Tuesday, May 5, 2026
Huis Blog Bladsy 118

ஆசிரியர் இடமாற்ற முறைகேடுகள்; 4ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகை..!

0

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் 4ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது .

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளி மாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில் தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு சங்கத்தினர் கருத்து தெரிவித்ததுடன் மேற்படி போராட்டம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸின் இரு உப திரிபுகள்..!

0

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் இரு உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில் ஒமிக்ரோன் கொவிட்-19 வைரஸின் 2 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிதல், நெரிசலான இடங்களில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என, விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜெமஹா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவொன்றின் உயிரியல் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும், ஆசிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் திரிபினால் சிசு பாதிக்கப்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாத்திரம் 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த திரிபு தொற்றுறுதியாகியுள்ளதுடன், 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 மாதங்களில் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1,726 முறைப்பாடுகள்..!

0

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1,726 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றுள் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதிய உண்மைகள் இல்லாமை, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளடங்காமை உள்ளிட்ட காரணங்களால் 450 முறைப்பாடுகளை விசாரிக்கவில்லை என கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கையூட்டல் தொடர்பாக 24 வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் 07 வழக்குகளும் சட்டவிரோத சொத்து ஈட்டல் தொடர்பில் 02 வழக்குகளும் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாகக் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலகத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள்..!

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முற்பகல் முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 06, கையடக்க தொலைபேசிகள் 03, சாரதி அனுமதிப் பத்திரம், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் வேறு ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த பின்னணியில், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக முகாமில் இருந்து வந்தவர் கைது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்..!

0

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்டவர்கள் இது குறித்து செயற்பட்டிருந்தால் யுத்தத்தின் பின்னர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம். அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் கதைத்தேன் அவர் இந்த சட்டத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

இது எமது அரசாங்க கொள்கையில்லை,நாட்டின் பழைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சட்டம் மாற்றப்படும்.

தமிழரசு கட்சியுடன் கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை – கஜேந்திரகுமார் எம்.பி

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

உள்ளுராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே.

மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில் ஆட்சியைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.

கொள்கையை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க வேண்டிய எந்தத் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான ஆதரவு வழங்குவது என ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

0

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று(31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இம்முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நாட்டில் தற்போது,

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் – 293 ரூபா
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் – 341 ரூபா
ஒட்டோ டீசல் லீற்றர் – 274 ரூபா
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் – 325 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மன்னார், வங்காலையில் கடலரிப்பு; நிலமையை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி..!

0

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.05.2025 நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளைக் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கீராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப் பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்க முடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்க முடியமென மக்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு காணி அபகரிப்பு மீளப்பெறல்; : வெளியாகிய அறிவிப்பு..!

0

கடந்த (2025.03.28) ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளான பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் பரப்பில், மக்கள் மத்தியில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் தேசிய பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பின் மீதான மிகப்பெரும் ஆபத்தின் அறிகுறியாக விளங்கிய வடக்கின் கரையோரப் பகுதிகளை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானி இன்று மீளப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0

எதிர்வரும் நாட்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28.05.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!