Sunday, June 1, 2025
Huis Blog Bladsy 44

சம்பியன்ஸ் கிண்ணம் 2025; 12ஆம் திகதிக்குள் அணிகளை அறிவிக்க உத்தரவு..!

0

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 08 நாடுகளும் தங்களது அணிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமென ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

08 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் மார்ச் 09ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை டுபாயில் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 08 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வீரர்கள் உபாதை காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம்.

வீரர்களை மாற்ற பெப்ரவரி 13ஆம் திகதிவரை அனுமதி உள்ளது. இதுவரையில் இங்கிலாந்து மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் பணி இடை நீக்கம்..!

0

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டி; இலங்கை அணி மலேசியா பயணம்..!

0

மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்று (11) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.

16 அணிகள் பங்குபற்றும் இப் போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடவுள்ளது.

தொடரின் முதல் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இதன் கீழ் இலங்கையின் முதல் போட்டி மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன உட்பட 15 பேர் கொண்ட அணியை நேற்று (10) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்தது.

அணித் தலைவராக மொரட்டுவை வேல்ஸ் கல்லூரியின் மானுடி நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.

பிரேசிலின் நெய்மர் ஜூனியரின் புதிய சாதனை..!

0

பிரேசிலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் மொத்தமாக 42 நிமிடங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ பணத்தை உழைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மொத்தமாக தனது கால்பந்து வாழ்க்கையில் 717 போட்டிகளில் விளையாடிய நெய்மர் ஜூனியர் 439 கோல்களை அடித்துள்ளார். அத்தோடு 279 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸி அணிகளுக்கிடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பம்..!

0

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நடப்பாண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை(12) தொடங்கவுள்ளது.

இந்தத் தொடர் இம்முறை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்திலியாவுக்குச் சென்று தலா 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கிடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் தொடரானது சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Identity படம் – திரை விமர்சனம்

0

மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஐடென்டிட்டி எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.

இந்த கொலையை இதே கேஸை பாலோ செய்து வரும் திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது,

இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.

படத்தை பற்றிய அலசல்

மலையாள படம் என்றாலே கிரைம் திரில்லர் எடுப்பதில் வல்லவர்கள், அப்படி ஒரு கிரைம் திரில்லரை ஆண்டின் இரண்டாம் நாளே இறக்கியுள்ளது மலையாள சினிமா.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி எதோ போக்கிரி படம் பார்ப்பது போல் மாறுகிறது.

டொவினோ தாமஸ் யார் என்ற கொஞ்சம் ஓவர் என்றாலும் படத்தின் கதைக்கு தேவை, அவரும் ஆ ஊ என்று அலட்டாமல் மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.

வினய் இந்த கதாபாத்திரம் பார்த்தவுடனே இவர் இந்த வேலையை செய்து இருப்பார் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை, அவரும் வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைத்தாலும், இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் உள்ளது, லாஜிக் மீறலும் கொஞ்சம் வருகிறது,

கிளைமேக்ஸ்

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம், ஒளிப்பதிவு அட்டகாசம்.

மொத்தத்தில் இந்த Identity மூலம் Malayalam சினிமா தன் ஹிட் கணக்கை ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டது.

கேம் சேஞ்சர் – பட விமர்சனம்

0

தமிழ் சினிமாவின் தரத்தை மற்றும் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்தி சென்ற ஷங்கர் சமீப காலமாக சின்ன சறுக்கலில் இருக்க, அந்த சறுக்கலிலிருந்து கேம் சேஞ்சரில் மீண்டாரா, பார்ப்போம்.

கதைக்களம்

ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.

இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.

இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.

ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரசியல் கதை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் ஷங்கருக்கு, ஆனால், அந்த அரசியல் களத்தில் தான் இந்தியன் 2-வில் சறுக்க, கேம் சேஞ்சர் மூலம் மீண்டும் தான் அரசியல் கிங் என நிரூபிக்க போராடியுள்ளார்.

ஆம், போராடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும., ராம் சரண் IAS ஆபிசராக மிடுக் ஆன தோற்றத்தில் கலக்கியுள்ளார், மொத்த படத்தையும் தாங்கி செல்வது ராம் சரண் தான், ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்‌ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது கேம் சேஞ்சர்.

கியாரா ஷங்கர் படம் என்றாலே ஹீரோயினுக்கு கொஞ்சமாது முக்கியத்துவம் இருக்கும், இதில் அதுக்கூட இல்லை, வெறும் அழகு பதுமையாக வந்து செல்கிறார், அதோடு பாடல்களுக்கு தலையை காட்டுகிறார்.

