ஈபிடிபியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ குலசிங்கம் திலீபன் இந்தியாவிலிருந்து விரைவில் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த வாரம் தமிழகப் பொலிசாரால் கேரளாவில் போலிக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் எதிர்வரும் வாரமளவில் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படக் கூடும் என அறியக் கிடைத்துள்ளது.
ஏலவே நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுதலையான அவர் நீதிமன்ற முன் அனுமதி அல்லது நீதிமன்றுக்கு அறிவிக்காது நாட்டிலிருந்து சட்ட விரோதமாக வெளியேற முயன்றமை பாரிய குற்றமாக காணப்படுகின்றது.
அதேவேளை கடந்த காலத்தில் குறித்த நபரால் பாதிக்கப்பட்டதாக பலர் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் தொடர்பில் இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் மொனராகலையில் நேற்று (22.02.2025) இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “உயிரிழந்த இளைஞன் மொனராகலை ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது காதலி அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு உறவை முறித்துக் கொண்டுள்ளார். எனினும் இளைஞன் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற போதிலும் அந்த இளம் பெண் அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில், மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்க்க இளைஞன் நேற்று(22) சென்றபோது, தன்னுடைய காதலி இன்னொரு இளைஞனுடன் நடனமாடுவதைக் கண்டு கலக்கமடைந்ததாகவும் வந்திருந்த தனது நண்பர்களுக்குத் தெரிவிக்காமல், மைதானத்தை விட்டு வெளியேறி, வீடு திரும்பி, தனது அறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பான பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவ மனையில் இன்று (23) இடம் பெற்றுள்ளது.
பக்குவமடையாத இத்தகைய சிறுவயதுக் காதலால் வருடந்தோறும் பலர் மரணமடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அவ்வாறே வயோதிபர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை அல்லது இள நிறங்களில் மற்றும் இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கனரக வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து முடிந்தவரை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன.
ஒன்று வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது.
இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும்.
அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில் மீதப்படும் 3,250 ரூபாவின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது, அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும்.
அதேபோல, அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.
மேலும், கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ரூபாவாக அதிகரிக்கும்.
அதுபோல் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும்.
அத்துடன், அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும்.
இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புகள், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அந்த அமைப்புகளின் நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 15 அமைப்புகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழர் புனர்வாழ்வு அமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
உலக தமிழர் இயக்கம்
நாடு கடந்த தமிழீழ அரசு
உலக தமிழர் நிவாரண நிதியம்
தலைமையகக் குழு
கனேடிய தமிழர் தேசிய அவை
தமிழ் இளைஞர் அமைப்பு
தேசிய தௌஹீத் ஜமாஅத்
ஜமாதே மிலாதே ஈப்ராஹிம்
விலாயத் அஸ் செய்லானி
டருல் ஆதர் அத்தபவியா
இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்
சேவ் த பேர்ள்ஸ்
மலையக மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் கிடைத்ததே இலவசக் கல்வி என்பதால் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கி மாற்றத்தை கொண்டுவந்து அந்த மாற்றத்தின் அடிப்படையாக மக்களுக்கான காணி உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வீடமைப்பு திட்டத்திற்கு பதிலாக காணி உரிமை வழங்க வேண்டும் ‘பிச்சை கேட்கவில்லை நாங்கள் துணிந்துதான் கேட்கிறோம். காணி உரிமையை மக்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
குரோதி வருடம் மாசி மாதம் 10ம் திகதி சனிக்கிழமை. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.46 வரை நவமி. பின்னர் தசமி. இன்று பிற்பகல் 03.22 வரை கேட்டை. பின்னர் மூலம். பரணி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்
வியாபாரத்தில் கடுமையாக உழைத்து நல்ல லாபம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அடைவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனக்கவலையை நீக்குவீர்கள். சந்திராஷ்டமம். வீண் விவாதம் செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
எதிர்பார்த்த வங்கிக் கடனை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். காதலியின் மனதை குளிர வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் தூக்கத்தை தொலைப்பீர்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளவில்லை என்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். காதலியின் பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலில் உற்சாகமாக இறங்குவீர்கள். விவசாயிகள் அதிக வருமானம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தியை பெருக்குவீர்கள். கடல் கடந்து தொழில் செய்வோர் இடையூறுகளை கடந்து வருவீர்கள். ஒரு சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்கினால் நஷ்டம் அடைவீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். தொழிலுக்காக கடன் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
வாக்கு கொடுத்தவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளவில்லை என்றால் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள் . ரியல் எஸ்டேட் தொழிலில் கவனமாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
பண வரவு அதிகமாகி சேமிப்பை உயர்த்துவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தால் பெருமிதம் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மிகுந்த மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். உடல் பிரச்சினைக்காக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை அடைவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த தானத்தை பிறருக்கு செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். வேலையாட்களின் உதவியால் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மனச்சங்கடப்படுவீர்கள். தொழில் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் புகழடைவீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலையில் சேருவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் அக்கறையோடு வேலை செய்து வருமானத்தை பெருக்குவீர்கள். நகைகள் வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் மன வேதனைப்படுவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி அவதிப்படுவீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5
மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக நேற்றைய தினம் வடமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நிலையில், தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்ததுப் போன்று எரிபொருள் மீதான வரிகள் குறைக்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
எரிபொருளுக்கு நியாயமற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் தரகுப் பணம் பெறுவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியதாக தயாசிறி ஜயசேகர இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
“வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கியுள்ளது. எந்தவொரு வரிகளும் விதிக்கப்படவில்லை.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எவ்வாறு நட்டத்தில் இயங்கக் கூடிய நிறுவனமாக மாற்றப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சர் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பது குறித்தும் விரிவான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், அந்நாட்டுக்கு எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.
மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலின் போது, எரிசக்தி துறை உரிமைக்கு அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக தெரிவித்திருந்தார்.
அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னா், அந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய குழுவொன்று அமைக்க உள்ளதாகவும், அந்தக் குழு தனது பணியை நிறைவு செய்த பின், திட்டத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்தது.
இந்தப் பின்புலத்திலேயே அந்தத் திட்டங்களை கைவிடுவதாக கடந்த வாரம் அதானி குழுமம் அறிவித்தது.
இதுதொடா்பாக நேற்று திங்கட்கிழமை பட்ஜெட் உரையின் போது அதானியின் பெயரைக் குறிப்பிடாமல் அநுரகுமார கூறியதாவது,
இலங்கையிலிருந்து முதலீட்டாளா் ஒருவா் வெளியேறி விட்டதாக எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன.
ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் வகையில், 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது.
அப்படி இருக்கும் போது அதைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை கொண்ட மின் உற்பத்தித் திட்டம் ஏற்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. அந்தத் திட்டம் கைவிடப்பட்டதால் இலங்கைக்கு எந்த வருத்தமும் இல்லை எனக் கூறியிருந்தார்.