நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். இழந்த தமது உறவினர்களை நினைவு கூர்வதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு.அதற்கு எவ்வித தடையும் இல்லை. இதனை அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருக்கிறது.
ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாத அமைப்பினை சார்ந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு நவம்பரில் எமது அரசாங்கம் முழுமையாக ஆட்சியைப் பொறுப்பேற்றது. அன்றிலிருந்து கடந்த ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சில குழுக்களால் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதி, ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைககளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரச கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வளமான நாடு- அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய துணைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக சட்டவரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றார்.
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற குழு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது
கல்வி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் புதிய கூட்டுத் திட்டத்தின் கீழ், 250க்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகள், 251–500 மாணவர்களைக் கொண்ட தோட்டப் பாடசாலைகள், விசேட தேவைகள் உள்ள மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனா நிறுவனங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சரைப் பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாடசாலை காலணிகளை வாங்க தகுதி பெறுவார்கள்.
மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று அங்கு நேரில் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உறவினர்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.
கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இல. 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தனங்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கும் முன்னர் பணியாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிக்கொடையை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, சுயேட்சைக் குழு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்க் கூட்டணி, போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக தமது கருத்துக்களை முன் வைத்தமையைத் தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கான கண்டனம் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் நிலவரம் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைக்காக இன்றைய தினம் (18.11.2025) காவல்துறை குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைப் பிரிவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பகுதியில் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதுடன் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுமானம் தொடர்பிலும் அளவுகளையும் அளந்தெடுத்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
திருகோணமலை துறைமுக கடற்கரை வளாகத்திலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் நேற்று (17.11.2025) காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த புத்தர் சிலையுடன் கூடிய கூடாரம் கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்தது.
கடந்த 16 ஆம் திகதி, திருகோணமலையில் உள்ள கடலோர பாதுகாப்பு வலயத்திற்குள் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் பிக்குகள் மற்றும் நன்கொடையாளர்கள் குழு மூலம் அங்கீகரிக்கப்படாத குடிசையொன்று கட்டப்பட்டு வருவதாகவும், அங்கு புத்தர் சிலை வைக்கப்படுவதாகவும் திருகோணமலை துறைமுக காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும் அவ்வாறு தான்.
உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை.
அவர்களுக்கான நினைவுத்தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேயே வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
திருகோணமலை துறைமுக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைதியின்மையைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அத்துடன், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில தவறான செய்திகளும் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அது தொடர்பான சரியான நிலைமையை தெளிவு படுத்துவதற்காகவே, அறிக்கையை வெளியிடுவதாக காவல்துறைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் தேரர்கள் மற்றும் அதன் நம்பிக்கையாளர்கள், திருகோணமலை நகரில் கடற்கரை பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி குடிலொன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றை வைக்க முயற்சிப்பதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்கள அதிகாரிகளே, திருகோணமலைத் துறைமுக காவல்துறை நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்தனர்.
அதற்கமைய, காவல்துறை அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த அத்துமீறிய நிர்மாண வேலையை நிறுத்துமாறு அறிவுறுத்திய போதிலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பகுதியில், இதற்கு முன்னரும் அத்துமீறிய நிர்மாணம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அகற்றுமாறு கோட்டை வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதிக்கு சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தது
இதற்கு மத்தியிலேயே, பிரச்சினைக்குரிய நிர்மாணமும் புத்தர் சிலை பிரதிஸ்டையும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இனங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க வழிவகுக்கலாம் என இலங்கை காவல்துறையால் அவதானிக்கப்பட்டதாகவும் காவல்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி என்பதால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி யாரேனும் புத்தர் சிலைக்குச் சேதம் விளைவித்தால், அது பிரதேசத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம் என காவல்துறையினர் கருதியதாகவும் காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தச் சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை பாதுகாப்பாக அந்த குறித்த இடத்திலிருந்து அகற்றி, திருகோணமலைத் துறைமுக காவல்துறை நிலையத்துக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அத்துமீறிய கட்டுமானத்தை நிறுத்தச் சென்றபோது, அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.
இதன்போதே, அதனை காவல்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக, காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்தச் சந்தர்ப்பத்திலும் தேரர்கள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் காவல்துறையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.