தற்போதைய எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அடுத்த புதன்கிழமை (17) முதல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.
மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த விடுமுறை சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.
அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந் தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) 2026.03.16 (திங்கட்கிழமை) மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கெளரவ வேதநாயகன், பிரதி அமைச்சர் கெளரவ உபாலி சமரசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும், வவுனியா மாவட்ட செயலாளர் திரு. சரத்சந்ர ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அவர்களுடன் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகத்தினர், மன்னார் – வவுனியா பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டுக் குழுவினரால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் ஆசியுரையைத் தொடர்ந்து வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. நோக்கவுரையினை வடமாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் முஸ்லீம் மாணவர்களின் கலை கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் பாங்கும் துவாவும் ஓதப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலாசார நிகழ்ச்சிகளை பாடசாலை மாணவர்கள் வழங்கினர். மாலை 7.00 மணியளவில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.
வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார்.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 12.03.2026 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார்,
வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கி வருகின்றன.
இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தார்.
மன்னார் – நறுவிலிக்குளம் அ.த.க பாடசாலையின் 2026ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்புற இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்ட விரோத அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக் காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்தி குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் 12.03 2026இன்று இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளி என்னுமிடத்தில் அப்பாத்துரை துரைசாமி, கதிரேசு நாகரட்ணம், குமாரசாமி கணபதிப்பிள்ளை, கதிரேசு கந்தசாமி என்பவர்களுக்குரிய தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை என்பன சட்டவிரோதமாக அனுமதிகளை வழங்கியுள்ளன.
இந்நிலையில் அங்கு தமிழ் மக்களுக்குரிய அந்த காணிகளில் உப்பளம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியால் காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கும், சட்டவிரோத அனுமதியுடன் அங்கு உப்பளம் அமைக்க முயற்சித்தவர்களுக்குமிடையில் கடந்த 27.02.2026அன்று முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இவ்வாறு தமது தனியார் காணிகளுக்குள் இவ்வாறு அத்துமீறி நுளைந்து உப்பளம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமும் அப்பகுதி மக்களால் நேரடியாகச் சென்று முறைமயீடும் செய்யப்பட்டது.
அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பதற்கான ஆவணங்களும் என்னிடமுள்ளன. இவ்வாறு தனியார் காணிகளாக இருக்கும் போது அந்தக் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு அங்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களும் என்னிடமுள்ளன. இந்த ஆதாரங்களை அமைச்சரிடம் கையளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.
தமிழ் மக்களின் தனியார்காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகார சபையாலும், வனஜீவராசிகள் திணைக்களத்தாலும் எவ்வாறு அனுமதி வழங்க முடிந்தது. இவ்வாறாக மகாவலி அதிகாரசபையும், வனஜீவராசிதள் திணைக்களமும் மிகமோசமான அத்துமீறல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொக்கிளாய் களப்பில் நீர் வரத்து அதிகமாக இருக்கும்போது பாதிப்பு ஏற்படுமா என கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடமும் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களமும் இதுதொடர்பில் எம்மிடம் கலந்துரையாடவில்லை. முல்லைத்தீவு மாவட்ட ஒரங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கான அனுமதி கோரப்பட்டபோதும் அதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. இந்த அரசின் ஆட்சியில் கூட இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரசேசசெயலாளர் ஆகியோரிடமிருந்தும் கூடுதல் தகவல்ஈளைப்பெறமுடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் கே.டி.லால்காந்த இதன்போது மகாவலி அதிகாரசபையிடம் இவ்விடயம் தொடர்பில் விக்கங்கோரினார்.
அதற்கமைய மகாவலி அதிகாரசபையின் அதிகாரி இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டிற்கு உரியவாறு அனுமதிகள் பெறப்பட்டதாகவும், வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு அந்தக்காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அக்காணிகள் காணிகள் தனியார் காணிகள் எனில், அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்கமுடியும் எனவுந் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இடையிட்டுக் கருத்துத் தெரிவிக்கையில்,
மகாவலி அதிகார சபையிடம் நாமும், எமது தமிழ் மக்களும் வருகைதரவேண்டிய அவசியமில்லை.
