யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின் தொடர்ந்து சென்ற போதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்கு உள்ளாக்கித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.
லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேக நபர் தப்பிச் சென்று கொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய 3 தலைமறைவான சந்தேக நபர்களில், இன்று (24) வொலிவேரியன் கிராமத்தில் 36 வயது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 21-ஆம் தேதி இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றது.கைது செய்யப்பட்ட நபர் குடும்பஸ்தர் என்பதும், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிறுமியை பாதுகாக்க விட்டு, அவர் வெளி மாவட்ட சிறுவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பொலிஸார், சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.
நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்த கடிதத்தை, 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்துள்ளார்.
அதே போன்று பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நீண்ட நெடுங்காலமாக முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு நீண்ட காலப்பகுதி தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, நேற்று (23.01.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணியிடை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் விளக்கம் கேட்கப்படாததால், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் இந்த ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பல்கலைக் கழக சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக் கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக் கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்தச்சட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
துணைவேந்தர்களை நியமிப்பது பேரவை சிபாரிசின் அடிப்படையில் நிகழ்கின்றது. இதுவரை காலமும் துணைவேந்தர்கள் விரும்புகின்றவர்களை தான் துறைத் தலைவர்களையும் பீடாதிபதிகளையும் நியமிக்கின்றனர்.
நியமனத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினுடைய பலமான கண்காணிப்போடு பேரவை சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
துறைசார் தலைவர்களை வளப்படுத்த வேண்டும். தரம் கொண்டவர்களை நியமிக்க வேண்டும். நாட்டை விட்டு 566 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு விலகியுள்ளனர்.
பல்கலைக் கழகங்களுக்கு நிரப்படவேண்டிய ஆளணி கோரப்பட்ட நிலையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எனவே பல்கலைக் கழக சட்டங்களை மாற்றியமைத்து பல்கலைக் கழகங்களுக்குரிய ஆளணிகளை நியமித்து இலங்கை பல்கலைக் கழகங்களின் தகைமையை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களால் ஊடகங்களுக்கு விசேட செய்திக் குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (23.01.2026) பாராளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் K.D.லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி-எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் K.D.லால்காந்த அவர்கள் அதற்கான அழைப்பு அனுப்பப்படும் என தெரிவித்தார்.
ஆனால் இன்றைய கூட்டம் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படாத நிலையில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டோம்.
அமைச்சர் லால்காந்த அவர்கள் இதன் போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளதாக தெரிவித்தார்.
மகாவலி-எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளது என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம்.
2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப் படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.
இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசன திட்டம் இரகசியமாக சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்கு தெரியாமல் அத்திட்டத்திற்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.
இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் தொடர்பான திட்டமுன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெற வேண்டும் என்று நான் முன் மொழிந்திருந்தேன். அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.
மகாவலி-எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983ல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டு வரப்படவில்லை, கிவுல் ஓயா திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இத்திட்டம் கொண்டு வரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.
எமது கருத்தை கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதி மொழிகளை எமக்கு வழங்கினர்.
1. திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் மாசி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.
2. புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட மாட்டர்கள்.
சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயர்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.
மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அனைவரையும் இச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய விரைவாக கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல்ஒன்றினை வவுனியாவில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 23.01.2026இன்று இடம்பெற்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு பல்வறேு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டீ.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்ரத் நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்ற வகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.
அந்தவகையிலே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியயர் சத்தியலிங்கமும் இத்திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீக தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படுமென்பதைச் சுட்டிக் காட்டினோம்.
இதுதவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் கிவுல் ஓயா
குறிப்பாக இந்தக் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தினை செயற்படுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக் குளம், ஒயாமடுக் குளம், வெள்ளான் குளம், பெரியகட்டுக் குளம், பனிக்கல்மடுக் குளம், சன்னமுற்றமடுக் குளம், கம்மாஞ்சிக் குளம், குறிஞ்சாக் குளம், புலிக்குட்டிக் குளம், திரிவைச்ச குளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல் காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற் காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி போன்ற தமிழ் மக்களின் பூர்வீக குளங்களும், வயல் நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப் பகுதிகளுக்குள் மூழ்கிப் போகும் என்பதைச் சுட்டிக் காட்டினோம்.
இவ்வாறாக தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றி விட்டு, குடியேற்றப்பட்ட 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களை வலுப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாதென எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிவுல் ஓயாத் திட்டத்தில் கருத்திலெடுக்கப்படாத சுற்றுச் சூழல் பாதிப்பு
இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்காக வவுனியா பெரிய கட்டுக்குளம் பகுதியிலுள்ள பாரிய ஒதுக்கக் காடுகள் அழிக்கப்படவுள்ளன.
அத்தோடு கொக்குத்தொடுவாயிலுள்ள கிரிபன்வெவ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக ஆமையன் குளத்திற்கு நீரை நகர்த்துகின்ற போது 2500 ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடுமென சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இத்திட்டத்தினை அண்மித்த புதிய குடியேற்றங்களுக்காக 1500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தினை வனஜீவராசிகள் இழப்பதால் மனித – யானை மோதல்கள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடையுமென வனஜீவராசிகள் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளதாக இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் மேம்படுத்தப்படவுள்ள விவசாயநிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வன ஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விக்குறியாகும். இதனால் வனஜீவராசிகளின் உயிரவாழ்வு தொடர்பான பிரச்சினை உருவாகும்.
