நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 14 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக் கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக் கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 31 ஆம் திகதி, பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற தனது தாயுடன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலைக்கு வந்த இளம் பெண், தன்னை பரிசோதித்த வைத்தியர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி, குறித்த இளம் பெண்ணை கடந்த 2 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அங்கு வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில் குறித்த இளம் பெண் திருப்தி அடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டவரை விசேட மருத்துவ குழுவால் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கையில்,
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு வைத்திய சாலையில் நடந்த இந்த கடுமையான சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, சட்டம் உடனடியாக அமுல்படுத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு தமது உச்சபட்ச ஆதரவை வழங்கும் என்றும், சுகாதார சேவையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமது சங்கம் நம்புகிறது என்றும், எதிர்காலத்தில் ஒரு வலுவான கொள்கை மற்றும் திட்டத்தை நிறுவுவதற்குத் தேவையான தலைமையை வழங்க சங்கம் தயாராக உள்ளது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
யாழில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியில் உள்ள கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் தொடர்பில் கிராம சேவையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத் தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்திலும் கல்வியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் வலயப் பணிப்பாளர் தேர்தல் திணைக்களத்தால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிபர்களின் ஊடாக அழுத்தங்களைப் பியோகித்து தான்தோன்றிதனமான உள்ளக இடமாற்றங்களை வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச் சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் அரசாங்கத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தைப் பெறும் சாதாரண ஒரு ஊழியர் என்றும் உயிரிழந்தவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வருமானத்தை கொண்டே தனது குடும்பத்தை நடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது.
யாழ் பண்ணைப் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத திணைக்களத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த நபரை , கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உயரதிகாரிகள் மாற்றியுள்ளார்கள் . அவர் யாழ்ப்பாணத்திலிருந்த கிளிநொச்சி சென்று வருவதற்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா செலவேண்டியுள்ளதாக கூறப்படுகின்ற்து.
தனது சம்பளத்தின் பெரும் பகுதி போக்குவரத்திற்கு செலவாகிவிடும் என எண்ணிய அவர் , உயரதிகாரிகள் பலரிடம் தனது குடும்பச் சூழ்நிலையை கூறி கிளிநொச்சி இடமாற்றத்தை இரத்துச் செய்ய கேட்ட போதும் அவரது கோரிக்கை உயரதிகாரிகளிடம் எடுபடவில்லை.
கிளிநொச்சிக்கும் தினமும் சென்று வந்த போதும் தனது பிள்ளைகளின் சுகவீனம் மற்றும் அவர்களின் பாடசாலை கற்றல் நடவடிக்கை போன்ற செயற்பாடுகளுக்காக லீவு எடுத்ததாகத் தெரிய வருகின்றது.
குறித்த லீவுகளுக்கு முறைப்படி முன்னரே உயரதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என காரணம் காட்டி அவரது சம்பளத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாவை கிளிநொச்சி நீர்ப்பாசணப் பொறியியலாளர் வெட்டியதாக கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்து கடும் விரக்தியுடன் வீடு திரும்பிய ஊழியர் தனது 3 பெண் குழந்தைகள், மனைவியை அநாதையாக விட்டுவிட்டு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரது மரணவீட்டுக்கு நீர்ப்பாசணத் திணைக்கள உயரதிகாரிகள், ஊழியர்கள் வந்து கலந்து கொண்டிருந்ததாக கூறப்படும் அதேவேளை, ஆஸ்மாவின் கொடுமையால் நீர்ப்பாசன தற்கொலை செய்ததாக கூறி அவரது மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பல காலமாக ஆஸ்மா நோய் இருந்தவர் சம்பளம் கழித்தபின் தற்கொலை செய்தார் என்றால் அதற்கு என்ன காரணம் எனவும் சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அரச உயரதிகாரிகளில் சிலர் அரசாங்கத்தால் தமக்கு வழக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதோடு, ஊழல், நிர்வாக துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு அப்பாவி ஊழியர்களை பழிவாங்குவது நியாயமானதா? என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் பொலிசார் சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன்
வடக்கு மாகாணக் கல்வித் துறையிலும் சிற்றூழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மீதும் இத்தகைய பழிவாங்கும் நோக்கிலான மிலேச்சத்தனமான பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஆறு பேரை மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் வரும் 11 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் ஹோமாகம தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஹோமாகம தலைமையக மருத்துவமனையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேரையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நான்கு பேரையும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
அப்போது, ஹோமாகம தலைமையக பொலிசின் தலைமை ஆய்வாளர் பிரணீதா மனவடு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி இன்னும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான் பத்மசிறி ஜெயவர்தன, ஆறு சிறார் சந்தேக நபர்களையும் மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்து வைக்கவும், 19 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
பூசா உயர் பாதுகாப்பு சிறைச் சாலையில் தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ்களால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
“கடந்த 28ஆம் திகதி உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் உயர் நீதிமன்றம், மார்ச் 30 சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதன் மூலம் இந்த வழக்குகளுக்கு தீர்வைக் காண முயற்சி செய்யலாம் எனக் கருதப்பட்டது.
அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில், மேலதிக மன்றாடியார் நாயகம் கனிஷ்கா டி சில்வா பாலபடபெந்தியை பிரதிநிதித்துவப் படுத்தியும் 20 வழக்குகளில் மனுதாரர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர், ஒரு மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரத்தினம், வழக்கறிஞர்கள் கே. குருபரன் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் ஏனைய மனுதாரர்களின் சார்பில் பிரசன்னமாகியிருந்தார்கள்.
இதன் போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன,
1. பிறப்புச் சான்றிதழ்களால் ஏற்பட்ட நிராகரிப்புகள். (சான்றுபடுத்தப்பட்ட நகல்களுக்கு பதிலாக உண்மையான புகைப்படநகல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.)
2. சத்தியப்பிரமாணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளாலான நிராகரிப்புகள். (சில பிழைகள் அல்லது தேவையான தகவல்களின் குறைவுகள்)
3. மற்ற ஏதேனும் நிராகரிப்பு காரணங்கள்.
குறித்த கலந்துரையாடலின் முடிவில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பிரஸ்தாப கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிறப்புச் சான்றிதழின் புகைப்படநகல்களுக்கான நிராகரிப்பு, அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் இறுதி நிலைப்பாடு ஏப்ரல் 1ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.