Sunday, June 1, 2025
Huis Blog Bladsy 42

இன்றைய இராசி பலன்கள் (15.01.2025)

0

மேஷம்

இன்று உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5

ரிஷபம்

இன்று நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்

இன்று எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3

கடகம்

இன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7

சிம்மம்

இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கன்னி

இன்று சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்

இன்று குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்

இன்று பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

தனுசு

இன்று கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்

இன்று உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பிந்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்

இன்று கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்

இன்று வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற நிதி மோசடி; நடந்தது என்ன?

0

வவுனியா வடக்கு வலயத்தில் நடைபெற்ற பாரிய நிதி மோசடி தற்போதய சூழலில் பேசு பொருளாகியுள்ள நிலையில் நடுநிலை தவறாது உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்த வேண்டியது ஊடக தர்மம் என்ற வகையில் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் நீதியான விசாரணை நேரடியாக ஜனாதிபதியால் நடாத்தப்படும் பட்சத்தில் எமக்குத் தெரிந்த உண்மைகளையும் பகிரத் தயாராக இருக்கின்றோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா வடக்கு கல்வி வலயம் உட்பட அரச திணைக்களங்களில் கடமை புரியும் ஆளணியினரின் சம்பளப் பட்டியல் கணினி மென்பொருள் ஊடாக கணிப்பிடப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.

வவுனியா வடக்கு கல்வி வலய ஆளணியினரின் சம்பளப் பட்டியல் மிகுதி சமப்படாத நிலையில் கணக்குக் கிளையில் பணிபுரிந்த அபிவிருத்தி அலுவலர் ஒருவரால் ஆராயப்பட்ட நிலையில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் அதிகளவு கொடுப்பனவு கணிப்பிடப்பட்டு முன்னர் பணியாற்றிய உத்தியோகஸ்தர் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய சிலரின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

2018ஆம் ஆண்டு வவுனியா வடக்கு கணக்காளர் மாற்றத்தின் பின்னர் கணினி மென்பொருளில் சில ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலில் மோசடியாக கொடுப்பனவு மாற்றம் செய்யப்பட்டு குறித்த உத்தியோகஸ்தர் உட்பட சில அலுவலர்களின் வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர், 2018ஆம் ஆண்டு தொடக்கம் 16 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்துள்ளார் என்பது வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் கண்டறியப்பட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்களால் மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு உடன் அறிவிக்கப்பட்டது.(November 2020)

இதேவேளை வலயப் பணிப்பாளரின் அறிவித்தலுக்கு அமைய, குறித்த மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வவுனியா வடக்கு கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர் என்பதுடன் குறித்த மாகாண அலுவலர்கள் வருகை தந்த தினத்தில் குறித்த மோசடி செய்த அலுவலர் தான் மோசடி செய்த பணத்தை மீள ஒப்படைப்பதற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.

எனினும் குறித்த தினத்தில் வலயத்தின் முழு அதிகாரமும் மாகாண அதிகாரிகளின் கையில் இருந்ததுடன் வருகை தந்த நபர் வாகன தரிப்பிடத்தில் நீண்ட நேரம் தரித்திருந்து பின்னர் வெளியேறிச் சென்றிருந்தார். எனவே குறித்த பணத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்த போதும் மாகாண அதிகாரிகளின் அசமந்தமே குறித்த பண இழப்பிற்குக் கரணமாக அமைந்தது.

இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கம் 7.11.2020 ஆண்டு தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருந்துடன் ஊடக அறிக்கையையும் விடுத்திருந்தது.

அந்த அறிக்கையில்,

நிதி மோசடியில் ஈடுபட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனை தரும் விடயம் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சந்தேகத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ள நிதிமோசடி தொடர்பாக சம்பந்தப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனையான விடயம் என்பதற்கு அப்பால் பல சந்தேகங்களையும் இவை உருவாக்குகின்றது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வி வலயத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக தன்னைக் காட்டிக் கொண்டு, உயர் அதிகாரிகளை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, தற்போதுள்ள அபாயகரமான கொரோனா சூழ்நிலையில் பலரை கொழும்பிற்கு அழைத்து விசாரிப்பதன் மர்மம் என்ன? குற்றவாளி என கண்டறியப்பட்டவரை கைது செய்து அவரூடாக அனைத்தையும் அறிவதே பிரதானமான விடயம்.

