டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவர்களை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் 20 முறைப்பாடுகள் பெறப்பட்டது.
சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாங்கள் காண்கிறோம். இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர்.
டிக் டாக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். இந்த குழுக்கள் சில சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.
சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும் போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும்.
மேலும் சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். சிறுவர்கள் தனியாக இருக்கும் போது, அவர்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் டிக் டோக் குழுக்களில் சேர்ந்து கடுமையான குற்றங்களில் பாதிக்கப்படலாம்.
உங்கள் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (08.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவையனெ தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.
அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது.
அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது.
இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.
இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது.
மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும்; 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாண மட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை மாலை (02.08.2025) நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய ஆளுநர்,
நாட்டின் பெருமைமிகுந்த மற்றும் மீள்தன்மை கொண்ட எங்கள் பிராந்தியத்துக்கு உங்களை வரவேற்கின்றேன். தேசிய ஒற்றுமை, சம வாய்ப்பு மற்றும் எந்த மாணவனும், எந்தப் பாடசாலையும், எந்த மாகாணமும் பின்தங்கியிருக்காத எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புக்கான உங்கள் செய்தி மிகப்பெரியது.
இன்று, வடக்கு மாகாண மாணவர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையைத் தரும் ஒரு துணிச்சலான கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உங்கள் தொலைநோக்குத் தலைமையை நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஒவ்வொரு மாணவனும் தங்கள் கல்வியை முடிக்கவும், அவர்கள் விரும்பும் எதிர்காலத்தைத் தொடரும் வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலான ஒருங்கிணைந்த தொழில் மற்றும் கல்விப் பாதைகளுடன் கல்வி முறையை மறுசீரமைத்தல் சிறப்பானது.
பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை பரீட்சைப் புள்ளிகளுடன் சமநிலைப்படுத்தும் மிகவும் நெகிழ்வான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் மீதான தேவையற்ற போட்டி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
எண்ணிமப்படுத்தலை (டிஜிட்டல் மயமாக்கல்) புகுத்துவதன் மூலம் வடக்கு மாகாணம் போன்ற கல்வி இடைவெளிகள் அதிகமாகவுள்ள மாகாணங்கள் மிகப்பெரிய நன்மையடையும்.
இந்தச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவை கொள்கை மாற்றங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை. நீதி, உள்ளடக்கம் மற்றும் சமமான வளர்ச்சிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் சமூகங்களுக்கான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, என்றார் ஆளுநர்.
இங்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள், இந்தக் கலந்துரையாடலை ஒழுங்குபடுத்திய வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பினருக்கு முதலில் நன்றிகளைக் கூறுகின்றேன்.
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் வலிகள் நிறைந்த காலத்திலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நீங்கள். வடக்கு மாகாணம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. ஏன் இந்த நிலைமை என்று சிந்திக்கவேண்டும்.
தற்போதுள்ள கல்வி முறைமை எல்லோருக்கும் சமனானதாகத் தெரியவில்லை. பணம் சார்ந்த சுமைகளை பெற்றோருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. பரீட்சை மையக் கல்வியானது மாணவர்களை முடக்கியுள்ளது. எனவே, அவசியமான இந்தக் கல்விச் சீர்திருத்தம் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். 2026ஆம் ஆண்டு தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் யாழ் நகரத்தில் வேலை செய்வதற்கு ஆசைப்படுகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுக்கும் அதுவும் குறிப்பாக எல்லை நிலையிலுள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும், என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கல்வி சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நிரல் கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.
யாழ் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறுகின்றது.
இதன் போது இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான விடயங்களை கையாளுவதற்கு என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கூட்டத்தில் வட – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில், கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் எம்பி த.கலையரசன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.
கடந்த 11ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சில பொலிஸாார் காயமடைந்தனர்.
பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது. இந்தச் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினருமான விக்டர்ராஜ் வாக்கு மூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்து சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பொது விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அவரின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புதிய வரி வீதங்கள் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பல்வேறு நாடுகளுக்கான வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஜனாதிபதி கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 7 நாட்களின் பின்னர் அமுல்படுத்தப்படும் என வௌ்ளை மாளிகை கூறியுள்ளது.
ஏற்கனவே இலங்கை மீது கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி 44 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டது.
குறித்த வரியைத் தளர்த்துவது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அரசாங்கத்ம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்ததுடன் அந்த வரி 30 வீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கைக்கான தீர்வை வரியை 20 வீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் இந்தத் தகவல் இன்று அதிகாலை இலங்கைக்கு கிடைத்தது.
இதற்காக இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கடந்த சில நாட்களாக அமெரிக்காவுடன் நடத்தி வந்ததுடன் இது அதன் பலனாக கிடைத்த வெற்றி என இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டது.
பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெறுவதால் தனது வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4 பேர் கொண்ட குடும்பத்தில் அவர் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உயிரிழந்த மாணவி ஹோமாகம பகுதியை சேர்ந்த 15 வயதாய மாணவி என பொலிஸார் தெரிவித்தள்ளனர். சிறுமி பாடசாலையில் நடைபெறும் தவணை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பின்னர், மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை அறிவுறுத்தியது.
எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால், அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து, மாணவிக்கு சில தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நாட்டில் பரீட்சை மையக் கல்வியே காணப்படுவதால் பிரச்சினைகளை எதிர் கொள்ளத் தெரியாத புத்தகப் பூச்சிகளாக மாணவர்கள் மாறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களைப் பேசுவதையோ, அடிப்பதையோ, ஆலோசனை வழங்குவதையோ அதிபர், ஆசிரியர்கள் தவி்த்து தமது கற்பித்தல் செயலில் மட்டும் ஈடுபடுவதே தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி அதிபர், ஆசிரியர்களுக்கு ஆரோக்கியமானது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு, 01.08.2025 அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்தது.
இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போதய கால கட்டத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக அர்ச்சுனா போன்றவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அவசியமாகக் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்னர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களானது, நேற்று(01) இரவு மட்டக்களப்பு தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் அங்கு மலசல கூடத்திற்கு குளி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது.
முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதி மக்கள், யானை வேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் ஊடாக அமைக்கப்பட்ட வீடுகள் அரை குறையாக உள்ளமையால் அவற்றை முழுமைப்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் தமக்கான காணி ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி சீரில்லை என்பதையும் தெரியப்படுத்தினர். தாம் மீளக்குடியமர்ந்த பின்னர் வனவளத் திணைக்களத்தால் குடிமனைக்கு அண்மையாக எல்லைக்கல்லுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினர்.
மருதோடை – காட்டுப்பூவரசன்குளம் வீதியிலிருந்து நாவலர் பண்ணை வரையிலான 5.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை துரிதமாகப் புனரமைப்பதற்கும், அதன் ஊடாக போக்குவரத்துச் சேவையை சீராக்குவதற்கும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு ஆசிரியரை அடையாளம் கண்டு விரைவில் நியமிக்கவும், அந்தப் பகுதி மக்களுக்கான மேட்டுக்காணியை விரைந்து வழங்கவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வெடிவைத்தகல்லு கிராம மக்களை ஆளுநர் சந்தித்தார். யானைவேலி அமைக்கப்படாமல் தம்மால் மீளக்குடியமர முடியாது என மக்கள் இதன்போது தெரிவித்தனர். உயிரிழப்புக்களைக் கூட யானைகளால் தாம் சந்தித்துள்ளதாகவும், பயிரழிவு கூட ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். மாடுகள் உள்பட தமது பொருட்களும் களவாடப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் வனவளத் திணைக்களம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் தமது காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மிக அடர்ந்த காடுகள் ஏக்கர் கணக்கில் அருகிலுள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களால் அழிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத வனவளத் திணைக்கள அதிகாரிகள், தாம் சிறிய விறகுத் தடியை வெட்டினால் கூட வழக்குத் தொடுப்பதாகவும் ஆளுநரிடம் முறையிட்டனர். வனவளத் திணைக்களத்தினரால் தற்போதும் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சுமத்தினர்.
மேலும், திரிவைத்தகுளத்தில், 1983ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொண்ட நிலையில் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியமர்ந்த பின்னர், 2019ஆம் ஆண்டு காணிகளைத் துப்புரவு செய்தபோது வனவளத் திணைக்களத்தால் தடுக்கப்பட்டதாகவும், தற்போது காணிகள் வனவளத் திணைக்களத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப் பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தமக்கு காணி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர்.
மக்களின் கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனத் தெரிவித்த ஆளுநர், நீங்களும் மீள்குடியமர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். உங்களின் மீள்குடியமர்வு முயற்சியில்தான் நாமும் உற்சாகமாக உங்களுக்கான உதவிகளைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் மருதோடைப்பகுதியைப் பார்வையிட்ட ஆளுநர், கடந்த கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்துடன் மூடப்பட்ட ஊஞ்சல்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பெரிய கோரமோட்டைக் குளத்தையும் பார்வையிட்டார். குளத்தின் கீழான பயிர்ச்செய்கை கைவிடப் பட்டுள்ளமையையும் ஆளுநர் அவதானித்தார். இது தொடர்பில் கமநலசேவைத் திணைக்களத்தினருக்கு, குளத்தை புனரமைப்பதற்கான அறிவுறுத்தலையும் வழங்கினார்.
நெடுங்கேணி மருதோடை அ.த.க. பாடசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் நிதி வழங்கப்பட்டு அங்கு கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில், பாடசாலையையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மக்களையும் ஆளுநர் சந்தித்தார். இதன் போது, கோவில் புளியங்குளம் மக்களால், யானைவேலி அமைத்தல், வெடிவைத்த கல்லு வரையிலான வீதிப் புனரமைப்பு, வீதி விளக்குகள் பொருத்துதல், மருதங்குளம் புனரமைப்பு ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மாமடுக் குளம் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், சம்பளம்குளத்திலிருந்து பனைநின்றான் செல்லும் வீதியை புனரமைத்து தரவேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டனர்.
வனவளத் திணைக்களத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வது தொடர்பாக மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் வனவளத் திணைக்கள பிரதிநிதிகளிடம் ஆளுநர் தெரியப்படுத்தினார். அவ்வாறு செயற்படுவது தவறு எனவும் சுட்டிக் காட்டினார்.
மேலும், வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் காணிகளை அடையாளம் காண்பதற்கு பிரதேச செயலரையும் உள்ளடக்கிய குழுவை நியமித்து செயற்படுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
கால்நடை வைத்தியர்கள் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியருக்குரிய வாகன வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார். அதேபோல காணிக் கச்சேரிகள் விரைவில் நடத்தப்பட்டு காணி ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆளுநரின் இந்தப் பயணத்தின் போது, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.