Saturday, April 25, 2026
Huis Blog

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டிய சலூன்களுக்கு சீல்..!

0

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல்’ என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாமல், ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து,பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலூன் உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரண்டு சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் விமானப் படைக்கு இடம் கோரப்பட்டுள்ளது..!

0

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக் கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப் படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முதலாவது அங்கத்தவராக நான் இருக்கின்றேன். அத்துடன் ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றேன். திருக்கோணஸ்வர ஆலயமானது 247 ஏக்கர் நிலப் பரப்பைக் கொண்டுள்ளது.

இதற்கு பிரித்தானியர் ஆட்சியில் வழங்கப்பட்ட சி.வி 217 என்ற இலக்கம் கொண்ட செம்பு உறுதி இந்தியாவில் உள்ள ஆதீனம் ஒன்றில் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்நிலையில் ஆலய பகுதிகள் ஒவ்வொரு படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்கோணேஸ்வர வாசலில் முதலாவதாக கேணி இருந்த இடத்தை மூடி ஸ்ரீ லங்கா இராணுவமும் அதனைத் தொடர்ந்து மத்தியில் பொலிஸ் கொட்டேச்சும் அதனைத் தொடர்ந்து நந்தி மலையில் கடற்படைத் தளமும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஆகாயப்படைத் தளத்திற்கும் இடத்தைக் கொடுத்தால் எமது நிலம் எங்கே என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். இதனால் கோணேசரின் இருப்பிடம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ரேடார் கருவியை சீனக்குடா பகுதியிலேயே அமைக்க முடியும் அதை விடுத்து இங்கே அமைப்பதன் நோக்கம் என்ன என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே அனைத்து திருகோணமலை மக்களும் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நில அபகரிப்பை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்..!

0

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த மாணவி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின் மரணம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல என்பதுடன், சட்டத்தினூடாக அதிபர் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தற்கொலைகள் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல பிரச்சினைகளை சவாலாக எடுத்து வென்று காட்ட வேண்டும் என்பதை போதிக்க வேண்டும்.

அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை கால வரையறையின்றி பிற்போடப்பட்டது..!

0

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை மறுதினம் (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு – பொலிஸ் விசேட அறிவிப்பு

0

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி
வெள்ளி மற்றும் சனிக்கிழமை: நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை : நள்ளிரவு 12:30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை நடத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் கூட்டம் நடத்தியதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டு..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டம் நடைபெற்ற போது பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற நிலையில் சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக காரசாரமான கருத்துகளை முன்வைத்து தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

தமக்கு சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்த்து, வழக்கு முடிவடைந்த பின்னர் கட்சியின் மத்திய குழு நிர்வாக தெரிவு கூட்டம் நடைபெறும் போது தான் தலைவராக வருவதற்கான தந்திரோபாயமே இது என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது தொகுதிக் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்வது சட்டத்திற்கும் யாப்பிற்கும் முரணானது என உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணை ஜனாதிபதியின் வருகையை பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்துங்கள்..!

0

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய துணைத் தலைவரின் இலங்கைப் பயணத்தை இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த உயர்மட்ட விஜயம் விழாக்களாக மட்டும் மட்டுப்படுத்தாமல், பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நோக்கில் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக எதிர்காலம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர்,

அவர்களின் மீள்குடியேற்றத்தை பாதுகாப்பாகவும், மரியாதையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் மேற்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் திரும்பி வரும் அகதிகள் எந்தவித தொந்தரவும், அச்சுறுத்தலும் அல்லது நிர்வாக தடைகளும் எதிர்கொள்ளாத வகையில் தெளிவான முறைகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாக்கு நீரிணை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வட மாகாண மீனவர்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் கைது சம்பவங்கள் குறித்தும் கவலை தெரிவித்த அவர், இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நியாயமான தீர்வு காண, பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து இரு நாடுகளும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கிடையேயான வரலாற்று, பண்பாட்டு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இரு நாடுகளின் உறவுக்கு இடையே கடல் ஒரு தடையாக இல்லாமல், இணைப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய துணைத் தலைவரின் இந்த விஜயத்தை பயன்படுத்தி அகதி பிரச்சினை, மீனவர் மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய இணைப்புகள் போன்ற முக்கிய விடயங்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தெளிவான செயற் திட்டத்தை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும் என கீதநாத் காசிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

வலுசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் ஜனாதிபதியால் நியமனம்..!

0

னாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.

66.99 $ கொள்வனவு செய்த கச்சா எண்ணையின் விலையே பாரியளவில் கூட்டப்பட்டது..!

0

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலர் என்ற விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றை இவ்வளவு அதிக விலைக்கு கொள்வனவு செய்யவில்லை என்றும், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் ஆரம்பமான பின்னர், மார்ச் 11ஆம் திகதி நாட்டுக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலில் ஒரு பீப்பாயின் விலை 66.99 டொலர் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இன்றைய தினம் (17) மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 71.99 டொலர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், டீசல் கொள்வனவின் போது 286 டொலருக்கும் அதிகமான விலையை செலுத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்த தலைவர், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக டீசல் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகவும், இதனால் ஒரு பீப்பாய் டீசலை 288 டொலர் முதல் 303 டொலர் வரையிலான விலைக்கு கொள்வனவு செய்ய நேரிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை உலக சந்தையில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்த போதும் தமது தவறுகளால் ஏற்பட்ட நட்டத்தை மறைக்கவே மக்கள் மீது சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ் அரசாங்க அதிபரை மீறி சட்ட விரோத விகாரை பிக்கு அடாவடி; தீர்வு என்ன???

0

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (17) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர், சிரேஸ்டநில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், காணி நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17) வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!