வடக்கு மாகாணத்தில் 3,517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில்1,756 பேர் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
”வவுனியா மாவட்டத்தில் கல்வியில் இடமாற்றங்கள் பூதாகரப் பிரச்சினையாகவுள்ளது.
வடமாகாணத்தில் இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார், துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேண்டிய ஆசிரியர்களில் 99 வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை, அந்த வலயங்களுக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில் 29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளார்கள். 4 ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைக்களம் கரிசனையோடு கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது இடமாற்றம் சிலவற்றில் பிழைகள் இருக்கிறது. தெரிவுகளில் தவறுகள் உள்ளது. எதிர்வரும் காலத்தில் துல்லியமான தகவல்களைப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம்பெறாத வகையில் இடமாற்றம் வழங்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் 3,517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசாங்கத்தின் சுற்று நிருபம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் பட்டதாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த சுற்று நிருபம் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுற்று நிருபத்தில் 1,756 ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். பற்றாக்குறையில் 50 வீதம் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியும்.
ஆனாலும் அதில் ஒரு தடை உள்ளது. ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கையும் விரைவாக முடித்து இந்த வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க எண்ணியுள்ளோம்.
பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித்தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்கு தேவையான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் இடமாற்றப் பிரச்சினையையும் தீர்க்க முடியும். இது தொடர்பில் ஆளுநருடன் பேசியுள்ளோம்.” என தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி சாட்சியங்களை சிதைத்து அவற்றை அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி தோண்டியெடுப்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சான்றுகள் சேகரிப்பு நடத்தப்பட வேண்டுமா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கேள்வியை தொடர்ந்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“செம்மணியில் ஒரு கூட்டுப் புதைகுழி தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம், மனித உரிமைகள் மற்றும் போரின் போது அப்பாவி தமிழ் மக்களின் அவலநிலை குறித்து அக்கறை கொண்டவர்களின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜூலை 1998 இல், தமிழ் பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் ஈடுபட்டதற்காக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார், மேலும் அவரைத் தேடி வந்த நான்கு பேரின் கொலைகளும் இதில் அடங்கும். தனது விசாரணையின் போது, செம்மணிக்கு அருகிலுள்ள ஒரு கூட்டுப் புதைகுழியில் சுமார் நானூறு பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செம்மணிப் புதைகுழி தோண்டியலின் இரண்டாம் கட்டத்தின் 6 வது நாளின் போது, குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று தெளிவாக புதைக்கப்பட்டிருந்த ஒரு தனித்துவமான நீல நிறப் பள்ளிப் பையுடன் இருந்தது, இது யுனிசெஃப் விநியோகித்த வகையானது மற்றும் ஒரு பொம்மை.
இதுவரை, அகழ்வாராய்ச்சியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் எடுக்கப்பட்டு அரசு நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மனித உரிமை ஆர்வலர்கள் சாட்சியங்களை சிதைத்து இந்த எலும்புக்கூடுகள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, அகழ்வாராய்ச்சியிலிருந்து ஆய்வகம் வரை எச்சங்களை யார் கையாண்டார்கள் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் அவசியம் என்பதால், காவல் சங்கிலியில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இல்லையெனில், தடயவியல் முடிவுகள் சட்டப்பூர்வமாக பலவீனமடையும்.
சர்வதேச மேற்பார்வையின் கீழ் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பாதுகாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசு அல்ல, சுயாதீன தடயவியல் குழுக்கள் அல்லது சர்வதேச நிபுணர்கள் ஆதார சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வைக் கையாள வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானம் 46/1 இன் படி, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் அதிகாரம் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. ஐ.நா. தான் கொண்டுள்ள ஆணையை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.
