன் ஊடாக எமது மாகாணத்தை நோக்கி முதலீட்டாளர்களும் வரவேண்டும்.



முதலீட்டாளர்கள் இங்கு வருகின்ற போது அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை அரசாங்க அதிகாரிகள் வழங்கவேண்டும். அதேநேரம், மக்களும் முதலீடுகளை எதிர்க்காமல் அந்த முதலீடுகள் ஊடாக எமக்குத் தேவையானவற்றை பேரம்பேசிப் பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் பங்கேற்றனர்.

பெக்கோ சமனிடம் இலஞ்சம் பெற்ற அதிகார சபையின் முன்னாள் தலைவர்..!

0

தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.



தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமன்’, தனக்கு சொந்தமான ரூபா 8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை கண்டுபிடிக்க கடந்த நாட்களில் குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார்.

இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் ரூபா மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை இயக்குங்கள்” என முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.



பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.



இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது காலத்தை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு..!

0

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் நெடும் பயணத்தில் ஈடுபடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களில் இந்த நீண்ட நெடும் பயணத்தில் சிறு சிறு பேச்சுவார்த்தைகளுக்கான வழிகள் அல்லது ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.



எனினும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னமும் அது குறித்து சிந்திக்கவில்லை என ஸ்ரீதரன் கூறினார்.

சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் ஸ்ரீதரன் வெளிப்படுத்தினார்.



ஜனாதிபதி தெரிவாகி ஒருவருடம் கடந்துள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒருவருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர அரசியல் பிரச்சினை உள்ளது என்றும் அந்த நிரந்தரமான அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.



காலம் இழுத்தடிக்கப்படுவதே தவிர அரசாங்கம் இன்னமும் ஊக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பது தான் தம்முடைய நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள HIV மற்றும் பாலியல் தொற்றாளர்கள்..!

0

லங்கையில் 150,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உடனடி தலையீடு இல்லாவிட்டால், வரும் ஆண்டுகளில் நாட்டில் HIV மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்றுகள் (எஸ்.டி.ஐ) கூர்மையாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.



சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த புள்ளிவிவரங்கள் பரந்த சமூகத்தில் பதிவு செய்யப்படாத நபர்களைக் கணக்கிடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு யாழ் காதலனுடன் பெண் மாயம்..!

0

முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவன், தனது பிள்ளைகளுடன் மனைவியை தேடிவருவதாக கூறப்படுகின்றது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பில் வசித்த குறித்த குடும்ப பெண் , தனது கணவன் மற்றும் 3,6,9 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டு பெருமளவான நகை மற்றும் பணத்துடன் தலை மறைவாகியுள்ளார்.



குறித்த பெண் தற்பொழுது காதலனுடன் யாழ் தென்மராட்சி பிரதேசத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் 077622114 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளதாக சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.

யாழ்தேவி தொடருந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் மது அருந்திய குற்றச்சாட்டில் கைது..!

0

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ தொடருந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் இன்று (25.10.2025) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த குறித்த தொடருந்து, பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தை அடைந்துள்ளது.



இதன் போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்நது, அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.



யாழ்தேவி தொடருந்துக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி சுவிஸில் இன்று முக்கிய கூட்டம்..!

0

சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக் கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வெளியான அறிக்கையில்,

“எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டது, என்றைக்கும் அது மறைக்கப்பட வேண்டியதல்ல – நீதிக்கு வழிகாட்ட வேண்டியது. அதற்காகவே இந்த கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.



2009ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களையும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையையும் சர்வதேச நாடுகள் பார்த்தும், பேச மறுக்கும் கொடூரங்களாகவே உள்ளன.

16 வருடங்களாகியும் இன்றுவரை எமது மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதே கவலைக்குரிய உண்மை. ஆகவே, இந்த வலியை தினமும் மனதில் சுமந்து வாழும் நாம் இனியும் மௌனமாய் இருக்கக் கூடாது.



எங்கள் குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) அடுத்த பொதுக்கூட்டத்தில் (Parteitag 25/10/2025) விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய தீர்மானத்தை, எங்கள் குழு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.

இத்தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் நீதி என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 2009ம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.



மேலும், அந்த நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுந்தூரப் பேருந்து பயணிகளுக்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்..!

0

நெடுந்தூர பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கும் வீதியோர உணவகங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புத்தளம் பாதையில் முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



நாடாளுமன்ற உறுப்பினர் சேனா நானாயக்கரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நெடுந்தூர பேருந்துகள் நிறுத்தப்படும் 73 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புத்தளம் பாதையில் 14 உணவகங்களும், ஹை லெவல் வீதியில் 19 உணவகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.



கூட்டு கால அட்டவணையை அறிமுகப்படுத்தும் போது ஏனைய பகுதிகளிலும் உணவகங்களை அடையாளம் காணப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் (PHI) மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஒழுங்குபடுத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை – சஜித் பகிரங்க குற்றஞ்சாட்டு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், இது ஒரு தீவிர பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேன்று(24.10.2025) நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டிய அவர், வெலிகம பிரதேச சபை தவிசாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.



நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது நகைச்சுவையல்ல. ஒருவர் கொல்லப்பட்டால் என்ன செய்ய முடியும்? வெலிகம சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

error: Content is protected !!