காட்டு யானை உள்ளிட்ட வனஜீவராசிகள் புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்படுமெனவும் எனவே அதற்கு மேலதிக நிதி தேவைப்டும் என வன ஜீவராசிகள் திணைக்களம் கரிசனை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒதுக்கக் காடுகளை அழிக்கும் நில மேலும் தீவிரமடைந்தால் நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான நிலமை ஏற்படலாமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கிவுல் ஓயாத் திட்டப் பகுதியில் மொத்தம் 88 தாவர இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 02 தாவர இனங்கள் தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், முக்கியமான 07 தாவர இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை இப்பகுதியில் 214 விலங்கு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14விலங்கு இனங்கள் உள்ளூரைச் சேர்ந்தவையாக்காணப்படுகின்றன. மேலும் இங்கு காணப்படும் 04விலங்கு இனங்கள் உலக அளவில் ஆபத்திற்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், 08விலங்கு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன.
அதேவேளை பறவைகளில் 10புலம்பெயர்ந்த இனங்களும் இந்தப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்திகின்ற போது இத்திட்டத்தின் நேர்மறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன என்பதையும் இதன்போது சுட்டிக் காட்டியிருந்தோம்.
வன்னிக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்பை விழுங்கப் போகும் கிவுல் ஓயா
மேலும் கிவுல் ஓயாத்திட்டத்தினைச் செயற்படுத்தினால் நீரேந்துப் பகுதிக்குள் 47 தொல்லியல் இடங்கள் மூழ்கிப் போகும் அபாயநிலை ஏற்படும்.
தமிழர்களின் பூர்வீகத்தை பறைசாற்றும் வன்னி இராட்சியத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களே இவ்வாறு கிவுல் ஓயாத் திட்டத்தில் மூழ்கிப் போகும் நிலையில் காணப்படுகின்றன. என்பதும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.
எனவே தமிழர்களுக்கும் வன்னிக்குமிடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பினை நீரில் மூழ்கச்செய்கின்ற இத்திட்டத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதென்ற எமது கருத்துக்களை் இதன் போது தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் குறித்த திட்டத்தினால் பாதிப்புக்கள் எவையும் இடம்பெறாதெனத் தெரிவித்த மகாவலி அதிகாரசபையினர், கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக வவுனியாவில் தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதாகத் தெரிவித்தனர் – என்றார்.
சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை அவ்வாறு சட்டவிரோத கரைவலை முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.
நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
மேலம் கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்த அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.
நாட்டில் அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவை தாமதமின்றி வழங்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21.01.2026) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் எமது நாட்டை மிகமோசமாக தாக்கிய பேரனர்த்தமாக டித்வா புயலும் அதன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மண்சரிவு போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்து சேதம் என்பன எமது நாட்டின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் படிப்படியாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் விழுந்த பேரிடியாகவே இதனை கருதவேண்டியுள்ளது.
கடந்த 25 வருடங்களில் இந்த நாடு 4 பேரவலங்களை சந்தித்துள்ளது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரவலம், 2009ல் வடக்கில் நடைபெற்ற இறுதியுத்தம், 2020ல் ஏற்பட்ட கொரோனா நோய்த்தாக்கம், கடந்த வருடம் ஏற்பட்ட “டித்வா புயல்” அனர்த்தம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரவலங்களிலிருந்த மீண்டது போன்று இந்த அனத்தத்திலிருந்தும் மீண்டு வழமைக்கு திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.
இயற்கை அனர்த்தம் என்பது நமது கட்டுப்பாட்டுக்கு மீறியது. அதனை யாராலும் தடுக்கமுடியாது. எத்தனை நவீன வசதிகள் இருந்தாலும் அனர்த்தத்தை தடுக்க முடியாது. ஆனால் அந்த அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற பாதகமான விழைவுகளை, சேதாரங்களை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முன்னாயத்தங்களை செய்வதுடன் அனர்த்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளையும் அனர்த்தத்திற்கு பின்னரான கால முகாமைத்துவமும் மிக முக்கியமானது. அதுவே அனர்த்த முகாமைத்துவமாகும்.
உலகளாவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக 4 படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. தடுத்தல், எச்சரிக்கை விடுத்தல் தயார்படுத்தல், எதிர்நோக்குதல், மீட்பு பணி அவசர நிவாரணம் மீள்நிர்மாணம்.
