Sunday, May 3, 2026
Huis Blog Bladsy 72

வாழைச்சேனை வாகனேரி சந்தியில் வேன் மீது டிப்பர் மோதி கோர விபத்து..!

0

வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இன்று 23.10.2025 இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வேன் மீது மோதியதில் வேனில் பயணித்த பல நபர்கள் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இந்த விபத்துச் சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான வேனில் பயணித்த நபர் ஒருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சாரதி அனுமதிப் பத்திரத்தின் விபரம் தெரிந்தவர்கள் அல்லது உரிய நபரின் உறவினர்கள் இருப்பின், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NPP பிரதி அமைச்சர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளார் – சாணக்கியன் குற்றச்சாட்டு

0

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்க இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

சாணக்கியன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தினை இறக்குமதி செய்வதற்கான வரியானது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவென அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொன்னி சம்பா அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக அரிசியை இறக்குமதி செய்ய வரிவிதிப்புக்கள் பற்றி கவனத்திற் கொள்ளப்படவில்லை.

இது மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற போதிலும் அடுத்த போகத்திற்கான நெல் அறுவடை மேற்கொள்ளும் போது நெல்லின் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும்.

இரண்டாவதாக மதுவரித் திணைக்களமானது எதனோல் உற்பத்தி செய்வோருக்கு 6 மாதங்கள் வரை வரி செலுத்துத்தாமல் இருப்பவர்களுக்கு அவ் வரியை செலுத்தவென கால அவகாசத்தை வழங்கியிருந்தது. தற்போது ஒரு மாதத்திற்குள் வரியை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இது சிறந்த விடயமாக இருப்பினும் கூட தேர்தல் இலஞ்சமாக Bar Permit அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதென அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டு அதற்கான பெயர்ப்பட்டியலும் வாசிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திலே 5,000 வாக்களர்களுக்கு 1 Bar என்ற ரீதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் வரி அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகின்ற அரசாங்கம் மறுபுறம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டோரை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து களுத்துறை மாவட்டத்திலுள்ள Bruery License ஒன்றினை விற்பனை செய்வதற்கு முயற்சித்துள்ளனர். இது Cooperative இற்கு சொந்தமானதாக காணப்படுகின்றது என அவர் தெளிவுபடுத்தினார்.

உங்களை பார்த்தாலே பயம்; தயவுசெய்து ஆவியாக வேண்டாம் – ஆளுங்கட்சி பதிலடி

0

”உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கின்றது. காலையில் பார்த்தால்கூட அப்படிதான். எனவே, தயவுசெய்து ஆவியாக வந்துவிட வேண்டாம். நாம் உங்களை பாதுகாப்போம். அச்சப்பட வேண்டாம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பதிலடி கொடுத்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி,

“என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்.” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் சிரித்தபடி மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்..!

0

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது ‘லாசா’வின் கொலையை பாதாள உலகத்தின் செயல் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால நேரடியாக விவரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.

எனினும், அந்த நாளைப் பற்றி நாம் பேசினால், அமைச்சர் விஜேபாலவின் வாழ்க்கைக் கதை பற்றியும் பேசலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க வெளியிட்ட தகவல்களின்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால 1988 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் ஒரு சிறப்பு அதிகாரியாக இணைந்தார்.

ஆனால் அவர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, ​​புலனாய்வு அறிக்கைகள் மற்றும் சிஐடி அறிக்கைகளின் அடிப்படையில் அவர் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

விஜேபால காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், அவர் ஆயுதப் பிரிவின் தலைவராக செயல்பட்டதால் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்துகிறார்.

“ஆயுதப் பிரிவின் தலைவராகவோ அல்லது பயங்கரவாதியாகவோ செயல்பட்டதற்காக நீங்கள் அந்த நேரத்தில் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்” என்று அவர் அமைச்சரை நோக்கி குறிப்பிட்டார்.

அமைச்சரின் கடந்த காலம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, சிஐடி அறிக்கை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் இன்று காவல் துறைக்கு ஆலோசனை வழங்கி பாதுகாக்கும் காவல்துறை அமைச்சராக உள்ளார் என்று கூறினார்.

