Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 147

2009 யுத்தத்தின் போது வைத்திய சாலைகள் மீது குண்டுத் தாக்குதல்; ஒப்புக் கொண்ட ரணில்..!

0

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு ரணில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினைச் சுட்டிக் காட்டினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போரில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன.

மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை. எனினும், இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை.” என விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் ”2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு விட்டதா?“ என ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”எந்தச் சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர் விமானப் படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன.

இதற்காகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதல் பெருமளவில் இடம் பெற்றது என்று நான் சொல்ல மாட்டேன்.” – என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஐக்கிய நாடுகளின் குழு, இலங்கைப் படையினர் போரில் சிக்குண்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளனரே?” – என்று மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ”நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன்.” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட நிலையில் யாழைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி..!

0

கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த சிவநேசன் நேசராஜ் என்ற குடும்பஸ்தர் மலசலகூடத்தை துப்பரவு செய்யப் பயன்படுத்தும் திரவம் ஒன்றை அருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

குறித்த குடும்பஸ்தர் நாளை இலங்கைக்கு நாடு கடத்த முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு மத்திய நிலையத்தை அமைக்க அரசு நடவடிக்கை..!

0

வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைந்து ஏனைய போதைப் பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட மத்திய நிலையத்தை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல் வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

வரலாற்றில் முதல் தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நிறுவன மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்களில் வடக்கில் மாத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை 174 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்காக 14 விசேட மையங்களை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வைத்திய சாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என்றார்.

இலங்கை பெண்களிடம் அதிகரித்து வரும் போதைப் பாவனை..!

0

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை எதிர் கொள்கிறார்கள் என்பதும் இதன் போது தெரிய வந்துள்ளது.

அத்துடன், பெண்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் மதுபான பாவனையினாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, 27.4 வீதமான பெண்கள் அயலவர்களினாலும், 27 சதவீதமான பெண்கள் இனந் தெரியாதோர்களினாலும் 20 வீதமான பெண்கள் உறவினர்களாலும் பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக 29 சதவீதமான பெண்கள் பயன்படுத்தப் படுவதாகவும், 34 சதவீதமான பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

தலைமறைன தேசபந்து தென்னகோனின் சலுகைகள் நீக்கம் – அரசாங்கம் அதிரடி

0

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலை மறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசபந்து தென்னகோனுக்கு உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோக பூர்வ மோட்டார் வாகனம், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஊதியச் சலுகைகள் வழங்கப்பட்டன.

வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு சந்தேக நபரை கைது செய்யச் சென்ற போது, ​​வெலிகம பொலிஸ் அதிகாரிகள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை மீறி தென்னகோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் கையடக்கத் தொலைபேசித் தகவல்கள் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இரு வயது குழந்தை கொலை; தம்பதிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு..!

0

தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று, வியாழக் கிழமை (06) மரண தண்டனை விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான் மற்றும் முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற் கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல் துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.

தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார்.

குழ்ந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டன. அவை தீக்காயங்கள் மற்றும் தாக்கியதால் ஏற்பட்டவை என மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன

குழந்தையின் விரைப் பைகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் மருத்துவ அறிக்கை காட்டியது.

அதன்படி, அந்த குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகப் பட்டிருப்பதாகவும், அதன் மரணம் திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரிய வருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்..!

0

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவரைச் சுற்றி வளைத்த இடங்கள் தேடப்பட்டு வந்தாலும், அவர் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாகவும், தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபரின் தொலைபேசி பதிவுகள் மற்றும் அவர் இருக்கும் இடங்கள் அனைத்தையும் இலங்கை பொலிஸ்சார் விசாரிக்கும் என்றும் அவரை காப்பாற்ற உதவி செய்பவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 209 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தேசபந்து தென்னகோன் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்புமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்ன கோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைவஸ்துக்களை அரசாங்கமே மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலை – சத்தியலிங்கம்

0

போதைவஸ்துக்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலைமை இந்த நாட்டில் நிலவுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைவஸ்து பாவனை என்பது நாடு முழுவதிலும் காணப்பட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இது போரிற்கு பின்னரான சமூக விளைவாகவே நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்த போதைவஸ்த்து பிரச்சனையை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் நாட்டினுடைய சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.

சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த முடியாது. தடுப்பதற்கான சட்டங்கள் இருந்த போதிலும் அதனை கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது.

போர் முடிவடைந்த பின்னர் குறிப்பாக 2010 ம் ஆண்டில் பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரச இயந்திரத்தில் இருந்த படையினர் போதைவஸ்த்துக்களை விநியோகித்தார்கள் என்பது உண்மை.

அதன் தொடர்ச்சியான நிலைமையை தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அந்த வகையிலே போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமையை இந்த அரசு தொடரக் கூடாது என்பது எனது வேண்டுகோளாகும்.

ஆகவே இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுப்பாவனைக்கான வயதுக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும்.

எமது பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு மேலதிகமாக மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன. பொது இடங்களில் மதுபாவனை நடைபெறுகின்றது.

சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்தகூடிய சட்ட அதிகாரம் பொலிசாரிடம் இருக்கின்றது. அதனை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்றால் இல்லை. இதனை நான் பகிரங்கமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மதுப்பாவனை போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் எமது மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி கிளிநொச்சியில் தர்மபுரம், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், வவுனியாவில் பூவரசங்குளம், மன்னாரில் அடம்பன் ஆகிய இடங்களில் மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றது.

எனினும் அவை சீராக இயங்குவதற்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.

எனவே சுகாதார அமைச்சர் அதற்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

வவுனியா இரட்டை கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை..!

0

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்தனர். இதனையடுத்து, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடாத்தி வந்த நிலையில், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று(06.03.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா முன்னிலையாகினார்.

இதன் போது, விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணங்கள் இல்லாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி எம்.எம்.எம். மிஹால் உத்தரவிட்டார்.

பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கிய நபர் கைது..!

0

அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தை நபர் ஒருவர் அடித்து நொறுக்கியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 4 ஆம் திகதி தனது தந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலைப் பெறுவதற்காக பிரதேச செயலகத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக சந்தேகநபர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, அம்பாந்தோட்டை, கொன்னொருவ, 5 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!