Wednesday, May 6, 2026
Huis Blog Bladsy 140

இரு வயது குழந்தை கொலை; தம்பதிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு..!

0

தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக் கிழமை (06) மரண தண்டனை விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற் கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல் துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.

தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார்.

குழ்ந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டன. அவை தீக்காயங்கள் மற்றும் தாக்கியதால் ஏற்பட்டவை என மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன

குழந்தையின் விரைப் பைகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் மருத்துவ அறிக்கை காட்டியது.

அதன்படி, அந்த குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகப் பட்டிருப்பதாகவும், அதன் மரணம் திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரிய வருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்..!

0

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவரைச் சுற்றி வளைத்த இடங்கள் தேடப்பட்டு வந்தாலும், அவர் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாகவும், தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபரின் தொலைபேசி பதிவுகள் மற்றும் அவர் இருக்கும் இடங்கள் அனைத்தையும் இலங்கை பொலிஸ்சார் விசாரிக்கும் என்றும் அவரை காப்பாற்ற உதவி செய்பவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 209 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தேசபந்து தென்னகோன் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்புமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்ன கோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைவஸ்துக்களை அரசாங்கமே மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலை – சத்தியலிங்கம்

0

போதைவஸ்துக்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலைமை இந்த நாட்டில் நிலவுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைவஸ்து பாவனை என்பது நாடு முழுவதிலும் காணப்பட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இது போரிற்கு பின்னரான சமூக விளைவாகவே நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்த போதைவஸ்த்து பிரச்சனையை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் நாட்டினுடைய சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.

சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த முடியாது. தடுப்பதற்கான சட்டங்கள் இருந்த போதிலும் அதனை கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது.

போர் முடிவடைந்த பின்னர் குறிப்பாக 2010 ம் ஆண்டில் பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரச இயந்திரத்தில் இருந்த படையினர் போதைவஸ்த்துக்களை விநியோகித்தார்கள் என்பது உண்மை.

அதன் தொடர்ச்சியான நிலைமையை தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அந்த வகையிலே போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமையை இந்த அரசு தொடரக் கூடாது என்பது எனது வேண்டுகோளாகும்.

ஆகவே இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுப்பாவனைக்கான வயதுக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும்.

எமது பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு மேலதிகமாக மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன. பொது இடங்களில் மதுபாவனை நடைபெறுகின்றது.

சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்தகூடிய சட்ட அதிகாரம் பொலிசாரிடம் இருக்கின்றது. அதனை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்றால் இல்லை. இதனை நான் பகிரங்கமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மதுப்பாவனை போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் எமது மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி கிளிநொச்சியில் தர்மபுரம், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், வவுனியாவில் பூவரசங்குளம், மன்னாரில் அடம்பன் ஆகிய இடங்களில் மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றது.

எனினும் அவை சீராக இயங்குவதற்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

எனவே சுகாதார அமைச்சர் அதற்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

வவுனியா இரட்டை கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை..!

0

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்தனர். இதனையடுத்து, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடாத்தி வந்த நிலையில், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று(06.03.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா முன்னிலையாகினார்.

இதன் போது, விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி எம்.எம்.எம். மிஹால் உத்தரவிட்டார்.

பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கிய நபர் கைது..!

0

அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தை நபர் ஒருவர் அடித்து நொறுக்கியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 4 ஆம் திகதி தனது தந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெறுவதற்காக பிரதேச செயலகத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக சந்தேகநபர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, அம்பாந்தோட்டை, கொன்னொருவ, 5 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மத்தியில் டக்ளசால் நிறுத்தப்பட்ட அதிபர் நியமனம் அனுரவால் வழங்கி வைப்பு..!