சம்பந்தமில்லாதவர்களை அழைத்து விசாரணை நடாத்தினால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக விசாரணை என்ற போர்வையில் இழுத்தடிப்புகள் மட்டுமே மிஞ்சும்.

ஆகையால் குற்றவாளி என இனங் காணப்பட்டவரை உடன் கைது செய்து உரிய இடத்தில் வைத்தே விசாரணை செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வலய பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் உட்பட வலய குழுவினரே குறித்த மோசடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினர் என்பதே உண்மை.

கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பின்னடைவு..!

0

சமீபத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பின்னடைவைச் சந்தித்துள்ளது, இது அரசியல் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமகி ஜன பலவேகய (SJB) ஆதரவு பெற்ற குழு களனி கூட்டுறவுச் சங்கத்தை வென்றுள்ளது, அதில் 99 உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஆளும் NPP ஆதரவு பெற்ற குழுவினர் 32 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குனகொல பெல்லஸ்ஸ சங்கத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது, அனைத்து 9 இடங்களும் பெரமுன கட்சிக்குச் சென்றன, அதே நேரத்தில் NPP ஆதரவு பெற்ற குழு எந்த இடங்களையும் வெல்லத் தவறியுள்ளது.

இருப்பினும், மஹரவில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தை NPP வெற்றிபெற முடிந்தது, அங்கு 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 89 உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது – எஸ்.எம்.சந்திரசேன

0

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளன.

1 இலட்சத்துக்கு 45 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தொடர்கிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் தான் சில்லறை அரிசி வர்த்தகர்கள் அரிசியை கொள்வனவு செய்ய முன் வருவதில்லை. அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதால் கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது.

விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இம்முறை பொங்கல் பொங்குவதற்கும் பச்சையரிசி இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் சிறுபிள்ளைத் தனமாக குறிப்பிடுகிறது.

20 கிலோகிராம் அரிசி இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டதே தவிர பிற நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முறையான திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். கோட்டபய ராஜபக்ஷ சேதன பசளைத் திட்டத்தை அமுல்படுத்தியதை போன்று க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்றார்.

அரசியல் கைதிகளென எவருமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

0

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொது மக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கும் முகமாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.

இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்ட காலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.

அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும் அவர்களின் விபரங்களையும் பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

ஜனாதிபதி அநுரவால் ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்..!

0

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு என்பவற்றுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பதில் அமைச்சர்களின் விபரம் வருமாறு,

டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து பலியான திருமணமாகி இரண்டு மாதங்களான குடும்பஸ்தர்..!

0

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி தொடருந்தின் முன் பாய்ந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள தொடருந்து பாதையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான, திருமணமாகி இரண்டு மாதங்களான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் தமிழ்பொறி..!

0

இன்று 14.01.2025 உடன் 6வருடங்களைப் பூர்த்தி செய்து 7வது வருடத்தில் வாசகர்களின் ஆதரவுடன் கால் பதிக்கின்றோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கஸ்டப்பட்டு உழைத்து அனுப்பிய காசை தரவில்லை; அதனால் மகளைக் கடத்தினேன்..!

0

பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்து அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

பணம் தமக்கு திருப்பிக் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறான செயலைச் செய்யத் தூண்டியதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தவுலகல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 18 வயது மகள் கடத்தப்பட்ட நிலையில் கடத்தப்பட்ட மாணவி மற்றும் சந்தேக நபரை கைது செய்ய 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததில், சந்தேகநபர் அம்பாறை பொலிஸ் பிரிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேகநபரும் மாணவியும் இன்று (13) காலை அம்பாறை பஸ் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் தங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியை வைத்தியரிடம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வடகிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு..!

0

வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை முல்லைத்தீவு கடலில் ரோஹிந்திய முஸ்லிம்களை ஏற்றிய படகு தமக்கு அடைக்கலம் தருமாறு வருகை தந்தது.

குறித்த படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்றது.

அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

குறித்த போராட்டத்தில் பங்கு பற்றிய வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியான்மாரில் பாதுகாப்பு இல்லை தமக்குக்கு பாதுகாப்பு தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியான்மாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி இருந்தார்.

அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டிடம் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் அவர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!