Monday, May 4, 2026
Huis Blog Bladsy 114

மனித உரிமை ஆணையர் விஜயத்தின் மீதான எதிர்பார்ப்பு – லக்ஸ்மன்

0

வரலாற்றுக் காலந்தொட்டே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக இடம் பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்றுவரை தோற்றுப் போயே இருக்கின்றன. இதில் நேரடியாக அரசுக்கும் பங்கிருப்பதும் இதற்குக் காரணம்.

மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் ஓர் நிழல் யுத்தத்தினை எதிர்கொண்டே வாழ இந்த அரசுகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். என்பது மனித உரிமை அமைப்புகள், சிவில் அமைப்புகள், செயற்பாட்டாளர்களின் வெளிப்படுத்தலாக இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் இலங்கை அரச பொறிமுறையானது தமிழ் மக்கள் சுதந்திரமாகச் செயற்படமுடியாவண்ணம் நடவடிக்கைகளை முன் நகர்த்துகிறது. தமிழ் மக்களின் நிலங்கள், குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் தவறான முறையில் சுவீகரிக்கப்படுகின்றன.

அதற்கான அண்மைய முயற்சியாகக் கடந்த மாதம் வெளியிடப்பட்டு வாபஸ் பெறப்பட்ட காணி உரிமை கோரல் வர்த்தமானியைக் குறிப்பிடமுடியும். அதே நேரத்தில், வடக்கு கிழக்கு மக்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளையும் பெரும்பான்மை சமூகமும் அரசாங்கமும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

ஆட்சிகள் மாறினாலும் அரசாங்கத்தினதும் அதன் கட்டமைப்புகளினதும் செயற்பாடுகளில் மாத்திரம் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்பட்டதாக அடையாளம் காணாத இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத்
தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியாத புதிரே.

மனித உரிமை பாதுகாவலர்கள், செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு இலங்கை அரசின் இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்ட வகையிலான அச்சுறுத்தல்களுக்கும் நெருக்குதலுக்குள்ளும் இருந்து கொண்டு காலங்கடத்த வேண்டிய நிலைமையே காணப்படுகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூறமுடியாமலும், போர் குற்றங்கள், இனஅழிப்பு, மனிதப்புதைகுழிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறாமலும் இருந்து கொண்டு அதனை இராஜதந்திர வகைகளில் தவிர்ப்பதையே இலங்கை அரசு கவனமாக மேற்கொள்கிறது. இதனையே சர்வதேச தரப்புகள் ஏற்று நடக்கின்ற சூழலே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் துர்க் அடுத்த வாரம், இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவரது விஜயம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களின் பின்னர், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நடைபெறுவதாகப் பேசப்படுகிறது.

அந்தவகையில்தான் இந்த விஜயத்தில் தமிழ் மக்கள் சார்ந்து நடைபெறவேண்டிய, கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களிடம் காணப்படுகின்ற எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத நிலையில் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் தங்களின் எதிர்பார்ப்பான சுயநிர்ணய உரிமையானது எப்போது கிடைக்கும் என்பது ஏக்கத்துக்குரியதாகவே மாறிவிட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் புரையோடிப்போன இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் யுத்தத்தின்போது, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தினை எதிர்பார்ப்பதும் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் புதைந்து போனதாக எல்லோரும் எண்ணிக் கொண்டாலும், அந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடைபெற்று 15 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கான நீதி இதுவரை எட்டாக்கனியாகவே
இருக்கிறது.

ஓவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளின் போது, நிச்சயமாக இவ்வருடத்தில் நாம் கோரும் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதும் ஏமாறுவதும் வழமையாகிவிட்டது. இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுவிடுமா என்பது அவர்களின் கனவானதாக இருக்கிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் துர்க் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகள் குறித்தும் மனித உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் எவ்வாறான கவனித்தலை மேற்கொள்வார் என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாததே.

இருந்தாலும், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ள செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகளைப் பார்வையிட வேண்டும்.

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 21இற்கும் மேற்பட்ட மனித புதைகுழி அகழ்வின் போது, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு அழைக்கப்பட்டுக் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெற வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள மனித புதை குழிகள் தொடர்பாகவும், இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாகவும் இலங்கை அரசைப் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் என்றும் நீண்ட கோரிக்கை இருக்கிறது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியினையும் வழங்கக் கூடிய சர்வதேச பொறிமுறை ஊடான விசாரணையினை மேற்கொள்ள உதவுதல்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கள நிலைவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு முன்னால் இருக்கின்றன.

இலங்கை அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கைக்கான பொறுப்புக் கூறல் திட்டக் குழுவினர் இலங்கைக்குள் வருகை தருவதற்கும் அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இருந்தாலும், மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள் அதுதொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிக்கவுமில்லை. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும், அதனைப் பூரணப்படுத்துவதற்கான போதாமையுடனேயே காலம் நிறைவடையவுள்ள திட்டத்திற்குக் கால நீடிப்பு தேவையாக இருக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட 40இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான நீதிக்கான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டவைகளாகவே இருக்கின்றன.

அரசியல் நலன்களுக்காக, கண்துடைப்புக்காக அவை கையிலெடுக்கப்பட்டாலும் பயன் எதுவும் நடைபெறுவதேயில்லை. புதிய அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கானதல்ல.

