Monday, May 11, 2026
Huis Blog Bladsy 28

வடக்கின் கல்வியின் உயரதிகாரி கோழிப் பண்ணையில் கூட வேலை செய்ய லாயக்கற்றவர்..!

0

வடக்கின் கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை செய்ய லாயக்கற்றவர். இவ்வாறான திறமையற்ற, பொறுப்பற்றவரை நீக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளும்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த பாராளுமன்றத்திலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த கிராமம் என்ற வகையில் இந்த கிராமமானது பெருமை அடைகின்றது.

அதேபோல இந்த கூமாங்குளம் வட்டாரமானது ஐந்து பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இந்த கிராமமானது கடந்த யுத்த காலத்திலே பல்வேறு வகையான அனர்த்தங்களுக்கு உள்ளானது. இருந்த போதிலும் தற்போது எமது அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் பல வீதிகள் புனரமைக்கப்பட்டது. அதேபோல் இந்த கிராமத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இந்த கிராமத்தை முதலாவதாக கல்வியிலே அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும்.

பொருளாதாரம் இன்று நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கல்வியினுடைய அபிவிருத்தி தான் முக்கியம். கல்வியினுடைய அபிவிருத்தி இல்லாத எந்த ஒரு அபிவிருத்தியும் நிலைபேறற்றது.

ஆகவே, எமது கிராமத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கே இருக்கின்ற சிறார்களின் எதிர்காலத்தை சிறப்படைய செய்ய வேண்டும்.

இந்த கிராமத்தில் அண்ணளவாக 7000 குடிமக்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்த கிராமத்தை நாம் கல்வி ஊடாகத் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும்.

அதுபோல், இந்த வடமாகாணத்தையும் கல்வியினால் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலங்கையினுடைய மொத்த தேசிய உற்பத்தியிலே வடக்கு மாகாணமானது 4.4 வீதமாக அதனுடைய உற்பத்தி காணப்படுகின்றது.

இதை எண்ணும் போது மன வேதனையாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த வடக்கு மாகாணத்தின் கல்வியினுடைய வீழ்ச்சி தான் இதற்கெல்லாம் காரணமாக எண்ண தோன்றுகின்றது.

அதேபோல, வடமாகாணம் தேசிய உற்பத்தியில் 4.4%, கல்வியில் 9ஆம் இடம், போதைவஸ்தில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

கல்வியில் தாழ்ந்த நிலையிலும், போதைப் பொருளில் உயர்ந்த நிலையிலும் காணப்படுவதற்கு பலர் வியாக்கியானம் சொல்வார்கள். கல்வி வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகத் தான் போதைவஸ்தின் பாவனை உயர்ந்தது.

இரண்டும் நேர்மாறாக காணப்படுகின்றது. இதற்கு எல்லாம் காரணம் இந்த சபையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள். வினைத்திறன் குன்றியவர்களாக இருக்கிறார்கள். அதாவது இருக்கின்ற வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கக் கூடிய திறமையற்ற அதிகாரிகளாக காணப்படுகிறார்கள்.

உதாரணமாக நான் ஒரு கால்நடை வைத்தியர் என்ற வகையில், நான் அண்மையிலே ஒரு கோழி பண்ணைக்கு சென்றேன். அங்கே இந்த பண்ணையாளர் தெரிவித்தார். வைத்தியரே எங்களுடைய பண்ணையில் ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. 950 முட்டைகள் இடுகின்றன.

அந்த கோழிகளுக்கு சமனாக உணவை பகிர்ந்தளித்ததன் காரணமாகத் தான் அந்த சராசரி முட்டை உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்று சொன்னார். இறுதியாக அவர் சொன்னார் என்னிடம் வட மாகாணத்தில் இருக்கின்ற கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை ஆற்றுவதற்கு லாயக்கற்றவர்.

ஆகவே இவ்வாறான திறமையற்ற லயக்கற்ற பொறுப்புணர்வற்ற அதிகாரிகளை நீக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கையில் வடமாகாணம் தான் கல்வியில் உயர்ந்து நின்றது.

இலங்கை படத்தில் யாழ்பாணத்தை எடுத்தால் இலங்கையின் தலை என்பார்கள். ஆனால் இது தலைகீழாக தற்போது மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. வடமாகாணத்தில் இருக்கின்ற கல்வி நிர்வாக அதிகாரிகளுடைய பொறுப்பற்ற தன்மையும், திறமையற்ற தன்மையும் தான் காரணம் என்பதை நான் இந்த தருணத்தில் உங்களுக்கு அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே எமது வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று சொன்னால் கல்வியில் தான் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் எம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், உறவுகளையும், சொந்தங்களையும், பந்தங்களையும் இழந்து கல்வியையும் இழந்துவிட்டோம்.