நாட்டு மக்கள் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை என்றாலும், கல்கமுவ, அம்பன்பொல மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களும் இந்த தகவலை அறிந்திருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

யாழ் பல்கலை பதிவாளரது பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ் மக்களின் உரிமைகள் பாதிப்பு..!

0

யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ் மாவட்டத்தின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் முன்னெடுத்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவர் PTJ ஜசோதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் 355 நிரந்தர பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறுவதில் சிறு நிர்வாகத்தவறு ஏற்பட்டுள்ளது. அதேவேளை திட்டமிட்ட பின்னடிப்புச் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகச் செய்தியினூடாக கூறுகின்ற போதிலும் அதன் உண்மையான நிலைமை வேறாக இருக்கின்றது.

குறிப்பாக இலங்கையில் உள்ள 17 பல்கலைக் கழகங்களிலும் காணப்படும் போதனை ன சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களில் 1400 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது எனும் அரச தீர்மானத்திற்கமைய அனைத்துப் பல்கலைக் கழகங்களாலும் வழங்கப்பட்ட கோரிக்கையின்படி காணப்படும் வெற்றிடங்களில் 67% வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு பெரும்பாலான பல்கலைக் கழகங்களினால் அவற்றிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் 355 பதவி வெற்றிடங்களில் 67 வீதமான 237 இற்குமதிகமான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியில் ஆக 07 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது தனியே பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி எமது சமூகத்தின் இளம் தொழில் தேடுவோராகவே இருக்கின்றது.

இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறுவது? எனும் கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் நாம் எதிர்வரும் 28 ஆம் நாளன்று ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் 355 நிரந்தர பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறுவதில் சிறு நிர்வாகத்தவறு ஏற்பட்டுள்ளது எனவும் அதேவேளை திட்டமிட்ட பின்னடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நிர்வாகம் ஊடகச் செய்தியினூடாக கூறுகின்ற போதிலும் இங்கு உண்மையான நிலைமை வேறு என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் கடப்பாடு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான எமக்கு உள்ளது.

இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழகங்களிலும்காணப்படும் போதனை சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களில் 1400 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது எனும் அரச தீர்மானத்திற்கமைய அனைத்துப் பல்கலைக் கழகங்களாலும் வழங்கப்பட்ட கோரிக்கையின்படி காணப்படும் வெற்றிடங்களில் 67% வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு பெரும்பாலான பல்கலைக் கழகங்களினால் அவற்றிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அனைவரும் அறியமுடியும்.

ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் 355 பதவி வெற்றிடங்களில் 67 வீதமான 237 இற்குமதிகமான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியில் ஆக 07 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது தனியே பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி எமது சமூகத்தின் இளம் தொழில் தேடுவோரே. எனவே இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறுவது? எனும் கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது.

இவ் வெற்றிடம் நிரப்பும் பொறிமுறை உருவாக்கத்தில் எமது உழைப்பு மிகவும் பெரியது 2023 ஆம் ஆண்டு வெற்றிடங்களை நிரப்பும் வேண்டுகோளை அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடாக முன்னுரிமைப்படுத்தியது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமே.

அதனைத் தொடர்ந்து இவ் அரசுக்கும் அழுத்தங்களை கொடுத்து வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குவதில் திறைசேரி (DMS) காட்டிய தாமதங்களை சுட்டிக்காட்டி அனுமதியை உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் கொண்ட குழுவாக மாற்றி அமைந்ததிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பெரும்பங்கு உள்ளது, இது இவ்வாறு இருக்க எமது வெற்றிடங்கள் இன்று நிரப்பப்படாத நிலைமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கோரிக்கைக் கடிதங்களில் காணப்படும் தவறுகளை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல்களில் (20.03.2025, 30.09.2025) தெளிவுபடுத்தி இருந்த போதிலும் அதில் UGC அக்கறை செலுத்தாது பல்கலைக்கழகத்தின் தவறை அவர்களே சீர் செய்ய வேண்டும் எனக் கூறி இன்று அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாததற்கு அவர்களும் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 355 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கோரிக்கை கடிதத்தில் வெறும் 117 வெற்றிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி கேட்டுள்ளது இது தவறென நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டியும் இன்றுவரை மாற்றப்படவில்லை.

