அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று(28) நடைபெற்ற தேர்தலில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான விசேட வைத்தியர் தர்ஷன சிறிசேனவும் தலைவர் பதவிக்காக மீண்டும் போட்டியிட்டார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளராக டொக்டர் பிரபாத் சுகததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான ஹரித அளுத்கே போட்டியிட்டார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவிற்கான 16 உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் மத்திய குழுவிற்கு 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(28) உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன்(வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக் கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.
குறித்த கட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின் போது நாட்டிற்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.
யாழில் மருத்துவபீட மாணவன் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவி யாழ் வைத்திய சாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் தவறான தொடர்பைப் பேணுவதை அறிந்த பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டு மாணவியின் கள்ளக் காதலனான வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் குறித்த விடயம் தொடர்பில் முறையிடவுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக் காலத்தில் இத்தகைய முறை தவறிய உறவுகளால் உயிர்கள் வீணே இழக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற் படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(29) நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன .
இதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
இதன்படி யாழ்ப்பாணம் மேலதிக மாவட்ட செயலராகக் (காணி) கடமையாற்றிய ஸ்ரீமோகனன் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா அஞ்சல் திணைக்களத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் மேலதிக மாவட்ட செயலாளராகப் (நிர்வாகம்) பதவி உயர்வு பெறவுள்ளார். இதேவேளை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், பருத்தித்துறை பிரதேச செயலகங்களுக்குப் புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இதற்கிடையே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அரச அதிகாரிகள் ஐந்து பேரளவில் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளையும், விசாரணைக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் தற்போதைக்கு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.
தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும், அதனைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடக சந்திப்பில் பேசிய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். தாம் அதனை வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலையீட்டினால் கல்வித் துறையில் ஏற்பட்ட சட்ட திருத்தங்களால் மாணவர் ஒழுக்கம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் கலசாராரத்தையும் சீரழிக்க எடுக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.