Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 24

இலங்கை இராணுவத்தின் யுத்த கால பாலியல் மீறல்கள் முழுமையான அறிக்கை – ITJP

0

இலங்கையில் திட்டமிட்டும், பரவலாகவும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு உடனடி நீதியும், பொறுப்புக் கூறலும் வழங்கப்படுவதுடன், தமக்கு தொடர்ச்சியான உளவியல் மற்றும் சமூக ஆதரவும் தேவையென்றும் கூறுகின்றார்கள்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP), பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்து, வெளிநாடுகளுக்குத் தப்பி வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் தாம் நடத்திய கலந்தாய்வின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை மையமாகக் கொண்ட இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை ஆராய்கின்றது.

இழப்பீடுகள் எப்படி இருக்க வேண்டும்

“என்னைப் பொறுத்த வரையில், இழப்பீடு என்பது பிரதானமாக உளரீதியான நிவாரணமே ஆகும்-பாதிக்கப்பட்டவர்களை உளரீதியாகவும், சிகிச்சை மூலமாகவும் குணமடைவதற்கு உதவுவதே. இரண்டாவதாக, இந்த அட்டூழியங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுப்புக் கூற வைக்க வேண்டும்” இவ்வாறு பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.

2009இல் முடிவடைந்த ஆயுத மோதலின் போதும், அதற்குப் பின்னரும் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கும் இதர பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகி, உயிர் தப்பிய ஆண்கள், பெண்கள் என ஐம்பது பேரிடம் (ITJP) கலந்தாய்வு நடாத்தியது.

சிறிலங்காவில் போர்நடந்த வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான கலந்தாய்வினை நடாத்துவது பாதுகாப்பானதும் கிடையாது அதற்கு அனுமதி கிடைக்கவும் மாட்டாது என்பதால் இந்த ஆய்வு இலண்டனில் நடாத்தப்பட்டது.

68 பக்கங்களைக் கொண்ட “Opening a Conversation: The Justice and Reparations Needs of Exiled Tamil Survivors of Conflict-related Sexual Violence” என்னும் இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் அவர்களது வாக்கு மூலங்களிலிருந்து சில மேற்கோள்களும் இடம் பெற்றுள்ளன.

இக்கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர் போர் முடிந்த பின், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிறிலங்காவில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமக்கு அவசரமான தேவைகள் எவை என்பதை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர்.

முழுமையான உளவள மற்றும் ஆரோக்கிய ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு, சேர்ந்திருக்கும் உணர்வையும் சமூகத்தையும் மீளவும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள், சட்டரீதியான தீர்வுகள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டநடவடிக்கைகள் எடுத்தல் என்பன இதில் அடங்கும்.

மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், ஆரோக்கியமான மனநிலை, தரமான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு” என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது.

அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்

பாலியல் வன்முறைகள் தனிநபர்கள் மீதும் பரந்துபட்ட தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஏற்படுத்தியிருக்கும் நீண்டகாலப் பாதிப்புக்களை இந்த அறிக்கை வெளிப் படுத்துகின்றது. ‘அதன் தாக்கம் உணர்வை மரத்துப்போகச் செய்து விட்டது” என்று ஒருவர் கூறினார்.

“அவமானத்தின் சின்னமாக நாங்கள் பார்க்கப்படுகின்றோம்” என இன்னொருவர் தெரிவித்தார். தாம் இலங்கையில் இருந்த போதும் சரி, அல்லது புலம்பெயர்ந்து இருக்கும் போதும் சரி தங்களது வாழ்க்கையில் பயம், களங்கம் மற்றும் தனிமை வாட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் விபரித்தார்கள்.

சீருடை தரித்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பயங்கரக் கனவுகள், திடீர் நினைவுகள் என்பன இப் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்திடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலக்கி வைத்திருக்கின்றன.

மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிணற்றில் குதித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் இல்லை” என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

தன்னுடைய உடலிலுள்ள தழும்புகள் பற்றி தன்னுடைய சிறுமகன் தன்னிடம் கேட்ட போது தனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஒரு தந்தை வேதனையுடன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள், முதலில் தாம் அரசால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தங்களது சொந்தச் சமூகத்தினாலும் பாதிப்படைந்ததாகவும், தமது இரட்டைப் பாதிப்புப் பற்றிக் கூறினார்கள். ‘

இது எங்கள் குடும்பத்திற்கே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது – எங்களது சொந்தக் குடும்பமே எங்களை விமர்சித்து, ஒரங் கட்டுகின்றது, எங்கள் சமூகமும் அதையே செய்கின்றது”. ‘சில நேரங்களில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் பாலியல் தாக்குதல்களுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகின்ற நேரத்தில், தமிழ்ச் சமூகத்திலுள்ள இதர மக்கள் எங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதனையே எமக்கும் செய்ய முயல்கின்றனர்.”

