வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் கால்நடை வைத்திய அலுவலகங்களில் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும், அந்த நடைமுறை சில காரணங்களால் பின்னர் நிறுத்தப்பட்டது.
எனினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் அரச கால்நடை வைத்திய அலுவலகங்களூடாக கால்நடைகளுக்கான பல்வேறு மருந்துவகைகளும் நியாயமான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பண்ணையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் சில கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. அது தொடர்பில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச கால்நடை வைத்தியர்கள் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் மருந்துகளை பெறுவதிலுள்ள சிரமங்கள் தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆளுநரால் அனுமதிக்கப்பட்டதன் அடிப்படையில் விசேட நிதி ஒதுக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களின் கோரிக்கைப்படி தெரிவு செய்யப்பட்ட அவசியமான மருந்து வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு சகல கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பண்ணையாளர்களின் மருந்து தேவைகளை அலுவலகங்களிலேயே நிவர்த்தி செய்யவும் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியை பெப்ரவரி மாதம் முதல் பண்ணையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை சில்லறை விலையை விட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இது தொடர்பான விலைப்பட்டியல் கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் குறிப்பிட்டார்.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) இடம்பெற்றது.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் கல்விச் சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றிருந்தன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகாரிகளால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பிலும், எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சீர் செய்யலாம் என்றும் நிர்வாகத்தினரால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களங்களில் கலந்துரையாடல் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்வதாக ஆளுநர் இதன் போது பதிலளித்தார்.
இதவேளை குறித்த தொண்டமானாறு வினாப்பத்திரங்கள் ஓரளவு தரமானவையாக உள்ளது என்பதுடன் முன்னாள் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஜோன் குயின்ரசால் தனிப்பட்ட நலன் சார்ந்த விடயங்களுக்காக குறித்த பரீட்சைகள் நிறுத்தப்பட்டது என்பதும் குறித்த தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகிகளின் சில கடந்த காலச் செயற்பாடுகள் அதிபர், ஆசிரியர்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தன.
அந்த வகையில் வடகிழக்கில் முன்னெடுக்கும் ஜனநாயக போராட்டங்கள், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு போராட்டங்களின் போது நெகிழ்வுத் தன்மையற்ற நேர சூசிகை. அதிகாரமிக்க உத்தரவுகள், அதிபர், ஆசிரியர்களின் சம்பள போராட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகள், வினாப்பத்திரத்தை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான பிரதிகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும், பரீட்சைக் கட்டணக் குறைப்பு போன்ற சில செயற்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவதான நிபந்தனையின் கீழ் மீள வழங்குவது தொடர்பில் பரிசீலிகக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(07) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக குறித்த முரண்பாடு நீடித்து வந்த நிலையில், கீழ் வகுப்பு மாணவன் வெளி இளைஞர்களை அழைத்துச் சென்று உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் உயர்தர மாணவன் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அனுர அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் அரச திணைக்களங்கள் தூய்மையாக இருத்தல் காணப்படுகின்ற போதும் அதன் உள்ளார்ந்த விடயத்தை கருத்தில் கொள்ளாது ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என அலுவலகங்களில் குப்பைகளை கூட்டி சிரமதானம் செய்யும் படங்களை சமூக வலைதளங்களில் காணக் கூடியதாகவுள்ளது.
