எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன்,
2028 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார். இது தொடர்பில் சில விடயங்களை அவரிடம் அண்மையில் கலந்துரையாடினேன். இதன் போது, அவரது தந்தையை போல மோசடிகளை செய்ய வேண்டாம் என கூறினேன்.
உங்கள் தந்தை பெரியப்பா, சித்தப்பா போன்றோர் மரணிப்பது தொடர்பான வைராக்கியம் தமிழர்களிடையே காணப்படுகின்றது என்பதை எடுத்துக் கூறினேன்.
அத்தோடு, நாமல் அவ்வாறு ஜனாதிபதியானால் எனது முழு ஆதரவையும் அவருக்கு வழங்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.
பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாணவிகளில் இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.
மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று இதை அருந்துவது தெரிய வருகின்றது.
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் – பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை (26) வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்தப் மாபெரும் போராட்டங்கள் வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும்,
மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று செம்மணி புதை குழியில் இருந்து மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 03 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் வரையில் 85 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒரு முன்னாள் போராளியின் பரபரப்பு வாக்குமூலங்கள், நாட்டின் முக்கிய புலனாய்வு அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன, இந்த கைது சாதாரணமானதல்ல, இது ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் வாக்குமூலங்கள், கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களையும், புலனாய்வுத் துறையின் ரகசிய நடவடிக்கைகளையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது” என உள்வட்டாரங்கள் பதறுகின்றன.
மேலதிக விசாரணைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பல உயரதிகாரிகளின் பதவிகள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்த வாக்குமூலங்கள் ஒரு சங்கிலித்தொடர் போல பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணரும் என்பதால், புலனாய்வுத் துறையினர் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பப் போகும் இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் போராளியின் வாக்குமூலங்கள், இதுவரை மூடிமறைக்கப்பட்டிருந்த பல ரகசியங்களை கிழித்தெறியப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்! என அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இந்த அவசரகால நிலை பயன்படுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சிவில் சமூக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 18, 2022 அன்று விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தமை அரசியலமைப்பு உரிமைகளை மீறியதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது
நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு, 2-1 என்ற விகிதத்தில் மனுதாரர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறியது என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்டச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவமானது நேற்றைய தினம் புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன், சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனையில் மிரட்டி ஆசிரியையின் சங்கிலியை கொள்ளையிட்டதுடன்,
குறித்த ஆசிரியை கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற முடியாததால் திருடன் அதனை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முருங்கன் பொலிஸார் வருகை தந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியையிடமிருந்து முகமூடித் திருடன் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக பேராயர் கரத்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அணுவாயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட மூலோபாயக் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்டு உக்ரைன் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள் உடனடியாகப் போர் விமானங்களை அனுப்பி வான்வெளியில் உஷார் நிலையை எட்டியுள்ளன.
மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நேட்டோ படைகள் இவ்வாறு போர் விமானங்களை அனுப்பியுள்ளது, ஐரோப்பிய வான்வெளியில் நிலவும் பதட்டமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, சமீபத்திய தாக்குதலில், ரஷ்யாவின் Tu-22M3 மூலோபாயக் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குண்டுவீச்சு விமானங்கள், அணுவாயுதங்களை ஏந்திச் செல்லக் கூடியவை என்பதால், நேட்டோ உறுப்பு நாடுகள் உடனடியாக விழிப்படைந்துள்ளன.
சமீபத்திய தாக்குதலில், 600-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் 26 Kh-101 குரூஸ் ஏவுகணைகள் உட்பட, சுமார் 700-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல் சாதனங்களை ரஷ்யா உக்ரைன் மீது ஏவியுள்ளது.
இது போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யா நடத்திய மிகத் தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றாகும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாகவும், தங்கள் வான்வெளியைப் பாதுகாக்கவும், நேட்டோ உறுப்பு நாடுகளின் போர் விமானங்கள் போலந்து எல்லைப் பகுதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளன.
நேட்டோ படைகள், ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளிக்கு அருகே “வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில்” ஈடுபட்டபோது, இது போல் பலமுறை போர் விமானங்களை அனுப்பியுள்ளன.
ஆனால், அணுவாயுதத் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களின் அச்சுறுத்தல், தற்போதைய பதட்டத்திற்குப் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
இந்தச் சம்பவம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்கனவே நிலவி வரும் பதட்டமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த புடினுக்கு 50 நாட்கள் கெடு விதித்து, இல்லையெனில் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த பின்னணியில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன.
நேட்டோ படைகளின் இந்த உடனடிப் பதில், ரஷ்யாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்கவும், நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கூட்டணி உறுதியுடன் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களும், நேட்டோ பதிலடிகளும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.