Monday, May 11, 2026
Huis Blog Bladsy 25

பிரதமருக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கும் இடையே விசேட சந்திப்பு..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களுக்குமிடையில் இன்றைய தினம் (09.01.2026) விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தின் போது இன்றைய தினம் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே இன்று காலை 10.30 மணிக்கு குறித்த சந்திப்பு இடம் பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

இதன் போது தமிழ் மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத் திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவற்றினை மீண்டும் பாடப் புத்தகங்களில் கொண்டுவர வேண்டும் என தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு, கிழக்கு பல்கலைக் கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தினை சேர்ந்த ஆய்வாளர்களை இவ்விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்று தகவல்களை தொகுத்து அவற்றை தமிழ் மொழி மூல பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்ய இதன் போது பிரதமருக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத் திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படுமென பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தரம் – 01 இற்கான பாடப் புத்தகங்களில் அதிக எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக இதன் போது பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றினையும் விரைவாக திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும் போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்கள். அவ்வாறு மொழி மாற்றம் செய்யும் போது நிறைய பிழைகள் ஏற்படுகின்றது.

மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலினால் பரீட்சை பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இந்த விடயத்திற்கும் உடன் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டதுடன், இவ் விடயம் மீள நிகழாது என பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டிடங்கள் இன்னும் பூரணப்படுத்தப் படாதுள்ளது. அவற்றில் சில ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவற்றினை பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இங்கு பதிலளித்த பிரதமர் கடந்த வருடம் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பாவிக்கப்படாது மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாக தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியை பயன்படுத்தவும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கையெடுக்குமாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழினுட்ப கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் (Early Childhood Development and Education) கற்கை நெறியினை கடந்த 8 மாதங்களாக தமிழ் மொழி மூலம் கற்று வருகின்றவர்கள் அதற்கான பரீட்டையினை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அக்கறையோடு கேட்டுக்கொண்ட பிரதமர் விடயத்தை குறிப்பெடுத்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

 

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் பிரதமருடன் பேசப்பட்டது. வடக்கில் தமிழ்மொழி மூலம் 3771 வெற்றிடங்களும், சிங்களமொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5854 வெற்றிடங்களும் நிலவுவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது. இந்த வருட ஆசிரிய நியமனங்களின் போது இயலுமானவரை இந்த வெற்றிடங்களை நிரப்ப நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஶ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஶ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், மருத்துவர் ஶ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..!

0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், ​​அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, ​​2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் 15 வயதுச் சிறுமி 8 காவாலிகளால் துஸ்பிரயோகம்; 6 பேர் கைது..!

0

மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக விழிப்புணர்வுக்கான பதிவு

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம் – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 07.01.2025இன்று பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பிற்பகல் 07.01.2025இன்று 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அந்த வகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது.

குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்கு காணிகள் விடுவிக்க வேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்னும் குறிப்பிட்ட அளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்க வேண்டியுள்ளதாகவும் இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாரிகளால் வழங்கப்படுகின்ற தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.

கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது என்பதை இதன் போது சுட்டிக்காட்டினேன்.

இதன் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன்.

அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது சுட்டிக்காட்டினேன்.

எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியா மோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன் போது வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேச செயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன் போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் இராணுவத் தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.

இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்ட செயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேச செயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் – என்றார்.

வவுனியாவில் மக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் – சத்தியலிங்கம் எம்பி

0

வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் வீதிகளை திறக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று 7/1/2026 ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி படைத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக் காணிகள், பாதுகாப்பு வலயத்தில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கூட்டத்திலும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

முதற் கட்டமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று முறிப்பு தச்சங்குளம் பிரதான வீதிக்கு பதிலாக நோத்கேற்வே ஹோட்டலிற்கு பக்கத்தில் செல்லும் வீதியை மக்கள் பயன்படுத்தக் கூடியதாக புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் கனகராயன்குளத்தில் 561 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொதுக் காணிகள், மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக தெரிவித்தார்.

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கட்டாய இடமாற்றம் குறித்து வெளியாகிய அறிவிப்பு..!

0

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கட்டாய இடமாற்றத் திட்டத்தின் கீழ் இடமாற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

மேலும் மேல்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையையும் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஆரம்பப் பிரிவு (பொது) பாடப்பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள், 2026 ஜனவரி 6 முதல் இணையத்தில் கிடைக்கும்.

இந்த நிலையில்,தேசிய பாடசாலை ஆசிரியர்கள் nstt.moe.gov.lk என்ற இணையத்தின் மூலம் உள்நுழைந்து அவர்களின் இடமாற்ற உத்தரவுகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்ற முடிவுகளில் அதிருப்தி அடையும் ஆசிரியர்கள், அதே இணையத்தை பயன்படுத்தி, ஜனவரி 6 முதல் ஜனவரி 20 வரை வருடாந்த இடமாற்ற மறுஆய்வுக் குழுவிற்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சாரா ஜஸ்மின் உயிரோடு இருக்கிறார்; அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு..!

0

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.

அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர்களுக்கு நீதியையும் நியாயமான அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்..!

0

தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள் மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த துறவியொருவரை இவ்வாறு கைது செய்ய முடியுமா?” எனவும் ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து அழிக்கின்றீர்கள், அப்படியானால் வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட புத்த விகாரையை இடிக்க முடியாதா?

வடக்கு, கிழக்கில் இராணுவம் இன்றளவிலும் குவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுங்கள். தமிழர்களுக்கு நீதியையும், நியாயமான தீர்வையும் வழங்க முன்வாருங்கள்.” – என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

தரம் 6 ஆங்கில சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

0

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை; போதைப் பொருட்களுடன் நால்வர் கைது..!

0

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!