வில்லனாக எஸ் ஜே சூர்யா படம் முழுவதும் பழைய ஷங்கர் வில்லன் ரகுவரனை நியாபகப்படுத்துகிறார், அதோடு கிளைமேக்ஸில் பாம் வைக்கிற காட்சியெல்லாம் அப்படியே ரகுவரனாகவே மாறிவிடுகிறார்.

ஆனால், எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக தன் உடல் மொழியை இந்த படத்திலிருந்து மாற்றியே ஆகவேண்டும், இதுவே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.

படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும், ராம் சரண் காலேஷ் போஷன் கியாராவுடன் காதல் படத்தின் வேகத்தடையாக வருகிறது.

இரண்டாம் பாதியில் ப்ளாஸ்பேக் டிபிக்கல் ஷங்கர் ஸ்டைல், ஆனால் இந்த முறை மசாலா மிக அதிகம், அதுவும் கொஞ்சம் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் போலவும் உள்ளது ப்ளாஸ்பேக் காட்சிகள்.

தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் தேர்தல் கவுண்டிங்-கை எஸ் ஜே சூர்யா நிறுத்த வரும் காட்சியெல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தது அதுவும் ஷங்கர் படமா இல்லை பாலையா படமா என்று தான் கேட்க தோன்றுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.

தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.

மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள ஆந்திரா மீல்ஸ், ஆனால் அதிலும் காரசாரம் குறைவே.

மெட்ராஸ்காரன் – திரை விமர்சனம்

0

ஷான் நிகம், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

சத்யா (ஷான் நிகம்) தான் காதலித்த பெண்ணுடன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்கிறார்.

மறுநாள் திருமண என்ற நிலையில் ஏடிஎம்மிற்கு செல்லும் சத்யாவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் துரைசிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் சத்யா, மணப்பெண்ணை பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு காரில் போகும்போது கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார்.

இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி சத்யாவை தாக்க முயல, முதலில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசி அழைத்து செல்கிறார் சத்யா.

அங்கு ஐஸ்வர்யா தத்தாவின் சகோதரரான அரசியல்வாதியும், கணவர் துரைசிங்கமும் வருகிறார். சிகிச்சையில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது.

இதன் காரணமாக குற்ற உணர்ச்சியில் சத்யா தாமாக சரணடைந்து சிறைக்கு செல்கிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? காதலியை மீண்டும் கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து தனது திருமணத்தை சொந்த ஊரில் தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஷான் நிகம் ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு தயாராகும் வீடு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சத்யாவாக வரும் ஷான் நிகம் பேசும் தமிழில் மலையாள சாயல் தெரிவது ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் அவரது நடிப்பால் அதனை மறக்கடிக்க செய்கிறார்.

கலையரசன் துரைசிங்கம் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் பாதிவரை பரபரப்பாக செல்ல வேண்டிய திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்த நிலையில், வில்லனின் பின்னணி மற்றும் அவர் செய்த குற்றங்கள் என கதை எங்கெங்கோ செல்கிறது.

அதிலும் சுவாரஸ்யம் இல்லை. வலுவில்லாத திரைக்கதையில் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாதது போல் இருக்கிறது கிளைமேக்ஸ்.

நடிப்பை பொறுத்தவரை கருணாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மற்றும் கல்யாண பாடல் ஆறுதல். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஹீரோ வேலைக்காக தான் சென்னை சென்றிருக்கிறார். மேலும் நீ எந்த ஊரு என உள்ளூரில் கேட்கும் போது சென்னை என்கிறார். இதுபோல் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தில்.

மொத்தத்தில் ஆராவாரமாக தொடங்கி அயர வைத்து விட்டார் இந்த மெட்ராஸ்காரன்.

வணங்கான் திரை விமர்சனம்

0

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வணங்கான். இப்படத்தை V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வணங்கான் திரைப்படம் எப்படி இருக்கிறது விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அருண் விஜய் (கோட்டி) வாய் பேச இயலாதவராக இருக்கிறார்.

தங்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய், தன் கண்முன் கொடுமைகள் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் நபராகவும் மாறிவிடுகிறார். தட்டி கேட்பது என்றால், அந்த கொடுமைகளை செய்யும் நபர்களை அடித்து துவைத்து சாவு பயத்தையே காட்டி விடுகிறார்.

ஊருக்குள் இப்படி தொடர்ந்து அருண் விஜய் செய்து வர, இவருக்கு நிலையான வேலை இருந்தால் மட்டுமே இப்படி எதுவும் செய்யமாட்டார் என முடிவு செய்து, அருண் விஜய்யின் நலன் விரும்பியான சர்ச் ஃபாதர், ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிடி வேலையை அருண் விஜய்க்கு வாங்கி தருகிறார்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டே அங்குள்ள அனைவரிடமும் பழகும் அருண் விஜய்க்கு பல சொந்தங்கள் கிடைக்கிறது. இந்த நிலையில், அதே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள இரண்டு நபர்களை அருண் விஜய் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்தது நான் தான் என, தானே முன் வந்து போலீசிடம் சரணடைகிறார்.

போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் அருண் விஜய். இவர் எதற்காக இந்த கொலையை செய்தார்? இதன்பின் என்ன காரணம் உள்ளது? எதை அனைவரிடம் இருந்தும் காரணத்தை மறைகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் அருண் விஜய் நடிப்பு வேற லெவல். வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது.

இவருடன் இணைந்த நடித்த நடிகைகள் ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோடு ஒன்றிப்போகிறது. கௌரவ வேடத்தில் தோன்றிய மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு.

இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.

முதல் பாதியில் அருண் விஜய்க்கும் ரோஷ்ணி பிரகாஷுக்கும் இடையிலான காதல் காட்சிகள் கவனம் ஈர்க்கவில்லை. மற்றபடி படத்தில் குறை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் பாலா. கண்டிப்பாக அருண் விஜய் மற்றும் பாலா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளை ஒருவன் தட்டிக் கேட்டால், அவனுடன் இந்த சட்டமும் நிற்கும் என காட்டிய விதம் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு பக்கா. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் பலம்.

மொத்தத்தில் வணங்கான் அனைவரையும் கலங்க வைத்து விட்டான். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேகா சித்ரம் திரை விமர்சனம்

0

ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள ரேகா சித்ரம் மலையாள படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

காவல் ஆய்வாளர் விவேக் (ஆசிப் அலி) ஆன்லைன் ரம்மி விளையாடியதற்காக சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அவர் திரிச்சூரின் மலக்கப்பாரா பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

அங்கு சென்றதுமே சித்திக் காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரிக்க வேண்டியதாகிறது.

சித்திக் இறப்பதற்கு முன் பேஸ்புக் லைவில் மூவரின் பெயர்களை கூறிவிட்டு, நாங்கள் அந்த பெண்ணை இங்கேதான் புதைத்தோம். அதனால் என் உயிர் இங்கேயே போகட்டும் என்று கூறுகிறார்.

அவரது வாக்குமூலத்தை வைத்து அந்த இடத்தில் தோண்டும் போது எலும்புக்கூடுகள் கிடைகின்றன. அதனை வைத்து ஆசிப் அலி விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது தொழிலதிபர் மனோஜ் கே ஜெயன் மீது ஆசிப் அலிக்கு சந்தேகம் வருகிறது.

மேலும் அவர் விசாரிக்கும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். இடையே ஆசிப் அலி டிராபிக்கிற்கு மாற்றப்படுகிறார். அதன் பின்னர் காவலராக நேரடியாக இல்லாமலே குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

40 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் யார்? அவருக்கும் தற்கொலை செய்துகொண்டவருக்கும் என்ன சம்பந்தம்? தன்னை செயல்படவிடாமல் தடுப்பது யார் என்ற கேள்விகளுக்கு ஆசிப் அலி எப்படி பதில் கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

படம் பற்றிய அலசல்

விவேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆசிப் அலி மிடுக்கான காவல் அதிகாரியாக நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.

சைலண்டாக விசாரிக்கும் போலீஸ் என்று பார்க்கும்போது தடாலடியாக தன்னை கிண்டல் செய்யும் அதிகாரி ஒருவரை அடித்து எச்சரிக்கும் காட்சியில் ஆசிப் அலி கைத்தட்டலை பெறுகிறார்.

போலீசாக இருந்தாலும் வழக்கை கண்டுபிடிக்க வேண்டுமென தானே இறங்கி குழியை தோண்டும் ஆசிப் அலி, 1985யில் ரேகா என்ற பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் அவர் யார் என்ற கேள்விக்கு விடை முயல்வதிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவருக்கு அடுத்து அனஸ்வரா ராஜன் வெகுளித்தனமான பெண் கதாபாத்திரம் மூலம் நம்மை கவர்கிறார்.

ஒரு நடிகையாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுவதுடன், மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அவர் பேசும் ஒரு காட்சி மிகவும் எதார்த்தம்.

மனோஜ் கே ஜெயன் அமைதியான வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார். பெரும்பாலும் பார்வையிலேயே வசனத்தை அவர் கடத்துகிறார். பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் மம்மூட்டியை டிஏஜிங் லுக்கில் காட்டிய விதம் அருமை.

முதல் பாதி பொறுமையாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்க, ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மொத்தத்தில் மலையாள சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு செம ட்ரீட் இந்த “ரேகா சித்ரம்”

error: Content is protected !!