ஆண்களையும் பெண்களையும் கொண்ட இக்குழு, ஒரு உளவளத் துணைச் செயற்பாட்டிற்காக வாரந்தோறும் இலண்டனில் சந்தித்தது – இதற்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை

பிரித்தானியாவிலும் இலங்கையிலும் மருத்துவ மற்றும் உளவளத் துணை உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொண்டதாகத் தெரிவித்தனர். பாலியல் வன்முறையிலிருந்து உயிர் தப்பிவந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்து தங்களது அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியது இதுவே முதன் முறையாகும்.

‘இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்ட பின்னர், பாலியல் வன்முறைகளால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். இது முக்கியமான உண்மை” என இன்னொரு பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இதுவரை பேசப்படாமல் இருந்த இப்படியான விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர், ஆயினும் பேசுவதற்குப் பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உணர்ந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபற்றிக் உரையாடத் தொடங்கினார்கள்.

‘பாதிப்புக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது எங்களால் அதனைச் செய்ய முடியும். இது ஒரு பெரும் சாதனையே,” இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார்.

வெறுமனே பாலியல் வன்முறைகள் மட்டுமன்றி, அதி பயங்கரமான மீறல்களையும் இப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர் கொண்டார்கள். ‘பொதுவாக, அவர்களும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களும் சண்டைக்கு ஆட் சேர்க்கப்பட்டார்கள், திரும்பத் திரும்ப இடம் பெயர்ந்தார்கள், குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் ஆளானார்கள், பட்டினியால் வாடினார்கள், மருத்துவ உதவியின்றித் தவித்தார்கள், தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டார்கள், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதையோ அல்லது விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப் படுவதையோ நேரடியாகக் கண்டார்கள்” இவ்வாறு ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இழப்பீடுகள் பற்றிய இந்த ஆய்வு பாலியல் வன்முறைகள் பற்றியே குறிப்பாக கவனம் செலுத்திய போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட இனம் என்பதற்காக நடாத்தப்பட்ட பரந்துபட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகவே இதனை நோக்கினர்.

‘தமிழர்களுக்கான தனித்துவமானதும் கலாச்சார ரீதியிலானதுமான அடையாளங்களையும், மனோதிடத்தையும் அழித்தொழிக்கும் நோக்குடன் நடாத்தப்படும் சித்திரவதையின் ஒரு பகுதியாகவும் தனிநபர்களை அவமானப்படுத்துவதற்கும் நன்றாகத் திட்டமிட்டு வேண்டுமேன்றே இத்தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன.”

சடலங்களைக் கூட இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது

தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை தங்களது முழுச் சமூகத்தின் மீதும் ஆழமான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்கள்:

‘பெண்களை, ஏன் பெண்களின் சடலங்களைக் கூட எவ்வாறு சிறிலங்கா இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது என்பது பற்றிய காணொளிகள் வெளிவந்து, எங்கள் சமூகத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என அவர்கள் கூறினார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் பெரு விருப்பம். “அவ்வாறு நடந்தால் அது எமக்குச் சிறிய ஆத்ம திருப்பதியைக்
கொடுக்கும்”.

2009இல் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து முன்னர் மோதல் நடந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் கடத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளது. ஐ. நா. அமைப்புக்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் வன்முறைகள் நடாத்தப்படுவதாகத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திய போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதனை மறுப்பதுடன், இக்குற்றங்கள் நடைபெறவில்லை என்றும் சொல்லி வருகின்றது.

சர்வதேச சட்டப் பொறுப்புக்களை மீறும் இந்த மறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாரதூரமான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்புத் தொடர்பிலும் சர்வதேச சமூகம் தீர்க்ககரமாகச் செயற்படத் தவறியது தொடர்பிலும் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்.

சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை

‘முகவர் அமைப்பு” தொடர்பிலான விவாதம் அவர்கள் மத்தியில் ஆழமாகப் புதைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, தம்மை விட்டு விலகாத துரோகம் மற்றும் அநீதி உணர்விற்கு ஒரு தீர்வு வேண்டும் கோரிக்கையாக மாறிய காரசாரமானதாக மாறியது.

‘எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இப்போரில் இறந்து போனார்கள். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை.

தற்போது நீங்கள் ‘முகவர் அமைப்புக்கள்” பற்றி எம்மிடம் கதைக்க விரும்புகின்றீர்களா? சர்வதேச சமூகமே எதுவும் செய்யாத போது, எங்களால் எதைத்தான் செய்ய முடியும்?” தாம் அனுபவித்த குற்றச் செயல்களுக்கு நீதி கிடைக்காதது மீண்டும் மீண்டும் பேசுபொருளாக மாறியது:

‘சட்ட முறைமையில் எமக்கான தீர்வு கிடைக்கப் போவது கிடையாது. நாம் ஒருவரைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு முயன்றால்கூட, அவர்கள் இதிலிருந்து தப்புவதற்கு மேலும் பத்து முறைகளைக் கண்டு பிடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில்லை,’ எனப் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களது உள ஆரோக்கியத்திற்கும், கௌரவத்திற்கும், அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதற்கும் நீதியும் பொறுப்புக் கூறலும் அத்தியாவசியமானவை என்பதை இக் கலந்தாய்வு காட்டுகின்றது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகரமான சர்வதேச பொறுப்புக் கூறல் கட்டமைப்பும், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய முழுமையான பரிகாரங்களும், நீடித்து நிலைக்கக் கூடிய உளவளத் துணையும் அவசியம் என்பதை இது வலியுறுத்துகின்றது.