0

யாழ் மத்திய கல்லுாரிக்கு முதல் முதலாக பெண் அதிபர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த பெண் அதிபர் கல்வி அமைச்சால் நியமனம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அப்போதய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் குறித்த நியமனம் பிற்போடப்பட்டு நிலமை சுமூகமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திரகுமார் என்பவர் அதிபராக தொடர்ந்து கடமையாற்றி வந்திருந்தார். தற்போதைய அனுர அரசாங்கம் பதவியேற்ற பின் குறித்த பெண் அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் சுடலையில் இருளில் தங்கும் பொலிசார்; கண்டு கொள்ளாத அரச நிறுவனங்கள்..!

0

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிசார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அண்மையில் சித்திப்பாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியும் குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றார்.

குறித்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு காவல்துறையினர் 24 மணித்தியாலமும் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருளில் காத்திருக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிசார் மயானத்தில் உணவு உண்பதில் இருந்து தமது அன்றாட செயல்பாடுகளை இரவு நேரங்களில் மேற்கொள்வதற்கு மின்விளக்கு இன்மையால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரும் அரசாங்கம் – சுமந்திரன்

0

போர்க் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உண்மைகளை மூடி மறைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் கடந்த 25ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையொன்றினை ஆற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து ஜெனீவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி இலங்கையினுடைய நிலைப்பாடு தொடர்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த இரண்டு உரைகளையும் பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2012 ஆம் ஆண்டிலிருந்து பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுத்திருக்கின்ற முயற்சிகளுக்கு தடை செய்கின்ற வண்ணமான கூற்றுக்கள் வெளி வருகின்றன.

புதிய அரசாங்கம் நல்லிணக்கம் சம்பந்தமான விடயங்களை வெளி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் குறிப்பிட்ட 3 நிறுவனங்களான காணாமலாக்கப் பட்டோருக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பொறிமுறை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கின்றார்.

மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கப்படும் என்று குறிப்பிட்ட இந்த அரசாங்கம் அதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை இயற்றுகின்றோம் என்று சொல்லுகின்றார்கள்.” என குறிப்பிட்டார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்..!

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை தொடர்பான அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச்செய்கின்றன.மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன.

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான சுயாதீன அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும், வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

பாதுகாப்பு அபிவிருத்தி தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்துவதையும் முன்னைய தீர்மானங்கள் கருத்தில் கொள்ள தவறிவிட்டன என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் ஆகியவை குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் காணப்படுவது குறித்த எங்கள் கரிசனையை வெளியிட்டிருந்தோம். இரு அலுவலகங்களும் அவை உருவாக்கப்பட்ட நோக்கம் அவற்றின் கட்டமைப்பு ஆகியவற்றில் தவறுகளை கொண்டவையாக காணப்படுகின்றன.

இதேவேளை தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்புள்ளியாக கூட 13வது திருத்தத்தை நாங்கள் ஏற்க தயாரில்லை என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகி விட்டது. எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது.

அரசியல் கைதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டம் நீதியானது இல்லை அதனை நீக்கவேண்டும் என நீதியமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர்.

இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் நாங்கள் இந்த விடயத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்ட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும், புதிய தீர்மானம் அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பொருத்தமற்ற சிகை அலங்காரங்களுடன் வருகை தந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்..!

0

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை காலமும் கல்வி விடுமுறையில் நின்று, பாடசாலைக்கு பரீட்சை அனுமதி பெற வித விதமான சிகை அலங்கரிப்புடன் இன்றைய தினம் சென்றுள்ளனர்.

அவ்வாறு வித்தியசமான சிகை அலங்கரிப்புடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை சிகை அகலங்கரிப்பை சீர் செய்து வருமாறு பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.

உடனேயே பாடசாலைக்கு அருகில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் சிகை அலங்கரிப்பை சீர் செய்து பாடசாலை திரும்பினார்.

மாணவர்கள் தமக்குரிய ஒழுக்க விழுமியங்களுடன் நடக்க வேண்டும் எனவும், பாடசாலை காலம் முடியும் வரை பாடசாலைக்கான ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்துள்ளார்.

அத்துடன் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கரிப்பு தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ,

இது தொடர்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!