அதை மீண்டும் நாங்கள் வளர்க்க வேண்டும். எமது வடமாகாணமானது சிறந்து விளங்க வேண்டும் என்றால், இவ்வாறான திறமையற்றவர்களை நீக்கி நல்ல பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும் என்று கூறுகின்றேன்.

ஆகவே இவ்வாறான திறமையற்ற லயக்கற்ற பொறுப்புணர்வற்ற அதிகாரிகளை நீக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கையில் வடமாகாணம் தான் கல்வியில் உயர்ந்து நின்றது.

இலங்கை படத்தில் யாழ்பாணத்தை எடுத்தால் இலங்கையின் தலை என்பார்கள். ஆனால் இது தலைகீழாக தற்போது மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. வடமாகாணத்தில் இருக்கின்ற கல்வி நிர்வாக அதிகாரிகளுடைய பொறுப்பற்ற தன்மையும், திறமையற்ற தன்மையும் தான் காரணம் என்பதை நான் இந்த தருணத்தில் உங்களுக்கு அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே எமது வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று சொன்னால் கல்வியில் தான் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் எம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், உறவுகளையும், சொந்தங்களையும், பந்தங்களையும் இழந்து கல்வியையும் இழந்துவிட்டோம்.

அதை மீண்டும் நாங்கள் வளர்க்க வேண்டும். எமது வடமாகாணமானது சிறந்து விளங்க வேண்டும் என்றால், இவ்வாறான திறமையற்றவர்களை நீக்கி நல்ல பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும் என்று கூறுகின்றேன்.

எமது வடமாகாணத்தை பொறுத்த வரையில் பல இடங்களில் நேரடியாக சென்ற போது, அண்மையில் ஒரு மாணவன் சொன்னான். தங்களுக்கு பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியர் இரண்டு வருடமாக இல்லை என்று. அதற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. நாங்கள் கேட்டால் அவர்கள் அதற்குரிய வெற்றிடங்களை நிரப்புவதில்லை.

இறுதியாக பக்கத்தில் உள்ள அவருடைய நண்பன் சொன்னான் வருகின்ற திருவிழாவில் கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்கு காவடி எடுத்தால் தான் நமக்கு ஆசிரியர் வருவார் என்று. அவ்வாறு நடந்தால் தான் கொடுப்பார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன்.

13ஆம் திருத்த சட்டத்தில் கல்வியினுடைய பல்வேறுபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நியமிக்கவில்லை. இதனுடைய காரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எங்களுக்கு உண்டு பண்ணுகின்றது. ஒரு இனம் அதனுடைய கலாச்சாரம் நிலைத்து நீண்டு நிலைக்க வேண்டும் என்றால் கல்வி தான் தக்க வைக்கக்கூடிய இருப்பாகும். அந்த கல்வியின் கேள்விக்குறியானால் இனத்தினுடைய அடையாளம் அற்றுப் போகக்கூடிய ஒரு ஆபத்து இருக்கின்றது.

ஆகவே எதிர்வரும் காலத்தில் எமது ஜனாதிபதியினுடைய நேரடி பார்வையில், நேரடி வழிகாட்டுதலின் கீழே வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைச்சர் விமல் ரத்நாயக்கா அவர்களுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வாறான திறமையற்ற அதிகாரிகளை நீக்கி நல்ல அதிகாரிகளை எமது மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வடக்கு மாகாணத்தினுடைய கல்வியை உயர்த்துவோம் என்று கூறி இந்த உரையை நான் நிறைவு செய்கின்றேன் என்றார்.

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீட்பு; விசாரணைகள் தீவிரம்..!