சிறிலங்காவில் நடந்துவரும் மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் படியும், தண்டனை இன்மையினையும் மறுதலிப்பினையும் முடிவுக்குக் கொண்டு வரும் படியும், தொடர்ந்து நடைபெற்று வரும் அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் மௌனத்தை உடைக்கும் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் குரல்களை வலுப்படுத்தும் படியும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் உறுப்பு நாடுகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் ITJP அழைப்பு விடுக்கின்றது.

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல்; அரசு எடுத்துள்ள நடவடிக்கை..!

0

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த யோசனையை “திறமையான மற்றும் மிகவும் அவசியமான ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தெற்காசிய நாடுகளுடன் (உதாரணமாக பாகிஸ்தான்) ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக் கொள்ள முறையான திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்றும், இந்த முன்மொழிவு மிகவும் முற்போக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சமிந்ரனி கிரியெல்ல முன்வைத்தார்.

பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதன் மூலம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைப்பதற்கும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இது ஒரு தீர்வாக அமையும் என்று அவர் வாதிட்டார்.

டித்வா பேருந்து அனர்த்தம்; பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு..!

0

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர்.

பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச் சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்:
பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder)
பிரிவு 300: கொலை முயற்சி (Attempt to Murder)

சாரதி வேண்டுமென்றே பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பாலத்தைக் கடக்க முயன்றதால், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவசியமானவை என உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்திலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞன் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிபோது உயிரிழந்திருந்தார்.

நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதி தனுஷ்க குமாரசிங்கவை எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “சாரதிக்கு எவரையும் கொல்லும் நோக்கம் இருக்கவில்லை” என வாதிட்டு பிணை கோரினர்.

எனினும், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

யாழில் காதலனின் நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பெண் கைது..!

0

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

திருமலை சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம்; பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் சிறையில் அடைப்பு..!

0

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்ட விரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்ட போது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் நேற்றைய தினம் (14) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரிணியின் பிரதமர் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசம்???

0

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலைமையை பயன்படுத்தி, ஜே.வி.பி. கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பாராளுமன்ற சபைத் முதல்வரான பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் விஜயம் செய்துவிட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

எனினும், தரம் ஆறுக்கான கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களின் பண்டிகை முற்பண தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கை வெளியீடு..!

0

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணம் வழங்குவது தொடர்பான தாபனக் கோவையின் விதிகளுக்கமைய, தைப் பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், புனித யாத்திரைகளுக்காகவும் தற்போது 10,000 ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்த முற்பணத் தொகையை வட்டியின்றி0 8 மாதத் தவணைகளில் அல்லது தேவைப்படின் அதற்கு முன்னதாகவோ மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பண்டிகைக் கால முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப் பட்டிருந்ததுடன், அதற்கான சுற்றறிக்கையை தற்போது அமைச்சு வெளியிட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு மிரட்டல்..!

0

பதுளை மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் முன்னர் பதிவான மிரட்டல்களைப் போலவே, சமீபத்திய மிரட்டலும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுளை மாவட்ட செயலகத்தில் உள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், வளாகத்தை ஆய்வு செய்ய சிறப்புப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதுவரை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மோசடிகளைக் கட்டுப்படுத்த அரச வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

0

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை முறையைப் பயன்படுத்துவதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் எரிபொருள் தேவைக்கேற்ப இணையவழி வங்கி முறைமை ஊடாக அதற்கான பணத்தை ஈடுசெய்வதற்கும், தனிநபர் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் உயர் வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வங்கியும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து வாகனங்களுக்கான டிஜிட்டல் அட்டை மூலம் எரிபொருள் விநியோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதற்கமைய, முதற்கட்டமாக ஒரு முன்னோடித் திட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் வாகனத் தொகுதிக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக இந்த முறையை அமுல்படுத்தவும், அதன் வெற்றியின் அடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இம்முறையை விரிவுபடுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை வடக்கின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குள் டிஜிட்டல் அட்டை முறை மிக விரைவாக கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு; உரிமையாளரே தீ வைத்தாரா எனச் சந்தேகம்..!

0

யாழ், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை ஏதாவது காப்பறுதி பெறுவதற்காக அல்லது தனக்கு சிங்கள மக்களிடம் அனுதாபம் உள்ளிட்ட அரசியல் நலனை தேடுவதற்காகவும், பண உதவி பெறுவதற்காகவும் தனது அலுவலகத்தை தனது ஆட்களைக் கொண்டே எரித்து நாடகமாடியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!