1998 ஆம் ஆண்டு ராஜபக்சேவின் சாட்சியம் பல செய்தி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் அரசு சாரா நிறுவனங்களால் வெளியிடப்பட்டதிலிருந்து, செம்மணியில் ஒரு பெரிய புதைகுழி இருப்பதை உலகம் அறிந்திருக்கிறது. ஆனாலும், இப்போதுதான் அது தோண்டப்படுகிறது. இப்போதும் கூட, சான்றுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஐ.நா.வின் செயலற்ற தன்மையின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இன்று, இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம், கல்லறைத் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, 46/1 தீர்மானத்தின் ஆணைக்குள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 இன் இணை அனுசரணையாளராகவும், இலங்கையில் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வரலாற்றுப் பொறுப்பைக் கொண்ட நாடாகவும், ஐக்கிய இராச்சியம் இந்தப் பிரச்சினையில் முன்னிலை வகிக்க வேண்டும்.
செம்மணி படுகொலை மற்றும் அதைப் போன்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய, இப்போது ஒரு சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் உள்ளபடி, இது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும். நீதிக்கான ஒவ்வொரு வழியும் நிறைவேறும் வரை அவர்கள் ஓய்வெடுக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்.
குறைந்த தரம் வாய்ந்த உதிரி பாகங்களை அதிக விலைக்கு வாங்கி பேருந்துகளில் பொருத்தும் ஒரு மோசடி பண்டாரவளை டிப்போவில் இடம் பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க நேற்று(04) பண்டாரவளை டிப்போவின் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
குறித்த ஆய்வுப் பயணத்தின் போது, குறைந்த தரம் வாய்ந்த உதிரி பாகங்களை அதிக விலைக்கு வாங்கி பேருந்துகளில் பொருத்தும் ஒரு மோசடி குறித்து ஊழியர்கள் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பண்டாரவளை டிப்போ தொடர்பாக எழுந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்தும் தலைவர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் அதன் ஊழியர்களின் குறைபாடுகள் குறித்தும் விசாரணையில் கேட்டறிந்து கொண்டார்.
இந்த கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார மற்றும் கித்னன் செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (03) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்று களவாடப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் இவ்வாறு விக்கிரகத்தை களவாடிச் சென்றுள்ளனர். அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (3) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம் தரத்திலும் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு மத்தியில் சிறு சிறுவர் முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதை அவதானித்துக் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் தந்தை ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்கிய நபரை வாழைச்சேனை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி, அறிவுறுத்தல் விடுத்தும், இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை.
நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை குறைப்பது எதிர்ப்பது குறித்து அரசாங்கத்திற்கு எந்த யோசனையும் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எந்த வேலைத்திட்டமோ அல்லது தொலை நோக்குப் பார்வையோ இல்லாததொரு அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், பல்வேறு அடக்குமுறை கும்பல்கள், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கும்பல்கள் இந்நாட்டில் தொடர்ந்து கொலைகளைச் செய்து வருகின்றன. இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகத்தில் வாழும் உரிமை இல்லாது போயுள்ளது. வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ராமஞ்ஞ மஹா பீடத்தினால் இரு வருடங்களுக்கு ஓரு முறை நடத்தப்படும் உபசம்பதா புண்ணிய நிகழ்வு இன்று (03) அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்றது. 74 ஆவது தடவையாக இடம்பெற்ற இவ்வருட நிகழ்வில் 400 பிக்குகள் உபசம்பதா பெற்றனர். இப்புண்ணிய இந்நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆபத்தில்.
தேசிய பாதுகாப்பு குறித்து டியூசன் எடுப்போம் என வீராப்பு பேசிய அமைச்சர்களால், தற்போது இயலாமைக்கு மத்தியில் இருந்து வரும் அரசாங்கத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதுபோயுள்ளது. அரசாங்கம் மெத்தனப் போக்குக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தப் படுகொலைகளும் துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில், இச்சம்பங்கள் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்காது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
வீடுகளிலும், வீதிகளிலும், வேலைத்தளங்களிலும், நீதிமன்றத்திலும் கூட துப்பாக்கிச் சூடு நடக்கும் நிலைக்கு நாடு வந்துள்ளது. இதைத் தடுக்க அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லாமையினால் காட்டுச் சட்டமே கோலோச்சி காணப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி இல்லாது போய், கொலை செய்யும் கலாச்சாரம் பரவி காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்.
