தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் (11.05.2025) சட்டத்தரணி மணிவண்ணன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பானது வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைக்கு உறுப்பினரை நியமிப்பது தொடர்பிலும், தவிசாளர் தேர்வின் போது யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும், கட்சியை வவுனியா மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வது தொடர்பிலும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மக்களுக்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளிக்குமாறு தமிழ்க் கட்சிகளிடம் விநயமாக கோருவதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் க குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
35சபைகளில் நாம் தனிப்பெரும் கட்சியாக உறுப்பினர்களை பெற்றுள்ளோம். ஆறு சபைகளில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த சபைகளில் தவிசாளர் உப தவிசாளரை தெரிவு செய்யும் பொறுப்பு கட்சிக்கு மட்டுமே இருக்கும். எமக்காக வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. நாம் பொறுப்பெடுக்கும் சபைகளை திறமையுடனும் நேர்மையுடனும் நிர்வகிப்போம்.
ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக் கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய ஒரு உரிமை பொதுவாக இருக்கும். அந்த வகையில் இந்த 35 சபைகளுக்குமான தவிசாளர் உபதவிசாளர்களை நாங்கள் முன்னிறுத்துவோம். மற்றய கட்சிகள் இந்த பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி நாம் முன்னிறுத்துகின்ற வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று தன்மையாக கேட்டுக் கொள்கிறோம்.
சில சபைகளில் விதிவிலக்கு ஏதும் இருந்தால் அது தொடர்பில் ஆராய்வோம். பொதுவான வகையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். யாழ் மாநகரசபைக்கும் இது பொருந்தும். விசேடமாக நாங்கள் கேட்டுக் கொள்வது தமிழ் கட்சிகளையே. அந்த கட்சிகள் இந்த உடன்பாட்டிற்கு வருவது நல்லது என்பது எமது விநயமான வேண்டுகோள். முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்பேசும் கட்சிகளோடும் நாம் இணங்கியே செயற்படுவோம்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை இந்த தேர்தலில் நாம் விமர்சித்ததாக எனக்கு நினைவில்லை. அவர்களும் எங்களை விமர்சித்ததாக ஞாபகமில்லை. சில கட்சிகள் எங்கள் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கும் போது அதற்கான பதில்களையே வழங்கியிருந்தோம். தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கூட்டு தொடர்வது நல்லது என்பது எமது சிந்தனை. காலப்போக்கில் அதனை தீர்மானிப்போம்.எனவே இந்த முயற்சி அப்படியான ஒரு போக்கிற்கும் வழிவகுக்கலாம்.
வவுனியாவில் எமது கட்சி பின்னடைந்துள்ளது என்று கூறுவது ஒரு மாயை. கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட இந்த தேர்தலில் வவுனியாவில் கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது. அது பின்னடைவு அல்ல. திடீர் என்று வானைத் தொட முடியாது. நாங்கள் சீலிங்கை தொட்டு விட்டோம் இனி மேலே போவோம் என்றார்.
வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் அதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில் நேற்று(10) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். அந்தவகையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியூடாக தமிழ்த்தேசிய கட்சிகளோடு இணைந்து சபைகளை பலப்படுத்துவதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவிலே தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களோடு, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியாகவே வவுனியா மாநகரசபை அமையவேண்டும் என்பது எமது விருப்பம். எனவே அதன் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளோடு எமக்கு கிடைத்த விகிதாசார ஆசனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் முடிவை எட்டுவோம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து பயணிப்பது தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எமது தலைமைகுழு கூடி ஆராயவுள்ளது என்றார்.
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, காவல்துறை விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய மாணவியின் பெற்றோரும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல் துறைக் குழுக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பாடசாலையிலும், பயிற்சி வகுப்பிலும் குறித்த மாணவிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, துல்லியமான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறும் பிரதமர் காவல்துறை விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவம் பதிவாகிய போது எடுக்கப்பட்ட நடவடிக்கை செயல் திறனானதா என்பது குறித்து கல்வி அமைச்சு, உள்ளக விசாரணையை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் தலையிட வேண்டிய அரசு, நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
எனவே, அந்த பொறிமுறையை கண்காணித்து அதை நெறிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூவர் அடங்கிய குழாம் ஒன்றையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமித்துள்ளார்.
முல்லைத்தீவு – குருந்தூர்மலை அடிவாரத்தில் விவசாயம் மேற்கொண்ட காணி உரிமையாளர் ஒருவர் குருந்தூர் மலை விகாராதிபதியால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (10.05.2025) காலை இடம் பெற்றள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் ஒருவர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார்.
இதன் போது அவ்விடத்துக்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், காவல்துறையினர் இணைந்து விவசாய நடவடிக்கைகளை தடுத்ததோடு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் கைது செய்து உழவு இயந்திரத்தினையும் முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளர் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று(10) இடம்பெற்று வருகின்றது.
ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
ரெலோவின், சமகால அரசியல் நிலவரங்கள், உள்ளூராட்சி தேர்தலில் முடிவடைந்துள்ள நிலையில் சபைகளில் ஆட்சியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக அறிய முடிகின்றது.
கலந்துரையாடலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், கட்சியின் முக்கியஸ்தர்களான ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சுரேன்குருசாமி, உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த இருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் பேரம் பேசியுள்ளார்கள்
இந்நிலையில், இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஏழு வயதுடைய சிறுமி ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதிக்கான அனுமதியை வழங்குவதற்காக அவரின் தாயிடம் பாலியல் கையூட்டல் கோரிய திவிநெகும அபிவிருத்தி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதிவாதியின் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்டவை நீக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் கையூட்டல் பெறும் நோக்கில் குறித்த தாயை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அழைத்த நிலையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவருக்கு 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதி ஒரு அரச அதிகாரியாக தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காகப் பாதிப்படைந்துள்ள பெண் ஒருவரிடம் பாலியல் கையூட்டல் கோரியதை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு சிறிய அளவான தண்டனையை அறிவிக்க முடியாது எனவும் அதற்கமைய அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் 28ம் திகதி, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், கொழும்பு பொலிசாரை தொடர்பு கொண்டு வெடிகுண்டு அச்சம் இருப்பதாக தெரிவிக்க. அங்கே பொலிசார் மோப்ப நாய்கள் குவிக்கப்பட்டது.
ராணுவத்தினரும் உதவிக்கு விரைந்தார்கள். ரஷ்ய தூதரகத்தில் விட்டுச் செல்லப்பட்ட லாப்-டொப்பே இதற்கு காரணம்.
அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் அடைந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. குறித்த லாப்-டொப் ஒரு ஜேர்மன் பிரஜையுடையது என்பது சினமன் கார்டன் பொலிசார் கண்டறிந்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளார்கள்.
ஆங்கிலத்தில் அந்தப் பெண் பேச மறுத்த காரணத்தால். ஜேர்மன் பாஷை தெரிந்த நபரை அழைத்து வந்து விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு பொலிசார் தள்ளப்பட்டனர்.
எனினும் எவ்வளவு கேட்டும் அவர் லாப்-டொப்பின் பாஸ்வேட்டை தர மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்து வத்திருக்க முடியாது. இதனால் பொலிசார் அவரை விடுவித்துள்ள நிலையில், அந்த லப்-டொப்பில் என்ன இருக்கிறது என்று ஆராய முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
குறித்த ஜேர்மன் பிரஜை , ஏதாவது ஒரு நாட்டு உளவாளியாக இருக்க சந்தர்பம் உள்ளது என்ற கோண்டத்தில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.