0

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டிச் சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் (03) சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும், விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்கவில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று, காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த காவல்துறையினர் புத்தர் சிலையை மீட்டதுடன், புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டானில் அடாவடித்தனமாக கற்குவாரி அமைக்க முயற்சி – ரவிகரன் எம்.பி எச்சரிக்கை

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் மக்களின் விருப்பிற்கு மாறாக அடாவடித்தனமாக கற்குவாரி ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு 02.01.2025இன்று நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மக்களின் விருப்பிற்கு மாறாக காதாலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கப்பட்டால் மக்களோடு இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

குறித்த களவிஜயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காதலியார் சம்மளங்குளம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றினை அமைத்து, பாறைகளை வெடிவைத்து தகர்த்து அகழ்வு செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிராமமக்களின் எதிர்ப்பினால் குறித்த கற்குவாரி கடந்த 2022ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் குறித்தபகுதியில் கற்குவாரி ஒன்றினை அமைந்து, கற்களை அகழ்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே கற்குவாரி அமைக்கப்பட்டதனால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து தாம் மீழுவதற்கு முன்பாக மீண்டும் கற்குவாரி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தமக்கு கவலையளிப்பதாகவும் மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக ஏற்கனவே கல் அகழப்பட்ட குழியினுள் தமது கால்நடைகள் தவறி வீழ்ந்து இறக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படடுவதாக இதன்போது கிராமமக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு கடந்த காலத்தில் அங்கு இயங்கிய கற்குவாரியில் கல் உடைப்பதற்காக வெடிவைக்கின்ற போது ஏற்படுகின்ற அதிர்வுகளால் காதலியார் சம்மளங்குளம் கிராமத்திலுள்ள பல வீடுகளின் சுவர்களிலும், ஜன்னல் கண்ணாடிகளிலும், கிணற்றுக் கட்டுகளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியதுடன், நேரடியாகவும் காண்பித்தனர்.

அதேவேளை குறித்த பகுதியில் கற்குவாரி அமைத்து கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் பிற்பாடு தமது கிராமத்திலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் கிராமமக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் குறித்த கற்குவாரி அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் அதிர்வுகளாலும், வெளிப்படும் தூசியினாலும் கிராமத்திலுள்ள மூச்சுத் திணறல் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், கற்பிணித் தாய்மார்கள், சிறார்களும், முதியோரும் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுமெனவும் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

எனவே தமது கிராமத்திற்கு பல்வேறு வழிகளிலும் பாதிப்பாக அமைகின்ற கற்குவாரியை, மீண்டும் தமது கிராமத்தில் அமைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறும் இதன்போது கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிகை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் முறையீடுகளை நன்கு செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடினார். அந்தவகையில் கற்குவாரியின் பாதிப்பு நிலமைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஏற்கனவே கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படக் கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதேசசெயலாளரிடம் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களுக்கு பலவழிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கற்குவாரி மக்களின் எதிர்ப்பினால் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிராமமக்களின் அனுமதியின்றி, மீண்டும் இக் கிராமத்தில் கற் குவாரி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மக்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர்.

இவ்வாறு அடாவடித்தனமான முறையிலும், மக்களின் விருப்பிற்கு மாறாகவும் கற்குவாரி அமைத்து, இங்கு கல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் மக்களோடு இணைந்து வீதயில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமென உரியவர்களை எச்சரிக்கின்றேன்.

ஏற்கனவே இங்கு கற்குவாரி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து, மக்களால் இதுவரை மீளமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இங்கு மீண்டும் கற்குவாரியை அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்க முடியதென்றே தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலரிடமும் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளேன். கடந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய இடங்களில் கலந்துரையாடுவதுடன், மக்களுக்கு பாதிப்பான இந்த கற்குவாரி அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்..!

0

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் கல்வி நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிய பின்னர், அவ்விடத்தில் புதிய திருத்தப்பட்ட பக்கத்தை அச்சிட்டு இணைப்பதா அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதா என்பது குறித்து மூன்று திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக செலவுகளைக் குறைக்கும் வகையிலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளது.

தரம் 6 மாணவர்களுக்காக சுமார் 350,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனவே, முழுப் புத்தகத்தையும் மீண்டும் அச்சிடப் போவதில்லை எனவும், பிரச்சினைக்குரிய பக்கத்தை மாத்திரம் அகற்றிவிட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி குறித்த விடயத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்து துஸ்பிரயோகம்; முன்னாள் அமைச்சரை வலைவீசித் தேடும் பொலிசார்..!

