Wednesday, March 4, 2026
Huis Blog Bladsy 116

பிள்ளையானின் சகா ஒருவர் சரணடைய ஆயத்தம் – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

0

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால , கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின் போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின் போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்ச ஆனந்த, பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காக அர்ப்பணித்து செயற்படுவது ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்..!

0

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் நேன்று (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகிறது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர்.

அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது.

குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நம் கையில் எடுக்க மாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணி இடம்பெறும்.

வடக்கிலும் மண் கடத்தல் காரர்கள் உள்ளனர். ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத் தொடங்கியுள்ளனர்.

என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி. மக்களுக்காக செயற்படுகின்ற போது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, ​​மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கும்போது அதை பார்த்து ரௌடித்தனம் என்கிறார்கள்.

இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கி திரிந்தவர்கள்தான் இப்படி சொல்கிறார்கள்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போது அதனை வரவேற்றவர்கள், இன்றுதான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள்.’ -என்றார்

ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு நிறுத்தம்..!

0

அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,

சம்பள உயர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஒரு அதிகாரி, தரம் II க்கு பதவி உயர்வு பெற திட்டமிடப்பட்ட திகதிக்குள் உரிய ஆங்கில மொழிப் புலமையைப் பெறத் தவறினால், பதவி உயர்வுக்கு திட்டமிடப்பட்ட திகதியிலிருந்து தாமதக் காலத்திற்குச் சமமான காலம் பதவி உயர்வு தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை எண் 08/2020 இன் படி, சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அல்லது தகுதிகளைப் பூர்த்தி செய்த அதிபர்களுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை விதிமுறைகளின்படி, அனைத்து அதிபர்களும் அரச மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாய நிபந்தனையாகும்.

யாழில் காதலன் நீரில் மூழ்கி பலி; காதலி செய்த விபரீத செயல்..!

0

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குளத்தில் தாமரைப்பூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை சந்திக்க அனுமதி கோரிய ரணில்; கைது செய்யப்படுவாரா ரணில்?..!

0

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்ட விரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் திரு. உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் துறையிடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, திரு. உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

விளையாட்டுக்கள் பொழுது போக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல – வட மாகாண ஆளுநர்

0

இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் அலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025, இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் இன்று செவ்வாய்க் கிழமை மாலை (15.04.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டனர். மேடை நிகழ்வுகள் அதனைத் தொடர்ந்து நடைபெற்றன.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில்,

விளையாட்டுக்கள் பொழுது போக்குக்கு மாத்திரம் உரியவை அல்ல. அவை எங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், தலைமைத்துவத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களிடம் மற்றையவர்களை மதிக்கும் பண்புகளையும் காணலாம்.

ஆனால் துரதிஷ்டவசமாக எமது பிரதேசங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அருகி வருகின்றது. பல ஊர்களில் இருந்த விளையாட்டுக் கழகங்கள் இன்று செயற்றிறன் இழந்திருக்கின்றன. ஆனால் உங்கள் விளையாட்டுக் கழகத்தில் இரவு நேரத்திலும் விளையாட்டுப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய சமூகத்தின் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றமைக்கு, விளையாட்டுக்களில் பங்கேற்காமை பிரதான காரணமாகும். இந்தப் பிரதேசத்து இளையோர் அதிகளவில் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதால் சமூகப் பிறழ்வுகளில் ஈடுபட்டதாக எந்தவொரு முறைப்பாடும் இல்லை என உங்கள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சொல்லியிருந்தார். உண்மையில் விளையாட்டுக்களிலும், கலைச் செயற்பாடுகளிலும் இளையோர் நாட்டம் செலுத்தினால் சமூகப்பிறழ்வுகள் எவ்வளவோ குறைவடையும்.

உங்களது விளையாட்டுக் கழகம் போன்று ஊர்கள்தோறும் விளையாட்டுக்கழகங்கள் உருவாகி இளையோரை அவர்கள் ஈர்த்தால் எதிர்காலத்திலாவது சிறந்த நிலையை அடைய முடியும், என நம்புகின்றேன் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

விளையாட்டுக் கழகத் தலைவர் கு.பாலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் கலந்து கொண்டார். விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஆளுநர் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் சாரதி சென்ற வாகனம் கோர விபத்து; இருவர் பலி..!

0

அநுராதபுரம் – குருநாகல் பாதையில் நடந்த கோர விபத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரின் சாரதி மற்றும் அவரது மனைவி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து கடந்த 13ஆம் திகதி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வாகனத்தின் சாரதியான டொன் அஜித் பிரியந்த மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதி மற்றும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,படுகாயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகன் பலத்த காயங்களுடன் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மகள் அம்பன்போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற திருவள்ளுவர் கலாசார மண்டபம் தொடர்பான கலந்துரையாடல்..!

0

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.

யாழ் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவு பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

எவ்வளவு விரைவாக இதனை மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தியத் துணைத்தூதுவர் கருத்து வெளியிடுகையில்,

இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை என்றும் அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ, அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும் என்றும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது சாதகமானதொரு நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார்.

கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாஸ், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷணேந்திரன் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ்; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை..!

0

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான அரச உத்தியோகத்தர் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகளை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

தமிழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..!

0

புதுவருடம் என்பது புதிய கனவுகளின் தொடக்கம், புதிய நோக்கங்களின் பயணம், புதிய நம்பிக்கையின் புனித நேரம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் இந்த புத்தாண்டை கொண்டாடும் இந்நேரம், ஒற்றுமையும் அன்பும் நிலைக்கும் வழியாக அமையட்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பொங்கி வர வாழ்த்துகிறோம்.

உங்கள் வீடுகளில் இன்பம் நிலவ, உங்கள் வாழ்வில் நம்பிக்கை மலர, உங்கள் கனவுகள் அனைத்தும் இப்புத்தாண்டில் நனவாகட்டும்.

புதிய தொடக்கம் உங்கள் வாழ்வில் ஒளி விளக்காக அமைந்து, ஒவ்வொரு நாளும் அர்த்தமிக்கதாக இருக்க வாழ்த்துகிறோம்.

தமிழ்பொறி உறவுகளுக்கு இனிய உள்ளங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்

error: Content is protected !!