இன்று நாட்டு மக்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். மிகுந்த அதிர்ச்சிக்கு மத்தியில் இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தால் எந்தத் தெளிவான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுபோயுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் பலவீனமான அரசாங்கமாக காணப்படுகின்றது.
தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட மீறிய இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைக் கூட சரியாக பாதுகாக்க முடியாதுபோயுள்ளது. எனவே, தூங்கிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
இன்று விவசாயிகளுக்கு அதோ கதிதான்!
புதிய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைத்தபாடில்லை. விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியை நிராகரித்து தற்போதைய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த அரசாங்கம் இன்றுவரையில் விவசாயிகளை தோல்விக்கே ஈட்டுச் சென்றுள்ளது.
உயர்தரத்திலான விதைகள், உயர்தரத்திலான உரங்கள் கூட அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. விவசாய உபகரணங்களுக்கு செலவிடும் தொகை கூட அதிகரித்து காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளை கவனிப்பதை விடுத்து அரசாங்கம் குரங்களை கணக்கெடுத்து வருகிறது.
நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுத் தருவோம், அதற்கான சட்டமூலத்தை கொண்டு வருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசினர். ஆனால் விவசாய அமைச்சர் குரங்குகளுக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்.
அதிக நிதிகளை ஒதுக்கி, குரங்குகள் தொடர்பான போலியான கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்ல. நியாயமான விலையில் உரத்தைக் கூட இந்த அமைச்சாரால் பெற்றுக் கொடுக்க முடியாது போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றவர்கள் இன்று அரிசியை இறக்குமதி செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று உறுதியளித்த அரசாங்கம், தற்போது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சுமார் 40,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.
உப்பு முதல் அரிசி வரை எழுந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை வீழ்ச்சியின் பால் இட்டுச் சென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் மக்களுக்காகவே குரல் எழுப்பி வந்தது.
நாட்டு மக்கள் யதார்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர்களை நியமிக்கும் நடவடிக்கையில் ஆளும் தரப்பு அழுத்தம் பிரயோகித்து வந்தமை தொடர்பிலும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மை ஒரு நாள் வெல்லும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமையும் சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளை முற்றாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இரு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இதுவரை காலமுமான அகழ்வு பணிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமையுடன் 40எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஆய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட புத்தக பை , காப்பு , காலணி என்பவை சான்று பொருட்களாக குறிக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செய்மதி படங்கள் ஊடாக மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் . பல்கலை கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆடையை ஒத்த துணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படாததால் , அது எந்த வகையான துணி என குறிப்பிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை செம்மணி புதைகுழியில் தற்போது அகழ்வு பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. சான்று பொருட்களை அடையாளம் காணுதல், எலும்பு கூடுகளை ஆராய்வது போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தான் முன்னெடுக்கப்படும் அதன் பின்னரே தகவல்களை கூற முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னியாகும் சட்டத்தரணி தெரிவித்தார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய காணியை அடாத்தாக கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கன்னியா வெண்ணீரூற்று அருகில் காணப்படுகின்ற சுமார் 3 ஏக்கர் விஸ்திரம் உடைய காணியை சட்டவிரோத குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் அமைத்து கைப்பற்றி வருவது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் இருந்த காணி அதன் உரிமையாளர்களால் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணியை கைப்பற்றும் நோக்குடன் குறித்த பகுதியை சாராத சிலரால் சட்டவிரோதமாக, அவசர அவசரமாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் சட்டத்தை மீறி கட்டிடங்களை அமைத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த ஒரு சரியான நடவடிக்கைகளும் இடம் பெறாமல் பாராதீனமாக இருப்பது குறித்த பகுதி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக சட்டவிரோத கட்டிடங்கள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். அதன் போது, இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்ததையடுத்து அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகியதால் சுன்னாகம் காவல்துறையினர் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.