0

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தையிட்டி விஹாரை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தால் ஏற்க தயார் – விஹாராதிபதி பகிரங்கம்

0

யாழ் – தையிட்டி விஹாரைப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரையில், விஹாரை வளாகத்திற்குள் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என தையிட்டி திஸ்ஸ விஹாரையின் விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் நேன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் விகாரையில் வழமையான பூஜை வழிபாடுகள் மாத்திரமே நடைபெறும் எனத் தெரிவித்த அவர், அன்றைய தினம் எவ்வித விசேட பூஜைகளுக்கும் தாம் இடமளிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டு வரப்படுவதாகவும், விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், அத்தகைய நிகழ்வுகளுக்குத் தாம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், விஹாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான சர்ச்சையை விசாரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவிடம் விஹாரைக்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, காணிக்கு உரிமை கோருபவர்களும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோதமான செயல் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளதாகவும் விஹாராதிபதி இதன் போது பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசாங்கக் குழுவின் விசாரணைகளுக்கு மதிப்பளித்து, இறுதித் முடிவு எட்டப்படும் வரை விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

காணி விடுவிப்புத் தொடர்பாக இதுவரை எவரும் தன்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றும், தற்போது அரசாங்கக் குழுவின் விசாரணைகளே நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெகு சிறப்பாக நடைபெற்ற தெற்கு தமிழ் பிரதேச சபையின் கெளரவிப்பு நிகழ்வு..!

0

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2025ம் ஆண்டுக்கான உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் கௌரவிப்பு நிகழ்வு தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.சரத்சந்திர அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் இ.ரதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கடந்த பேரிடர் காலப் பகுதியில் சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் மீட்பு நடவடிக்கைகள், இடர் முகாமைத்துவ செயற்பாடுகள், உதவி வழங்கல் ஆகியவற்றை சபையின் தவிசாளர் தலைமையில் திறம்பட முன்னெடுத்த தொழினுட்ப உத்தியோகத்தர்கள், வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் ஏனைய நிரந்தர, அமைய ஊழியர்களுக்கான விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் இடர்கால மீட்பு பணியில் பணியாற்றிய சபையின் ஊழியர்களுக்கு உபதவிசாளர் கோணேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் சொந்த நிதியில் உலருணவு பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் 2024ம் ஆண்டு பிரதேச சபைகளுக்கிடையிலான தரப்படுத்தலில் தேசிய ரீதியில் 3ம் இடத்தை பெற்று “சுவர்ணபுரவர” விருதினை தனதாக்கி கொண்ட மேற்படி சபையின் செயலாளர், உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து தேசிய ஆவணமாக்கல் சபையால் கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாத போட்டிகளை திறம்பட நடாத்திய நூலகங்களில் சபையின் ஆளுகைக்குட்பட்ட கூமாங்குளம் நூலகம் தேசிய தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டதை கெளரவிக்கும் வகையில் நூலக உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் மெச்சுரைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சபையின் சகல உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மேலும் ஆர்வத்துடனும் திறம்படவும் மக்களுக்கு சேவையாற்ற ஊன்றுகோலாய் அமையுமென சபையின் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.

சிறுமி உயிரிழப்பு விவகாரம்; இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்..!

0

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.அதனை தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள்.

டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத் தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் நீங்கள் தொடர்ந்தும் அரசாங்க சேவையில் அமர்த்த அனுமதிக்கின்றீர்களா? அரசாங்க கோவைகளை அழிக்கவோ, கிழிக்கவோ, காணாமல் ஆக்கச் செய்யவோ உங்கள் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளீர்களா?

தொடர்ந்து இவ்வாறான நீதி நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படும் வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வைத்தியசாலையை திறம்பட நடத்துவதற்காக கொலைச் சம்பவங்கள் நடைபெறாதிருக்க பாதுகாப்பான தரமான சிகிச்சை முறைவ வழங்க பணிப்பாளரின் எதிர்கால திட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவும்.

சிற்றூழியர்கள், தாதியர்கள் அரசாங்க கடமைகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்கின்றார்கள் என்பதனை கண்கூடாக அவதானிக்கின்றோம் ஆனால் 15 நாட்கள் வேலை செய்யும் வைத்தியர்களுக்கு முழுமாத சம்பளம் மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படுகின்றது எந்த அனுமதியும் இல்லாமல் விடுமுறைகளை எடுக்கின்ற வைத்தியர்களுக்கு முழு மாத கொடுப்பனவையும் பெறுவதற்கு ஏன் துணை போகின்றீர்கள்?