இதற்கான காரணம் வேலையாட்கள் தரம் மற்றும் பொறியியல் சேவைகளில் காணப்படும் தரங்களுக்கான வெற்றிடங்கள் முறையற்ற விதத்தில் தனியார் நிறுவனங்களின் நிரப்பப்படுகின்றன.

இது தற்காலிகமானது என பதிவாளர் கூறியிருந்த போதிலும் எதற்காக அனுமதிக் கடிதத்தில் அவ்வெற்றிடங்கள் வெளிப்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது? என்பது எமக்கு இன்னும் பலவித ஐயத்தை ஏற்படுத்தியிருந்தது.

கோரிக்கை கடிதத்தில் தவறு மட்டுமல்லாது கடிதம் அனுப்புவதிலும் பல நிர்வாக தவறுகளை எமது பல்கலைக்கழகம் வேண்டுமென்றே ஏற்படுத்தியதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் கல்வி சார் ஊழியர்களுக்கான அனுமதி கடிதம் சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது அதற்கான ஒரு தொகுதி அனுமதியும் கிடைக்க பெற்றுள்ளது எனவே பதிவாளர் துணைவேந்தர் ஆகியோரின் அசமந்த செயற்பாடு இன்று எம்மை தொழிற்சங்கப் போராட்டத்தை ஏற்படுத்த தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாது நாம் இது தொடர்பாக 4 கடிதங்களை எமது பேரவைத் தலைவருக்கு சமர்ப்பித்திருந்த போதிலும் இன்றுவரை அது பேரவையினால் கலந்துரையாடப்படவில்லை.

இறுதியாக நாம் வழங்கிய கடிதத்திற்கு பதிவாளரினாலேயே பதில் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு மேம்போக்கான பதிலாகவே காணப்படுகின்றது இவ்வளவு நிர்வாகத்தவறுகள் திரும்பத் திரும்ப ஏற்பட்டிருந்த போதிலும் தாம் சிறு தவறை இழைத்ததாகவும் இது உயர் கல்வி அமைச்சின் திட்டமிட்ட தாமதப்படுத்துதல் செயல்பாடு என அவர்கள் மீது குற்றத்தை சுமத்தி பத்திரிகை செய்தி வெளியிட்டு அரசியல் சாயம் பூசும் செயற்பாடாகவே நாம் இதை கருதுகிறோம்.

எமது நியாயமான கோரிக்கைகளையும் கலந்துரையாடல்கள் மூலமும் இன்னும் இயலுமான வழிகளில் முன்வைத்து வந்துள்ளோம்

அவற்றில் மிகவும் முக்கியமான கோரிக்கையாக ஆளணி நிரப்புதலே இடம் பெற்றிருந்தது என்பதுடன் இவ்விடயம் தொடர்பில் பின்வரும் விடயங்கள் எம்மால் கட்டிக்காட்டப்பட்டிருத்தது.

1. நிரந்தர ஆள ஆளணி நிரப்புவதில் ஆர்வம் காட்டாது தற்காலிக ஆளணியினரை பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதில் முனைப்புக் காட்டுவதை பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.

2. நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட போதனை சாரா ஊழியர்களின் ஆளணி நிரப்புதல் தொடர்பான கோரிக்கைகளில் 355 வெற்றிடங்களும் இருந்தபோதும் 117 வெற்றிடங்களே கோரப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான (Work aids) 107 வெற்றிடங்கள் உட்பட 238 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் தனியார் நிறுவனங்களுடாகவும், சுற்றுநிரூபங்களிற்கு முரணாகவும் உள்வாங்கப்பட்டு ஓர் சேவை ஒப்பந்தத்தினுடாக செய்வது தவறு என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

3. அவ்வாறே முன்வைக்கப்பட்ட போதனை சாரா ஊழியர்களின் ஆளணி நிரப்புதல் தொடர்பான கோரிக்கைகளில் போதுமான நியாயப்பாடுகள் வழங்கப் பட்டிருக்கவில்லை என 20.03.2025 UGC கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

4. ஏனைய பல்கலைக்கழகங்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பிடம் நேரிற் சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்து அடிக்கடி அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர் எனவே எமது நலனில் அக்கறை கொண்டவர்களாக எமது நிர்வாகமும் நேரிற் சென்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் படியும் கோரியிருந்தோம்.