இணைபிரியா வடக்கு – கிழக்குத் தாயகம் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு காணாமல் போய் நீண்டகாலமாகிவிட்ட ஒரு நாடு, ஓர் அரசு, ஒரு சட்டம் என்றமைகின்ற இலங்கையில் தமிழர்களுடைய சுயநிர்ணயக் கோரிக்கைகள் காணாமல் ஆக்கப்படும் என்பது நிச்சயமாகிவிட்ட நிலையில், தமிழர்களுடைய இனப் பிரச்சினை குறித்த விடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையினால் எந்த அளவுக்குச் சாத்தியப்படும்.

இனக் கலவரங்களையும், இனப் பரம்பல் மாற்றங்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகளை மழுங்கடிக்கும் வகையிலேயே செயற்பட்டிருந்தன. இதில் புதிய அரசு மாற்றமுடையதாக இருக்குமா என்றால் அது காத்திருப்புக்கானது.

சீடோ சமவாயம் இலங்கையில் சட்டமாக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் காணப்பட்டாலும் அது இன்னமும் நடைபெறவில்லை. இதற்கான வலியுறுத்தலை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குக் கொடுப்பாரா பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டையும் முற்றாக நீக்குவதற்கான எந்தவித தோதான நிலைமையும் உருவானதாகத் தெரியவில்லை.

இன அழிப்புச் செயற்திட்டங்களும், பொறுப்புக் கூறல் தட்டிக்கழிக்கப்பட்டு கால இழுத்தடிப்புகளும் பூசி மெழுகல்களும் நடைபெற்று வருகின்ற இலங்கையில், மனித உரிமைகள் ஆணையாளர் 76 வருட தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை அரசு உடன்

மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பாரா பொறுப்புக்கூறலை விடுத்து நீதி வழங்கலுக்கான சூழலை ஏற்படுத்துவாரா அல்லது இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான நிகழ்ச்சிநிரலுக்குள் அகப்பட்டு அந்த அலையில் அடிபட்டு அமைதியாவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெறுமனே அழுத்தம் பிரயோகத்தல் மாத்திரம் எதனையும் அடைந்து தராது என்பதும் கட்டாயப்படுத்தலும் அதனையும் தாண்டிய செயற்பாடுகளே பொருத்தமுடையதாக இருக்கும் என்றாலும் மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கைக்கான விஜயம் அடுத்த மனித உரிமை அமர்விலேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்போம். தொடர்ந்தும் அதனையே செய்வோம். மாற்றமில்லாதது அதுவொன்றே.

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நாளை ஆரம்பம்..!

0

யாழ் – செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு 45 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில் அகழ்வு பணிக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் , நாளைய தினம் வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தினால் சிறை..!

0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 16-18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டணம் குறைப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செம்மணி போராட்டத்தில் பதற்றம்; விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்..!

0

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா விளக்கு“ இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் முரண்பட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்து பொதுமக்கள் சீற்றமடைந்ததனர்.

அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சி.வி.கே சிவஞானத்தை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து வெளியில் செல்லுமாறு கோரி முரண்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து போராட்டக் களத்தில் இருந்து சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவருடனும் முரண்பட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து போராட்டக் களத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி போராட்டத்திலிருந்து வெளியற்றப்பட்ட அமைச்சர் சந்திரசேகர்..!

0

யாழ் செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ரஜீவன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதன்போது, போராட்டக்காரர்கள் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே வெளியேற்றியுள்ளனர்.

இந்த நிலையில், செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய அணையா விளக்கின் இறுதி நாள் இன்றாகும்.

மன்னாரில் தந்தை செல்வா மீது தாக்குதல்; ஒருவர் அதிரடியாக கைது..!

0

மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலையே இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் காலை மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் சிலைக்கு அருகில் இருந்து உடைக்கப்பட்ட தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகினார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்..!

0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் கட்சிப் பதவிகளிலிருந்து , விலகியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார்.

மேலும், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வடக்கில் ஆரம்பம்..!

0

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.06.2025) நடைபெற்றது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ம.ஜெகதீஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மாவட்டச் செயலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் தனது வரவேற்புரையில்,

ஜனாதிபதி நிதியத்தின் நிதி கடந்த காலத்தில் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தாம் இதைச் சரியான வகையில் செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில்,

ஜனாதிபதி நிதியத்தின் ஊடான சேவைகள் வழங்கலில் கடந்த காலங்களில் பாரபட்சம் இருந்தது. அத்துடன் மக்கள் கொழும்பை நோக்கி வரவேண்டியிருந்தது. அது மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவத் தேவைக்காக மாத்திரமல்ல கல்வி உள்ளிட்ட ஏனையவற்றுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்தே உதவி வழங்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மாணவர்களுக்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் 150 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் தீர்மானித்திருக்கின்றோம், என்றார்.

செம்மணி போராட்டத்திற்கு ஆதரவாக மட்டுவில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு..!

0

செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை(23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் -கோட்டைக்கல்லாறு பாலத்தில் அருகாமையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம்.

நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இந்த போராட்டம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்த மூன்று நாட்களில் நடைபெற இருக்கின்றது.

யாழ் மாவட்டத்திலே அந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக வலுச்சேக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த விடயத்திற்கான பூரணமான ஆதரவும் இந்த விடயத்தை ஆராய வேண்டும் என்று நாங்களும் விரும்புகின்றோம் என்கின்ற செய்தியை சொல்வதற்காக இந்த மாபெரும் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம். என தெரிவித்தார்.

error: Content is protected !!