கண்சிகிச்சை பிரிவில் கிழமையில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் நடைபெறுகின்றது ஆனால் வைத்தியசாலையினை நம்பி மாவட்டத்தில் உள்ள மக்களும் அந்த சேவையினை நாடி வருகின்றார்கள் எனவே தினமும் கண்சிகிச்சை பிரிவு செயற்பட கோரி நிக்கின்றோம்.வைத்தியர்கள் கடமை நேரத்தில் அலுவலகத்தில் நிற்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிகள் சுகாதார அமைச்சர், சுகாதார பணிமனை செயலாளர் நாயம்,வடமாகாண ஆளுநர்,மாவட்ட செயலாளர், செயலாளர் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை, பிராந்திய சுகாதாதார சேவைப் பணிப்பாளர் முல்லைத்தீவு, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாஸ சிறுமி உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வடமாகாண சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழு 12 மணிநேரம் விசாரணை செய்துள்ளார்கள்.

அவர்களின் அறிக்கை வந்ததன் பின்னர்தான் சரியான முடிவு சொல்ல முடியும் என்றும் தற்போது இரண்டு மருத்துவர்களை தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தியுள்ளதாகவும் போராட்ட காரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்து கவனயீர்ப்பினை நடத்திய போராட்டகாரர்கள் மனுக்களை அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிவிட்டு கலைந்து சென்றுள்ளார்கள்.

ஆளுநருக்கா பின்கதவு செயலாளருக்கா அதிகாரம் வெடித்தது புதிய சர்ச்சை..!

0

பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபராகவுள்ள ஒருவர் 30 வருட காலத்திற்கும் அதிகமாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடந்த ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் ஆர்ப்பாட்டம் செய்தும் அப்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பாடசாலையில் தொடர்ச்சியாக அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

மாணவர்களுக்கு கொடுக்கும் உணவுக்கான நிதியில் பாரியளவு மோசடிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை தொடர்பாகவும், அதிபரின் ஏனைய சில்மிசங்கள் மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், ஆசிரியர்கள் முரண்பட்டால் அவர்களை தனக்கு இருக்கும் அதிகார செல்வாக்கு காரணமாக இடம்மாற்றம் வழங்கி பந்தடித்து வந்துள்ளார்.

அதிபரின் ஊழல் மற்றும் துர்நடத்தைகள் தொடர்பாக தற்போதைய ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது அதிபரை உடனடியாக கல்விப் பணிமனையில் இணைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டும் இதுவரை அவர் பாடசாலையை விட்டு விலகவில்லை எனத் தெரிய வருகின்றது.

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் ஆசிரிய சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரை குறித்த அதிபர் ஏதோ ஒரு விதத்தில் உள்வாங்கி அவரைப் பயன்படுத்தி ஆளுநரை சாந்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனாலும் ஆளுநர் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என குறித்த பின்கதவு அதிகாரி ஆளுநரின் உத்தரவை குப்பைக் கூடைக்குள் போட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அதிபரை புனிதராக்கும் நடவடிக்கையில் கல்வி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செயற்பட்டு வருவதுடன் அதிபரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துள்ள போதும் அந்தக் குழு, பாடசாலை விடுமுறை விட்ட பின் அதிபருக்கு தாம் பாடசாலைக்கு வரப் போகின்றோம் என தெரியப்பட்டுத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக அதிபரின் ஏற்பாட்டில் அதிபருக்கு சார்பான சிலரை பாடசாலைச் சமூகம் எனும் பெயரில் ஆயத்தப்படுத்தி அதிபர் நல்லவர் என விசாரணைக் குழு வந்த போது அதிபரின் துாண்டுதலில் தெரிவித்துள்ளார்களாம்.

குறித்த விசாரணைக் குழு எப்போது வந்தது எனத் தெரியாது அதிபரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை குறித்த பின்கதவு அதிகாரி தனக்கு கீழ் உள்ளவர்களை மனச்சாட்சி இல்லாது பந்தாடி வரும் நிலையில் தனது உறவினரான பெண் முகாமைத்துவ அலுவலர் ஒருவரை வவுனியாவிலிருந்து யாழிற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரின் செல்வாக்கில் 1 1/2 வருடத்தில் சட்ட விரோதமாக இடமாற்றம் வழங்கியுள்ளார்.

ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் குறித்த பின்கதவு அதிகாரி தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர் ஒருவரின் வால்பிடியாக மாறியுள்ள நிலையில் அவரை எதுவும் செய்ய முடியாதுள்ளமை கல்விக்கும் அனுர அரசாங்கத்தின் கொள்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் தவறான மோசமான இணையப் பக்கம்..!

0

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணைய தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிடைத்த முறையப்பாட்டை கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடரப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரிய வந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பில் அவசர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!