எமது மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கும், முறைப்பாடுகளைப் பதிவுசெய்யவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குத்திற்குத்தான் செல்வார்கள். எமது மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகமே பொறுப்பாகும்.
அவ்வாறிருக்கையில் நீங்கள் எமது தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி அபகரித்துள்ளீர்கள். ஒருபோதும் மகாவலி அதிகாரசபைக்கு எமது தமிழ் மக்கள் வருகைதர மாட்டார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரே எமது மக்களுக்குப் பொறுப்பானவர்கள்.
அங்கு வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன தமக்கு அனுமதிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்து மரங்களை வெட்டி குடில்கள் அமைக்கும் சட்டவிரோத செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறெனில் இங்கு என்ன நடக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த உப்பளம் அமைப்பதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கூறியதைப்போல, அந்த உப்பளம் அமைக்கப்படுகின்ற பகுதியில் ஒரு தனியார் காணி இருப்பதாக உரிய ஆவணங்களுடன் வருகைதந்து அந்த ஊர்மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
அந்த காணி அமைந்திருக்கின்ற இடமும், உப்பளம் அமைக்கப்படுகின்ற இடமும் ஒரே பிரதேசமாக இருந்தாலும் அந்த இடத்தை எம்மால் சரியாக இனங்காணவேண்டிய தேவையுள்ளது.
அதில் இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக மக்களால் தனியார்காணி என முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. அந்த தனியார் காணிகளுக்குள்ளேதான் அந்த உப்பளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்.
அத்தோடு அங்கு உப்பளம் அமைக்கப்படுவதால் தமக்குப் பாதிப்பு இருப்பதாக அருகே உள்ள களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களாலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்குரிய அனுமதியை சுற்றாடல் அமைச்சு வழங்கியுள்ளது. எனவே முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் இதுதொடர்பில் மகாவலி அதிகாரசபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
காணியை உறுதிப்படுத்திய பிற்பாடு இந்த உப்பளம் அமைகும் திட்டத்தை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். எனவே உப்பளம் அமைக்கும் செயற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னர் அந்த திட்டத்தை மேற்கொள்வதுகுறித்துத் தீர்மானிக்கலாம்.
ஏன் எனில் தமிழ் மக்களால் தமது உறுதிக்காணிகள் எனக் கோருகின்ற காணியும், உப்பளம் அமைக்கப்படுகின்ற காணியும் ஒரே காணியா வெவ்வேறு காணியா என்பதை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தாலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தாலும் மிகச் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையிருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
நிலம் என்பது எமது இறைமை. எமது தமிழ் மக்களின் நிலங்கள் அனைத்தையும் பறித்தெடுத்தால் எமது மக்கள் எங்கு செல்வது.
எனவே இந்த விடயத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தனியார் காணிகளை அத்துமீறி ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு பொறுப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லால் காந்தவிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்தவிடயத்தை ஆராய்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் பாரப்படுத்துவதாக விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி லால் காந்த இதன் போது பதிலளித்தார்.
போர் ஆரம்பித்த ஒரு வாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 1929 பேர் காயமடைந்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுள் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுள் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவர்களில் சிலர் ஏவுகணைத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (08)தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் அசங்க(61867) ரன்வெல(61518) மிதுசன்(91800) நியாம்(84963) றொசான்(86009) ஆகியவர்களை கொண்ட காவல்துறை குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈரானியக் கப்பல்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானியர்கள் தொடர்பாக இலங்கை எடுக்கும் இறுதி முடிவுகள் நாட்டின் இறைமைக்கு உட்பட்டது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், IRIS Bushehr கப்பல் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச கடற்படை விதிகளுக்கு மதிப்பளிப்பதாக வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இராஜதந்திர நகர்வு, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் இலங்கையின் சுயாதிபத்திய உரிமையைச் சர்வதேச மட்டத்தில் பலப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், கடல்சார் விவகாரங்களில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்திலும், லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் உன அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாய் ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாயாக பதிவாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மார்ச் மாதத்திற்கு 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை, 7,800 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாலைதீவில் தற்போது முக்கிய இருப்பு வைத்திருக்கும் ஒரு கப்பலில் இருந்து மேலும் 30,200 மெட்ரிக் தொன் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.