அண்மையில் வவுனியாவில் சுமார் 500க்கும் அதிகமாக பணிபுரியும் அரச திணைக்களம் ஒன்றில் கடமை நேரத்தில் சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர். ஏலவே அங்கு ஒப்பந்த சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் உள்ள நிலையில் சிரமதானம் என்ற போர்வையில் நேரத்தை விரயம் செய்திருந்தனர். வெளிப்பார்வைக்கு இது சாதாரணமாகத் தோன்றினாலும் குறைந்த பட்சம் சுமார் 1000 மனித மணித்தியாலங்கள் வீண்விரயம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது சராசரியாக குறைந்த பட்சம் 50,000 ரூபாய்கள் ஒருவருக்கு ஊதியமாக மாதாந்தம் வழங்கப்படுமாயின் குறித்த தினத்தில் எவ்வளவு பணம் விரயம் செய்யப்பட்டது என்பதும் அதற்கு பதிலாக விடுமுறை தினம் ஒன்றில் பதில் கடமை செய்யும் பட்சத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவாக மேலதிகமாக எவ்வளவு செலவாகும் என்பதும், குறித்த சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்பட்ட ஊதியம் போன்றவற்றைக் கணிப்பிட்டால் எவ்வளவு பணம் குறித்த திணைக்களத்தின் ‘மும்மூர்த்திகளின் மேலதிக’ தூரநோக்கற்ற செயலால் வீண் விரயமாகியுள்ளது எனப் புரியும். இதுவும் மக்களின் வரிப்பணமே.
இவ்வாறான பொருத்தமற்ற செயல்களே வடகிழக்கின் ஏனைய அரச திணைக்களங்களிலும் இடம் பெறுகின்றன.
மாறாக ஜனாதிபதி அனுரவின் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் மக்களுக்கான வினைத்திறனான சேவை, துரித சேவை, பக்க சார்பற்ற சேவைகளை வழங்குவதையே மக்கள் விரும்புகின்றனர். கடமை நேரத்தில் சிரமதானம் செய்வதால் சேவை பெற வரும் மக்களும், சேவையை வழங்கும் கீழ்நிலை ஊழியர்களும் நேரடியாகவே பாதிப்படைகின்றனர்.
எனவே இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அரசினதும், அவர்களின் உயர் மட்ட அதிகாரிகளதும் கடமையாகும்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரிப்பதுடன் அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்குகின்றனர்.
அந்த வகையில் வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் நேற்றைய தினம்(07) கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்துடன் தண்ட குற்றப்பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்
இதனால் அதிருப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப் பாகங்களில் காலால் அடித்து உடைத்திருந்ததுடன் ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையின் அரசியலில் 76 வருடங்களுக்கு மேல் காணப்பட்ட குடும்ப அரசியலை மக்களின் ஒற்றுமையுடன் உடைத்து ஆட்சியமைத்த வரலாற்று சாதனையை தேசிய மக்கள் சக்தி படைத்திருந்தது.
கடந்தகால அரசியலின் மீதான மக்களின் வெறுப்பை தனக்கு சாதகமாக பயன்ப்படுத்தி ஆட்சியமைத்த கட்சி என்று கூறினாலும் தவறில்லை.
இந்த வெற்றி, உள்நாட்டு அரசியலையும் தாண்டி சர்வதேச அரசியலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாக பேசப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் இங்கு மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பது அளவு கடந்ததாகவே காணப்பட்டது.
காரணம், கடந்த கால ஊழல் மோசடிகளை வெளிக் கொண்டு வருவதாகவும் மற்றும் மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வெளிக்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் மீதான மக்களின் நம்பிக்கை உச்சம் பெற்றிருந்தது.
ஆனால், மக்கள் பிரச்சனை மீதான ஈடுபாட்டையும் தாண்டி கட்சிக்குள்ளான சிக்கல்கள் என்பது தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
அண்மையிலும் அரசியல்வாதிகளின் கல்வித்தகைமை குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கணிசமான ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்திருந்தார்.
அமைச்சர்களின் அழுத்தங்களால் ஓரிரு மாதங்களுக்குள் ஆறு நிறுவனத் தலைவர்கள் பதவி விலகியுள்ள நிலையில் தற்போதுள்ள 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர் இவ்வாண்டுக்குள் நிச்சயம் பதவி விலகுவார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் அரசியல் வட்டாரத்தில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன், வாக்களித்த மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளார். குறித்த சம்பவம் புளியங்குளம், பழையவாடி பகுதியில் நேற்று (07) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆறு வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆறு வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.
தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் இந்தநாட்டில் ஊடகத் துறையின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும், சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் 05.02.2025இன்று இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை நசுக்கப்படுகின்ற அவல நிலையே தொடர்கின்றது.
அந்தவகையில் கடந்த போர்க்காலப்பகுதியில் பல ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்களும் ஊடகப்பணியாளர்களும் இந்த நாட்டில் தமக்கு இருந்த அச்சுறுத்தல் நிலைகளால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக தராகி சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், லசந்த விக்கிரமதுங்க போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை உதாரணமாகச் சொல்ல முடியும்.
அதேவேளை யாழ்ப்பாணத்தைத் தளமாகக்கொண்டியங்கும் உதயன் பத்திரிகை நிறுவனம், சிரச ஊடக வலையமைப்பின் தெபானாம கலையகம் என்பன கடந்த காலங்களில் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம்திகதி ஹோமாகம நகரில் பிரகீத் எக்னெலிகொட என்ற ஊடகவியலாளர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். வடக்குக் கிழக்கில் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் உறவுகளைப் போலவே அவரது குடும்பமும், கடந்த ஒன்றரைத் தசாப்த காலமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந் நிலையில் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைவாகவே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தன்னை முன்னாள் கடற்படைவீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி. பிரசன்ன பியசாந்த என்பவர் அண்மையில் சுதா கிரியேசன்ஸ் எனும் யூடியூப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதனை ஆராயுங்கள்.
இந் நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு இது தொடர்பில் அவரது குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன.
தற்போது ஊடகவியலாளர்கள் பொலிசார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் நபர்கள் எனப் பல்வேறு தரப்புக்களாலும் அச்சுறுத்தப்படும் நிலமைகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த 2024.12.26வியாழக் கிழமையன்று கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன் என்னும் ஊடகவியலாளரை, கிளிநொச்சி ஏ(9)வீதியில் வைத்து வாகனத்தில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். கடத்தல் முயற்சி கைகூடாமல் போகவே அவரைக் கடுமையாக தாக்கியதுடன் எச்சரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை அண்மையில் ஊழல்மோசடிதொடர்பில் செய்தி வெளியிட்டமைக்காக கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய குழுவினால் அவருடைய வீட்டு நுழைவாயில் சேதப்படுத்தப்பட்டதுடன், மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஜனவரி மாதத்திலேயே கூடுதலாக ஊடகவியலாளர்களுக்கு பல்குற்றங்கள் இழைக்கப்பட்டன.
இந் நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி.31ஆம்திகதியில் கறுப்பு ஜனவரிதினம் ஊடகவியலாளர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஜனவரி என்பது ஊடகவியலாளர்கள் விடயத்தில் இன்னமும் கறுப்பாகவே உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கடத்தல்கள் இடம் பெறுவதாக பலரும் சுட்டிக்காடிய போது செய்கதி சேகரிக்கச் சென்ற கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகிய ஊடகவியலாளர்கள் மரக் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டனர்.
பிறிதொரு தடவை முல்லைத்தீவு ஊடகஅமையத்தினுள் அத்துமீறி நுழைந்த இனந் தெரியாதவர்கள், ஊடக அமையத்தின் செயற்பாடுகள் குறித்து கடுமையாக விசாரித்துள்ளனர். இத்தோடு முல்லைத்தீவு குருந்தூர் மலையில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருந்தார். இப்படியாகப் பல சம்பவங்கள் உள்ளன. அனைத்தையும் சொல்வதற்கு நேரம் போததாது வவுனியா, மன்னாரிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர்.
தயவுசெய்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் வலிகளை உணர்ந்தவர்கள். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், அவர்களின் சுயாதீனத் தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்.
முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர்,
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வருபவர்களின் முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
எனவே பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04.02.2025) இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த இளைஞன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் இன்றைய தினம்(04) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.