5. மேலும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் நாமும் உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் வழங்கும் பொருட்டு மேற்படி விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர்பாடல் பிரதிகளை வழங்கி உதவும்படியும் கோரியிருந்தோம்.

6. அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல்களிலும் ஊழியர் நிரந்தர நியமனம் தொடர்பான விடயத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமே கலந்துரையாடல்களுக்குள் உள்ளடக்கி எம்மால் ஆன அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம்.

ஆயினும் மேற்படி விடயம் தொடர்பில் நாம் கொண்டிருந்த கரிசனையில் எள்ளளவு கரிசனை கூட பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கொள்ளப்படவில்லை என்பது எமக்கு மிக வேதனையை தருகின்றது.

எனவே, எமது ஊழியர் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி உரிய தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் 28.10.2025 அன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்வதுடன், எமது நியாயமான கோரிக்கைகள் அனைத்திற்கும் நியாயமான தீர்வு கிடைக்காதபட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி அனைத்துப் பலகலைக் கழகங்களுக்கும் விஸ்தரிப்பது எனவும் தீர்மானித்துள்ளதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வவுனியா விமான நிலைய விஸ்தரிப்பு; கையகப்படுத்தப்பட்ட பாதையை திறப்பதில் நெருக்கடி..!

0

2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் மாத்திரம் 672 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மூலமான விடைக்கான கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

வவுனியா வானூர்தி நிலையத்தை விஸ்தரிப்பதற்காக தச்சங்குளம், வவுனியா, இறம்பைக்குளம் மற்றும் கோவில் குளம் ஆகிய கிராமங்களில் 168 பேருக்குச் சொந்தமான 446.68 ஏக்கர் நிலம் வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த பகுதி ஊடான பாதையைப் பயன்படுத்துவதற்கு மக்களுக்கு நெருக்கடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தச்சங்குளம் மற்றும் மூன்று முறிப்பு வீதியை மக்கள் பாவனைக்காகத் திறப்பது, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும்.

அதற்கமைய, விமானப்படை தளம் மற்றும் பாதுகாப்பு தலைமையகத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது குறித்த வீதியை மக்கள் பாவனைக்குத் திறக்க முடியாது என பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, குறித்த வீதிக்குப் பதிலாக மாற்று வீதிகளை மறுசீரமைப்புச் செய்து வழங்குவது சிறந்தது என்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, தச்சங்குளம் இராணுவ முகாமின் ப்ராவோ நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வீதித் தடை முதல் பாதுகாப்பு தலைமையகம் வரை புதிய வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த வீதியை சமளங்குளம் ஏ9 வீதியில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பிரதியமைச்சரின் இந்தத் தகவல்களை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துரையாடியதன்படி, மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து நடவடிக்கை எடுப்பீர்களா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, இந்த இரு விடயங்கள் குறித்தும் தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகக் கூறினார்.

எனினும், 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில், வடக்கில் மாத்திரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 586 ஏக்கர் அரச காணியும் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய, வடக்கில் மாத்திரம் 672 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 34.58 ஏக்கர் அரச காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

வடக்கின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய மன்னாரில் விசேட கலந்துரையாடல்..!

0

வடமாகாண சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வட மாகாண சுற்றுலா துறையின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (22) மாலை வவுனியா பல்கலைக் கழகத்தின் வியாபார பீடத்தின் நெறிப்படுத்தலில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்திற்கான இக்கலந்துரையாடலில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்,மேலதீக மாவட்ட செயலாளர் நிர்வாகம், வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வன வள அதிகாரிகள், வனஜீவராசிகள் அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான சிரேஸ்ட விரிவுரையாளர் கள் பலர் கலந்து கொண்டனர்.

தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுரை..!

0

உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும்.

அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெவ்வேறு விடயப் பரப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.

அவர்களை வலுப்படுத்துவதன் ஊடாகவே எமது மாகாணத்தின் அடிமட்ட அலகான உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலையும் மூடப்படாது; கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

0

ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதையும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம் நவம்பர் 25 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாகாணத்திலும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; இன்றும் குறைந்த தங்கம் விலை..!

0

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இதன் விலை 379,200 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக் கிழமை 410,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!