போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (13.11) தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன.
அந்த வகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், லக்சபானா வீதி, காத்தார் சின்னக்குளம் பகுதியைச் சேர்நத இளைஞா ஒருவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுதது குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்
கொத்மலை பிரதேச சபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீடு தொடர்பான கொத்மலை பிரதேச சபைக் கூட்டம் அதன் தவிசாளர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இதன் போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இதொகா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட சில எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
கொத்மலை பிரதேச சபையில் 55 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று (13) இடம்பெற்றதுடன், அதில் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பொது எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் 12 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
யாழ் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன் போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.
அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குறித்த இளைஞனைக் காணாததால், ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞனைக் காணவில்லை.
பின்னர் ஏனையவர்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் ரீதியிலான அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு நபருக்கு 8 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் போது தண்டனை தொடர்பில் தனது சமர்ப்பணத்தில், அரச சட்டத்தரணி இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்தினார்.
அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக 200,000 ரூபாயை நட்டஈடாக செலுத்துமாறும் கட்டளையிட்டார்.
சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தன்மீது சேறுபூசும் வகையில் பொய்யான தகவல்கள் பதிவேற்றப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனூடாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் செயற்பாடுகளை சிறப்புரிமைகள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக் கொண்ட வன்னி அபிவிருத்தி நாயகன் முன்னாள் எம்பி திலீபன் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காகச் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு உப குழுவின் இடைக்கால அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 13ஆம் திகதி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரச சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றதாகவும், அதன்போது அவர்களின் சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒட்டுமொத்த அரச சேவையிலும் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியிலான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும்.
அவர்களின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்காக சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகளை மிகவும் நியாயமான முறையில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்தில் (UOJ) நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக் கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தலையிடுவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கல்வி அமைச்சின் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், உயர்கல்விக்கான உபகுழு உறுப்பினராகவும், மேலும் யாழ்ப்பாண மாவட்ட கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றேன்.
2025 செப்டம்பர் 12ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வி உபகுழு கூட்டத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் நியமனம் இதுவரை மேற்கொள்ளப்படாததற்கான காரணத்தைக் கேட்டேன்.
மேலும், அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அந்தக் கூட்டத்தில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தரும் கலந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்தேன்.
உடனடியாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் கல்வி அமைச்சு சாரா ஆலோசனைக்குழுவிற்கு ஒரு மோஷன் (Motion) எழுதியும் அனுப்பியிருந்தேன்.
உயர்கல்வி உபகுழுவின் தலைவர் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன என்னுடன் கலந்துரையாடி, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கான ஆளணி நியமனம் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.
எனவே, கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக மட்டுமே நான் செயற்பட்டு வருகிறேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் ஒருபோதும் யாழ் பல்கலைக் கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை. மேலும் எந்த நியமனங்களையும் யாருக்காக கோரியதுமில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது.
இச்செய்தி உண்மையை மறைத்து ஒரு பிழையை மூடிமறைக்க திட்டமிட்ட ஒரு குழுவினரால் பரப்பப்பட்ட தவறான தகவல் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இச் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.