அந்த வகையில் நவம்பர் மாதம் 25 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் பாரிய அனர்த்தமொன்று நடைபெறப் போவதாக பல்வேறு சமிஞ்சைகள் முன்கூட்டியே கிடைத்த போதிலும் முறையாக தயார்படுத்தல் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு துறைசார்ந்த திணைக்களத்தின் மீது சுமத்தப்படுகின்றது. இதனை அரசாங்கம் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று கூறி தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இளம் குடும்பத்தலைவன் தணிகாசலம் பத்மநிகேதன் இராஜாங்கனையில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தார் அல்லது கொல்லப்பட்டார். குறித்த பேரூந்து சாரதிமேல் கொலை என்றுதான் இராஜாங்கனை பொலிசார் நொச்சியாகம நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அவ்வழக்கில் ஒரு கொலை மற்றும் 64 பயணிகளை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் யார்? முறையான முன்னறிவித்தல் இல்லாமல் இராஜாங்கனை நீர்தேக்கத்திலிருந்து நீரை திறந்தவர்களா? அல்லது அனர்த்தம் நிகழ்ந்த இடத்திற்கு பேரூந்து செல்வதற்கு அனுமதித்த காவல்துறையினரா? அல்லது நாடு ஒரு அனர்த்தத்தை எதிர் கொண்டிருந்த நிலையில் நேர்முகத் தேர்விற்கு அழைத்த நேசண்ட் டிரஸ்ட் வங்கி நிர்வாகத்தினரா? அல்லது எல்லாவற்றிற்கும் பொறுப்புக்கூற வேண்டிய தேசிய அனர்த்த முகாமைத்துவ திணைக்களமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
இந்த துர்ப்பாக்கிய சம்பவம் நிகேதனுக்கு மாத்திரம் நிகழவில்லை, இவ்வாறு பல நிகேதன்கள் உயிரிழந்துள்ளனர். பொறுப்புச் சொல்பவர் யார்?
அனர்த்தத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது பல சந்தர்ப்பங்களில் தடுக்க முடியாதென்றாலும் இவ்வாறான தவிர்க்கக் கூடிய சந்தர்ப்பங்களை தடுக்காதவர்களை பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றக் கூடாது.
எனினும் அனர்த்தம் ஏற்பட்டபோது முப்படையினரும் பொலிசாரும் ஏனையோரும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியதை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்தமை, விமானியின் உயிரிழப்பு ஆகியன வேதனையான சம்பவங்களாகும்.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் முறையாக செயற்பட்டனவா என்ற கேள்வியும் இல்லையெனின் செயற்பட முடியாமைக்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாக செயற்பட தேவையான வளங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மீட்பு பணி வேலைகள் நேரடியாக ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
இலங்கையில் இதுவரை காலமும் செயற்பட்ட அனர்த்த முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர், அந்த வளம் பாவிக்கப்பட வேண்டும்.
அனர்த்தம் நடைபெற்றவுடன் உடனடியாக பல்வேறு நாடுகள் உதவிகள் செய்தன. அவற்றிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனினும் அனர்த்தத்திற்கு பின்னரான நிலைமை தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் அறிந்தவரையில் வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் நீர்புகுந்ததை தொடர்ந்து அவற்றினை சுத்தப்படுத்துவதற்கான கொடுப்பனவு ரூபா 25000 பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் சேதமடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை முற்றுப்பெறவில்லை.
அத்துடன் குறிப்பாக எமது பிரதேசத்தில் பயிர்கள் அழிவடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் கால்நடைகள் இறந்தமைக்கான கொடுப்பனவுகள் தாமதமாகவே நடைபெறுகின்றது.
கிராம சேவகர்களின் பற்றாக்குறையே தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. போதிய ஒழுங்குகளை செய்வதனூடாக தாமதத்தை குறைக்க வேண்டும்.
அத்துடன் உடைப்பெடுத்த குளங்கள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நிரந்தரமாக புனரமைப்பதற்காக இந்த வருடம் நிதியொதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதனை விட முக்கியமானது அனர்த்த முகாமைத்துவத்தின் முதல் இரண்டு படிநிலைகளையும் பலப்படுத்தி எதிர்காலத்தில் பாதிப்புகளை குறைப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படுதல் வேண்டும்.
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கான காரணம் முறையான வடிகாலமைப்பு இல்லாமை, வடிகான்கள் சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளமை, நீண்டகாலமாக நீர்வழிந்தோடும் வடிகான்கள் முறையாக பராமரிக்கப்படாமை போன்றனவாகும். உதாரணமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றிற்கு சொந்தமான வடிகால்களை யார் துப்பரவு செய்வது என்ற சர்ச்சை, சம்பந்தப்பட்ட தினைக்களமா? உள்ளூராட்சி மன்றங்களா? இன்றும் தொடர்கிறது.
எனவே அனர்த்த முகாமைத்துவம் என்பது குறிப்பட்ட ஒரு திணைக்களத்தின் வேலை அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சேதாரங்களை குறைக்கமுடியும் என தெரிவித்தார்.
தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட விருக்கின்ற கிவுல்ஓயா நீர்த்தேக்க கட்டுமானத்திட்டத்திற்கு 2.5பில்லியன் ரூபா நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
குறித்த கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ்மக்களின் பல சிறிய நீர்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படுமென்பதை கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல் காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும்,
வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப் பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப் பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன் போது அமைச்சருக்கு தெரியப்படுத்தினேன்.
இவ்வாறு தமிழ்மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக் குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதையும் சுட்டிக் காட்டினேன்.
இதன் போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில்,
எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்திலும் கலந்து கொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தினால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக் காட்டுவதுடன், இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்பேன் – என்றார்.